| ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல். | ||
|
எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும். Monday, June 25, 2012ஞாநத்தின் fallacy!
ஜெயமோகனின் தளத்தை தினமும் வாசிப்பதன் வழியாக பல புதிய பார்வைகளும் கருத்தாக்கங்களும் தமிழ் வாசகர்களுக்கு அன்றாடம் கிடைக்கிறது என்பது உண்மைதான். ஆனால் கருத்தாக்கங்களை தவறான உதாரணங்களுடன் பொருத்தி குழப்பி, எதிர்கொள்ளவே முடியாமல் செய்வதில் இந்த அளவிற்கு தீவிரத்துடன் வேறு யாராவது செயல்படுகிறார்களா என்று சந்தேகமாக உள்ளது. இதன் எதிர்விளைவாக நியாயமான உதாரணங்களில் கூட இந்த கருத்தாக்கங்களை நாம் பொருத்தி பார்க்கமுடியாமல் போக நேரிடுகிறது; மிகுந்த அரசியல் தூய்மையும், மேலோட்டமான கறார்தன்மையும் கொண்ட தமிழ் அறிவு சூழலில், இந்த கருத்தாக்கங்களை பேசுவதே கூட நிலைமைகளை திரிப்பதற்காகவும், திசை திருப்புவதற்காக செய்வதாகவும் பல சந்தர்ப்பங்களில் எடுத்துக் கொள்ளப்பட நேரிடுகிறது. இன்றய ஷ்பெஷல் ஞாநி பற்றிய பதிவு. இளையராஜா சம்பந்தப்பட்டுள்ள காரணத்தினால் எனக்கு உண்டாகும் தனிப்பட்ட ஆர்வம் தவிர, வெகு காலமாக அரசியல் நேர்மைக்கும், அறிவு நேர்மைக்கும் இடையேயான உறவு குறித்து யோசித்தும் எழுதியும் வருவதால் இதற்கு எதிர்வினை செய்கிறேன். மெயின் பிக்சரில் வேறு தீவிர பிரச்சனைகள் ஓடுவதால், சந்தடி சாக்கில் இது விமர்சனமின்றி ஒப்புகொள்ளப்படும் ஆபத்து இருப்பதாலும் என் கருத்தை பதிவு செய்கிறேன்.
இளையராஜா பற்றிய ஞாநியின் முன்முடிவும் விமர்சனமும் என்ன? ஞாநி இளையராஜா செய்யும் பல செயல்களை அற்பமானதாக பார்க்கிறார். சமூகத்திற்கு ஏதோ ஒரு விதத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு பிரச்சனையை முன்வைத்து இளையராஜாவை ஞாநி தாக்கவில்லை. வழக்கமான ட்ரெண்டுகளில் ஒன்றான, தலித் அரசியல், மதவாத எதிர்ப்பு, பார்பனிய எதிர்ப்பு என்று கூட எதுவுமில்லை; தனிப்பட்ட நேர்மை சார்ந்த பிரச்சனையும் இல்லை. இளையராஜா யாருக்கும் காசு தராமல் ஏமாற்றியதாகவோ, கஞ்சத்தனம் செய்ததாகவோ, இன்னாது கூறி யாரையாவது புண்படுத்தியதாகவோ, இதை எல்லாம் ஒத்ததாகவோ கூட காரணங்கள் எதுவுமில்லை. ஞாநி இளையராஜா பற்றி தனிப்பட்ட முறையில் கேள்விப்பட்டு தான் உருவாக்கிக் கொண்டிருக்கும் முன்முடிவுகள் சார்ந்து, என்னென்னவோ காரணங்களை சமைத்து தருகிறார். அப்போது யாரேனும் நேரடியான ஆதாரங்களை தந்து முழுமையாக மறுத்தாலும், ஞாநி நேர்மையாக அதை பரிசீலிப்பதில்லை. இதில் கவனிக்க வேண்டிய விஷயம், ஞாநி இளையராஜா மீது முன்வைக்கும் குற்றச்சாட்டுகள், விமர்சனங்கள், தாக்குதல்கள் எதுவும் குறிப்பிட்ட அரசியல் கருத்தியலின் அடிப்படையில் முன்வைக்கப்படவில்லை. 'இளையராஜா நரசிம்மனை விழாவிற்கு கூப்பிடவில்லை; பெயர் போடவில்லை, முகம் கொடுத்து பேசவில்லை, சிரிக்கவில்லை' என்று ஒரு அற்பமான தளத்திலே ஞாநியின் விமர்சனங்கள் உள்ளன.
உதாரணமாக அ.மார்க்ஸ் 'இளையராஜா சநாதனத்தை அசைத்தாரா, இசைத்தாரா?' என்று ஒருகட்டுரை போட்டார். அந்த கட்டுரை (என்னை பொறுத்தவரை) அபத்தமானது என்றாலும், அது அ.மார்க்ஸின் அரசியல் கருத்தியலின் ஒரு பகுதியாக, அந்த பார்வையில் இருந்து ஒரு விமர்சனமாக வெளிப்பட்டது. ஞாநி இளையராஜா மீது செய்துள்ள தாக்குதல் எதிலும் இத்தகைய அரசியல் கருத்தியலிலின் பின்னணி கிடையாது; முழுக்க தனிப்பட்ட முன்முடிவுகள் சார்ந்து, சமூகப்பிரச்சனைகளுடன் எந்தவிதத்திலும் தொடர்பில்லாத விமர்சனங்கள் கொண்டதாகவே ஞாநி இளையராஜா பற்றி எழுதியவை உள்ளது. இதில் குறிப்பாக கவனிக்க வேண்டியது: ஞாநியின் குற்றச்சாட்டுகள் தவறானவை என்று ஆதார பூர்வமாக நிறுவப்படும் போது, ஞாநி தன் வாழ்க்கை பயணமாக கொண்டுள்ள எந்த அரசியல் கருதியலும் அடிவாங்கப் போவதில்லை. 'இளையராஜா நரசிம்மனை விழாவிற்கு அழைத்தார்; இளையராஜா கேஸட்டில் நரசிம்மனின் பெயரை போட்டுள்ளார்' என்பதன் நேரடி ஆதாரத்தை அளிப்பதன் மூலம் பொய்யாகும் ஞாநியின் கூற்றுக்கள் எந்த அரசியலை முறியடிக்க முடியும்? அதற்கு பின் அரசியல் இருந்தால்தானே அதை முறியடிக்க முடியும். ஆகையால் அரசியல் செய்லபாடு, fallacy என்று விளக்கி ஜெயமோகன் ஞாநியின் நேர்மையின்மைக்கு தரும் விளக்கங்கள் வெறும் சப்பைக்கட்டுக்கள் மட்டுமே.
மாறாக ஜெயமோகன் தரும் விளக்கம் இன்னொரு உதாரணத்தில் மிக நன்றாக பொருந்தி போகும். அண்மையில் நடந்த இன்னொரு பிரச்சனையில், அ.மார்க்ஸ் காலச்சுவடை பற்றி உதயக்குமார் சொன்னதாக ஒன்றை சொல்கிறார். உதயக்குமாரின் கனிமொழிக்கான மறுப்பை காலச்சுவடு வெளியிடவில்லை என்று அ.மார்க்ஸ் எழுதுகிறார். ஆனால் காலச்சுவடு மறுப்பை வெளியிட்டிருக்கிறது என்றவகையில் ஆதாரம் அ.மார்க்ஸிற்கு எதிராக உள்ளது. இதில் யார் குழப்பியிருந்தாலும் சொதப்பியிருந்தாலும் அ.மார்க்ஸ் எழுதியதில் இரண்டு தீவிர பிரச்சனைகள் உள்ளன. ஒன்று அவர் தந்த தகவல் தவறு; தவறான தகவலுக்கு அவர் வருத்தம் தெரிவித்திருக்க வேண்டும். இரண்டு சர்ச்சைக்குரிய ஒன்றை அச்சில் எழுதும் முன் உதயக்குமாரிடம் அ.மார்க்ஸ் அனுமதி கேட்டிருக்க வேண்டும்,. அது நடந்ததாக தெரியவில்லை. தற்போது, அ.மார்க்ஸ் காதால் கேட்டதாக சொல்லும் ஆதார தகவலையே உதயக்குமார் மறுக்கும் நிலையில், அ.மார்க்ஸ் அதை அச்சில் எழுதியதற்கு வருத்தம் தெரிவித்திருக்க வேண்டும். இவை இரண்டும் என் விமர்சனம். ஆனால் இதை செய்யாததால் அ.மார்க்ஸை பொய்யராக நேர்மையில்லாதவராக என்னால் காண முடியவில்லை. அறிவு நேர்மை என்று ஒன்றை அ.மார்க்ஸ் முன்வைத்து தன் பிரச்சனைகளை ஒப்புகொண்டு பேசாவிட்டாலும், தன் அரசியலுக்கு நேர்மையாக இருக்கிறார்.
தனது அரசியல் செயல்பாட்டின் ஒரு பகுதியாக, கடந்த 20 வருடங்களாக தீவிர காலச்சுவடு எதிர்ப்பை அ.மார்க்ஸ் முன்வைத்து வருகிறார். அ.மார்க்ஸும் அவரை சார்ந்தவர்களும் முன்வைப்பது போன்ற எதிர்ப்பை, காலச்சுவடை வெவ்வெறு காலகட்டங்களில் பல காரணங்களுக்காக விமர்சித்த வேறு யாரும் இவ்வளவு தீவிரத்துடன் செய்ததில்லை. இது சரிதானா என்பதும், இதற்கான தேவை என்ன என்பதும் வேறு கேள்விகள். ஆனால் இந்த அரசியலை அ.மார்க்ஸ் ஒருவித அரசியல் நேர்மையுடன் செய்வதையும், இதன் ஒரு பகுதியாகவே சமீபத்திய சர்ச்சையும் காணமுடியும். இங்கே தனது சொதப்பலை அறிவு நேர்மையுடன் அணுகினால், அதன் மூலம் அ.மார்க்ஸின் அரசியல் அடிவாங்கும். அரசியல் செய்வது என்று வந்த பின் தாங்கள் சொல்வதெல்லாம் முரணற்றதாக இருப்பதை நிறுவுவதிலேயே நிறைய சக்தி செலவழிக்கப்படுகிறது. அ.மார்க்ஸ் எழுதியது காலச்சுவடிற்கு எதிரான செயல்பாட்டில், அந்த அப்செஷனில் நடந்த ஒரு செயல். அதில் நியாயம் காலச்சுவடு பக்கம் இருப்பதாக முடிந்தாலோ, தான் சொதப்பியதாக ஒப்புகொண்டாலோ, அ.மார்க்ஸ் இத்தனைக் காலம் முன்வைத்து வரும் அரசியலுக்கு ஊறு நேரிடும். அந்த வகையில் தனது அரசியலுக்காகவே அ.மார்க்ஸ் நேரடியான ஆதாரத்தை ஒப்புக்கொண்டு, தனது அறிவு நேர்மையை நிலைநாட்ட முடியாமல் போகிறது. ஜெயமோகன் சொல்லும் faallacy என்பது இந்த உதாரணத்தில் அ.மார்க்ஸிற்குதான் சரியாக் பொருந்துகிறது.
மாறாக, ஞாநியின் இளையராஜா மீதான விமர்சனத்திற்கு தனிப்பட்ட முன்முடிவுகளால் அல்லது வேறு காரணங்களால் உருவான வெறுப்பு தவிர, அரசியல் பரிமாணம் என்று எதுவும் இல்லை. குறிப்பாக சொல்லவேண்டுமானால், கே..ஏ. குணசேகரன் மீது இளயராஜா வழக்கு தொடர்ந்த நிகழ்விற்கு பின்னர், இங்கே இளையராவை விமர்சிக்கும் எதிர்ப்பு அரசியல் ஒன்று உருவாகியுள்ளது. (நான் அதை எதிர்க்கிறேன்.) அந்த இளையராஜாவிற்கு எதிரான, ஒரு பார்பனிய எதிர்ப்பரசியலாக சொல்லப்படுவதன் ஒரு பகுதியாக, ஞாநியின் தாக்குதல் வெளிப்படவில்லை. அவ்வாறு கொள்வதற்கு ஞாநியின் எழுத்துக்களில் ஆதாரம் எதுவும் இல்லை. அது தவிர்த்தும் கூட ராஜாமீதான விமர்சனத்தில் ஞாநிக்கு அரசியல் என்று எதுவும் இல்லை; சமீபத்திய பிரச்சனையில் மிக நிச்சயமாக இல்லை. ஆனால் ஜெமோ வலிந்து ஞாநிக்கு அதை பொருத்துகிறார். மாறாக அ.மார்க்ஸ் தனது அரசியல் வயப்பட்டு செய்யும் ஒன்றை, பொய்யாக செய்யும் அவதூறாக சொல்கிறார்.
இங்கே இன்னொரு விசித்திரமான ஒன்றையும் ஜெயமோகன் சொல்கிறார். ஞாநியை விமர்சிக்க ஞாநி போன்று ஒரு சமூக செயல்பாடு நமக்கு இருக்கவேண்டுமாம். சமூகத்திற்கு பங்களிக்கும் ஞாநியின் களப்பணிகள் என்னவென்று எனக்கு முழுமையாக தெரியாது; ஞாநியை விமர்சிப்பவர்களுக்கு சமூக செயல்பாடு எதுவுமே இல்லை என்று எவ்வாறு அறிந்தார் என்பதும் தெரியாது. அது எப்படி இருந்தாலும், கூடங்குளம் விவகாரத்தில் ஞாநியை விமர்சிக்க அப்படி ஏதாவது தேவை என்றால் ஒப்புகொள்ளலாம். இளையராஜாவை ஒரு 'அற்பமான மனிதன்' என்று ஞாநி தன் முன்முடிவுகளால் சொன்னதை விமர்சிக்க, இளையராஜா ரசிகர்களுக்கு என்னவகை சமூக செயல்பாடு, என்ன காரணத்திற்கா இருக்கவேண்டும்? என்ன யோசித்தும் இதன் தர்க்கம் விளங்கவில்லை.
மாறாக அ.மார்க்ஸ் தொடர்ந்து செய்துவரும் மனித உரிமை சார்ந்த பணிகளை எடுத்துக் கொள்வோம். சமீபத்தில் அவர் பதிவில் இடம் பெற்ற அறிக்கைகள் கூட முக்கியமானவை, வேறு யாரும் முன்னெடுக்காதவை. அவை எல்லாவற்றையும் அன்னிய நிதி சார்ந்து இயங்குவதாக அவதூறு செய்ய ஜெயமோகன்தான் கொஞ்சமும் தயங்கவில்லை. அதற்கான ஆதாரம் எதையும் அவர் இதுவரை முன்வைக்கவில்லை. நீளமாக என்னனென்னவோ சொல்கிறார்; ஆனால் நேரடியாக குற்றம் சாட்ட. ஒரு ஆதாரம் இல்லை. மனித உரிமை சார்ந்த பிரச்சனைகளில் அ.மார்க்சின் தீவிர பங்களிப்பு அளவிற்கு ஒருவேளை நமக்கெல்லாம் தெரியாமல் ஜெமோவிற்கும் இருக்கிறது என்று கூட வைத்துக் கொள்வோம். ஒன்றுமே செய்யாமல் ஒரு நடுத்தர வர்க்க வாழ்க்கை வாழும் சில ஜெமோ ஆராதகர்கள் அ.மார்க்ஸை பொய்யன் என்பதை எல்லாம் தாண்டி எவ்வளவோ சொல்கிறார்களே; அதையெல்லாம் ஜெயமோகன் கண்டிக்கிறாரா?
நான் ஞாநியை பொய்யன் அயோக்கியன் என்று எதுவும் சொல்லவில்லை; கடுமையான வார்த்தையில் சொல்லும்போது மடத்தனம் என்றுதான் சொல்கிறேன்; அவரது அறிவு நேர்மையின்மையும் அவரது மூர்க்கமான மடத்தனத்தின் ஒரு பகுதி. ஞாநியின் மூர்க்கமும் மடத்தனமும் (காசு வாங்காதது போன்ற) சமூக நேர்மையின்மையை விட ஆபத்தானது என்பதுதான் என்கருத்து. இந்த குறிப்பிட்ட ராஜா சார்ந்த பிரச்சனையில், அதற்கு பின் எந்த அரசியலும், சமூக பிரச்சனையும் கூட இல்லை. ஞாநியின் அறிவு நேர்மையின்மை அவரது அரசியல் நேர்மையின் fallacy அல்ல. அரசியல் என்று இருந்தால்தானே அதில் அரசியல் நேர்மை என்று ஒன்று இருக்க. ஆனால் அவரை விமர்சிக்க நமக்கு சமூக பங்களிப்பு வேண்டுமாம்; மிகுந்த சமூக பங்களிப்பு கொண்ட அ.மார்க்ஸின் அரசியல் சார்ந்த fallacyகளை மட்டும் அதற்கு சம்பந்தமே இல்லாதவர்கள் என்னவும் சொல்லலாம் என்றால், நகைச்சுவையின் நோய்கூறுக்கு ஒரு வரம்பில்லை என்றுதான் எடுத்துக் கொள்ளவேண்டும்.
Thursday, May 31, 2012டெசோ அரசியல்.முன்குறிப்பு: இன்று அல்லது நாளை வெளியாகும் 'ஆழம்' இதழிற்காக மூன்று வாரங்கள் முன்பு எழுதப்பட்ட கட்டுரை கீழே. பலர் கிண்டலடிப்பது போல டெசோ சினிமா உருவாகி சில நாட்கள் ஓடுவது போல ஒரு தோற்றமாவது காட்டுமா என்பது கூட தெரியாது. ஈழ இன அழிப்பை குறிக்கும் முக்கிய நாட்களான மே 17, 18இல் டெசோவிலிருந்து அறிக்கை எதுவும் வந்ததாக தெரியவில்லை. இப்போது கூட இருக்கிறதா அல்லது இருப்பதை அவர்களே மறந்துவிட்டார்களா என்று தெரியாத நிலையில், 'வரும் 'ஆழம்' பத்திரிகையில் 'டெசோ'வை முன்வைத்து கட்டுரை எழுதியிருக்கிறேன்; கட்டுரை வெளிவரும்வரையாவது 'டெசோ' இருக்குமா?' என்று ட்விட்டரில் எழுதியிருந்தேன். டெசோ படம் தொடர்கிறதோ பெட்டிக்குள் போகிறதோ, அதற்கு டெசோவுடன் சம்பந்தப்பட்டவர்களை தவிர வேறு யாரும் எதுவும் செய்யமுடியாது. ஒரு குறிப்பிட்ட அரசியல் பிரச்சனையில் நிலைபாடு எடுப்பது குறித்த அணுகுமுறையாக இந்த கட்டுரை வெளியிட உகந்ததாக நினைக்கிறேன். திசைகளற்ற வெளியில் டெசோ அரசியல். ---- ரோஸாவசந்த் தனி ஈழத்தை இலக்காக அறிவித்து கலைஞர் தலைமையில் டெசோ அமைப்பு மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளது. எண்பதுகளில் கலைஞர் தலைமையில் செயல்பட்டு க் கலைக்கப்பட்ட இதே பெயருடைய அமைப்பு, அதே நோக்கத்தை அறிவித்து இப்போது துவங்கப்பட்டிருக்கிறது. எதிர்பார்த்தது போலவே இதர ஈழ ஆதரவாளர்களால் கடுமையாக இந்த முன்னெடுப்பு விமர்சிக்கப்படுகிறது. ஆட்சியதிகாரத்தில் இல்லாத காலத்திலெல்லாம் திமுகவினரை திமுகவுடன் உணர்வுரீதியாக பிணைக்க, அவர்களை ஏதாவதொரு தொடர்ந்த அரசியல் செயல்பாட்டில் வைத்திருப்பது கலைஞரின் வழக்கம். ஆனால் இம்முறை திமுக தொண்டர்கள் கூட ஈழம் மலர்வதே டெசோவின் இலட்சியம் என்று நம்புவது சந்தேகம். திமுகவின் உட்கட்சி பிரச்சனைகளை சமாளிக்கவே தொடங்கப்பட்டிருப்பதான பரவாலான நம்பிக்கையையே அவர்களும் பகிர்ந்து கொள்ளக்கூடும். இது தவிர நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்தும், காங்கிரஸை பின்னால் கழட்டிவிட ஒரு சாக்காகவும் இதை சொல்கிறார்கள். ஈழப்பிரச்சனையில் தொடர்ந்து குரல் ஒலித்துவரும் திருமாவளவனை அழைக்காதது குறித்த விமர்சனத்தை திருமாவளவன் உட்பட சிலர் முன்வைத்திருக்கிறார்கள். போர்குற்றத்திற்கான ஐ.நா. விசாரணை நடத்துவது, மற்றும் தெற்கு சூடான் கிழக்கு திமோர் போன்ற நாடுகளுக்கான தீர்வினைப் போல பொது வாக்கெடுப்பின் மூலம் ஈழம் உருவாக ஐ.நா. முன்வர வேண்டும் என்று தாங்கள் முன்வைப்பதையே முன்னெடுக்கப் போவதாக சொல்லும் டெசோவை, மற்ற தீவிர ஈழ ஆதரவாளர்கள் ஒரு ஏமாற்றுவேலையாக கண்டனம் செய்கிறார்கள். 2009இல் ஆட்சியதிகாரத்தில் இருந்த கலைஞரின் செயல்கள் மற்றும் செயலின்மையின் எதிர்வினையாக, தங்களின் நோக்கத்தையே கலைஞரும் முன்வைப்பதற்காகவே திட்டுகிறார்கள். ஒரு மாநிலத்தின் முதல்வராக கலைஞர் எந்த அளவிற்கு 2009 ஈழத்து இன அழிப்பை தடுத்திருக்க முடியும், மாறாக ஜெயலலிதா பதவியில் இருந்திருந்தால் என்ன சாதித்திருக்கக் கூடும் என்ற கேள்விகளுக்கு அப்பால், 2009 மே மாதத்தில், இன அழிப்பின் இறுதிக் காட்சிகள் கொடூரமாக நிகழ்ந்து கொண்டிருக்கும் போது, ரத்தக்கறை கொண்ட டெல்லியுடன் தன் வாரிசுகளுக்கான பதவி பேரங்களில் மும்முரமாக இருந்த துரோகம், வரலாற்றில் எதை செய்தும் மறைத்துவிட முடியாதபடி ஆழப் பதிவாகியிருக்கிறது. இது தவிர முத்துக்குமாரின் உயிர் தியாகத்தை தொடர்ந்த எழுச்சியை அமுக்க கையாண்ட வழிமுறைகளில் தொடங்கி, கலைஞர் தன் அரசியல் வாழ்க்கையில் ஆவேசமாக தானே பலமுறை பேசிய பேச்சுக்களை பேசியதற்காகவே, சீமான் போன்ற தமிழ் தேசியவாதிகளை சிறையிலடைத்தது வரையிலான கடந்த திமுக ஆட்சியின் நடவடிக்கைகள், பிற ஈழ ஆதரவாளர்கள் டெசோ அமைப்பின் மீது எந்த நம்பிக்கையும் கொள்ள முடியாமலிருக்க தீவிர காரணங்களாக உள்ளன. அந்த வகையில் இன்று கலைஞரின் டெசோ மீதான விமர்சனங்களும் நம்பிக்கையின்மையும் தனக்கான நியாயம் கொண்டவையே. ஒரு கொடூர வரலாற்று நாடகத்தின் அபத்தக் காமெடி நிகழ்வான, தன் 2மணிநேர காலை உண்ணாவிரதத்தை இன்னமும் சீரியசாக முன்வைத்து, சிங்களர்கள் போர் நிறுத்த உறுதிமொழி அளித்து, தன்னை நம்ப வைத்து கழுத்தறுத்ததாக, கலைஞர் இப்பொழுதும் சொல்வது, டெசோவின் அரசியல் குரலை பவர்ஸ்டாரின் நகைச்சுவைக்கு அருகில் கொண்டு வருகிறது. டெசோ மாநாடு குறித்த அறிக்கை விரைவில் வெளியாகும் என்கிறார்கள். ஒருவேளை அப்படி ஒன்று நடந்தால், 1985இல் நடந்த டெசோ மாநாட்டிற்கு கூடிய உணர்வுரீதியான மாபெரும் கூட்டத்தில் சிறு பகுதியோ, பரவாலான அகில இந்திய பங்கேற்போ இம்முறை நிகழப்போவதில்லை. 2009ற்கு முன்பும், கலைஞரின் ஈழம் சார்ந்த அரசியல் என்பது சந்தர்ப்பத்திற்கு ஏற்ப தனி ஈழ வீரமுழக்கமாகவும், 'ஒன்றுபட்ட இலங்கையினுள் அதிகாரப் பகிர்வு' என்றாகவும், போராளித்தனமும் சாத்விகமும் மாறி மாறி அலையடிக்கும் 'முரணியக்க'மாக, துக்ளக் சோ தொடர்ந்து கிண்டலடிப்பதற்கு ஏற்ப கடந்திருக்கிறது. கொத்து கொத்தாக ஈழத்தில் மக்கள் கொல்லப்பட்டபோது, அதற்கு மறைமுக உடந்தையாக இருந்த இந்திய 'மத்திய அரசின் நிலைபாடே தன் நிலைபாடு' என்று 2009இல் சொன்ன கலைஞர், இப்போது தனி ஈழத்தை இலக்காக முன்வைக்கிறார். இந்தவகையில் கலைஞர் மீது ஈழ ஆதரவாளர்களால் காட்டப்படும் கோபமும், விமர்சனங்களும் மிகுந்த வரலாற்று நியாயம் கொண்டது என்றாலும், எல்லோருக்கும் தெரிந்த அடிப்படையான ஒரு விஷயம் இதில் மறக்கப்படுகிறது. கலைஞர் தன்னளவில் ஈழ ஆதரவு அரசியலுக்கு அடிப்படையில் எதிரி அல்லர். ஈழப்பிரச்சனையை தனது தேர்ந்தல் சார்ந்த அரசியல் சாதூர்ய கையாளுதல்களுக்கு பயன்படுத்த அவர் தயங்கியதில்லை; ஆனால் தான் நம்பாத, தான் மறைமுகமாக எதிர்க்கும் அரசியலாக, அதை பொய்யாக கைகொண்டதில்லை. அவரது சமரசங்களும், ஏமாற்றுதல்களும், சிறியது முதல் உச்சம் வரையியிலான எல்லாவகை பரந்த துரோகங்களும் சுயநலம் சார்ந்த அரசியலாலும், ஆட்சியதிகாரத்தை தக்கவைப்பதற்கான கொள்கை பலிகொடுத்தல்களாலுமே நிகழ்ந்தன. கலைஞரை தங்கள் கொள்கை அரசியலுக்காக ஆதரித்த பலருக்கும் இது நெடுங்காலமாக தெரிந்தே உள்ளது. தெரிந்தே சமரசத்துடன் ஆதரித்த பலருக்கு, 2009இன் துரோகம் இனியும் சகித்துக் கொள்ளமுடியாத எல்லையாக உள்ளது. ஆனால் இதன் காரணமாக கலைஞரை நோக்கி தீவிர எதிர்ப்பு நிலையிலேயே எல்லா நேரங்களிலும் எதிர்வினை செய்வதில் சில பிரச்சனைகள் உள்ளது. எல்லாவித அரசியலையும் பொழுதுபோக்கிற்காகவாவது அலசுவதும், பொதுவெளியில் விவாதிப்பதும் தமிழ் வெகுமக்களின் ஆரோக்கியமான ஒரு பொதுப்பண்பு. 90களுக்கு பிறகு இதன் பரப்பு வெகுவாகக் குறைந்தாலும், இன்றும் தமிழ் வெகுமனத்தின் அப்பண்பு மறைந்துவிடவில்லை என்பதை, பொதுவெளியில் காது கொடுத்து கேட்டறியலாம். இந்த இடத்தில் வெகுமக்கள் என்று சமூகத்தில் அதிகாரமற்ற எளிய மக்களை மட்டும் குறிக்கவில்லை; அதிகாரமற்ற எளிய மக்கள் தீவிர கடப்பாட்டுடன் பலவகை அரசியல் நடவடிக்கைகளில் பங்கெடுப்பது தமிழகத்தில் தொடர்ந்து நடக்கிறது. இங்கே அதை தாண்டி, சினிமாவாலும், தொலைக்காட்சிகளாலும், வெகுஜன பத்திரிகைகளாலும் நிர்ணயிக்கப்படும் உளவியல் கொண்ட, தமிழ் சூழலின் வெகுமனநிலை கொண்ட பொதுமக்கள் கூட்டத்தையே குறிக்கிறேன். ஈழம் சார்ந்த தீவிர அரசியலை முன்னெடுக்கும் அமைப்புகள் எதுவும் இந்த வெகுமக்கள் கூட்டத்தின் மனநிலையில் சலனமேற்படுத்துவதாக இல்லை. இந்த வெகுமக்களின் பங்கேற்பை கொண்ட அரசியலை, தேர்தல் அரசியலை மையமாக கொண்ட அரசியல் கட்சிகளே இன்னமும் முன்னெடுக்கின்றன. தேர்தல் அரசியல் கட்சிகளில், தேர்தல் அரசியலுக்கு இன்றியமையாத ஆகக் குறைந்த சமரசத்தை தாண்டி, ஈழப்பிரச்சனையில் துரோகம் செய்ததாக குற்றம் சாட்ட முடியாத கட்சியாக விடுதலை சிறுத்தைகளை தவிர வேறு யாருமில்லை. ஆனால் வெகுமக்கள் மனநிலையில் விடுதலை சிறுத்தைகளின் வீச்சு மிக குறுகியது. இந்நிலையில் திமுகவும் அதிமுகவுமே, நாம் எவ்வளவு விரும்பாவிட்டாலும் வெகுஜன அரசியலை கொண்ட கட்சிகளாக திகழ்கின்றன. இதில் ஜெயலலிதா கலைஞரை போல அல்லாமல், தன் இயல்பான அரசியலிலேயே தனி ஈழ இலக்கிற்கு பொதிவானவர் அல்லர். 2009இல், தேர்தல் பலன்களை மனதில் கொண்டு மட்டுமே, அவர் தனி ஈழமுழக்கம் செய்தார் என்பதில் சிறிதும் ஐயம் கொள்ள காரணம் ஏதுமில்லை. திமுகவின் துரோக நிலையில், ஜெயலலிதாவின் சந்தர்ப்பவாத முழக்கத்தை, முற்றிலும் சந்தர்ப்பவாதங்களால் திரளும் அரசியல் சூழலில், நெருக்கடியான நிலையில் ஆதரித்திருந்தால் தவறு ஏதுமில்லை. ஆனால் அதையே காலகாலத்திற்குமான அணுகுமுறையாக கொள்வது விவேகமற்றது மட்டுமல்ல, அத்தகைய அணுகுமுறைக்கு ஜெயலலிதாவே கூட போதிய இடம் தரமாட்டார். திமுக என்ற அரசியல் நிறுவனத்திற்கு அடித்தளமாக இருப்பது திமுகவினர்களின் அடையாள அரசியல் சார்ந்த வெகுஜன உணர்வு; திமுக துவங்கப் பெற்றக் காலத்திலிருந்து 80கள் வரை இருந்த திமுகக்காரன் என்ற பரவசம் கொண்ட வெகுஜன உணர்வு, வீர்யம் இழந்து காணப்பட்டாலும், திமுகவின் இத்தனை சந்தர்ப்பவாதங்கள், ஊழல்கள், துரோகங்களுக்கு பின்னும், இன்றும் பெருமளவு உயிர்த்து இருக்கிறது என்பதுதான் யதார்த்தம். திமுகவின் வெகுஜன மனநிலை கொள்கையரசியல் சார்ந்து மட்டும் உருவான ஒன்றல்ல; கலைஞர் என்ற திருஉரு சார்ந்து கொள்ளும் அடையாளப் பரவசத்தால் உருவானது. கலைஞரை ஒரு இன்றய ராஜராஜ சோழனாக காணும் மனநிலை அது. இன்னொரு பக்கம் அது வாழ்வியல் யதார்த்தம் சார்ந்ததும் ஆகும். திமுகவினர் ஒவ்வொருவருக்கும் கட்சியரசியலுக்காக தியாகம் செய்யும் மனம் இருந்தாலும், கட்சி அதிகாரத்திற்கு வருவதன் மூலம் தனக்கு ஒரு ஆதாயம் உண்டு என்ற மனப்பான்மையும் திமுகவினரை திமுகவுடன் பிணைக்கிறது. இவ்வாறாக திமுகவினரின் வெகுஜன மனநிலை என்பது முரண்பட்ட காரணிகளால் உருவான ஒன்று. அதை அடையாள அரசியல்ரீதியாக பதிலீடு செய்யக்கூடிய பரந்த வெகுஜன அரசியல் இயக்கம் வேறு எதுவும் தமிழகத்தில் உருவாகவில்லை என்பதுதான் யதார்த்தம்; குறிப்பாக ஈழப்பிரச்சனையை தீவிரமாக பேசும் அமைப்புகள் எதற்கும் திமுகவிற்கு இருக்கும் வெகுஜன ஈர்ப்பு இருப்பதாக தெரியவில்லை. ஈழப்பிரச்சனையில் சாத்தியமாகக் கூடிய அரசியல் தீர்வு மட்டுமல்ல, இன்றய சூழலில் சாத்தியமாககூடிய நடைமுறை அரசியல் கூட என்னவென்பது தெளிவாக இல்லை. ஈழத்தமிழ் மக்களில் பெரும்பாலோர் ஆதரிக்கும் பட்சத்தில், தனி ஈழத்தின் நியாயத்தை, 2009 படுகொலையையும் நியாயப்படுத்தக் கூடியவர்களை தவிர மற்றவர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்றே தோன்றுகிறது. பிரச்சனை தனி ஈழம் நியாயமானதா என்பது அல்ல; சாத்தியமானதா என்பதே. இன்றய சூழலில் தனி ஈழம் சாத்தியமல்ல மட்டுமல்ல, அதற்கான எந்த போராட்டமும் ஈழத்தமிழ்மக்களை மேலும் மேலும் அழிவுநிலைக்கு கொண்டு செல்லும் என்பது பலரது நிலைபாடு. ஒரு ஆயுத போராட்டத்தின் மூலம் நிச்சயமாக தனி ஈழம் சாத்தியமில்லை என்ற இன்றய சூழல் எதிர்காலத்தில் மாறக்கூடும் என்று தோன்றவில்லை. ஆயுத போராட்டம் இன்றி உலகத்தால் அங்கீகரிக்கப்படும் ஒன்றின் வழியாகவும் தனி ஈழம் இன்றய நிலையில் சாத்தியம் என்று தோன்றவில்லை; ஆனால் என்றென்றைக்கும், அடுத்த 25 வருடங்களுக்கு இதே போன்ற நிலை தொடரும் என்று உறுதியளிக்கும் ஆரூடம் எதுவுமில்லை. நிகழும் பொருளாதார நெருக்கடிகளும், முதலீட்டிய நடைமுறையின் பக்க விளைவுகளாக நிகழப்போகும் உலக நெருக்கடிகளும், நிர்பந்தங்களும் உருவாக்கப் போகும் உலகச் சூழல் குறித்து, யாருக்கும் எந்த தெளிவும் இல்லை. இந்நிலையில் ஈழமக்களுக்கான பல்வேறு அரசியல்களுக்கு நடுவில், ஈழம் என்ற நியாயமான கோரிக்கையை உயிரோடு வைத்திருப்பது அர்த்தமுள்ள ஒன்றுதான். அண்மைய ஜெனிவா தீர்மானம் நீர்த்தும் நேரடி பயனற்றும் இருந்தாலும், உலக கவனத்தை ஈர்த்த வகையில் தமிழர்களுக்கான முதல் வெற்றிப்படியாகவும், இலங்கை அரசிற்கான முதல் பின்னடைவாகவும் திகழ்கிறது. இதன் தொடர்சியாக அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும். பயணித்து ஈழத்திற்கான ஐநா வாக்கெடுப்பு என்கிற கனவை என்றாவது நெருங்க வேண்டும் என்றால் அதற்கு பல தரப்பிலிருந்து, பலதரப்பட்ட குரல்கள் ஒருமித்து தொடர்ந்து ஒலிக்க வேண்டும். அந்தவகையில் இன்னமும் தமிழக வெகுஜன உணர்வுகள் பங்கேற்கும் திமுகவின் அரசியலில் ஈழம் உச்சரிக்கப் படுவதும், அதற்கான தர்க்கங்களை முன்வைப்பதும் முக்கியமான ஒன்றுதான். டெசோ அமைப்பின் தீர்மானமாகவும், குறிக்கோளாகவும் அண்மையில் வெளிவந்த அறிக்கையின் உள்ளடக்கத்துடன் ஈழ ஆதரவாளர்கள் யாருக்கும் முரண்பாடும் எதிர்ப்பும் இருக்காது; அறிக்கையில் உள்ளதைத்தான் அவர்களில் பலரும் சொல்கிறார்கள். ஆனால் கலைஞர் அதை சொல்வது மட்டுமே அவர்களது பிரச்சனை. அந்த வகையில் இது அரசியல் தூய்மைவாதத்தின் பிரச்சனையாக இருக்கிறது. டெசோ அமைப்பை சீரியசாக எடுக்காமலிருப்பதும், கலைஞரை ஆதரிக்காமல் இருப்பதும் புரிந்து கொள்ளக் கூடியதே; ஆனால் எதிர்ப்பதும் திட்டுவதும் எந்த வகையிலும் நேர்மறையான அணுகுமுறை அல்ல. மேலே குறிப்பிட்ட திமுகவின் வெகுமக்கள் பங்கு மட்டுமின்றி, ஒருவேளை இன்னும் கொஞ்ச காலம் தீவிரமாக பேசி, ஈழவிடுதலைக்கான டெசோ மாநாடு ஒன்றை சொன்னபடியே நடத்துவார்களெனில், 1985 கூட்டத்தின் பத்தில் ஒரு பங்கு கூடினாலும், அகில இந்திய பங்கேற்பும் நிகழ்ந்தால் அது முக்கியமான நிகழ்வாகவே இருக்கும்; திமுகவும் கலைஞரும் விடுக்கும் அறிக்கைகள் அகில இந்திய கவனம் பெறும். திமுகவின் அரசியல்படுத்துதல் அதிமுகவையும் நிலைபாடு எடுக்க நிர்பந்திக்கும். திமுகவும் அதிமுகவும் இணைந்து குரல் கொடுத்ததன் பலனாக, ஜெனீவா தீர்மானத்தை ஆதரிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு இந்தியா ஆளான அண்மைக்கால நிகழ்வை கவனத்தில் கொள்ள வேண்டும். ஆகையால் டெசோ உருவாக்கத்தை வரவேற்கவேண்டிய நிகழ்வாகவே ஈழ ஆதரவாளர்கள் காணவேண்டும் என்பது என் கருத்து; வெளிப்படையாக ஆதரிப்பதாலும் அரசியல்ரீதியாக எதுவும் குடிமுழுகாது. ஆனால் ஈழம் வாங்கித்தருவதே தன் மீதி வாழ்க்கையின் குறிக்கோளாக கலைஞர் சொல்வதை எல்லாம் உண்மையென நம்பி யாரும் ஏமாறக்கூடாது. டெசோ விஷயத்தில் மட்டுமின்றி, அரசியல் தூய்மையும், அரசியல் இறுக்கமும் மிக தீவிரமாக இருக்கும் ஈழம் சார்ந்த அரசியலில், இதற்கு இணையான அணுகுமுறையை எல்லா தளங்களிலும் பின்பற்றவேண்டும். Friday, March 16, 2012ஜெயமோகனின் வாக்குமூலம்.(ஃபேஸ்புக்கில் 'ஜெயமோகனின் வாக்குமூலம்' என்ற தலைப்பில் ராஜன்குறை எழுதிய மூன்று பதிவுகளை, அதன் முக்கியத்துவம் கருதி, பரந்த வாசக வாசிப்பிற்காக இங்கே தருகிறேன். ஜெயமோகன் எழுதிய பதிவு "ஏன் பொதுப்பிரச்சினைகளைப் பேசுவதில்லை” ) பதிவு -1. சில வருடங்களுக்கு முன் ஒரு முறை தற்செயலாகத் தொலைக்காட்சியில் ஒரு கேம் ஷோ பார்த்தபோது பங்கெடுத்த மத்தியதர வர்க்க குடும்பத்தலைவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. “விமான விபத்தில் இறந்து போன இந்திய பிரதமரின் மகன் யார்?” அவர் மிகவும் பரிதாபமாகப் பார்க்கவும் நிகழ்ச்சி நடத்துபவர் ஒரு க்ளூ தந்தார். “அவர் பெயர் காந்தி என்று முடியும்.” அப்போதும் மிகவும் தர்ம சங்கடமாகப் பார்த்த பங்கேற்பாளர் பல நொடிகள் கடந்ததும் திடீரென்று முகம் மலர “ராஜீவ் காந்தி” என்று சொன்னார். எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. அவர் ஒரு அரசுத்துறை ஊழியர் என்று நினைவு. எல்லோரும் எல்லா தகவல்களையும் அறிந்திருக்க வேண்டும் என்று அவசியம் கிடையாது. வாழ்வை புரிதலுடன் வாழ தகவல்களும், புள்ளி விவரங்களும் தேவையில்லை. படிப்பறிவும் நவீன வாழ்வு குறித்த தகவலறிவும் இல்லாத முதிய விவசாயிகள் உயர்ந்த பண்போடும் வாழ்வின் விழுமியங்களை புரிந்தவர்களாகவும் இருப்பதை 35 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு குக்கிராமத்தில் பார்த்திருக்கிறேன், ஆனால் ஊடகங்களுடன் தொடர்புள்ள அரசு ஊழியர், நவீன ஆடைகள் அணிந்தவர் சமகால நிகழ்வுகள் (current affairs) குறித்த குறைந்தபட்ச தகவல்கூட இல்லாமல் இருக்கிறார் என்றால் அவர் சுத்தமாக வாசிப்புப் பழக்கமும், உலக விவாகரங்களில் அக்கறையும் இல்லாமல் இருக்கிறார் என்றுதான் கூற வேண்டும். அப்படிப்பட்ட மனிதர்களாலான சமூகத்தில் எப்படி பொதுக்கருத்துக்கள் உருவாகும், மக்களாட்சி சிறப்பாக நடக்கும் போன்ற சந்தேகங்களும் எழத்தான் செய்தன. அதனால்தான் எனக்கு என்ன சமூகம் இது என்று சங்கடமாக இருந்தது. அதைப்போன்ற ஒரு சங்கடம்தான் ஜெயமோகன் இரு தினங்களுக்கு முன் எழுதியுள்ள “ஏன் பொதுப்பிரச்சினைகளைப் பேசுவதில்லை” ஒரு குறிப்பை பார்த்தபோதும் தோன்றியது. ஜெயமோகனிடம் ஜெய்சன் சாமுவேல் என்பவர் கேட்கிறார். என்னத்தான் நீங்கள் நேரமே போதாமல் எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தானார் ஆனாலும் வேளச்சேரியில் ஐந்து பேரை போலீஸ் கொன்றுவிட்டதே, அதைக்கண்டிக்க வேண்டாமா என்று. அதற்கு என்ன பதில் தரலாம் ஒரு மனிதர்? ஒரு வரி போதும்: “போலீஸ் அத்துமீறலை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இது குறித்து கேட்டதற்கு நன்றி”. அது நாகரீகம். அத்தோடு முடிந்தது பிரச்சினை. அல்லது அதற்கு மேலும் சென்று ஏன் கேள்வி கேட்கும் வரை பேசாமல் இருந்தீர்கள் என்றும் மேலும் ஒரு கேள்வி வரும் என்று யோசித்தால் கூடுதலாக இரண்டு வரி சொல்லலாம். “என்னைப்பாதிக்கும் எல்லா பிரச்சினைகளையும் பற்றி நான் உடனே கருத்துச் சொல்லத் தொடங்கினால் என் இலக்கிய ஆக்கங்கள் பாதிக்கப்படும். படைப்பெழுத்தின் மூலமாகத்தான் நான் உலகை எதிர்கொள்ள விரும்புகிறேன். சில சமயங்களில் என்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் கருத்துச் சொல்கிறேன். வேளச்சேரி பிரச்சினையில் மனித உரிமை ஆர்வலர்களின் கருத்துதான் என்னுடையதும்.” இதையும் யாரும் குறை கூறப் போவதில்லை. ஆனால் அறியாமை அகம்பாவமாய் பேயாட்டம் போடும் இருள் சூழ்ந்த மனம் எப்படி எளிமையாகப் பேசும்? பொய்யும், போலித்தனமும், அபத்தமுமாய் உளறிக்கொட்டுகிறது. முதலில் டிஸ்க்ளெய்மர்:" பொதுவாக நான் சமூகப் பிரச்சினைகளில் கருத்துச் சொல்வதில்லை". என்ன அபத்தம் இது? இவர் அளவு சமூகப் பிரச்சினைகளில் கருத்து சொல்பவர்கள் தமிழகத்தில் வேறு யாரும் இல்லை என்பதுதானே பிரச்சினை? மருத்துவம், மாந்திரீகம், கார்பரேட் சாமியார், கார்பரேட் உண்ணா விரதம். கார்ப்பரேட் சமூக இயக்கம், அணு உலை, அப்துல் கலாம் என்று இவர் சொல்லாத கருத்து ஏதாவது உண்டா? உலகிலேயே கருத்து கந்தசாமி என்ற பட்டத்திற்கு உரியவர் இவர்தான். ஞாநி, மார்க்ஸ் போன்ற கருத்தாளர்கள் கூட இவர் அளவுக்கு தினமும் அருள்வாக்கு சொல்வதில்லை. புனைவெழுத்தாளர்கள் யாரும் இவருடன் ஒப்பிட்டால் பத்து சதம் கூட கருத்து சொல்வதில்லை. கோணங்கி எந்தப்பிரச்சினை பற்றியாவது எழுதுகிறாரா? பா.வெங்கடேசன் எழுதுகிறாரா? கட்சி சார்புள்ள தமிழ்ச்செல்வன், சு.வெங்கடேசன், ஆதவண் தீட்சண்யா கூட இவ்வளவு எழுதவதில்லை. பிறகு எதற்கு “பொதுவாக நான் சமூக பிரச்சினைகளில் கருத்து சொல்வதில்லை” என்று ஒரு அபத்த டிஸ்க்ளெய்மர்? பம்மாத்து. இதைத்தொடர்ந்து வெவ்வேறு தர்க்கங்களுடன் ஏன் புனைவெழுத்தார் கருத்து சொல்வதில்லை, சொல்லக்கூடாது என்றெல்லாம் அறிவுரைகள். நடுவில் இன்னொரு பம்மாத்து: “குறைந்தபட்சம் அவை சூடாக நிகழும்போதாவது முற்றாக அமைதி காக்கிறேன்.” அண்ணா ஹஸாரே உண்ணாவிரதம் உலையில் கொதிக்கும்போதே மாய்ந்து மாய்ந்து எழுதியது எவ்வளவு நாட்கள் முன்னால்? இப்படி ஒரு அம்னிஷியாவா? இப்படியாக 269 வார்த்தைகள் எழுதிய பிறகு விஷயத்திற்கு வருகிறார். அதன் துவக்கம் “சரி, நீங்கள் சொன்ன விஷயத்தையே பேசுவோம்.” அதை முதலிலியே செய்யவேண்டியதுதானே? இங்கே நடப்பது என்னவென்றால் அட்டெண்டன்ஸ் போடுதல். பின்னால் யாராவது கேட்டால் நானும் கண்டித்திருக்கிறேன் என்று சொல்லலாம். பின்னர், தன் வாசகர்களிலேயே மனித உரிமை பற்றி உணர்ச்சி வசப்படும் டைப்பெல்லாம் இருக்கும். அவர்களையும் விட்டுக்கொடுக்க முடியாதல்லவா? அதற்காக ஒரு பத்தி. 54 வார்த்தைகள். அதன் இறுதியில் ஒரு உணர்ச்சி ஸ்டேட்மண்ட்: “ஆக்கபூர்வமான சமூகத்தில் இன்று மனித உரிமை, சூழியல் பாதுகாப்பு, தொழிற்சங்க உரிமை ஆகிய மூன்றுக்காகவும் எப்போதும் ஒருங்கிணைந்த குரல் எழுந்துகொண்டிருந்தாகவேண்டும் என்பதே என்னுடைய எண்ணம். அதற்காகப் போராடும் ஒவ்வொருவரையும் நான் மதிப்புடன் வணங்குவேன்." எவ்வளவு அருமையான மனிதர். ஏன் புனைவெழுத்தார்கள் சமூகப்பிரச்சினைகள் எல்லாவற்றிற்கும் கருத்துக் கூற முடியாது என்று சொல்லிவிட்டார். பிறகு மனித உரிமை போராளிகளை மதிப்புடன் வணங்குவேன் என்று சொல்லும்போது இவர் கண்ணீர் மல்க கரம் கூப்பி நிற்கும் காட்சி மெய்சிலிர்க்க வைக்கிறது. இத்துடன் முடிந்திருந்தால்கூட பிரச்சினையில்லை. விடுமா ஆணவப்பேய்? முறுக்கிக் கொள்கிறது. “ஆனால் இவர்களில் ஒருவனாக என்னுடைய குரலை இணைக்கமுடியாது. ஏனென்றால் நான் இவர்களில் ஒருவனல்ல. நான் எழுத்தாளன்.” என்ன தோழர் பிரச்சினை? இப்போதுதானே மதிப்புடன் வணங்கினீர்கள்? வேறென்ன உங்களை உண்மை அறியும் குழுவுடனா போகச் சொல்கிறார்கள்? பிரச்சினை என்னவென்றால் மனித உரிமை செயல்பாட்டாளர்களுக்கு ஒற்றை நோக்கு இருக்கிறதாம். இலக்கியம் ஒற்றை நோக்குடன் செயல்பட்டால் தட்டையாக இருக்குமாம். அதாவது இவருடைய புரிதலில் இலக்கியம் மனித உரிமைக்காக பேசவேண்டும். அதைப் பறிப்பதை நியாயப்படுத்தவும் வேண்டும் என்று சொல்கிறார் போலிருக்கிறது. இங்கேதான் அறியாமை பேயாட்டம் போடத்துவங்குகிறது. முதலில் இலக்கியம் பன்முகம் கொண்டு இயங்குவது என்பதும் அறமற்ற கொலைகளை நியாப்படுத்துவதும் ஒன்றல்ல. இலக்கியம் நிச்சயம் போலீஸ்காரர்களின் நிர்ப்பந்தங்களை பேசும். அவர்களின் வக்கிரங்களை பேசும். இயலாமையை பேசும். ஆளுவோரின் மனநிலையை பேசும். இறக்கமற்ற அரசியல் தர்க்கத்தை பேசும். ஏன் திருடர்களின் கொடூர முகங்களையும் பேசும். ஆனால் ஒரு போதும் இலக்கியம் அதிகாரம் கொலைகளை அறங்கேற்றுவதை மெச்சாது. அதன் அவலத்தை, மானுட தோல்வியைத்தான் அது பேசும். தால்ஸ்தோய், தாஸ்தாவ்ஸ்கி முதல் கார்லோஸ் ஃபூயண்டஸ், மரியோ வர்காஸ் லோஸா வரை, சால் பெல்லோ முதல் கர்ட் வொன்னகட் வரை யாருடைய ஆக்கத்தை வேண்டுமானால் எடுத்து வாசிக்கலாம். மறுபக்கதின் மறுபக்கத்தின் மறுபக்கம், பூனையின் பசி, புலியின் ரத்த வெறி எதை பேசினாலும் இலக்கியத்தின் இயக்கம் மனிதனின் ஆன்ம வேட்கையை தூண்டுவதுதான். அதிகாரத்திற்கு சாமரம் வீசுவது அல்ல. ஆனால் நம்மாளின் பிரச்சினையே வேறு. அவர் என்ன புரிந்துகொள்கிறார் என்றால், பாவம் போலீஸ்காரர்கள்தான் வேறு என்ன செய்வார்கள். திருட்டு அதிகமானால் அரசாங்கத்திற்கு கெட்ட பெயர் வரும். எல்லா திருட்டையும் போலீஸால் தடுக்க முடியாது (திருட்டுப் பசங்க என்ன சொல்லிட்டா திருடராங்க?). பல நிர்ப்பந்தங்களுக்கு நடுவில் ஐந்து பேரை சுட்டுக்கொல்லச் சொன்னால் முடியாது என்றா சொல்ல முடியும்? அதனால் என்ன செய்கிறார், “குடிமகனாகவும்” “எழுத்தாளனாகவும்” உண்மையை விசாரிக்கிறார். “இந்தத் துப்பாக்கிச்சூடு விஷயத்தில் ஒரு சாதாரணக் குடிமகனாகவும், எழுத்தாளனாகவும் நான் உண்மையை அறிந்துகொள்ள முயன்றேன்.” அடேயப்பா! மனித உரிமைக்காரர்களெல்லாம் பத்து பேராகப் போய் போலீஸிடம் வாதாடி பொதுமக்களிடம் விவாதித்து ஏதேதோ செய்வதை இப்படி எழுத்தாளன் சும்மா உட்கார்ந்தமானிக்கு செய்கிறார் என்று பாருங்கள் (கொஞ்சம் மாமல்லன் பாதிப்பு வருகிறது). அப்படி அவர் என்ன உண்மையை கண்டு பிடித்தார்? வங்கிக் காமிராவில் காவல் துறையின் ரகசிய பதிவுகளில் உள்ள ஒரு முகம் பதிவாகியுள்ளது. அதை வெளியிடுகிறது. அநேகமாக ஒரு பாலியல் தொழிலாளியிடமிருந்து துப்பு கிடைக்கிறது. போலீஸ் சென்று அவர்களை கைது செய்து கூட்டிச்செல்கிறது. அப்போது மேலிடத்திலிருந்து உத்தரவு வந்தது. “திருப்பிக் கொண்டுவந்து அறைக்குள் குப்புற வீழ்த்தி சுட்டுத்தள்ளியது. இந்தச் சித்திரம் உண்மையாக இருக்கலாமென நான் நினைக்கிறேன்.” இப்படியாக முடிகிறது உண்மையறிதல். இதுதான் உண்மையென்றால் அற உணர்வு பொங்கி எழவேண்டாமா இந்த அநீதிக்கு எதிராக? பாங்கில் பணம் திருடியதற்காக உயிரையே பறிக்க முடியுமா என்று ஒரு நாகரீக மனம் பதற வேண்டாமா? சேசே. அதெல்லாம் ஒற்றைப்பார்வையாளர்களின் உணர்ச்சிகள். எழுத்தாளன் மறுபக்கம் பார்ப்பவனல்லவா. பார்க்கிறார் ஜெயமோகன், காவல்துறையால் திருட்டுகளை மொத்தமாக தடுக்க முடியாது. அதனால் திருடர்களுக்கும் காவல்துறைக்கும் புரிதல் இருக்கிறது. தீவிரவாதிகளுக்கும், அரசுக்கும் கூட ஒரு புரிதல் இருக்கிறது. இந்த அளவு சட்டத்தை மீறிக்கொள்ளுங்கள். நாங்கள் விட்டுவிடுவோம். அவ்வப்போது எங்களுக்கும் சில ஆட்களை பிணையாகக் கொடுங்கள். நாங்கள் அதை வைத்து எங்கள் வேலைக்குக் கணக்குக் காட்டிக்கொள்கிறோம். இந்த உடன்படிக்கையில் சிக்கல் எப்போது வருகின்றது என்றால் எல்லைகள் மீறப்படும்போது. இந்த பீஹார் திருடர்கள் அடிக்கடி திருடத் தொடுங்குகிறார்கள். அவர்களை முறைப்படி கைது செய்து வழக்குப் போட்டால், ஜாமீன் வாங்கிக்கொண்டு தப்பித்து பீஹார் போய்விடுவார்கள். அங்கே போய் பிடிக்க முடியாது, அந்த தைரியத்தில் அனுமதித்த அளவுக்கு அதிகமாக திருடுகிறார்கள். அவர்களை எச்சரிக்கவேண்டுமென்றால் வேறு என்ன வழி? ஐந்து பேரை சுட்டுத்தள்ளினால்தான் மற்ற பீஹார் திருடர்களுக்குப் புரியும். தமிழ்நாட்டில் திருடக்கூடாது என்று. “அதாவது பிகாரி கொள்ளையர்களை தண்டிக்கவேண்டுமென்றால் சுட்டுக்கொலைசெய்யவேண்டும், வேறு எதுவுமே நடைமுறையில் சாத்தியமல்ல. இதுவே யதார்த்தம்.” இப்படி யதார்த்தத்தை புரிந்துகொள்வதுதான் இலக்கியம். அதைவிட்டுவிட்டு மனித உயிரின் மதிப்பு, சமூக ஏற்றத்தாழ்வு, சுரண்டலின் மீது எழுப்பப்படும் சொத்துரிமை, போலீஸ்காரர்களை வேட்டை நாய்களாக்கும் ஆளும் வர்க்கம் இதையெல்லாம் குறித்து யோசித்தால் இந்த மறுபக்கத்தின் மறுபக்கம் புரியுமா? “ஓர் எழுத்தாளனாக நான் என்ன செய்யவேண்டும்? எது சரி எது தவறு என சொல்வதற்கு முன்னால் உண்மையில் என்ன நடக்கிறது என்பதை அல்லவா புரிந்துகொள்ளவேண்டும்? மனித உரிமைக்காகத் திருட்டை அனுமதிக்க முடியுமா? இல்லை, நடைமுறைத் தேவைக்காக சட்டத்தை ரத்துசெய்யமுடியுமா? நான் இந்த தர்மசங்கடப்புள்ளியை முதலில் முன்வைக்கவேண்டும். அதில் இருந்து மேலே செல்லமுடிந்தால் செல்லவேண்டும். மாறாக, இந்த மனித உரிமையாளர்களின் மேலோட்டமான வாதங்களை ஏற்று நானும் கோஷமிட்டால் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். ஆனால் அதற்கு எழுத்தாளனாகிய நான் எதற்கு? அதைத்தான் அவர்களே செய்கிறார்களே?” சரி, இப்போது எழுத்தாளினின் சிறப்பான இடத்தையும், இலக்கியத்தின் புனிதப் பணியையும் கூறியாகிவிட்டது. போலீஸ் எப்படித்தான் பீஹாரிகள் திருடுவதை நிறுத்த முடியும்? நாலு பேரை கொன்றால்தான் என்ற “தர்ம-சங்கடத்தை” புரிந்துகொண்டு மேலே செல்லவேண்டியது இலக்கியம். அதற்கு மேற்படியில் எதற்கும் நாலு பீஹாரிகளை அவ்வப்போது தர்ம அடிபோட்டு கொன்றால் திருட மாட்டார்கள் என்ற தர்ம-சங்கடத்தையும் இலக்கியம் சந்திக்கும். இப்படியெல்லாம் சொன்னால் போலீஸ் சுட்டது நியாயம் என்று சொல்கிறீர்களே என்று மனித உரிமை கும்பல் திட்டினால் என்ன செய்வது? எனவே கடைசியில் முன் ஜாமீன். அதுதான் மாஸ்டர் ஸ்ட்ரோக். அதன் பிறகு யார் ஜெயமோகனை விமர்சித்தாலும் அவர்கள் “இலக்கியத்தின்” நுட்பம் தெரியாதவர்கள் ஆகிவிடுவார்கள் அல்லவா? “உண்மை முக்கியம் என நினைத்து நான் இதில் உள்ள உண்மையைப் பேசப்போனால் அது மனித உரிமையாளர்களால் விரும்பப்படாது. நான் ’பிற்போக்கானவன்’, ‘சமூக அமைப்பின் குரலாகப் பேசுபவன்’, ‘மனிதாபிமானமில்லாதவன்’ என்றெல்லாம் அவர்கள் சொல்வார்கள். அவர்களுக்கெல்லாம் விளக்கம் அளித்தே நான் ஓய வேண்டியிருக்கும். இந்தக் கட்டுரையில் நான் ஒற்றைப்படை நிலைப்பாடு எடுக்காத காரணத்துக்காகவே என்னென்ன வசைகள் வருகின்றன என்று கவனியுங்கள். இங்கே எழுத்தாளனை அவனுடைய படைப்புகளை வாசிக்காத ஒரு பெரும் கும்பல் எப்போதும் வசைபாடிக்கொண்டே இருக்கிறது.” நானும், இதைப்படித்து லைக் போடும், ஆதரித்து கமெண்ட் போடும், பகிர்ந்து கொள்ளப்போகும் அனைவரும் எழுத்தாளனை, படைப்புகளை புரிந்துகொள்ளாத கும்பலில் சேர்ந்துவிடும் மோடி மஸ்தான் வித்தையும் நிகழ்ந்துவிட்டது. இலக்கியம் எந்த காலத்திலும் இவ்வளவு கேவலப்பட்டதில்லை! யூமா வாஸுகி ஒரு சிறந்த எழுத்தாளர். கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் என பல நல்ல படைப்புகளை தந்தவர், லெளகீக வாழ்க்கையில் சகல வசதிகளையும் அதிகரித்துக்கொண்டு இலக்கியமும் செய்யும் சாமர்த்தியம் இன்றி இலக்கியத்தின் அழைப்புக்காக லெளகீக வாழ்க்கையை புறந்தள்ளி அலையும் தீவிர மனநிலை கொண்டவர். அவர் வேளச்சேரி கொலைகளுக்கு நிகழ்த்திய எதிர்வினையை அ.மார்க்ஸின் வார்த்தைகளில் படியுங்கள். அவர் தொலைபேசியில் மார்க்ஸைக் கூப்பிட்டு அழுதிருக்கிறார். அவருக்கெல்லாம் இன்னமும் “இலக்கியம்” புரியவில்லையோ? பதிவு-2 ஜெயமோகனின் வேளச்சேரி கொலைகள் பற்றிய கட்டுரையை படித்ததில் நானும் உணர்ச்சிவசப்பட்டு, நான் அதற்கு முந்தைய குறிப்புகளில் சொன்னபடி உரையாடல் போக்கை கடைபிடிக்காமல் கோபமாக எழுதிவிட்டேன் என்று ஒரு நண்பர் சொன்னார். அதில் என் நடை சோபிக்கவில்லை என்றும், இல்லை தெளிவாகத்தான் இருக்கிறது என்றும், நானும்கூட இப்படிப்பட்ட எதிர்நிலை அணுகுமுறையை (polemical approach) மேற்கொள்ளக் கூடாது என்றும் எதிர்வினைகள் வந்தன. அங்கு வந்த சில கேள்விகளும் சில விஷயங்கள் தெளிவாகக் கூறப்படவில்லையோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தின. சரி மீண்டும் ஒருமுறை வேறுமாதிரி எழுதிப்பார்க்கலாம் என்று முடிவு செய்துவிட்டேன். இதோ ஜெயமோகனின் வாக்குமூலம்- Take-2. (அவசியமிருந்தால் அடுத்த டேக்கிற்கும் போகலாம்.) பல படைப்பாளிகளும் சுட்டிக்காட்டியிருப்பதுபோல, ஜெயமோகனும் தான் இரண்டு தளங்களில் இயங்குவதை சுட்டுகிறார். 1) குடிமகன், 2) எழுத்தாளன். ஒரு குடிமகன் என்ற தளத்தில் அவருக்கு குடியுரிமை, மனித உரிமைகள் ஆகியவற்றின் முக்கியத்துவம் புரிகிறது. அதனால் அவர் மனித உரிமைகளுக்காக போரிடுபவர்களை வணங்கி நிற்கிறார். ஆனால் எழுத்தாளன் என்ற முறையில் அவர்களைப் போன்றே அவர் நிலைபாடு எடுக்க முடியாது. எழுத்தாளனுக்கு கூடுதலாக கடமைகள் இருப்பதாக அவர் நினைக்கிறார். அது எந்த ஒரு பிரச்சினையிலும் மறுதரப்பை பார்ப்பது என்பதுதான் அது. மறுதரப்பின் மறுதரப்பின் மறுதரப்பு என்று அது எல்லையற்று நீள்கிறது. பொதுவாக இந்த குடிமகன்/ எழுத்தாளன் பிரிவை எப்படிப் பார்ப்பார்கள் என்றால் குடிமகன் குடியுரிமை, சட்டம், சமூக ஒழுங்கு என்ற அளவில் நின்றுவிடுவான். எழுத்தாளன் அல்லது இலக்கியம் அதையும் கடந்து அதிருப்தியின் களங்களில் இயங்குவது இயல்பு. அதாவது குடிமகன் உடனடி லெளகீக ஏற்பாடுகளின் பாதுகாப்பில் திருப்தியுறுவான். எழுத்தாளனோ இலட்சியங்களை அடுத்து கட்டத்திற்கு எடுத்துச் செல்பவன் அதனால் அவன் சுலபத்தில் திருப்தியடைய முடியாது. இதை சிறப்பாக விளக்கும் கட்டுரை ஒன்றைச் சொல்லவேண்டும் என்றால், சுசி தாரு என்ற கல்வியாளர்/விமர்சகர் எழுதிய “Citizenship and its Dicontents” என்ற கட்டுரையை சொல்லலாம். இது A Question of Silence: The Sexual Economies of Modern India, Edited by Mary E. John and Janaki Nair என்ற நூலில் இடம்பெற்றுள்ளது. அதில் அவர் சரோஜ் பதக் என்ற குஜராத்தி எழுத்தாளரின் வாழ்வையும், எழுத்தையும் இந்தக் கோணத்தில் பரிசீலிக்கிறார். நான் ஒரு தமிழ் கட்டுரையில் இதை குடியுரிமைப் பிரக்ஞை x அதிருப்திப் பிரக்ஞை என்று எழுதியிருந்தேன். பார்க்க: http://www.shobasakthi.com/shobasakthi/?p=556 வேளச்சேரி சம்பவத்தில் மனித உரிமை ஆர்வலர்கள், போலீஸ்காரர்கள் எப்படி இரக்கமின்றி கொலை செய்தார்கள் என்பதை மட்டுமே பேசுவார்கள். அதற்கான நீதி வேண்டும், சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளை தண்டிக்க வேண்டும் என்றுதான் சொல்வார்கள். ஆனால் இலக்கியவாதியின் பணி அதைவிட சிக்கலானது. அவன் அந்த போலீஸ்காரர்களின் நிர்ப்பந்தங்களையும் புரிந்துகொள்வான்; அவர்களுக்குக் கட்டளையிடும் ஆட்சியாளர்களின் மனோவியலையும் புரிந்துகொள்வான். அதனால் அவனுக்கு இந்தப் பிரச்சினையின் தீர்வு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தண்டிப்பதுடன் நின்றுவிடாது; அதையும் தாண்டி சமூகத்தில் புரையோடியிருக்கும் பிரச்சினைகளை குறித்து அதிருப்தி கொள்ளும் மனம் செயல்படத் துவங்கும். அவனுடைய புதினத்தில் போலீஸ் கான்ஸ்டபிள், துப்புக்கொடுக்கும் பாலியல் தொழிலாளி, பீஹார் தொழிலாளர்கள் மற்றும் திருடர்கள், அவர்கள் சமூகப் பின்னணி, போலீஸ் உயரதிகாரி, வணிகர்கள், ஊடக பிரமுகர்கள், அரசியல்வாதிகள், உயர் அதிகார வர்க்கம் அனைவரது பார்வைக்கோணங்களும் பலங்களும், பலவீனங்களும் விரியும். அவனுடைய புதினம் இந்தக் கொலகளின் பின்னே இயங்கும் சமூக இயந்திரத்தின் கொடூர அம்சங்களை இருள்வெளிகளை கண்டறியும். அதிகாரத்தையும், சொத்துக்களையும் நோக்கி மனிதனை செலுத்துவது எது? அந்த விசைகள் சமகாலத்தில் எந்த வடிவங்களில் இயங்குகின்றன என்பதை அவன் புதினம் அலசிப் பார்க்கும். இச்சையின் எத்தகு மாய வடிவங்கள் அதிகார வெறிக்கும், சொத்து குவிப்பிற்கும் இட்டுச்செல்கின்றன என்றெல்லாம் ஆராயும். யோசாவின் Conversation in the Cathedral படித்திருக்கிறீர்களா? அதை யாரும் தமிழில் மொழிபெயர்க்கக் கூடாதா என்று மனம் ஏங்குகிறது. தாஸ்தோவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் நாவலை எடுத்துக்கொள்ளுங்கள். ராஸ்கோல்நிக்காவ் முதலில் என்ன முடிவு செய்கிறான்? உண்மையான தேவையுள்ள, மேம்பட்ட குணங்களுடைய சமூக மனிதன் அவன் தேவைக்காக அனாவசியமாக செல்வத்தை பதுக்கி வைத்திருக்கும் கீழ்மைக் குணமுடைய ஒருவரை கொன்றுவிட்டு செல்வத்தை கைப்பற்றலாம் என்று நினைக்கிறான். தத்துவரீதியாக இந்த செயல் நியாயமானது என்று நம்பத் தொடங்குகிறான். ஆனால் அந்தக் கொலையை செய்த பிறகு அவன் மனம் அதன் குரூரத்தை உணர்கிறது. குற்ற உணர்ச்சி அவனை பீடித்து ஆட்டுகிறது. நாவல் கலையின் சிகரமென போற்றப்படும் அந்த நாவலில் மறுபக்கத்தின் மறுபக்கத்தின் மறுபக்கம் விரியும் விதத்தில் படிக்கும் வாசக மனம் நெருப்பில் புடம்போடப்பட்டு விகசிக்கும் அற்புதம் அல்லவா இலக்கியத்தின் மேன்மை? கேரளாவில் நக்ஸலைட் போராளி வர்கீஸை மேலதிகாரிகளின் உத்தரவின் பேரில் சுட்டுக்கொன்ற ராமச்சந்திரன் நாயர் இருபத்தியெட்டு ஆண்டுகள் மனம் புழுங்கி பின் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டு மேலதிகாரிக்கும் தண்டனை வாங்கிக் கொடுத்தாரே, அங்கேதானே செயல்படுகிறது இலக்கியத்தின் தார்மீகம்? சுருக்கமாகச் சொன்னால் சட்டம், குடியுரிமை, மனித உரிமை சொல்லாடல்களுக்கும் இலக்கியத்திற்கும் வேறுபாடு இங்கேதான் இருக்கிறது. அவற்றினால் மனித உரிமைகளை மீறும் போலீஸ்காரர்களுக்கு தண்டனை வாங்கித்தரத்தான் முடியும். இலக்கியத்தால் அதிகார வர்க்கத்தின் மனோவிகாரங்கள், சமூக அமைப்பில் உறைந்திருக்கும் வன்முறை ஆகியவற்றையும் வெளிப்படுத்தி அந்த போலீஸ்காரர்களுக்கு பின்னாலும் அதே குடியுரிமை, சொத்துரிமை நலன்கள்தான் செயல்படுகின்றன என்ற முரண்பாட்டை சுட்டிக்காட்ட முடியும். மனித உரிமை ஆர்வலர்களும், இலக்கியவாதிகளும் பிரியும் எல்லை பரிகாரம் என்ன என்பதை சிந்திப்பதில்தான், அதில் மனித உரிமை வாதிகள் உடனடி எல்லையுடன் நிற்பார்கள். இலக்கியவாதிகள் குற்றத்தின் அடி ஆழத்திற்கு சென்று ஆன்ம பரிசோதனை செய்வார்கள். ஆனால், தோழர்களே, நன்றாக கவனியுங்கள். காவலர்கள் திருடியதாக கூறப்படுபவர்களை விசாரணையின்றி நேரடியாக சுட்டுக்கொல்வதை மனித உரிமைக்காரர்கள், இலக்கியவாதிகள் இருவருமே கண்டிக்கத்தான் செய்வார்கள். அதற்கு என்ன தீர்வு என்பதில்தான் இருவரும் வேறுபடுவார்கள். “கொல்வதைத்தவிர வேறு வழியில்லை” என்ற மறுபக்கம் இலக்கியம் விசாரணை செய்யும் மறுபக்கம் அல்ல. பாமரத்தனமும், சர்வாதிகார இச்சையும் வாசம் செய்யும் பக்கம் அது (ஜெயகோகன் வாசகர் நிர்மல் எவ்வளவு பணிவாக, அழகாக அதை சுட்டிக்காட்டியுள்ளார் என்பதை இந்த சுட்டியில் பாருங்கள்: http://www.jeyamohan.in/?p=25885 . அந்த டீக்கடை பேச்சின் சாத்தியம் (“இவனுகள போட்டுத்தள்ளுனாதான் அடங்குவாங்க”) மானுட நாகரீக மேம்பாட்டிற்கு எதிரான பக்கம். அங்கே இலக்கிய வேட்கை செத்துப்போன அதிகார மமதை நிறைந்த சாணக்கிய மனம்தான் போகும். நல்லவர்கள் போகமாட்டார்கள். எனவே “விசாரணையின்றி கொல்லக்கூடாது என்ற இலட்சியத்திற்கும்” “விசாரணையின்றி கொன்றாகவேண்டும் என்ற யதார்த்திற்கும்” இடையில் ஜெயமோகன் கட்டி எழுப்பும் முரண்பாடு அல்லது இருமை எதிர்வும், அதில்தான் இலக்கியம் வாசம் செய்கிறது என்பதும் இதுவரை உள்ள இலக்கியக் கோட்பாடுகளில் கேள்விப்படாதது. வேண்டுமானால் இன்று தமிழகம்/கேரளா/இந்தியா அல்லது உலகில் உயிருடன் இருக்கும் பெரும் படைப்பாளிகள், விமர்சனக் கோட்பாளர்கள் அனைவருக்கும் எழுதிக்கேட்போம். இதற்கென்று ஒரு குழு அமைப்போம். நிதி திரட்டி சர்வதேச அளவில் பேட்டிகள் எடுப்போம். ஜெயமோகனும், அவர் வாசகர்களும் தயாரா? அடுத்து ஒரு குடிமகன் என்ற அளவிலாவது கொல்லத்தான் வேண்டும் என்ற “யதார்த்தவாத நிர்ப்பந்தத்தை” ஏற்றுக்கொள்ள வேண்டுமா என்று பரிசீலிப்போம். இங்கேதான் பிரச்சினை மிகவும் மோசமாக இருக்கிறது. பீஹாரிலிருந்தும், பிற வட மாநிலங்களிலிருந்தும் ஏராளமான ஒப்பந்தத் தொழிலாளர்கள் தமிழக்த்திற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளார்கள். அதேபோல தமிழர்களும் பல மாநிலங்களில் இருக்கலாம். இவர்கள் ஏன் இப்படி மாநிலம் விட்டு மாநிலத்திற்கு ஏற்றுமதி/இறக்குமதி செய்யப்படுகிறார்கள் என்றால் மொழி வித்தியாசம் காரணம். அவர்களுக்குத் தெரியாத ஊரில் ஆடு மாடுகளைப் போல கொட்டில்களில் அடைபட்டு வாழ்வது சுலபம். ஒரு ghetto போல அவர்களை வைத்துவிட்டால் வேலை வாங்குவது சுலபம், அதிக நேர உழைப்பு, குறைந்த ஊதியம் இதில்தானே முதலீட்டியத்தின் ஆதார மூச்சு இருக்கிறது. இதற்காகத்தான் இந்த ஏற்றுமதி இறக்குமதி நடக்கிறது. அதே சமயம் அவர்கள் குற்றத்தில் ஈடுபடக்கூடியவர்கள் என்ற பீதியை ஏற்படுத்தி உள்ளூர் சமூகத்திலிருந்து அவர்கள் அந்நியப்படுத்தப்படுகிறார்கள். அதனால்தான் வேளச்சேரி கொலைகளுக்குப் பிறகு அவர்களைப் பற்றிய கணக்கெடுப்பும், கண்காணிப்பும் நிகழ்கிறது. ஜெயமோகன் ஒரு குடிமகனாக இதைப்பற்றி பேசுவதில்லை, அதற்குப் பதிலாக திருச்சி ராம்ஜி நகரில் இருந்த கும்பல் போல பீஹாரிலும் உள்ள தொழில்முறை திருட்டு சமூகங்களைப் பற்றி பேசுகிறார். இவர்களது செயல்முறை வித்தியாசமானது. இவர்கள் எந்த ஊரிலும் தங்க மாட்டார்கள். ஒரு கொள்ளையினைச் செய்துவிட்டால் உடனே கிடைத்த வாகனங்களில் ஐநூறு கிலோமீட்டராவது தள்ளிச் சென்று விடுவார்கள். இவர்கள் ஒரு வங்கியை சென்னை புறநகரில் கொள்ளையடித்தால் அடுத்த நாள் பெங்களூரில்தான் இருப்பார்கள். குறைந்த பட்சம் ராம்ஜி நகர் அணுகுமுறை அதுதான் என்று நான் விசாரித்த அளவில் சொல்ல முடியும். வீடு எடுத்து தங்கி சுற்றுப்புறத்தில் ஒவ்வொரு வங்கியாக கொள்ளை அடித்துக்கொண்டு இருக்க மாட்டார்கள். எப்படியோ, தொழிலாளர்களோ அல்லது தொழில்முறை திருடர்களோ. போலீஸ் அவர்களைப் பிடித்தால் என்ன செய்யும்? விசாரணை. போலீஸ் விசாரணை என்பது மரணத்தை விட கொடுமையானது என்பது குழந்தைக்கும் தெரியும் (எத்தனை படங்களில் பார்க்கிறார்கள்). அந்த விசாரணையில் உண்மையிலேயே திருட்டுக்கும்பலாக இருந்தால் வேறு எத்தனை குழுக்கள் கிளம்பி வந்துள்ளன போன்ற தகவல்கள் கிடைக்கும். எப்படியும் ஒரு குழுவை பிடித்த உடனேயே மற்றவர்கள் ஓடி விடுவார்கள். சிறுது காலம் வர மாட்டார்கள். தமிழகத்தில் எத்தனை வங்கிக் கிளைகள் செய்ல்படுகின்றன? ஒரு ஆண்டில் எவ்வளவு திருட்டு நடக்கிறது? நிலமை என்ன கட்டுக்கடங்காமலா போய்விட்டது? மேலும் பதினான்கு இலட்ச ரூபாய் திருட்டு என்பதெல்லாம் என்ன நாட்டையே சீர்குலைத்து விடுமா? வங்கியில் நடக்கும் ஊழலே ஆயிரக்கணக்கான கோடிகளை எட்டுமே? அது தவிர விஜய் மல்லையாக்கள் வேறு இருக்கிறார்களே? அதிலெல்லாம் சீர்குலையாத பொருளாதாரமா இந்தச் சிறு கொள்ளையர்களின் சில்லறைத் திருட்டினால் நிகழப்போகிறது? கொள்ளை நடந்தவுடனேயே எல்லா செய்தித்தாள்களிலும் வங்கிகளின் பாதுகாப்பில் காட்டப்படும் மெத்தனப் போக்கு சுட்டிக்காட்டப்பட்டதே? ஒரு குடிமகனாக ஜெயமோகன் அதையெல்லாம் படிக்க வேண்டாமா? எந்த அடிப்படையில் கொல்வதைத் தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு வருகிறார்? இங்குதான் எனக்கு ஜெயமோகனை எப்படி பகுப்பது என்பதில் சிக்கல் வருகிறது. அவருக்கு படைப்பெழுத்தில் உள்ள கணிசமான திறமை அனைவரும் அறிந்தது. மாடன் மோட்சம் கதையின் பலவீன்ங்களை விமலாதித்த மாமல்லனின் விமர்சனம் நிறுவிய பிறகும், அவரது எழுத்துக்களில் ஆங்காங்கே தென்படும் படைப்பாற்றல் புறக்கணிக்கத்தக்கதல்ல. எந்த காரணத்தினால் பேச மாட்டேன், பேச மாட்டேன் என்று கூறிக்கொண்டே அரசியல் பேசுகிறார்? அறியாமையால் அகம்பாவம் பிடித்து எதையாவது எழுதி மாட்டிக்கொள்கிறாரா? அல்லது இப்படியெல்லாம் பிற சிந்தனையாளர்களை சீண்டிவிட்டால் தன்னைப்பற்றி எழுதுவார்கள் என்ற மனச்சிக்கலுக்கு ஆட்பட்டிருக்கிறாரா? சிறு குழந்தைகளை சிறுது நேரம் கவனிக்காமல் விட்டால் கவனத்தை ஈர்ப்பதற்காக அழுவார்கள், எதையாவது போட்டு உடைப்பார்கள். அது போன்ற மனோபாவத்தினால் தான் தொடர்ந்து சர்ச்சைக்கு ஆட்பட வேண்டும் என்று நினைக்கிறாரா? அல்லது ஏதோ வலதுசாரி/ அரசு நிறுவனங்களில் தொடர்பு வைத்துக்கொண்டு இப்படியெல்லாம் எழுதினால் எவ்விதமான எதிர்வினைகள் வருகின்றன, மனித உரிமைகளுக்காக எத்தனை பேர் பேசுகிறார்கள் என்பதை புள்ளிவிவரம் சேகரித்துத் தருகிறாரா? காமடி பீஸா, வில்லனா? உண்மையிலேயே விவாதத்திற்குரியது அது. ஒன்று மட்டும் நிச்சயம். இந்தியா முழுமையாக தன்னை கட்டற்ற முதலீட்டிய ஆட்டத்திற்குள் ஈடுபடுத்திக்கொள்ள தயாராக இருக்கிறது. அதற்கு இங்குள்ள இயற்கை வளங்களையும், மனித ஆற்றலையும் மிகக் குறைந்த விலையில் சுரண்டி எடுப்பது அவசியம். இச்செயல்பாட்டிற்கு பெரிய தடையாக இருப்பவர்கள் மனித உரிமை ஆர்வலர்கள், மாவோயிஸ்டுகள் போன்ற இடது சாரி அமைப்புகள்/சிந்தனையாளர்கள், தன்னார்வ குழுக்கள். அதற்கு அடுத்த கட்டத்தில் உள்ள சவால் வசதியான நகர்புற, படித்த சுதந்திரவாதிகளும் இவர்களுக்கு ஆதரவாக செயல்படத் துவங்குவார்களா என்பதுதான். மனித உழைப்பும், பழங்குடியினர் இருப்பிடம் போன்ற ஆதார வளங்களும் நியாமின்றி சுரண்டப்படக்கூடாது என்பதற்காக படித்த நகர்புற சுதந்திரவாதிகளும் போராடும் நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் அருந்ததி ராய், அ.மார்க்ஸ், ஞாநி உள்ளிட்ட என் போன்றோரின் நிலைபாடு. அப்படி நடக்கக்கூடாது நவீன முதலீட்டிய இந்தியாவின் வளர்ச்சிக்காக ஆதிவாசி/உழைக்கும் மக்கள் தொகுதிகள் தியாகம் செய்யப்படவேண்டும் என்று நினைக்கும் வலதுசாரி மனோபாவத்திற்கு ஆதரவாகத்தான் காங்கிரஸ், பிஜேபி, சிதம்பரம், நரேந்திர மோடி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஜெயமோகன் போன்ற வலதுசாரி தேசியவாதிகளும் செயல்படுகிறார்கள் என்றும் தோன்றுகிறது. இலக்கியத்தின் பேரால் இலக்கியத்திற்கு தொடர்பற்ற அரசியல் தர்க்கத்தை ஜெயமோகன் நியாயப்படுத்துவது சாதாரணமாக புறக்கணிக்கத்தக்க விஷயமல்ல. இது ஒரு முக்கியமான வரலாற்றுத் தருணம். அவர் ஏதோ இலக்கியவாதி என்று நம்பி, அவர் கதைகளை படித்து புல்லரித்து அவர் பின்னால் செல்லும் தோழர்கள் அவருடைய சிந்தனைகளின் பாதையின் இறுதியில் மனித உரிமைகளையும், குடிமை உரிமைகளையும் முற்றிலும் மறுக்கப்போகும் ஏதேச்சதிகாரம் காத்திருப்பதை புரிந்துகொள்ள வேண்டும். இவ்வளவு சொன்ன பிறகும் இது தனி மனித விரோதம், அவர் மேல் காழ்ப்பு, இடது சாரி பிறழ்வு என்றெல்லாம் நினைத்துக் கொள்பவர்களுக்கு எதிர்காலம் அனைத்தையும் புரிய வைக்கும். ஜெயமோகனே தெரியாத்தனமாக வீம்பிற்காக இதையெல்லாம் எழுதிக்கொண்டிருந்தால் பேசாமல் உண்மையான இலக்கியவாதியாக மாறி இந்த அரசியல் எல்லாம் வேண்டாம் என்று செயல்பட்டால் காலத்தின் பழியிலிருந்து தப்பிக்கலாம் என்றுதான் சொல்லத்தோன்றுகிறது. (இந்தக்கட்டுரையில் குடிமகன், எழுத்தாளன் போன்ற சொற்களிலும் வேறு வினைமுற்றுகளிலும் ஆண்பால் விகுதிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பொதுவாக இவற்றைத் தவிர்க்க முயற்சிப்பேன் என்றாலும், ஜெயமோகன் எழுத்தை ஒட்டி எழுதுவதால் இவற்றை பயன்படுத்தியுள்ளேன்) பதிவு-3 (நண்பர்களே! “விடுங்கள் ராஜன்-ஏன் இதையே எழுதிக்கொண்டு” என்று ஆயாசமடையாமல் படியுங்கள். எழுத, எழுதத்தான் தெளிவு பிறக்கும்; பேச பேசத்தான் தீர்வு வரும். ஒரு நல்ல ஆய்வுக் கட்டுரை 4000 வார்த்தைகளாவது இருக்கவேண்டும். என்னுடைய மூன்று குறிப்புகளும் சேர்த்தாலும் அவ்வளவு வராது. இந்த மூன்றாவது குறிப்பை தங்கள் ஆதர்ச எழுத்தாளருக்காக, அவர் சிந்தனைகளை ஏற்காத பலர் பங்குகொள்ளும் திரியில் வந்து, புனை பெயரிலும், நிஜப்பெயரிலும் கருத்துக்களை பதித்த உரையாடல் மாண்பிற்காக, ஜெயமோகன் வாசகர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். இந்த குறிப்பின் அணுகுமுறை தர்க்கம் சார்ந்தது என்றாலும் எளிமையாக எழுத முயற்சிக்கிறேன்; ஆனால் கவனமாக படிக்கவேண்டும் ஜெயமோகனின் வரிகள் இட்டாலிக்ஸில் தரப்பட்டுள்ளன) தமிழில் தர்க்கம் என்பது தமிழ் சினிமா நகைச்சுவைக்காட்சிகளில்தான் சிறப்பாக வெளிப்படுகிறதோ என்று தோன்றுகிறது. வாழைப்பழ ஜோக்கில் “ஒன்றும் இதுதான், இன்னொன்றும் இதுதான்” என்று சாதிப்பது எவ்வளவு சுவாரசியமான தர்க்கச்சிக்கல்! மற்ற பல சமயங்களில் உணர்ச்சி தர்க்க செயல்பாட்டை தடுத்துவிடுகிறது. ஜெயமோகனுக்கு தர்க்கம் சரியாக வருவதில்லையென்றாலும், மிகவும் பிடிக்குமென்று நம்புகிறேன். விஷ்ணுபுரம் இரண்டாவது சர்க்கமான ஞானசபை விவாதத்தை எவ்வளவு சுவாரசியமாக எழுதியிருப்பார். படிக்க, படிக்க தெவிட்டாத அற்புதமான பக்கங்கள். மூன்று வியக்திகளில் இருப்பை அணுகுவோம். முதலாவது, அனுமானம். இது போதுமான நேரடி புலன் அனுபவமின்றி செய்யும் யூகம் அல்லது கொள்ளும் மனச்சித்திரம். இரண்டாவது பிரத்யட்சம். இது நம் புலன்களுக்கு அகப்படுவது. மூன்றாவது தர்க்கம். நம் சிந்தனை மற்றும் செயல்களை வழிநடத்துவது. இந்த இடத்தில் விஷ்ணுபுரம் ஞானசபையில் செய்வது போல எனது பிடகங்களை கூறிவிட வேண்டும். பெயர் உதிர்க்கிறேன் என்றோ, என்னை பெரிதுபடுத்திக் காட்டிக்கொளவதற்கோ என்று நினைக்காதீர்கள். நாலு புத்தகம் படித்ததால் யாரும் பெரிய ஆளாகிவிடமுடியாது. என்ன எழுதுகிறார்கள், எப்படி எழுதுகிறார்கள், எப்படி செயல்படுகிறார்கள் என்பதில்தான் அவர்கள் வாசிப்பு துலக்கமுறவேண்டும். இல்லாவிட்டால் ஒருவர் எத்தனை நூல்கள் படித்துள்ளார் என்பதற்கும், எத்தனை உள்ளாடைகள் வைத்துள்ளார் என்பதற்கும் சமூகரீதியாக ஒரே அளவிலான முக்கியத்துவம் அல்லது முக்கியமின்மைதான் இருக்க முடியும். என்னுடைய எழுத்துக்கள் எல்லாமே சார்ல்ஸ் சாண்டர்ஸ் பர்ஸ் என்ற அமெரிக்க தத்துவியலாளர், குறியியக்கத் தத்துவத்தின் மூல ஆசானின் சிந்தனைகளின் அடிப்படையில் உருவாவது. நான் பிற ஐரோப்பிய தத்துவ சிந்தனையாளர்களை பர்ஸிய சிந்தனைகளின் அடிப்படையில் அணுகுவதால் உருவாவது. இவை எவ்வளவு பழையவை அல்லது புதியவை என்பது முக்கியமல்ல. இந்த சிந்தனைகளின் அடிப்படையில் நாம் எப்படி நம்முடைய பிரச்சினைகளை அணுகப் போகிறோம், செயல்படப் போகிறோம் என்பதுதான் முக்கியம். மீண்டும்: மூன்று வியக்திகளில் இருப்பை அணுகுவோம். முதலாவது, அனுமானம். இது போதுமான நேரடி புலன் அனுபவமின்றி செய்யும் யூகம் அல்லது கொள்ளும் சித்திரம். இரண்டாவது பிரத்யட்சம். இது நம் புலன்களுக்கு அகப்படுவது. மூன்றாவது தர்க்கம். நம் சிந்தனை மற்றும் செயல்களை வழிநடத்துவது. இப்போது ஒரு நகைச்சுவை காட்சியை பார்ப்போம். “காதலில் சொதப்புவது எப்படி?” என்ற படத்தில் வந்தது. அமலா பால் சித்தார்த்திற்கு முகப்புத்தகத்தில் நிறைய பெண்கள் சிநேகிதிகளாக இருப்பதை பார்த்து சந்தேகம் கொள்கிறார். சித்தார்த் ஒருமுறை அமலா பாலின் அலைபேசியை பார்த்து அதில் நிறைய ஆண் நண்பர்களின் பெயர்கள் இருக்க, அவர்களுடன் அமலா பால் சுற்றுவதாக நினைக்கிறார். அதை அமலா பாலிடம் கேட்க இருவருக்கும் பெரிய சண்டை வருகிறது. மத்தியஸ்தத்திற்கு ஒரு நண்பனிடம் போகிறார்கள். நண்பன் ஒவ்வொருவரது பிரச்சினையையும் கேட்டு அறிவுரை கூறுகிறான். அமலா பால் சித்தார்த்தின் முகப்புத்தக நட்புகளை சந்தேகப்படக் கூடாது. சித்தார்த் அமலா பாலின் அலைபேசியை எடுத்துப் பார்த்ததும், சந்தேகப்பட்டதும் தவறு; அவ்வாறு செய்யக்கூடாது. ஒரு வழியாக ராசி ஆகும் நேரத்தில் நண்பன் இன்னொரு அறிவுரை சொல்கிறான். அமலா பால் கண்ட பசங்களுடன் சுத்தக் கூடாது. இருவரும் சேர்ந்து அவனை அடிக்கப் பாய தியேட்டரில் ஒரே சிரிப்பு. ஏன் சிரிக்கிறோம்? அவன் சொன்ன அறிவுரையில் தவறு இல்லையே? கண்ட பசங்களுடன் சுத்தக்கூடாது என்றுதானே கூறுகிறான்? இப்படி புரிந்து கொள்வோம். ஒரு பெண் கண்ட பசங்களுடன் சுத்தக் கூடாது என்பது ஒரு சமூக நடைமுறைத் தர்க்கம். அதை பொதுவாக கூறலாம். ஆனால் அப்போது பேசப்படும் குறிப்பிட்ட பிரச்சினையில் அது அனர்த்தமானது. காரணம் என்னவென்றால் அங்கே ஆண், பெண் இருவருக்குமே அனுமானம் சந்தேகம் என்ற வடிவில் இருக்கிறது. அதற்கு பிரத்யட்ச ஆதாரங்கள் முகப்புத்தக, அலைபேசி பெயர்கள். அந்த பிரத்யட்சத்தையும், அனுமானத்தையும் இணைத்து அவர்கள் குணசித்திரத்தை பற்றி தர்க்கரீதியான முடிவுக்கு வரக்கூடாது என்பதுதான் பிரச்சினை. அந்த பிரத்யட்சங்கள், அனுமானங்களை ஆதரிப்பதாக்க் கொள்ள முடியாது என்பதால் அங்கே எந்த தர்க்க ரீதியான முடிவும் சாத்தியமில்லை. இதை உணர்ந்ததும் சண்டை முடிந்தது. ஆனால் மத்தியஸ்தம் செய்யும் நண்பன் இந்த இடத்தில் பொது தர்க்கத்தை சொல்லும்போது அமலா பால் கண்ட பசங்களுடன் சுத்துவது பிரத்யட்சம் என்ற குறிப்பான அர்த்தம் வந்து விடுகிறது. விவஸ்தை கெட்ட நண்பனை நினைத்து சிரிக்காமல் இருக்க முடியுமா? இப்படி ஒரு வாக்கியத்தை யோசித்துப் பாருங்கள்: “நீ என் நல்ல நண்பன். பல உதவிகள் செய்துள்ளாய் (என்பதனால்) நான் உன்னை இன்று “xxxxx” என்று திட்டினால் தவறில்லை, அது நியாயம் (என்றாலும்) நான் திட்டமாட்டேன்.” நண்பன் திட்டியதாக எடுத்துக்கொள்வானா? திட்டவில்லை என்று நினைப்பானா? திட்டுவது என்பது பிரத்யட்சம். திட்டுவதற்கான நியாயம் இருக்கிறது என்பது தர்க்கம். தர்க்கம் சரியாக இருக்கிறது என்று சொல்லும்போதே பிரத்யட்சம் நிகழ்ந்தது போலத்தான். மீண்டும் தனியாக திட்ட வேறு வேண்டுமா? இப்போது வேளச்சேரி பிரச்சினைக்கு வருவோம். “ஜெயமோகன் ஒற்றைப்பட்டையாக நிலைபாடு எடுக்க முடியாது என்றுதானே சொல்கிறார். அவரை ஏன் மனித உரிமைகளுக்கு எதிரானவர் என்று சொல்கிறீர்கள்? அவர்தான் மனித உரிமை ஆர்வலர்களை மதிப்பதாக சொல்கிறாரே?” என்பதுதான் அவர் ஆதரவாளர்கள் குழப்பம். வேளச்சேரியில் என்ன நடந்தது எனபதற்கு காவல்துறை ஒரு விளக்கம் தருகிறது. அந்த விளக்கம் உள்முரண்களாலும், சில பிரத்யட்ச தடையங்களாலும் முழுவதும் ஏற்கும்படியாக இல்லை. மனித உரிமை ஆர்வலர்கள் காவலர்கள் திருடர்களென சந்தேகத்திற்கு உள்ளான ஐந்து பேரை விதிமுறைகளை மீறி சுட்டுக் கொன்று விட்டார்கள் என்று ஐயப்படுகிறார்கள். ஐயத்திற்கான ஆதாரங்களை திரட்டுகிறார்கள். விசாரணை தேவை என்கிறார்கள். ஐயம் வலுப்பெற, வலுப்பெற சுட்டுக்கொன்றுவிட்டார்கள் என்ற அனுமானம் பிரத்யட்சமாகவே கருதப் படுகிறது. அதனால் மனித உரிமைகளில் அக்கறை கொண்டோர் பதறுகிறோம். ஜெயமோகன் பிரத்யட்சத்திற்கும், அனுமானத்திற்கும் இடையே கொஞ்சம் இடைவெளி இருக்கிறது என்பதால் காவல்துறையை ஒரேயடியாக ஏச வேண்டாம் என்று விகடன் தலையங்கம் போல கருத்து சொன்னால் அது பெரிய பிரச்சினையில்லை. ஏனெனில், அதுதான் பொதுவாக வலதுசாரிகள் சொல்வது. ஆனால் ஜெயமோகன் சொல்வது வித்தியாசமானது. அவரே சில புலன் விசாரணைகளை மேற்கொண்டதன் அடிப்படையில் காவல்துறை அவர்களை குப்புறப்படுக்கவைத்து சுட்டுக்கொன்றதுதான் பிரத்யட்சம் என்று நம்புகிறார். நடந்தது சட்டத்தை, மனித உரிமைகளை மீறியது என்பதை ஏற்றுக்கொள்கிறார். ஆனால் இந்த இடத்தில் அவரால் காவல்துறையை கண்டிக்க முடியாததற்குக் காரணம் அவர் தர்மத்திற்கு சங்கடத்தை ஏற்படுத்தும் ஒரு தர்க்க முரணை காண்கிறார். “மனித உரிமைக்காகத் திருட்டை அனுமதிக்க முடியுமா? இல்லை, நடைமுறைத் தேவைக்காக சட்டத்தை ரத்துசெய்யமுடியுமா?” இந்த வரிகள் மிக முக்கியமானவை. அதாவது இந்த இரண்டு தர்க்கங்கள் மோதும் தர்மசங்கடம்தான் அவரது பிரச்சினை. இலக்கியம் (அதாவது எழுத்தாளர் ஜெயமோகன்) அந்த தர்மசங்கடத்தை எதிர்கொண்டு மேலே செல்ல வேண்டும். அந்த தர்க்கங்களை இந்த இரண்டு வரிகள் சொல்கின்றன. புரிந்துகொள்ள முயல்வோம். தர்க்கம் ஒன்று: “மனித உரிமைக்காகத் திருட்டை அனுமதிக்க முடியுமா?” அதாவது மனித உரிமைகளை காவல்துறை மீறக்கூடாது என்று பார்த்தால் திருட்டை அனுமதிக்க வேண்டிதான் வரும். இதற்கு அடிப்படையாக இருப்பது ஏற்கனவே அவர் புலன் அறிந்ததன் அடிப்படையில் கண்ட இன்னொரு பிரத்யட்சம் “அதாவது பிகாரி கொள்ளையர்களை தண்டிக்கவேண்டுமென்றால் சுட்டுக்கொலைசெய்யவேண்டும், வேறு எதுவுமே நடைமுறையில் சாத்தியமல்ல. இதுவே யதார்த்தம்” இது மீண்டும் உலக அளவிலும், இந்திய அளவிலுமான பிரத்யட்சங்களால் சில பாராக்கள் கடந்து தர்க்க விதியாக மாறுகிறது. “இதுதான் நானறிந்தது. உண்மை இதற்கு நெருக்கமாக எங்கோ உள்ளது. உலகம் முழுக்க ஆயுதமேந்திய அமைப்புசார் வன்முறையானது அரசுகளால் ஆயுதம் மூலமே எதிர்கொள்ளப்பட்டு வருகிறது என்பது ஓரு யதார்த்தம். அதை சட்டநடவடிக்கைகள் மூலம் ஒன்றும் செய்ய முடியாது. அதிலும் மாநிலங்கள் தனி நாடுகளாகவே செயல்படும் இந்தியாவில் வேறு ஒன்றுமே சாத்தியமில்லை என்பது காவலர் தரப்பு.” தர்க்கம் இரண்டு: “இல்லை, நடைமுறைத் தேவைக்காக சட்டத்தை ரத்துசெய்யமுடியுமா?” அதாவது பீகாரிகளை சுட்டுக்கொல்வதைத் தவிர வேறு வழியில்லை என்பது நடைமுறைத் தேவை. இதற்காக மனித உரிமைகளை பாதுக்காக்கும் சட்டத்தை “ரத்து” செய்யவேண்டி இருக்கிறது. இந்த வரிகளிலிருந்து தர்க்கக் கட்டமைப்பை வடித்தெடுப்போம். கொஞ்சம் கவனமாக பாருங்கள், ஜெயமோகன் கூறுவதன் நுட்பமான பரிமாணங்கள் எதுவும் தொலைந்து போகிறாதா என்று பாருங்கள்: மனித உரிமைக்காக திருட்டை அனுமதிக்க முடியுமா? இதன் பொருள் மனித உரிமைகளை பார்த்தால் திருடு நிகழும். நடைமுறைத் தேவைக்காக சட்டத்தை ரத்து செய்யமுடியுமா? இதன் பொருள் திருட்டை தடுக்க மனித உரிமைகளை “ரத்து’ செய்ய வேண்டும் அல்லது மீற வேண்டும். இன்னம் சுருக்கினால் திருட்டா அல்லது மனித உரிமைகளா சொத்துரிமையா அல்லது குடிமை/மனித உரிமைகளா “இலக்கியம்” சந்திக்கும் தர்மசங்கடமான இந்த தர்க்கத்தை ஜெயமோகன் கண்டடைந்த முறை மிகவும் பழுதுபட்டது என்பதுதான் இங்கே பிரச்சினை. அவர் கொடுக்கும் சில பிரத்யட்சங்கள் அனுமானங்களே என்றால் மறுபரிசீலனை செய்வாரா? காவலர் தரப்பை உண்மைக்கு மிக நெருக்கமானது என்று அவர் ஏன் ஏற்றுக் கொள்கிறார்? 1.இதுவரை தமிழ்நாட்டில் எத்தனை வங்கிகள் பீகாரிகளால் கொள்ளையடிக்கப் பட்டிருக்கின்றன என்று புள்ளி விவரம் தர முடியுமா? 2. கொல்வதற்குப் பதிலாக விசாரணை செய்தால், கோர்ட்டில் சென்று விசாரணைக் கைதிகளாக ரிமாண்ட் செய்து இவர்களைச் சேர்ந்த முழுக்கூட்டத்தையும் பிடித்த பிறகுதான் குற்ற அறிக்கை தாக்கல் செய்வோம் என்று சொன்னால் கோர்ட் அதெல்லாம் முடியாது என்றா சொல்லிவிடும்? ஜாமீன் கொடுத்தால் தடையங்களை மறைப்பார்கள், கூட்டாளிகளை காப்பாற்றுவார்கள் என்றால் கோர்ட் ஜாமீன் மறுக்காதா? கனிமொழிக்கே ஆறுமாதம் ஜாமீன் மறுக்கப்படவில்லையா? எத்தனை பேர் விசாரணைக் கைதிகளாகவே ஜாமீன் மறுக்கப்பட்டு சிறையில் இருக்கிறார்கள் என்ற புள்ளி விவரத்தை ஜெயமோகன் அறிவாரா? 3. பீகார் திருடர்களை தண்டிப்பதற்கு அவர்களை கொல்வதுதான் ஒரே வழி என்று ஜெயமோகன் சொல்கிறார். தண்டித்தால்தான் திருட்டை தடுக்க முடியுமா? எவ்வளவு அபூர்வமான காந்தியவாதி ஜெயமோகன். அவரை விட “இன்றைய காந்தி” நூல் எழுத தகுதியானவர் யாராவது இருக்க முடியுமா? திருட்டை ஒழிக்க தண்டிக்க வேண்டும்; வேறு தண்டனை சாத்தியமில்லையென்றால் சட்டத்தை மீறி கொன்று போட வேண்டும். எப்படிப்பட்ட ஒரு யதார்த்தம் அவருக்கு எப்படி பிரத்யட்சம் ஆகிறது என்பதை அவர் வாசகர்கள் யோசிக்கவேண்டும். 4. நான் சென்ற கட்டுரையிலேயே சொன்னபடி வங்கிகளின் பாதுகாப்பு ஏற்பாடுகளை சரியாகச் செய்யாமல் இருப்பது இந்தக் கொள்ளைகளின் மூல காரணம் அல்லவா? இத்தனைக்கும் மேலாக முக்கியமான விஷயம் ஜெயமோகன் சந்திக்கும் தர்க்கச்சிக்கல் நடைமுறை தர்க்கம் சார்ந்தது. இலக்கியம் நடைமுறைத் தர்க்கங்களை தீர்ப்பதற்காக எழுதப்படுவதல்ல. அதன் தர்க்கம் அழகியல் சார்ந்த்து. பிரத்யட்சங்கள் குறித்த அனுமானங்களிலிருந்து தனக்கேயுரிய தர்க்கங்களை வடிவமைத்து மேலும் புனைவுச் சூழல்கள், அனுமானங்கள், தர்க்கங்கள் என்று பயணித்து பிரத்யட்சத்தின் மீது தன் அபூர்வ ஒளியை பாய்ச்சுவது இலக்கியம். அதுதான் அழகியலின் தர்க்கம். சிந்தனையின் தர்க்கமும் பிரத்யட்சத்திற்கும், அனுமானத்திற்கும் இடையில் ஒயாது சலித்துப் பயணித்து கோட்பாடுகளை உருவாக்குவது. அரிஸ்டாட்டில் ஒரு துவக்கமாக ஜான் லாக் கடந்து ஜான் ரால்ஸ் கடந்து ழாக் தெரிதா கடந்து இன்று வரை பல நூற்றாண்டுகளாக சலிக்காமல் மானுட சிந்தனை இதை செய்து வருகிறது (உங்களுக்குத் தெரிந்த இந்தியப் பெயர்களை சேர்த்துக் கொள்ளுங்கள்). இதன் பிரச்சினையும் நடைமுறைச் சிக்கல்களை உடனடியாகத் தீர்ப்பது அல்ல. விழுமியங்களின் அடிப்படையில் கோட்பாடுகளை உருவாக்குவது. இதெல்லாம் நடக்கவில்லையென்றால் இன்னம் சாணிப்பால், சாட்டையடி “தர்மம்”தான் தமிழகத்தில் நிலவிக்கொண்டிருக்கும். “ஆயுதம் தாங்கிய வன்முறையை, அரசு ஆயுதம் கொண்டுதான் அடக்கும்” என்ற தர்க்கத்தை ஏன் ஒற்றப்பட்டையை தவிர்க்க விரும்பும் ஜெயமோகனின் பார்வை கூறுகிறது? இதற்கு பின்னால் உள்ள அனுமானங்கள் என்ன? பிரத்யட்சங்கள் என்ன? அப்படியே ஆயுதம் கொண்டு அடக்கினாலும் சிறையில்தானே ஐயா போடவேண்டும்? கொன்றா போடவேண்டும்? ஜெயமோகன் நண்பர் அரங்கசாமி கூறியிருப்பது போல இலங்கை மனித உரிமை மீறல் பிரச்சினைக்கும் இதையேதான் கூறுவார்களா? தமிழ்நாட்டில் திட்டுவார்களே என்ற அச்சம்தான் கட்டுப்படுத்துகிறதா? “என்ன செய்வது பிரபாகரன் மகனை உயிருடன் வைத்திருந்தால் அவன் சிறுவன் என்பதால் சில காலம் கழித்து விடுதலை செய்யவேண்டும். அவன் பின்னால் மீண்டும் தமிழர்கள் அணிதிரண்டு போராடத் துவங்குவார்கள். மீண்டும் ஆயுதம் கூட ஏந்துவார்கள். அதனால் அவனை கொல்வதுதான் அமைதியை நிலைநாட்ட ஒரே வழி” என்று ராஜபக்சே அரசு சொன்னால் அந்த மறுபக்கத்தையும் இவர்கள் பார்த்து “மனித உரிமை என்றால் அமைதி கிடையாது, அமைதி வேண்டுமென்றால் மனித உரிமைகள் கிடையாது” என்ற தர்ம சங்கடத்தை புரிந்து கொண்டு இந்தக் கருத்தை நாங்கள் சொல்வோம், ஆனால் ஏன் சொல்லமாட்டோம் என்றால் தமிழ் உணர்வாளர்கள் திட்டுவார்கள் என்று எழுதுவார்களா? மனித உரிமைகள், அவை சார்ந்த கோட்பாடுகள் நடைமுறைச் சிக்கல்களை தீர்க்கப் பிறந்தவை அல்ல. அவை விழுமியங்கள். எத்தனை நடைமுறைச் சிக்கல் வந்தாலும் அவற்றைக் கடைபிடிப்பதில்தான் மானுட உயர்வு என்பது இருக்கிறது. இலக்கியம் என்பதும் நடைமுறைச் சிக்கல்களை பாடப் பிறந்ததல்ல. அந்த சிக்கல்களை உருவாக்கும் மானுட செயல்பாடுகளை, உந்துதல்களை அகழ்ந்து பார்க்கப் பிறந்தது. காவலர்களின் நடைமுறைச்சிக்கல்களை தன்னுடையதாகப் பார்க்கும் இலக்கியம் இலக்கியமல்ல. தின மலர் செய்தித்தாள். Wednesday, January 25, 2012காலாமின் யோசனையும், அரசியலும், தீர்வும்.அப்துல் கலாமின் இலங்கை பயணத்திற்காக அவர் பலவாறு திட்டபட்டார். அந்த கோபத்தில் நியாயம் இருந்தது. இப்போது அவர் மீனவர் பிரச்சனைக்கு தீர்வாக ஒன்றை சொல்கிறார். அப்படி ஒன்றும் சிக்கலாக யோசித்து, நுண்ணறிவு கொண்டு வந்தடைந்த யோசனை அல்ல; சாதாரண பொது அறிவுக்கு தோன்றும் ஒரு யோசனைதான். ஆனால் அதில் தவறான உள்நோக்கமோ, சதித் திட்டமோ எதுவும் இருப்பதாக தெரியவில்லை. தமிழ்நாடு மற்றும் ஈழத்து மீனவர்களிடையே இருக்கும் தீவீரமான பிரச்சனையில் தீர்வை நோக்கி நகர்வதற்கு இந்த யோசனை உதவும். காலாமின் யோசனை சிங்களப்படை தமிழ் மீனவர்கள் மீது நடத்தும் இனவெறி கலந்த தாக்குதலுக்கு எந்த தீர்வையும் தரப்போவதில்லை. அந்த பிரச்சனைக்கு இந்தியா மனது வைத்து தீவிர கறாரான நடவடிக்கைகள் எடுத்தால்தான் உண்டு. ஆனால் மீனவர் பிரச்சனையின் இன்னொரு பரிமாணமாக இருப்பது தமிழ்நாட்டு மீனவர்களுக்கும் ஈழத்து மீனவர்களுக்கும் இடையிலான மீன்பிடி பிரச்சனை. இந்த பிரச்சனையின் ஆதாரமே தமிழ் நாட்டு மீனவர்களின் மீன்பிடி முறையால் கடல் வளம் நாசமாவதுடன், ஈழத்து மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தையும் இழப்பதுதான். இந்த பிரச்சனைக்கான தீர்வை இருதரப்பும் பேசித்தான் நெருங்க முடியும். ஆனால் பேசத்தயாராக இல்லாத தமிழ்நாட்டு தரப்பு, பேசுவது -குறைந்த பட்சமாக பிரச்சனையை எழுப்புவது கூட- ஏதோ துரோகம் என்பது போல் பேசும் தமிழ் தேசிய தரப்பு இதற்கான சாத்தியங்களை உருவாக்கப் போவதில்லை. கலாம் முன்வைப்பது போல், மூன்று நாட்கள் தமிழ்நாட்டு மீனவர்கள் மீன்பிடிப்பதும், மூன்று நாட்கள் ஈழத்து மீனவர்கள் மீன்பிடிப்பதும் இப்போதைக்கு சமரச தீர்வாக ஒப்புகொண்டு தொடங்கலாம் என்று தோன்றுகிறது. இந்த யோசனையும் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு சாதகமானதே. தமிழக மீனவர்களின் கடல்சொத்தை மொத்தமாக அறுவடை செய்யும் மீன்பிடி முறையால், இது தங்களுக்கு சாதகமானது அல்ல என்றே ஈழத்து மீனவர்களின் தரப்பு நினைக்கிறது. ஆனால் இப்போதைக்கு இதைவிட மேலான தீர்வுக்கான யோசனை இருப்பதாக தெரியவில்லை. தமிழ்நாட்டு மீனவர்களின் எண்ணிக்கையையும், ஈழத்து மீனவர்களின் எண்ணிக்கையையும் மனதில் கொண்டு இந்த யோசனையை ஈழத்தவர்கள் ஏற்க வேண்டும். உரையாடல், பிரச்சனைக்கான தீர்வு நோக்கி நகர்தல் ஒருதரப்பை மற்றவர்கள் புரிந்து கொள்ளுதல் என்பதற்கு எந்த அறிகுறிகளும் இல்லாத இன்றய நிலையில் இங்கே தொடங்குவது சரியாக இருக்கும். கலாம் போன்ற அதிகாரத்துடன் தொடர்புடையவர் இதை முன்வைப்பது இந்த யோசனையை நடைமுறையில் சாத்தியப்படுத்தும் வாய்ப்பு உள்ளது. மீனவர்களின் வாழ்வாதாரம் குறித்த கவலையுடன் தீர்வுகளை பற்றி கவலைப்படாதவர்கள், இந்த முறையும் வழக்கம் போல கலாமை திட்டி அரசியல் சார்ந்து மனநிறைவடையலாம். அதனால் மீனவர்களுக்கு எந்த லாபமும் இல்லை. இந்த அரசியல் ஆவேசப் பிடிவாதத்தை மீறி, மீனவர்கள் நலன் பற்றி கவலைப்படுபவர்கள் யோசிக்க வேண்டும். கலாமின் யோசனையை ஏற்பதால் சிங்களப்படை தமிழ்நாட்டு மீனவர்கள் மீது நடத்தும் தாக்குதலை நிறுத்த முடியாது. அதற்கான போராட்டங்களும், எதிர்ப்பும், அரசியலும் தொடரத்தான் வேண்டும். ஆனால் தமிழ்நாட்டு மீன்பிடி முறையால் ஈழத்தவர்கள் பாதிப்பதால்தான் அவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுகிறார்கள் என்கிற பொய்பிரச்சரத்தை, இந்த இருதரப்பிற் கிடையிலான மீன்பிடிப் பிரச்சனையை தீர்ப்பதன் மூலம் முறியடிக்க முடியும். எப்படி இருந்தாலும் இது காலப்போக்கில் இரு தரப்பின் நியாயத்தையும் கணக்கில் கொண்டு ஏற்று தீர்க்கப்படவேண்டிய ஒரு பிரச்சனைதானே. (என் 'தூவானம்' வலைப்பதிவில் இடப்பட்ட பதிவின் முக்கியத்துவம் கருதி இங்கேயும் இடுகிறேன்.) Tuesday, January 10, 2012கறுப்பு வெள்ளையை கருப்பு வெள்ளையாக பார்த்தல்.பொலிடிகல் கரெக்ட்னெஸ் பற்றி பாடம் எடுப்பதையும், அதை முன்வைத்து எதிர்வினை புரிவதையும் எழுத்தில் இனி செய்யக் கூடாது என்று முடிவு செய்திருந்தேன். பொலிடிகல் கரெக்ட்னெஸ் என்பதில், இன்னமும் ஒண்ணாங்கிளாஸ் பாஸ் செய்யாத தமிழ் சூழலில், அப்படி எல்லாம் விபரீத முடிவு எடுக்கக்கூடாது என்று தெரிகிறது. மறத்தமிழர்கள் பச்சையாக காட்டும் ஆணாதிக்க வெறியை இணையத்தில் வாசிக்க நேரும்போதெல்லாம், வேறு ஏதோ நாட்டில் நடக்கும் வன்முறை செய்தியை வாசிப்பதுபோல எதிர்கொள்ளும் பழக்கம் கிட்டத்தட்ட வந்துவிட்டது. நேற்று மதியம்கூட ஸ்ருதிஹாசன் பீர் சாப்பிடும் படம் ஒன்றை எடுத்துப் போட்டு, அதை ஒரு அதிர்ச்சியளிக்கும் விஷயமாக சொல்லி, அந்த செய்தியை இணையத்தில் பரப்பும்படி வேறு கேட்டுக் கொள்ளும் ஃபேஸ்புக் செய்தியை பார்த்தேன்; அதற்கு நிறைய 'லைக்'கள் வேறு; ஸ்ருதிஹாசன் பீர் சாப்பிடுவதில் உனக்கேன் இந்த கொலைவெறி என்று ஒருவர் கேட்கக்கூட நாதியில்லாத அளவில் தமிழ் சூழல் உள்ளது. நேற்றிரவு அன்றாடம் ட்விட்டரில் உரையாடும் நண்பர்கள், அவ்வளவு பச்சைத் தமிழ்தனமாக இல்லாவிட்டாலும், அதே தமிழ் ஜோரில் எதிர்வினை செய்திருக்கிறார்கள்; பல கொக்கிப் பிடி கேள்விகளும் கேட்டிருக்கிறார்கள். இப்போதய சுகாசினி சர்ச்சையில், போஸ்டர், தக்காளி, முட்டை வீசுதல், தமிழ் அடையாளக் குழப்பம் பற்றிய அறிவுச் சொறிதல்வரை வளரும் அளவிற்கு சீரியஸாக இல்லையென்றாலும், சில தெளிவுகளுக்காக, எழுதுவதில் எனக்கே இருக்கும் மொக்கையை சகித்து மெனக்கிடுகிறேன். அதற்கு முன் சுகாசினி மீது பரிவு கொண்டு பேச எனக்கு காரணம் எதுவும் கிடையாது; குஷ்பு மீதான தாக்குதல் நடந்த அந்த ஒரு சந்தர்ப்பத்தை தவிர, சுகாசினி சொல்லும் எதையும் நான் ஆதரித்தது கிடையாது. அவர் எதை பற்றி பேசினாலும், ஐந்து நிமிடம் கேட்கும் பொறுமை கூட கிடையாது; எலீட் குரலான அவரை பலமுறை திட்டக் கூட தயங்கியது கிடையாது; எதிர்காலத்திலும் அதற்கான சந்தர்ப்பங்கள் இன்னும் அதிகம். இந்த சந்தர்ப்பத்தில் சுகாசினி பற்றிய சர்ச்சை என்று அல்லாது, குறிப்பிட்ட பிரச்சனையின் அரசியல் பரிமாணங்களும், நம் மக்களின் எதிர்வினையும், என்னை நோக்கிய கேள்வியுமே என்னை எழுத வைக்கிறது. அதே போல அழகான ஆண் என்பதன் இலக்கணத்திற்கு எம்ஜியார், கமல், அரவிந்த்சாமி, அஜீத்தை ஒருநாளும் நான் உதாரணமாக கொண்டதில்லை. நடிகைகள் விஷயத்திலும், பெரும்பான்மை தமிழ் மக்களின் ரசனைக்கு எதிராக, 'கலர்' கண்டு அழகியல் இலக்கணத்தை நான் கற்பித்து கொண்டதில்லை. இவை எல்லாம் என்னை ஒருமுறை வாசித்தவர்களுக்கும் தெரியும் என்றாலும், விவாதம் என்று வந்துவிட்டால், சதாம் குர்து இனத்தவரை கொன்றதை பற்றி பேசினால், புஷ் செய்த அக்கிரமங்களை பதிலாக முன்வைப்பது ஒரு விவாத அணுமுறையாகி விட்டதால் இந்த சுய விளக்கத்தை சொல்கிறேன். அதே போல சுகாசினி இதற்கு முன்வாழ்க்கையில் என்னவெல்லாம் பேசினார் என்ற முழுத் தகவல்கள் என்னிடம் கிடையாது; தெரியாது; நண்பர் டிபிசிடி அளித்த இந்த செய்தியை மட்டும் வைத்தே பேசுகிறேன். இந்த செய்தியையும் தட்ஸ்டமில் போன்ற ஒரு நம்பகதன்மையில்லாத தளத்தை வைத்து பேசுவதில் பிரச்சனையிருந்தாலும் ஒரு கருத்து சார்ந்த விவாதத்திற்காக அதை அப்படியே எடுத்துக் கொள்கிறேன். சுகாசினி இப்போது சொன்னது என்ன? 'எம்ஜியார், கமல், அரவிந்த்சாமி, அஜீத் போன்று அழகானவர்களை' கதாநாயகனாக அறிமுகப்படுத்த வேண்டும் என்று ஒரு சாதாரண ரசிகையாக தான் கேட்டுக் கொள்வதாக சொல்லியுள்ளார்; அவ்வளவுதான் சொல்லியுள்ளதாக செய்தி வந்துள்ளது. நேரடியாக அவர் தமிழ் கலாச்சாரத்தின் அதி முக்கிய கருத்தாக்கமான 'கலர்' பற்றி எதுவும் சொல்லவில்லை. அவர் சொன்னதை பற்றிய ஒரு தனிப்பட்ட வாசிப்பாகத்தான் 'கலராக' கதாநாயகர்கள் வேண்டும் என்று அவர் கேட்பதாக பொருள் கொள்ள முடியும். ஆனாலும் அப்படி அவர் சொன்னதாகவே எடுத்துக் கொள்வோம். அதிலேதான் என்ன பிரச்சனை என்று கேட்டதற்கு யாரும் திருப்தியான பதில் எதுவும் சொல்லவில்லை. ஒருவர் தனக்கு வெள்ளை நிறத்தில் கதாநாயகர்கள் பிடிக்கும் என்று சொல்வது ரேசிசமா? அப்படியானால் கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு என்று நான் சொன்னால் அது என்ன? அதை ஒரு சமூகத்தின் பொதுவான ரசனையாக கட்டமைப்பதும், முன்னனுமானமாக கொள்வதும், கருப்பாக இருக்கும் ஒருவரை மட்டமாக பேசியிருந்தால் அதுவும்தான் பிரச்சனை. நிச்சயமாக சுகாசினி அப்படி நேரடியாக கருப்பான ஒருவரை மட்டமாக சொல்லவில்லை 'எம்ஜியார் கமல், அஜித்தான் தேவை, தனுஷ் தேவையில்லை என்பது ரேசிசம் இல்லையா' என்று கேட்கிறார் தமிழ் சசி. 'தனுஷ் தேவையில்லை' என்ற கருத்தை சசி எங்கே வாசித்தாரோ எனக்கு தெரியாது; வெளிவந்த செய்தியில் நான் வாசிக்கவில்லை. ஆனால் ஒருவேளை தனுஷின் கலரை பற்றி அவர் பேசியிருந்தால் கூட, அதில் எந்த தவறும் இல்லை. அதை ஒரு எதிர்வினையாக நிச்சயம் பார்க்கமுடியும். 'வொயிட்டு கலரு கேர்ளு..' என்று பாடுபவருக்கு, பெண்மட்டும் வொயிட்டாக இருக்க வேண்டும் என்று நினைப்பவருக்கு, அவர் கருப்புதான் என்று உணர்த்துவது ஒருவகையான எதிர்வினைதான். (உண்மையில் 'வொயிட் கலரு கேர்ளு' என்று தனுஷ் பாடுவதில் கிடப்பது அல்ல ரேசிசம், 'கேர்ளு ஹார்ட்டு ப்ளாக்கு..' என்று எதிர்மறையான ஒரு விஷயத்திற்கு கருப்பு நிறத்தை குறியீடாக்குவதுதான் நிறம் சார்ந்த ரேசிச மனப்பான்மை.) 'வெள்ளை கலர் பிடிக்கும்' என்று ஒருவர் கருதுவதும், கருத்து சொல்வதும் ரேசிசமா என்று நேரடியாக கேட்பதை விடுவோம்; சமூக பொது அழகியலாக அது இருப்பதனால், அதன் பிரச்சனைகளை மனதில் கொண்டு, அவ்வாறு கருதுவதை எதிர்ப்பதாக கொள்வோம்; அப்படியானாலும் உண்மையில் எதிர்க்க வேண்டியது சுகாசினி பேசியதையா? மேலும் சுகாசினி பேசியதை எதிர்க்கும் அருகதை யாருக்காவது இங்கு இருக்கிறதா? நிச்சயமாக அதற்கான அருகதை சேரனுக்கு கிடையாது. சேரனுக்கு மட்டுமின்று எனக்கு @போட்டு பேசிய யாருக்கும் கூட இருப்பதாக தெரியவில்லை. சேரன் எத்தனை கறுப்பு நடிகைகளை தனது படத்தில் நடிக்க வைத்துள்ளார்? சேரனை விடுவோம், இந்த செந்தமிழன் சீமான் நடிக்க வைத்துள்ள கறுப்பு நடிகைகள் ஒன்றாவது உண்டா? நடிகைத் தேர்வு என்பது வெகுஜன ரசனையை கணக்கில் கொண்டு மட்டும் நடப்பது அல்லவே; இவர்களின் அழகியல் ரசனை, இன்னபிற ரசனைகள் சார்ந்தும் நடப்பதுதானே. தன் படத்தில் நடிக்க கலரான, புத்தம் புதிய, இளைமையான நடிகை வேண்டும் என்று தெளிவாக இருப்பவர், பெண்கள் மட்டும் தங்களை போன்று வயசாகி கன்னச்சதை தொங்கும் 'ஹேண்ட்சம் கருப்பர்களை' ரசிக்க வேண்டும் என்பது என்ன எண்ணம்? இதைத்தான் ஆணாதிக்க ரேசிசம் என்கிறேன். நண்பர்கள் புரியவில்லை என்கிறார்கள். இதென்ன அவ்வளவு கடினமான கான்செப்டா? பெண்களுக்கான அழகியலாக வெள்ளையையும், ஆண்களுக்கான அழகியல் என்று வரும்போது மட்டும் சுய அடையாளத்தை முன்வைத்து கருப்பை ரசிக்க வேண்டும் என்று பெண்களை நோக்கி சொல்வதைத்தான் ஆணாதிக்க ரேசிசம் என்கிறேன். வெள்ளை கதாநாயகியை தனக்கு தேர்வு செய்துவிட்டு, சுகாசினியை கறுப்பு கதாநாயகர்களை ரசிக்க சொல்வது நிறம் சார்ந்த ஆணாதிக்க திமிர் அன்றி வேறென்ன? (அடிப்படையில் இது ஆணாதிக்கம் சார்ந்த பிரச்சனை என்பதால் இதை நான் ரேசிச ஆணாதிக்கம் என்று சொல்லியிருக்க வேண்டும்.) இதைத்தானே தமிழ் அரசியலை முன்வைக்கும் சேரன், சீமான், பாரதிராஜா பொன்ற அனைவரும் செய்கின்றனர். அந்த காலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த நிலை கூட இல்லாமல், கலைஞரின் பொன்னர்-சங்கரில் கூட நீல நிற கண்களுடன் நடிகைகள் இருக்கும் இன்றய சூழலில், சுகாசினி சொன்னதை சூழலுக்கான எதிர்வினையாக பார்க்கமுடியும். நடிகைகள் எல்லாம் உங்களுக்கு வெள்ளை வெள்ளையாக வேண்டும்; இதில் நடிகர்கள் வெள்ளையாக இருக்க ஒரு பெண் ஆசைப்பட்டால் அது ரேசிசமா? என்ன லாஜிக் இது! இன்று நிலவும் அழகியல் அடிப்படையில், தங்களுக்கும், தங்களது ரசனைக்கும் பங்கு கேட்கிறார் சுகாசினி. தொடர்ந்து நிலவும் சமூக ரசனையை பற்றி தொடர் விமர்சனம் செய்யாத யாருக்கும் சுகாசினிக்கு எதிர்வினை வைக்கும் தகுதி இருப்பதாக எனக்கு தெரியவில்லை. தினமும்தானே தமிழ் சேனலில், எஃபெம்மில், நண்பர்களிடத்தில், பேருந்தில், பொது இடத்தில் என்று எங்கும் வெள்ளை கலரை புகழும், தீ ஃபிகரை வியக்கும் வசனங்களை கேட்கிறோம். இதில் எத்தனை இடத்தில் இவர்கள் எதிர்வினை செய்திருக்கிறார்கள்? அதை பற்றிய பிரஞ்ஞையில்லாமல், சுகாசினிக்கு மட்டும் பொங்குவதன் உளவியல் ஆணாதிக்கம் சார்ந்தது என்று நான் கருதுகிறேன். சுகாசினியின் பேச்சுக்கு எதிர்வினை வைத்தவர்களால் சின்ன சுயவிமரசனத்தை கூட செய்து கொள்ள முடியவில்லை; ஒரு கறுப்பு கதாநாயகியை யதார்த்தத்தில் முன்வைக்காத, சேரனை குற்றம் சொல்ல கூட யாருக்கும் தோன்றவில்லை. மேலும் இது ஏதோ சினிமாக்காரர்களின் தேர்வு சார்ந்த பிரச்சனையும் அல்ல. நமது வெகுஜன ரசனை சார்ந்ததும்தான். கன்னங்கரேல் இளைஞன் ரொம்ப கலரான பெண்ணை மணம் செய்ய விரும்புவதாக, வெளிப்படையாக சொல்வதை கேட்கும் யதார்த்தத்தில்தானே நாம் இருக்கிறோம். ஒருவேளை உண்மையில் நம் வெகுஜன ரசனைக்கு கறுப்புதான் பிடிக்கும் என்றால், பணம் செலவழித்து மும்பையிலிருந்து அழைத்து வந்து, ஹோட்டல் வாடகை எல்லாம் கொடுத்து செலவு செய்ய வேண்டிய கட்டாயம் நம் சினிமாக்காரர்களுக்கு இருக்காது. நம் சமூகத்தின் பொதுமகன் வெள்ளை கதாநாயகியுடன் கற்பனையில் குலாவ சினிமாவிற்கு செல்கிறான்; சினிமா அதை அளிக்கிறது. இந்த சமூக இயக்கத்தில் எந்த பிரச்சனையும் இல்லாத போது, பெண்களும் அதே போன்ற கதநாயகர்களை விரும்பினால் அதை ரேசிசமாக பார்க்கமுடியாது; நிலவும் யதார்த்தத்திற்கு எதிர்வினையாகத்தான் பார்க்கமுடியும். இதையெல்லாம்விட நம் கருப்பு கதாநாயகர்களே மேக்கப் போட்டு வெள்ளையாகத்தானே தோன்றுகிறார்கள். 'மண்டேலா மண்டையா' என்று திட்டப்படும் செந்தில் கூட மூஞ்சியில் சிகப்பு சாயம் பூசாமல் தோன்றுவதில்லையே. இதில் ஒரிஜினலாகவே 'கலரில்' ஒரு கதாநாயகனை கேட்டால் அதில் என்ன பெரிய பிரச்சனை? 'அயன்' படம் வெளிவந்த போது ஏதோ ஒரு டீவியில் இயக்குனர் ஆனந்த், தமன்னா, ஜெகன், சூர்யா கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சி. படக்குழுவை சேர்ந்த ஒருவர் இயக்குனரை கேட்கிறார், "ஏங்க இவன் (ஜெகன்) இப்படி அண்டங்காங்காக்கா மாதிரி இருக்கான், இவனைப்போய் எப்படி தமன்னாவிற்கு அண்ணனா சூஸ் பண்ணிங்க?' டைரக்டரும் ஏதோ பதில் சொல்கிறார். அதற்கு பிறகு டைரக்டர் ஆனந்தே தமன்னாவிடம், " அது எப்படி நீங்க இவ்வளவு கலரா இருக்கீங்க?" என்று கேட்கிறார். தமன்னா தான் வெயிலுக்கு எடுக்கும் முன்னெச்சரிக்கைகள், குங்குமப்பூ, பப்பாளி அரைத்து தேய்த்தல் என்று பலதை வரிசையாக சொல்கிறார். "ஓ.. இதெல்லாம் செஞ்சா உங்களை மாதிரி கலரா மாறிரலாமா?" (ஒரே சிரிப்பு) தமன்னாவும் சிரித்து "இல்ல.. பேசிக்கா இது ஹெரிடிடரியா வர்ரது, அதுக்கு மேலே ப்ருகாஷனா..." இந்த இயக்குனார் இன்னொரு விழாவில் சுகாசினியின் ரேசிசத்தை கண்டித்தால், நம் மக்கள் அதற்கு விசில் அடித்தால் ஆச்சரியமே படவேண்டாம். Saturday, November 12, 2011அழிவிற் சிறந்தது.அப்துல் கலாம் கூடன்குளம் விவகாரத்தில் நுழைந்து புதுக் குமிழிகளை உருவாக்கியிருக்கிறார். அணு உலைக்கு எதிரான போராட்டத்தை சாதூர்யமாக சமாளிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே, அப்துல் கலாம் அரசால் இறக்கப் பட்டிருக்கிறார் என்பதில் ஐயம் கொள்ள எதுவும் இல்லை. சில வாரங்கள் முன்பு 'கூடன்குளம் அணுமின் நிலையப் பிரச்சனையில் அப்துல் கலாமின் ஆலோசனை பெறப்படும்' என்று மத்திய அமைச்சர் சொன்னார். அரசுக்கு கலாமின் ஆலோசனை எதுவும் (குறைந்த பட்சம் புதிதாக) இப்போது தேவையில்லை; இங்கே ஆலோசனை என்பதன் அர்த்தம், அவர் கருத்து சொல்லி, அது பரவாலான மக்கள் மற்றும் ஊடக கவனம் பெறுவது; அவர் என்ன கருத்து சொல்வார் என்பது அணு உலை ஆதரவாளர்கள் எதிர்ப்பாளர்கள் மட்டுமின்றி, கலாமிற்கு பிடித்த குழந்தைகளுக்கும் கூட தெரியும். ஆகையால் கலாம் கூடங்குளம் சென்று, 'ஆய்வு செய்து', கருத்து சொல்வது என்பது விவாதத்திற்காகவோ, நம் அறிவுப்பரிசீலனைக்காக உதிர்க்கப்படுவதோ அல்ல. ஒரு பிரபலமாக, முன்னாள் குடியரசு தலைவராக அவர் கருத்து சொல்கிறார்; அரசியல் காரணங்களால் முன்வைக்கப்பட்டு, இன்று ஒரு நிறுவப்பட்ட உண்மையாக எல்லா பொதுமக்கள் மனங்களிலும் படிந்து விட்ட பிம்பமான, இந்தியாவின் தலை சிறந்த 'விஞ்ஞானி'யின் கூற்றாக, அவர் கருத்து அரசாலும் ஊடகங்களாலும் முன்வைக்கப்படுகிறது. அணு அறிவியல் மற்றும் அணுவியல் சார்ந்த தொழில் நுட்ப அறிவு கொண்ட, விண்கலப் பொறியியலாளரான கலாம் என்பவர், வேறு பல காரணங்களால் அடையும் அதிகாரத்தின் அங்கீகாரத்துடன், அணு உலைக்கு ஆதரவான பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்க கருத்து சொல்கிறார். கலாம் அணு விஞ்ஞானியா இல்லையா என்பது, அணு மின்சாரம் சார்ந்த ஒரு விவாதத்தில் ஒரு முக்கிய பிரச்சனை அல்ல; கூடங்குளம் அணு உலைக்கு அவர் அளிக்கும் சான்றிதழ், அவர் அணு விஞ்ஞானி என்று சொல்லப்பட்டு, அந்த அதிகாரத்தின் பாற்பட்டு முன்வைக்கப் படுகிறது. அவரின் கருத்துக்கள் விவாதத்திற்கும் விமர்சனத்திற்கும் அப்பாற்பட்டதாக முன்வைக்கப்பட்டு, அவர் அளித்த உத்தரவாதத்தையும் மீறி எதிர்ப்பாளர்கள் பிடிவாதம் பிடிப்பது அறிவுக்கும் நாட்டிற்கும் எதிரானதாக பரப்புரை செய்யப்படுகிறது. அணு உலை, அணு மின்சாரம் குறித்து ஓரளவு அறிதல் உள்ள எவரும் கருத்து சொல்லி, அது விவாதப் பொருள் ஆகலாம். ஆனால் இங்கே எதிர் கருத்துக்களை விவாதமின்றி முறியடிக்க, அவரை தலை சிறந்த விஞ்ஞானியாக விமர்சனத்திற்கு அப்பாற்பட்டு முன்வைப்பதுதான் பிரச்சனை. அரசியல் நிலைபாடு சார்ந்த கோஷங்களால், கலாமை அவதூறு செய்து, அணு மின்சாரம் சார்ந்த அவரது வாதங்களை நிராகரிப்பது அபத்தம் என்றால், அதை விட அபத்தம் அவரது செலிபிரிடி நிலையை முன்வைத்து, எல்லாம் அறிந்த விஞ்ஞானியின் கூற்றாக அவர் சொல்வதை முன்வைப்பது. இந்த காரணங்களால், கலாம் ஒரு அணு விஞ்ஞானி என்கிற பொய்யை மறுதலிக்க வேண்டியுள்ளது. ஒரு பொறியியலாளராக தொடங்கி, பல்வேறு அனுபவங்கள் மூலம் அவர் பெற்றிருக்கக் கூடிய அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அறிவை பற்றி சந்தேகம் கொள்ளவில்லை. ஆனால் கலாம் எந்த விதத்திலும் ஒரு அணு விஞ்ஞானி இல்லை என்பது மட்டுமின்றி, ஏதேனும் ஒரு வகையில் நேரடியான பங்களிப்பை அறிவியலுக்கு செய்வது என்ற வகையில், ஒரு விஞ்ஞானி என்று கூட அவரை அழைக்க முடியாது. நான் அறிந்தவரை, ஆக்கபூர்வம் அழிவுபூர்வம் என்கிற எந்த நோக்கில் பார்த்தாலும், எந்த ஒரு தனித்துவமான அறிவியல் பங்களிப்பையும் அவர் செய்யவில்லை. இதற்கு மாறான தகவலை யார் எங்கிருந்து தந்தாலும் பரிசீலித்து கருத்தை மாற்றிக் கொள்ள தயாராக இருக்கிறேன். கலாமை பற்றிய பொய்யான தகவலை சொல்லி, அதன் மூலம் குறிப்பிட்ட கருத்து தரப்பிற்கு பலம் சேர்க்க முயல்வதாலும், ஒரு அணு விஞ்ஞானியாக ஆதரவாளர்கள் மட்டுமின்றி எதிர்ப்பாளர்களும் பார்ப்பதாலும் மட்டுமே இதை சொல்ல வேண்டியுள்ளது. தமிழ் மக்களை ஒரு அணு உலை விபத்திற்கு பலிகடாவாக்குவதுதான் இந்திய மையஅரசின் அடிப்படை நோக்கம் என்று சொல்வது எவ்வளவு ஆதாரமற்ற அவதூறோ, அதைப் போலவே கூடங்குளம் உலையை எதிர்ப்பது அன்னிய நாட்டுச் சதி என்பதும், மதரீதியான உள்நோக்கங்கள் கற்பிப்பதும் ஆதாரமற்ற அவதூறுகள். பிரச்சனையை தீர்க்காமல் இழுத்துக் கொண்டு போவதுதான் நோக்கம் என்றால், தாரளமாக இந்த இரு எதிர் திசைகளில் கருத்துக்களை உதிர்த்து கொண்டிருக்கலாம். இருபது ஆண்டுகளாக இருக்கும் ஒரு எதிர்ப்பை பற்றி பேச தொடங்கும் ஒவ்வொரு முறையும், ஊடகங்கள் திடீரென கிளம்பிய எதிர்ப்பாக இதை வர்ணித்து துவங்குவதை காணலாம். அணு உலைக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் வாதங்கள், பதில்கள் பல்லாண்டுகளாக ஏராளமாக எழுதிக் குவிக்கப்பட்டிருக்கின்றன. கலாமின் கட்டுரை புதிய வெளிச்சம் எதையும் தரவில்லை. ஏற்கனவே ஒப்புக்கொண்டது போல், இந்திய அரசாங்கம் தமிழ் மக்களை பலியிடும் திட்டத்துடன் நிச்சயமாக கூடன்குளத் திட்டத்தை தொடங்கவில்லை. ஆகையால் அணு உலைக்கான பாதுகாப்பு என்கிற வகையில் என்னவெல்லாம் இன்றய நிலையில் சாத்தியமாகுமோ, அவையனைத்தும் கொண்டதாக கூடன்குளம் அணுவுலை இருக்கும் என்று அரசாங்கம் சொல்வதையே நேரடியாக நம்பலாம். அதை தாண்டி கலாம் ஆய்வு செய்து சொல்ல என்ன இருக்கிறது என்று விளங்கவில்லை. பொறுப்பில் உள்ளவர்களிடம் விளக்கம் கேட்டு பெறுவதை தவிர, ஒரு நாளில் கூடங்குள அணு உலையில் என்ன ஆய்வை அவர் செய்திருக்க முடியும் என்பதும் புரியவில்லை. கலாமின் (ஆங்கிலம் மற்றும் தமிழ் )இரண்டு கட்டுரைகளும் ஒரு ஆய்வு கட்டுரையின் எந்த பண்பையும் கொண்டது அல்ல; மாறாக முழுக்க பிரச்சார தொனியில் ஏற்கனவே சொல்லப்பட்ட தகவல்களை அளிப்பது. புதிது என்று தோன்றக்கூடிய, தோரியத்தை முன்வைத்து அவர் சொன்ன தகவல்களும் ஏற்கனவே என்டிடிவி வரை வெளிவந்த செய்திகள் ஆகும். கலாமின் கட்டுரையில் தரப்படும் உலையின் பாதுகாப்பு சார்ந்த தகவல்களை யாவும் உண்மை என்றே நாம் எடுத்துக் கொள்ளலாம். வேறு ஒரு அணு உலை தொழில் நுட்ப நிபுணர் அதில் கருத்து வேறுபாடும், ஐயங்களும், பிரச்சனைகளும் கொள்ள இயலலாம். ஆனால் அரசாங்கத்தின் கையாளாக கலாம் திட்டமிட்ட பொய்யை சொல்வதாக நினைப்பதற்கு ஆதாரம் எதுவும் இல்லை. ஆனால் இந்த ஏற்பாடுகள் எல்லாம், விபத்து நேரவே நேராது, விபத்திற்கான நிகழ்தகவு பூஜ்யம் என்ற உத்தரவாதத்தை அளிக்காது என்பதைத்தான் புரிந்து கொள்ள வேண்டும். இன்றுவரை மனித சமூதாயம் படைத்த எந்த தொழில் நுட்பமும், மனிதப் பிழை மற்றும் இயந்திரக் கோளாறு சார்ந்து, தவறு என்று எதுவுமே நடக்காமல் ஒரு விதி விலக்காக இருப்பதற்கான சாத்தியம் இல்லை என்கிற அடிப்படை விதியை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். துல்லியம் என்பது கணித அறிவியல் விதிகளின் படியே முழுதும் கறாரான ஒரு சாத்தியமில்லை. எல்லா சோதனைகளும், கணித்தல்களும் பிழை அளவுகட்கு உட்பட்டவைதான். இந்த பிழையின் இடைவெளியை மேலும் மேலும் குறைத்துக் கொண்டே செல்ல இயலுமே ஒழிய, பிழையே இல்லாமல் சோதனைகளும், அறிவியல் செயல்பாடுகளும் சாத்தியமில்லை. அந்த வகையில் அணு உலையிலும், மனிதர்கள் இழைக்கும் தவறுகளும், இயந்திரங்கள் குறித்த கணித்தல்களில் நிகழும் எதிர்பாராத தவறுகளும் முற்றிலுமாக தவிர்க்க கூடியது அல்ல; முன்னேறிய நாடுகளிலேயே இது சாத்தியமில்லை என்பதைத்தான் அமேரிக்க, ரஷ்ய, ஜப்பானிய விபத்துக்கள் நமக்கு தெளிவு படுத்துகின்றன. அணு உலையில் பலவேறு தளங்களில் நடக்கும் செயல்பாடுகள் சிக்கலானாவை. அதில் எதிரேபார்க்காத ஒரு கோணத்தில் பிரச்சனைகள் நிச்சயமாக ஏற்படலாம்; எந்த நிலையிலும், எந்த சிக்கலும், என்றுமே உருவாகாது என்று சொல்ல இங்கு யாரும் கடவுள் அல்ல. இன்று பிரச்சனையுள்ளதாக கருதப்படும் ஃபுகுஷிமா உலையை, சென்ற வருட ட்சுனாமிக்கு முன்பு யாரும் பிரச்சனை இருக்க வாய்ப்புள்ளதாக கருதவில்லை. அவர்கள் முற்றிலும் எதிர்பாராத வகையில், அவர்கள் செய்த மூன்று பாதுகாப்பு ஏற்பாடுகளும், உலையின் செயல்பாடு நின்ற பின் குளூரூட்ட இயலாமல் வெடித்தது. நம்மூர் கூடங்குளத்தில் ஃபுக்குஷிமா விபத்தின் அதே சாத்தியம் இல்லை என்று உத்தரவாதம் அளிப்பதால், விபத்திற்கான எதிர்பாராத வேறு சாத்தியங்கள் இல்லை என்று நம்புவதற்கு அறிவியல்ரீதியான எந்த அடிப்படையும் இல்லை. அவ்வாறு நம்புவது அறிவியல் மனம் அல்ல; அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் சார்ந்த மமதை மட்டுமே. ஒரே ஒரு உயிரை காக்க ஜப்பானிய அதிகார வர்க்கம் எடுக்கக் கூடிய நடவடிக்கைகளும், பொதுவாகவே பாதுகாப்பு சார்ந்து, ஜப்பானியர்கள் அதீத obsessionடன் எடுக்கும் முன்னேற்பாடுகளையும் கணக்கில் கொண்டு, ஃபுகுஷிமா விஷயத்தில் நடந்த தவறை புரிந்து கொள்ளவேண்டும். எல்லாவித பிரச்சனைகளையும் எதிர்பார்த்து செய்திருந்த அதீத பாதுகாப்பு நடவடிக்கைகளை தாண்டி, கண்களை கட்டி விட்டிருக்கிறது இயற்கை. பொது மக்களின் உயிர்கள் குறித்து நம் அரசின், அதிகார வர்க்கத்தின் அதீத உதாசீனங்களுக்கு விளக்கமும் ஆதாரமும் காட்டத் தேவையில்லை. உதாசீனமும், ஊழலும், இன்னும் பல சீர்கேடுகளும், நெருக்கடியான தருணத்தில் நம் பொது மக்களின் பொறுப்பற்றதன்மை எல்லாம் கலந்து, எந்த வித அழிவிற்கும் நம்மை இட்டுச் செல்லக் கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு. 'விபத்து நடந்த காரணத்தால் நாமெல்லாம் விமான பயணம் போவதில்லையா' என்கிற அபத்த உதாரணத்தை கலாமும் கேட்பது எரிச்சலூட்டினாலும், அதில் ஆச்சரியப்பட எதுவுமே இல்லை. விமான விபத்துக்களையும், அணு உலை விபத்துக்களையும் இணையாக வைத்து ஒப்பிட்டு பேசுவது ஒரு அறிவுள்ள வாதமா என்கிற சுய சந்தேகம் கிஞ்சித்தும் இல்லாமல், ரொம்ப கூலாக எல்லா அறிவாளிகளும் இப்படித்தான் கேட்கிறார்கள். ஒரு அணு உலை விபத்திற்கும், விமான விபத்திற்கும் - விபத்தின் பாதிப்பு, அளவு (magnitude) சார்ந்த பரிமாணங்கள், தொடரப்போகும் பின் விளைவுகள் என்ற - வித்தியாசங்களை பற்றிய கேள்விகளையும் புரிதல்களையும், அவரவர் மனவிவாதத்திற்கு விட்டுவிட்டு, நேரெதிராக இந்த வாதத்தை எதிர்கொள்வோம். 'நூறு விழுக்காடு பாதுகாப்பு ஏற்பாடு' என்று சொல்லப் படுவதுடன்தான், விபத்து நடந்த எல்லா விமானங்களும், விபத்து நடப்பதற்கு முன் பறக்கத் தொடங்கின; மீறி தவறுகள் நடக்கின்றன. விமானத்தில் போகிறவர்கள், விபத்து நடப்பதற்கான சிறிய சாத்தியம் இருப்பதை நன்றாக உணர்ந்து, தெளிவாக முன்னமே அறிந்து, தங்கள் தேர்வாக பயணம் செய்கிறார்கள். மாறாக கூடன்குளம் விவகாரத்தில் விபத்து நடக்கவே நடக்காது, அதற்கான சாத்தியம் பூஜ்யம், நூறு சதவிகித பாதுகாப்பு என்று பொய் சொல்லி அணு உலையை இயக்க போகிறார்கள்; கூடங்குள அணு மின் உற்பத்திக்கான தேர்வை அரசும், அதிகார வர்க்கமும் முடிவு செய்து, நம் எலீட் சமூகம் அதற்கு ஆதரவாக பேசி பிரச்சாரம் செய்து, அதே எலீட் சமூகம் அதன் பயனை மிகுதியாக துய்க்கப் போகிறது. அபாயம் அதை தேர்வு செய்யாத, அதை எதிர்க்கும் மக்களுக்கு மட்டும். கலாம் தனது கட்டுரையில் விசித்திரமான ஒரு பாயிண்டை சொல்கிறார். 'Many accidents followed, and even today air accidents kill more than 1,500 people every year.' என்கிற தகவலை தந்துவிட்டு அதனால் பறப்பதை நாம் விட்டுவிட்டோமா என வினவுகிறார். நல்ல உதாரணம்; இன்றய நமது முன்னேறிய நிலையில் கூட நம்மால் ஆண்டிற்கு 1500பேர் விமான விபத்துக்களில் சாவதை தடுக்க முடியவில்லை. ஆனாலும் பறக்கிறோம். அதே போன்ற வாதத்தைதானே மக்களிடம் கூடன்குள விவகாரத்திலும் முன்வைக்க வேண்டும்? 'நாங்கள் எங்களால் முடிந்த எல்லா பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்துவிட்டோம், அதையும் மீறி ஏதேனும் நடக்க சிறு வாய்ப்பு உண்டு; விபத்து நடக்க சில வாய்ப்புகள் உள்ளதால் மட்டும் மின்சார உற்பத்தியை எங்களால் நிறுத்த முடியாது' என்று நேரடி யதார்த்தமான கூற்றை மக்கள் முன் வைத்திருக்க வேண்டும். பல லட்சம் தடவைகள் பயன்படுத்தி பயன்பாட்டில் நாம் மிகவும் முதிர்ந்த பின்னும் விமான விபத்துக்கள் இன்றும் நடக்க்கிறது; ஒப்பீட்டளவில் பயன்பாட்டில் இன்னமும் முதிரா நிலையில் இருக்கும் அணு மின்னுற்பத்தியின் போது என்னவகை விபத்து நடக்க கூடும் என்பதையும் மக்களுக்கு முன்னமே சொல்லி, நடந்தால் என்ன செய்யவேண்டும் என்பதையும் சொல்வதுதானே நியாயம். அதற்கு பிறகும், கூடங்குளம் மக்கள் நாட்டின் முன்னேற்றத்திற்காக, அந்த ஒருவேளை நடக்க சாத்தியக்குறைவுள்ள, ஆனால் சாத்தியமுள்ள, ஆபத்தை எதிர்கொள்ள தயராக இருக்கிறார்கள் என்றால் அது வேறு விஷயம். நூறு விழுக்காடு பாதுகாப்பு உள்ளதாக கூறி, விபத்து நடக்க சாத்தியம் இல்லவே இல்லை என்று மறுப்பது ஏமாற்று வேலையல்லவா? அணு உலையின் பலனான மின்சாரத்தையும், முன்னேற்றத்தையும், வேறு ஒரு மேல்தட்டு சமூகம் நுகர, பாதிக்க சாத்தியமுள்ள மக்களை 'நாமல்ல நாடுதான் நம்மைவிட முக்கியம்' என்கிற அரிய கருத்தை சொல்லி ஏமாற்ற முனைவது என்னவகை நேர்மை? பேரணைகள் எழுப்பும் போதும், கனிமங்களுக்காக மக்கள் நிலத்தை பிடுங்கும்போது சொல்லப்படும் அதே நேர்மையற்ற ''நாமல்ல நாடுதான் நம்மைவிட முக்கியம்' வாதம்தானே இது. ஃபுகுஷிமாவில் பொருட்சேதம் ஏற்பட்டாலும் உயிர்சேதம் ஏற்படவில்லை என்று ஒரு வாதத்தை கலாம் முன்வைக்கிறார். நியாயமாக அவர் செய்திருக்க வேண்டியது, ஜப்பானில் நடந்த அதே விபத்து அப்படியே இங்கே நடந்திருந்தால், என்னவகை பாதிப்பு நடந்திருக்கும் என்று நம் சூழலில் கற்பனையில் நிகழ்த்தி ஒப்பிட்டு பார்ப்பதுதான். குஜராத்தில் நடந்த பூகம்பத்தில் லட்சக்கணக்கில் உயிர்சேதம் நடந்தது. அதை விட வலிமை வாய்ந்த பல பல ஜப்பானிய பூகம்பங்களில் வெறும் 25 பேர் கூட பலியாகவில்லை. ஒரு பேரழிவின் போதும் ஜப்பானியர் காட்டும் பொறுப்புணர்ச்சி, ஒழுக்கம், கட்டுப்பாடு, அரசாங்கத்தின் அதி தீவிர துரித நடவடிக்கை, இதையெல்லாம் நாம் நம் சூழலுடன் ஒப்பிட்டே பார்க்கமுடியாது. பத்து லட்சம் மக்கள், கூடங்குள அணு உலையிலிருந்து, 30 கிமீ ஆரத்தில் வசிப்பதாக சொல்கிறார்கள்; இது சரியென்றால், நம் ஊரில் விபத்து நிகழ்ந்தால் ஏற்படும் உயிர் சேதத்தை கற்பனையே செய்து பார்க்கமுடியாது. அணு உலை எதிர்ப்பாளர்கள் முன்வைக்கும் இன்னொரு முக்கிய வாதம் ஒரு பயங்கரவாத தாக்குதல் நிகழக்கூடிய சாத்தியத்தின் அச்சுறுத்தல். ஏனோ கலாம் இந்த பிரச்சனையை சுத்தமாக கண்டு கொள்ளவேயில்லை. ஒரு பயங்கரவாத தாக்குதல் மூலமோ, வேறு வகை சதிகளின் மூலமும் அணு உலைக்கு எந்த தீங்கும் யாராலும் நிகழ்த்த முடியாது என்று எந்த உத்தரவாதமும் அவர் தரவில்லை. (பயங்கரவாத தாக்குதல் நடக்கவே நடக்காது என்று உத்தரவாதம் தருவது நோய்கூறு கொண்ட நகைச்சுவையாக இருக்கும்.) தொடர்ந்து அரசு மீது எழுப்பப்படும் குற்றச்சாட்டு, எல்லாவகை தடுப்புகளையும் மீறி அணு உலையில் இருந்து வெளிப்படப்போகும் (ஆபத்தில்லை என்று கருதப்படும்) கதிர்வீச்சின் அளவு குறித்து அரசு உண்மை தகவல்களை முன்வைப்பதில்லை என்பது. கலாம், பொத்தாம் பொதுவாக இதுவரையான அரசு அறிக்கையை போலவே, பாதுக்காப்பான கதிர்வீச்சே ஊருக்குள் கலக்கிறது என்கிறாரே தவிர, குற்றச்சாட்டுகளுக்கு நேரடி பதிலாக எதுவும் சொல்லவில்லை. நடைமுறையில் மக்களை அன்றாடம் பாதிக்க போவதாக சொல்லப்படும் பல பிரச்சனைகளை, மிகைப்படுத்தப்பட்ட பயம் என்று எளிதாக கலாம் புறம் தள்ளுகிறார். அணு நிலையத்தில் வேலை பார்ப்பவர்கள், அணு உலை உள்ள ஊரில் வசிப்பவர்கள் பலவித புற்று நோய்களால் பாதிக்கபடுவதாக பல புள்ளி விவரங்கள் வந்துள்ளன. நான் நேரடியாக இந்த புள்ளி விவரங்களை சேகரிப்பதிலும், சரிபார்ப்பதிலும் ஈடுபட்டவன் அல்லன். ஆனால் அவை அத்தனையும் மிகை என்று ஒரு வாக்கியமாக கலாம் சொல்வதை மட்டும் வைத்து நம்பவது சாத்தியமில்லை. இது குறித்து செய்திகளை முதலில் கேள்விப்பட்டு, சரி பார்த்து, பின் தகவல்ரீதியான எதிர் பதிலை கைவசம் வைத்து கொண்டுதான் சொல்கிறாரா என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம். இது பற்றிய செய்திகள் பரப்பப்பட்ட பொய் என்றால், பொய் என்று நிறுவி, பொய் தகவல்களை தேசத்தின் முக்கிய பிரச்சனைகளின் போது பரப்பியதற்கு நடவடிக்கை எடுத்தால் நாமும் கலாமின் கட்டுரையை நம்புவது பற்றி யோசிக்கலாம். உதாரணமாக இங்கேயும், இங்கேயும் தரப்பட்டுள்ள தகவல்களுக்கு எதிரான ஆறுதல்களை கலாமின் கட்டுரையில் காண முடியவில்லை. விபத்து என்பது சாத்தியக்கூறு மட்டும் உள்ள, தடுக்க எல்லா முயற்சிகளும் செய்யகூடிய ஒன்று. விஞ்ஞான தொழில் நுட்ப முன்னேற்றத்திற்கு ஆதரவான எல்லா வாதங்களையும், விபத்து நிகழ்வதை முன்வைத்து சொல்லப்படும் வாதத்திற்கு எதிராக முன்வைக்கலாம். நிதர்சனமான பிரச்சனை அணு கழிவுகளை அப்புறப்படுத்துவது; அதாவது பாதுகாப்பது. கலாம் அது குறித்தும் புதிதாக எதுவும் சொல்லவில்லை. ஒரு கால்பந்து மைதானம் அளவிற்கான இடத்தில் வைத்து நூறு ஆண்டுகாலம் பாதுகாக்கலாம் என்கிறார். சரி, அதற்கு பிறகு? சில லட்சம் வருடங்களை half-life காலமாக கொண்டவைகளை, நூறு ஆண்டுகளுக்கு பிறகு என்ன செய்வதாக உத்தேசம்? அதனுடைய கதீர்விச்சு சில நூறு வருடங்களில் மங்கி, பாதுகாப்பான அளவிற்குள் வந்துவிடும் என்பது ஒரு வசதியான கணிப்பு மட்டுமே. நூறு வருடங்களுக்கு பிறகும் ஏதாவது ஒரு பிரச்சனையை கொண்டதாகவே எதிர்கால சந்ததியினருக்கு அது இருக்கும். இப்போதய நமது மின்தேவை, முன்னிலிருந்து பன்மடங்கு பெருகி, அணு மின்சாரம் இல்லாமல் ஆகாது என்கிற நிலையில் உள்ளது. அது exponentialஆக வளர்ந்து, இன்னும் பல பல பெருமடங்குளாகவே எல்லா வாய்ப்புகளும் உள்ளன. அப்துல் கலாம் வேறு நாம் 2030இல் நிச்சயம் வளர்ந்த நாடாகிவிடுவோம் என்கிறார். அதற்கு ஏற்ப இன்னும் மின் தேவை எத்தனை மடங்கு பெருகும் என்பதையும் அவரே சொல்கிறார். அதற்கு இன்னும் எவ்வளவு உலைகள் வேண்டுமோ? மேலும் மேலும் அப்புறப்படுத்த வழியில்லாத, தொடர்ந்து பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில், சேர்மானம் ஆகிக்கொண்டே இருக்க போகும் அணுக் கழிவை பற்றி எந்த பொறுப்புமே இல்லாமல் சாதாரணமாக ஒரு இடத்தில் வைத்து சமாளிக்கலாம் என்கிறார். பத்ரியாவது, பிரச்சனைதான், ஆனால் எதிர்காலத்தில் சமாளித்துவிடலாம் என்று தன் அறிவியல் மனம் நம்புவதாக மட்டும் சொன்னார். நம் நுகர்வு கலாச்சாரம் உற்பத்தி செய்யும் ப்ளாஸ்டிக்கை சாமாளிப்பதற்கே, உருப்படியான எந்த நடைமுறை உத்தியும், உலகம் முழுக்க எந்த நாட்டிலும் இருப்பதாக தெரியவில்லை. நாம் வாழும் நிலப்பரப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை விடுவோம். காட்டையும், கடலையும் பிளாஸ்டிக் கழிவுகள் அழித்து வருகின்றன. கடலில் சேரும் கழிவுகளில் பெரும் விழுக்காடு ப்ளாஸ்டிக் கழிவுகள். பல கடல்வாழ் உயிரினங்களின் அழிவுகளுக்கு இந்த பிளாஸ்டிக் கழிவுகள் காரணமாக உள்ளன. சில திமீங்கல இனங்கள் அழியும் நிலையில் உள்ளன. பிபிசி இது குறித்து வெளியிட்டுள்ள ஆவண படங்களை பார்த்தால் எவ்வளவு அற்புத உலகை நாம் அயோக்கியத்தனமாக அழித்து வருகிறோம் என்று அறியலாம், இந்த யதார்த்தத்தில் அணு கழிவுகளை பிரச்சனையின்றி சமாளிப்போம் என்று அறிஞர்கள் சொல்வது அத்தனையும் நம்மை மட்டுமின்றி அவர்களையே ஏமாற்றிக் கொள்ளும் வேலை. அவர்களில் பலருடைய அறிவியல் மனமே எதிர்காலத்தில் அணுக்கழிவுகளை சந்திர மண்டலத்தில் கொண்டுபோய் போடலாமா என்றுதான் யோசித்துக் கொண்டிருக்கிறது. மறு சுழற்சி என்பது ப்ளாஸ்டிக் விஷயத்தில் பயனாளிகளுக்கு மனச்சமாதானத்தை தந்து, குற்றவுணர்வு நீக்கும் ஒரு பொய் நாடகம்; ஏனெனில் செய்யப்படும் அற்ப மறு சுழற்சிகள் தொடர்ந்து பெருமளவில் ப்ளாஸ்டிக் உற்பத்தியாகி சூழலுக்குள் நுழைவதை தடுக்கவில்லை. மாறாக இது மறுசுழற்சியாகிறது என்று பயன்படுத்துபவரின் குற்றவுணர்வை மட்டுமே நீக்குகிறது. அணுக்கழிவுகள் விஷயத்திலும் மறு சுழற்சி என்பது வாதத்திற்காகவும் மனச்சமாதானத்திற்காகவும் சொல்லப்படுவதே. கழிவுகள் மேலும் மேலும் சேர்வதையும், அதை பாதுகாக்கும் பிரச்சனையும் இதனால் தவிர்க்கப்பட போவதில்லை. இந்த அணுக்கழிவுகளை சமாளிப்பது, என்றென்றைக்கும் நம் எதிர்கால சந்ததியினருக்கு- ஒருவேளை அவர்கள் எல்லாவகை எதிர்கால அழிவுகளையும் தாண்டி பிழைத்திருந்தால்-அணு மின்சார உற்பத்தியை நிறுத்திய பின்பும்- பெரும் பிரச்சனையாக இருக்கும். அதாவது முந்தய தலைமுறை அனுபவித்து விட்ட பயனின் பாவத்திற்காக, அடுத்த தலைமுறை பெரும் செலவுகளையும், பெரும் அர்பணிப்புகளையும் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். இது தவிர ஒவ்வொரு நிலையிலும் அணு கழிவுகளை பாதுகாக்கும்போது கையாள்வதிலும், இடமாற்றம் செய்யும் போக்குவரத்திலும் எந்த பிரச்சனையும் நேரவே நேராது என்பதற்கும் உத்தரவாதமில்லை. கலாம் சொல்வதுபோல் அணு மின்சாரம்தான் நம் எதிர்கால வளர்ச்சிக்கு அடைப்படை என்றான பின், பெரும் அளவில் சேர்ந்து கொண்டே இருக்கப் போகும் கழிவுகளை தொடர்ந்து கையாண்டு கொண்டே இருக்க வேண்டும். மருத்து கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், சுற்று சூழல் கேடு எதை பற்றியும் - தன் வீட்டிற்கு வெளியே- எந்த தளத்திலும் பிரஞ்ஞை இல்லாத நம் நடுத்தர வர்க்கமும், எலீட் மக்களும் இருக்கையில், பாதுகாப்பிற்கு முழு உத்தரவாதம் நிச்சயம் இல்லை. அப்துல் கலாம் தொழில் நுட்பத்தின் மூலம் சமூகம் அடையக்கூடிய வளர்ச்சிப் பாதையில் அசையா நம்பிக்கை உடையவர். தொழில் நுட்ப வளர்ச்சிக்கு எதிரான மனம் என்று ஒன்று இருக்கமுடியாது. எல்லாவகை பழைமைவாதிகளும் கூட தொழில் நுட்ப முன்னேற்றத்தினால் தங்கள் சுதந்திரத்தை மேம்படுத்திக் கொள்வார்கள். எத்தனையோ விதங்களில் கடந்த ஒரு நூற்றாண்டு தொழில் நுட்பம் நம்மை விடுதலை செய்த்திருக்கிறது. ஆனால் சுயவிமர்சனம் இல்லாத எல்லாவகை பற்றுக்களை போலவே தொழில்நுட்ப வெறியும் புதிய நெருக்கடிகளுக்கே இட்டுச் செல்லும். ஒருமுறை கேள்விக்கு பதில் சொல்லும்போது, பிருத்வி ஏவுகணை வானில் எழுந்ததையே தன் வாழ்வின் மகத்தான தருணமாக அப்துல் கலாம் சொல்கிறார். எவுகணைக்கான தவிர்க்க முடியாத அவசியம் பற்றி நாட்டுப் பற்றுள்ள ஒருவர் வாதிட்டால் புரிந்து கொள்ளலாம். ஆனால் ஏவுகணை வானில் எழுவதை வாழ்வின் மகத்தான தருணமாக நினைக்கும் மனதை விமரசனம் செய்து கொள்வதில், தொழில் நுட்பம் தரும் நெருக்கடியையும் அழிவையும் எதிர்கொள்வதன் தொடக்கம் இருக்கலாம். இன்றய அதீத தொழில் நுட்ப வளர்ச்சி உருவாக்கும் பேராசையும், பெருந்தேவைகளையும், பெரும் நெருக்கடிகளையும் பற்றி பலர் பேசும் போது, தொழில் நுட்பத்தின் மீது மதப்பற்று போன்ற தீவிர ஆதரவுடன், முழுக்க ஒரு பிரச்சாரத்திற்கான மொழியில் தமிழிலும் ஆங்கிலத்திலும் கலாம் கட்டுரைகளை எழுதியுள்ளார். அதை அரசும் ஊடகங்களும் பரப்புரையாக மக்கள் மனதில் திணிக்கிறது. 0 0 0 என்னளவில் கலாமின் கட்டுரையில் எதிர்க்க மட்டும் செய்யாமல் எதிர்கொள்ள வேண்டிய ஒரு விஷயம் உண்டு. கலாம் தனது கட்டுரையில் சுற்று சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத சுத்தமான மின் உற்பத்தி முறையாக அணு மின்சாரத்தை குறிப்பிடுகிறார். இதை குறிப்பிடும் போது புவி சூடேற்றம் பற்றியும், அதன் ஆபத்துக்கள் பற்றியும் பேசுகிறார். இந்த வாதமும் ஏற்கனவே வேறு சிலரால் அணு மின்சாரத்திற்கு ஆதரவாக முன்வைக்கப் பட்டதுதான். கலாம் புவி சூடேற்றம் பற்றி பேசுவதன் நேர்மையை நான் சந்தேகிக்க விரும்பவில்லை. ஆனால் சூழலியவாதிகள் புவி சூடேற்றத்தை முன்வைத்து பேசுவதை எல்லாம் எள்ளி நகையாடும் ஒரு எலீட் கூட்டம், அணு மின்சாரத்திற்கு ஆதரவாக வாதிடும்போது மட்டும் புவி சூடேற்றத்தை ஒரு வாதமாக முன்வைப்பது அப்பட்டமான நேர்மையின்மை. அணுக்கழிவுகளை தொடர்ந்து சாமாளிப்பது என்ற வகையில், சுற்று சூழலுக்கு உகந்ததாக அணு மின்சாரத்தை சொல்ல முடியுமா என்று கேள்வியை மண்டையில் இருந்து கழற்றி வைத்து விட்டு பார்த்தால், அணு மின்சாரம் ஒரு விதத்தில் தூய்மையான பச்சை மின்சாரமாகத்தான் தெரிகிறது. ஆனால் கலாம் சொல்வதுபோல் மற்றவகை மின் உற்பத்திகளை நிறுத்தி, அணு மின்சார உற்பத்தியை மட்டும் மேற்கொண்டால் Green house வாயு உமிழ்வுகள் உண்மையில் குறையுமா? தன் வாதத்திற்கு ஆதரவாக பல புள்ளி விவரங்களை தருகிறார். உதாரணமாக 26% CO2 வெளியேற்றம் (அணு சாராத மற்ற) மின் உற்பத்தியால் மட்டும் ஏற்படுகிறது என்கிறார். அவைகளை நான் சரி பார்க்க முயலவில்லை. ஆனால் நான் காண விரும்பிய ஒரு குறிப்பிட்ட புள்ளி விவரத்தை அவர் தரவில்லை. ஜப்பான் போன்ற நாடுகள் பெருமளவில் அணு உற்பத்தியை மட்டும் சார்ந்து நிற்கத் தொடங்கிய பின், அந்நாட்டிலிருந்து வெளியேறும் கரிமில வாயுவின் அளவு கூடிக் கொண்டிருக்கிறதா, குறைந்து கொண்டிருக்கிறதா என்பதன் புள்ளி விவரம்தான் எனக்கு முக்கியமானதாக தெரிகிறது. கரிமில வாயு உமிழ்வுப் புள்ளிவிவரம், வரைபடத்தில் மேல் நோக்கிய வளைவாக, செங்குத்தாக தொடர்ந்து ஏறிக் கொண்டிருக்கிறது என்பதில் எனக்கு எந்த சந்தேகம் இல்லை. ஆகையால் அணு மின் உற்பத்தி புவி சூடேற்றத்தை கட்டுப்படுத்தும் வல்லமை கொண்டதாக நம்ப ஆதாரம் உண்மையில் இல்லை; மாறாக மின்பற்றாக்குறை நீங்கி, அபரிமிதமான மின்சாரம் கைவசம் இருக்கும் போது, பொறுப்பற்ற எல்லாவகை குளிரூட்டுதலாலும் புவி சூடேற்றம் அதிகமாகவே எல்லா சாத்தியங்களும் உள்ளது. நிலக்கரி, தொல்லுயிர் எச்சங்களில் இருந்து கிடைக்கும் எரிபொருள்களின் இருப்பு வற்றும் நிலைமையில், நாம் அணு எரிபொருளை தேடவேண்டியுள்ளது என்கிறார் கலாம். ஃபாசில் எரிபொருட்களின் வளம் வற்றப்போவது நிச்சயமான எதிர்காலப்பிரச்சனை. அதை அணு மின்சார உற்பத்திக்கு மாறுவதன் மூலமாக மட்டும் சமாளிக்க முடியுமா? எல்லாவித பெட்ரோல், டீசல் தேவைகளையும் நேரடி மின்சாரம் சார்ந்த பயன்பாடாக மாற்ற வேண்டும். இன்னும் நேரடியாக அணு சக்தியிலேயே ஓடக்கூடிய கார்களையும், விமானங்களையும் படைத்து விட்டால் மிகவும் உசிதம்; உண்மையிலேயே அதைத் தவிர வேறு வழியில்லை. இன்றய வாகனங்களை போல புகை கக்க வேண்டிய தேவையும் இருக்காது. அணுக் கழிவுகளை மட்டும் எப்படி ஒவ்வொரு குடிமகனும், குடிமகளும் சமாளிப்பார்கள் என்பதை எதிர்கால அறிவியல் முன்னேற்றத்திடம் விட்டுவிடலாம். புவி சுடேற்றத்தை அணு மின்சாரம் குறைக்கும் என்கிற வாதம் சந்தேகக் கேஸாக இருந்தாலும், எதிர்காலத்தை பற்றி கவலை கொள்ளாமல், உடனடி சூழல் மாசை மட்டும் கணக்கில் கொண்டால், மற்ற அனல், புனல் மின்சாரங்களுக்கு அணு மின்சாரம் மேல்தான். உதாரணமாக கலாம் நிலக்கரி சுரங்கங்கள் நிகழ்த்தும் நாசத்தை முன்வைத்து அப்படி ஒரு வாதத்தை முன்வைக்கிறார். இந்த சந்தர்ப்பத்திற்கான ஒரு சாமர்த்தியமான வாதமாக இல்லாமல், அணு மின்சாரம் தொடங்கிய உடன், நிலக்கரிக்காக தோண்டுவதை நம் கார்ப்பரேட்டுகள் நிஜமாகவே முழுக்க விட்டுவிடுவார்கள் என்றால், அந்த வகையில் கலாம் சொல்வதை- சேரப்போகும் அணுக்கழிவு குறித்து யோசிக்காத நிலையில்- ஒப்புக் கொள்ளலாம். என்னை பொறுத்த அளவில் எல்லாவிதத்திலும் அழிவை நோக்கித்தான் போய்கொண்டிருக்கிறோம். பிளாஸ்டிக் கழிவுகள் நம்மை மட்டுமின்றி, கடலையும் கபளீகரம் செய்து கொண்டிருக்கிறது. புவி சுடேற்றம் பற்றி கறாரான புள்ளி விவரங்களுடன் புட்டு புட்டு வைத்த பின்பும், நன்றாய் படித்த அறிவாளிகளே கிராக்குத்தனமான வாதங்களால் மறுக்கிறார்கள். இன்னும் பைத்தியக்காரத்தனமான தீர்வுகளையும் தருகிறார்கள். இதற்கு மேல் வெடிக்க சாத்தியமுள்ள போர்கள், முதலீட்டியம் எதிர்காலத்தில் நிகழ்த்தப் போகும் தீவிர சுரண்டல், அளிக்கக் போகும் நெருக்கடிகள் என்றும் ஏராளமாக இருக்கின்றன. இதில் உடனடி ஆபத்து என்று பார்த்தால் அணுக்கழிவுகள் குறைந்த வீர்யத்துடனேயே இருப்பது போல் தெரிகிறது. ஆற்றலுக்காக நவீனமான வாழ்க்கையில் எத்தனையோ விதத்தில் அழிவை தேடுகிறோம்; அணு மின்சாரம் உற்பத்தி மூலம் இன்னொன்றை இழுத்துக் கொண்டு அழிவைத் தேடுவதில் என்ன குடி முழுகப்போகிறது என்றால் பதில் எதுவும் இல்லை. ஆகையால் நேர்மையாக அழிவிற் சிறந்தது எது என்பதை பற்றி விவாதிப்போம். அதில் அணு ஆற்றல்தான் நம் பார்வையில் இப்போதைக்கு சாதகமான அழிவு என்றால் அதை ஏற்றுக்கொள்வோம். சைனா இந்தப் பாதையில்தானே போகிறது, நாம் பின்தங்கி விட மாட்டோமா என்று கேட்கிறார்கள். உண்மைதான்; எல்லோரும் அழிவுப்பாதையில் போகும் போது நாமும் அதையே செய்வோம். தனிமைப்பட்டு தவிர்க்க முடியும் என்று தோன்றவில்லை. தவிர்க்க முயன்றாலும் மற்றவர்கள் அனுமதிக்க போவதில்லை. புவி சூடேற்றப் பிரச்சனையிலும் மற்ற நாடுகள் யோக்கியமாக நடக்காத போது, கரிமில வாயு உமிழ்வை நாம் மட்டும் ஏன் கட்டுப்படுத்த வேண்டும் என்று கேட்கிறார்கள். உண்மைதான்; மற்றவர்கள் செய்யும் போது நாமும் நம் பங்களிப்பை அழிவிற்கு செலுத்த வேண்டாமா? எல்லாம் வாஸ்தவம்தான். ஆனால் ஐரோப்பிய அமேரிக்க நாடுகளை போல நவீனமாதலின் பயன் நம் அனைத்து மக்களுக்கும் சமமாக கிடைக்கப் போவதில்லை; நாம் சைனா போன்ற எதேச்சதிகார அரசமைப்பு கொண்ட நாடும் அல்ல. ஆகையால் ஒரு ஜனநாயக நாட்டில், நம் (அதாவது நானும் உறுப்பினராகியுள்ள மேல்தட்டின்) தேர்வுக்கு, வேறு ஒரு மக்களை விலை கொடுக்கச் சொல்லக் கூடாது. வேறு ஒரு மக்கள் என்று கூடங்குளத்தில் வசிக்கும் மக்களை போன்றவர்களைத்தான் சொல்கிறேன். (எதிர்கால சந்ததியினரை நம் பாவங்களை சுமக்கத்தான் உருவாக்குகிறோம் என்பதால் அவர்களை சொல்லவில்லை.) எத்தனையோ விஷயங்களில், எத்தனையோ விதங்களில் ஒரு தட்டினரின் தேர்விற்கு வேறு யாரோ விலை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்; இதிலும் செய்தாலென்ன என்று நேரடியான ஒரு கேள்வியை எலீட் கூட்டம் கேட்பது ஒருவேளை அடுத்த கட்ட வாதமாக இருக்கலாம். இந்த புலம்பல்களை விட்டு விட்டு இதற்கான மாற்றுத் தீர்வு என்னவென்று கேட்டால், நிறைவான பதில் எதுவும் எனக்கு தெரியவில்லை. அணு உலையை எதிர்ப்பவர்கள் காற்றாலை, சூரிய மின்சாரம் என்று பலவற்றை முன்வைக்கிறார்கள். விரிந்து கொண்டே போகும் தேவைகளை அது முழுவதும் தீர்த்து வைக்கும் என்று கலாமை போலவே எனக்கும் நம்பிக்கையில்லை. உருவாக்கி கொண்டே செல்லும் தேவைகளை குறைக்காமல், அதற்கான நடவடிக்கைகளை எடுக்காமல் எந்த தீர்வையும் எட்டமுடியாது. டெவலப்மெண்ட் என்கிற வளர்ச்சியின் வன்முறையையும், அழிவையும் உணராமல் அது குறித்து யோசிக்க வாய்ப்பில்லை. தொடர்ந்த மின் பற்றாக்குறையும், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடும் ஒருவேளை நம்மை யோசிக்க வைக்கலாம். அந்த வகையில் கூடங்குளம் அணு மின்சாரம் வந்து நம் மின் பற்றாக்குறையை தீர்க்குமானால், நாம் யோசிக்கவே போவதில்லை. ஃபுகுஷிமா விபத்திற்கு பிறகு, இயக்காமல் இருந்த பல அணு உலைகளின் காரணமாக, ஜப்பானியர்கள் மின் பற்றாக்குறையை சமாளிக்க வேண்டிய கட்டாயம் நேர்ந்தது; மின்சிக்கனம் குறித்த பரப்புரை செய்யப்பட்டது. குளுரூட்டுதலை தவிர்ப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம், ஒட்டு மொத்த ஜப்பானே மின் சிக்கன நடவடிக்கைகளில் இறங்கியது. இதன் விளைவாக கடந்த செப்டம்பர் மாதம் கடந்த பல வருடங்களை விட குளிர்ந்து இருந்ததாக ஒரு செய்தி வாசித்தேன். இது போன்ற ஒரு செயல் இந்தியர்களாகிய நம்மாலும் முடியும் என்று கூறுவதற்கான முகாந்திரம் இல்லாததால்தான், கலாம் அணு மின்சாரத்தில் ஜப்பானை போல நாம் சாதித்து காட்ட முடியும்... முடியும்... முடியும்... என்று கோஷிக்கிறார் போலும். பி.கு. 1. கூடங்குளம் அணு உலையை எதிர்ப்பவர்கள் குறிப்பாக பல பிரச்சனைகளை எழுப்பியுள்ளனர். அது குறித்து எந்த அளவிற்கு நிறைவான, நியாயமான பதில்களை கலாம் கூறியிருக்கிறார் என்று அலச நான் முயலவில்லை. வேறு யாராவதுதான் அந்த வேலையை செய்யவேண்டும். பி.கு. 2. ஹிந்து பத்திரிகையில் ஆங்கிலத்திலும், பின் கலாமின் வலைதளத்தில் முதலில் வெளியாகி பின் விகடனில் தமிழிலும் இரண்டு கட்டுரைகள் கலாமின் கட்டுரைகளாக வெளியாகியுள்ளன. இரண்டுமே இணை ஆசிரியர்களாக வேறு ஒருவரையும் கொண்டது. ஶ்ரீ ஜன்பால் சிங் ஆங்கில கட்டுரையிலும், பொன்ராஜ் தமிழ் கட்டுரையிலும் இணை ஆசிரியர்கள். ஆய்வு கட்டுரையாக அல்லாமல், வெகுஜன வாசிப்பிற்கான ஒரு பரப்புரை கட்டுரையில், இவர்கள் பங்கு என்னவென்று தெரியாவிட்டாலும், பலரும் இதை கலாமின் கட்டுரையாகவே வாசிக்கின்றனர். என் கருத்தில், கலாமின் மேற்பார்வையில், இந்த இரண்டு கட்டுரைகளுமே முழுமையாகவே மற்றவர்களால் எழுதப்பட்டிருக்க வாய்ப்பு நிறைய உள்ளதாகவே கருதுகிறேன். ஆனால் இங்கே கலாமின் கட்டுரை என்று விளித்துள்ளதன் பொருள், அவர் எழுதியது என்பதல்ல. அவரின் பெயரால் முன்வைக்கப்பட்டதை எதிர்கொள்வதுதான். (தமிழ் பேப்பரில் வெளியாகியது.) Monday, August 29, 2011நம் கூட்டுக் கொலை.செப்டம்பர் 9 அன்று முருகன், சாந்தன் பேரறிவாளன் ஆகிய மூவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட சாத்தியங்கள் அதிகமாக இருக்கின்றன. அது நிறைவேறினால் அரசதிகாரமும், நீதிமன்றமும், சமூகத்தின் பொதுப்புத்தியும் சேர்ந்து, பகுத்தறிவினால் நிதானமாக நிர்ணயிக்கப்பட்டு நிகழ்த்திய ஒரு கொடூரமான கூட்டுக் கொலையாக அது இருக்கும். நம் சமூகத்தில் எத்தனையோ அநீதிகள் அன்றாடம் நடக்கிறது; நாம் ஒப்புக் கொள்ளாத, நம்மால் சகிக்க முடியாத அநீதிகள் எல்லாவற்றிற்கும் நாம் குரல் கொடுத்துக் கொண்டிருப்பதுமில்லை; கொடுக்கும் குரலின் அழுத்தமும் கோபமும், அநீதி மற்றும் அது நிகழும் தரப்புக்கும் ஏற்ப வேறுபடத்தான் செய்கிறது; அநீதிகளுக்கு குரல் கொடுக்கும் ஒவ்வொருவருக்கும் அதற்கான தேர்ந்தெடுப்பும், அந்த தேர்ந்தெடுப்பிற்கு காரணமான கொள்கைசார்புகளும் இருக்கின்றன. இதற்கு விதிவிலக்காக எந்த தரப்பும் இருப்பதாக தெரியவில்லை. அநீதிகள் என்று எதுவுமே நடக்காத சமூகத்திற்கான சட்டகத்தை நாம் கற்பனை செய்து பார்க்கவும் முடியாது. அநியாயம் என்று நாம் நினைக்கும் ஒன்றை தன்னளவில் எதிர்கொள்ளாமலும், மற்றவருக்கு அது நிகழ்வதை எல்லா சந்தர்ப்பங்களில் கேள்வி கேட்டுக் கொண்டும் இருக்க முடியாது. ஆனால் எல்லாவற்றிற்கும் எல்லையாக, 'என்ன காரணத்தாலும் நாம் இதை பொறுக்க முடியாது' என்று சுய அறத்தால் தீர்மானிக்கப்பட்ட ஒன்று நமக்கு இருந்தாக வேண்டாம். அதை சமூகமும், அரசும், அதன் நீதியும் அறிவித்து, எல்லா ஏற்பாடுகளையும் நிதானமாக செய்து நிறைவேற்றுமானால் நம்முடைய இருப்பின் மிக பெரியதொரு தோல்வி அது; வாழ்வதன் அர்த்தத்தையே கேள்விக்குரியாக்கும் நிகழ்வு அது. நான் மரண தண்டனை என்பது நாகரீக சமூகத்தில் ஒப்புக் கொள்ள முடியாத விஷயமாக கருதுகிறேன். குறிப்பாக இந்த பிரச்சனையில் பேரறிவாளனுக்கான தண்டனையை, எந்த விதத்திலும் பொறுத்துக் கொள்ள முடியாத அநியாயமான விஷயமாக, நம் இருப்பையே கேள்விகுறியாக்குவதாக கருதுகிறேன். மரண தண்டனையை, அதாவது எல்லாவித மரணதண்டனையையும், ஏன் எதிர்க்கிறேன் என்று விளக்கமாக எழுத இந்த இக்கட்டான நிலை சரிபடவில்லை. இந்த பழைய பதிவில் என் அன்றய புரிதலை எழுதியிருக்கிறேன். சுருக்கமாக சொல்வதானால், செய்த எந்த குற்றத்தையும் விட மரணதண்டனை கொடூரமானது. மிக அல்பமான உதாரணத்தை யோசிக்கலாம். ப்ளேடினால் ஒருவன் நம்மை எதிரபாராத சமயத்தில் கீறிவிட்டால் அது சாதாரண விஷயம்; பதிலுக்கு குறிப்பிட்ட நேரத்தை நிச்சயித்து, அந்த ஒருவனுக்கு அதை அறிவித்து, கையை சுத்தமாக கழுவி, அவனை எல்லாவகையிலும் தயார் செய்து, கையை குறிப்பிட்ட நிலையில் வைத்து, தயாராக வைக்கப்பட்ட ப்ளேடினால் கையில் கீறுவது, அதை விட பல மடங்கு கொடுமை நிறைந்தது. இது எந்த தண்டனைக்கும் பொருந்தும்; ஆக எல்லாவித தண்டனையும் குற்றத்தை விட கொடுமையானதுதான். ஆனால் மரண தண்டனை என்பது, ஒருவேளை வலியற்று நிறைவேற்ற முடியும் என்று ஒரு நிலை வந்தாலும் கூட, மனிதன் நிகழ்த்த கூடிய எல்லா குற்றங்களையும் விட கொடூரமானது; செய்த குற்றங்களை விட அநீதியானது. கடவுளின் இடத்தை சில மனிதர்கள் எடுத்து, நம் அனைவர்களின் பெயராலும் நிறைவேற்றப் பெறுவது. நிகழ்ந்த குற்றம் என்பது மனித பைத்தியக்காரத்தனத்தின் வன்முறை; மரண தண்டனை அரசதிகாரத்தின் நீதியும் பகுத்தறிவும் சேர்ந்து நிகழ்த்தும் பயங்கரம். தூக்கு தண்டனை, அதை நிகழ்த்தும் பணியாளர்கள் உட்பட பலருக்கும், எவ்வளவு பயங்கரமான அனுபவம் என்பது பக்கம் பக்கமாக எழுதப்பட்டுள்ளது. இந்த பயங்கரம் செப்டம்பர் 9இல், நாம் இட்ட இத்தனை கூக்குரலுக்கு பிறகும் நடக்கப் போகிறது என்றால், நம் சமூகத்தில் இயங்குவது குறித்த ஆழ்ந்த அவ நம்பிக்கையையே கொள்ள முடியும். குறிப்பிட்ட அரசியல் தரப்பின் மாறாத காழ்ப்பையும், வெறுப்பையும் விமர்சிக்கும் (ஏற்கனவே இல்லாத) அருகதை இனியும் எந்த பக்க அறிவுலகமும் கோர முடியாது. இந்த பகுத்தறிவும், நீதியும் சார்ந்த பயங்கரவாத கொலையை, தன்னிச்சையாக எதிர்த்து கொதிக்தெழும் அளவிற்கு, நம் சமூகத்தின் பொதுப்புத்தி நாகரீகம் கொள்ளவில்லை. இப்போது இரு வாரங்களுக்கு குறைவான நாட்களே கைவசம் இருக்க, மிக இக்கட்டான நிலையில் இருக்கிறோம். நமது எதிர்ப்பை மீறி இந்த பயங்கரம் நடக்காமல் இருக்க ஒரே நம்பிக்கை, மனமிரங்கி ஜெயலலிதா செயல்பட்டு இதை தடுப்பதுதான். ஜெயலலிதா தன் எண்ணம் என்ன வென்று சின்ன சமிஞ்ஞை கூட கொடுக்காத நிலையில், இந்த பயங்கரத்தை நிறுத்த வைப்பதற்கு, அவரை நிர்பந்திக்க, இந்த மரணதண்டனைக்கு எதிராக பெரும் வெகுமக்கள் எதிர்ப்பு இருப்பதாக காட்டுவதும், உண்மையிலேயே அதை உருவாக்குவதுமே. அத்தகைய வெகுமக்கள் எதிர்ப்பை உருவாக்குவதற்கு பேரறிவாளனை முக்கியமான உதாரணமாக முன்வைத்து, அவர் மீதான தண்டனை மிக அநியாயமானது என்கிற வாதத்தையும் மக்களிடம் கொண்டு செல்வதுதான்; அதுதான் உண்மைக்கு அருகில் வருவதும் கூட. அந்த நியாயமான வேலையைத்தான் தமிழ்தேசிய பார்வை கொண்டவர்களும் மற்றவர்களும் செய்கிறார்கள். இத்தகைய முன்னெடுப்பிற்கு எதிராக ஷோபாசக்தி, ஜெயமோகன், பத்ரி போன்றவர்கள் (நான் வாசித்த வரையில்) எழுதியுள்ளனர். ஷோபாசக்தியின் வாதம் அவரது அரசியல் அப்செஷன் என்று நான் கருதுகிறேன். அதை விரிவாக எழுதுவது இன்றய சூழலில் தேவையில்லை என்று நினைக்கிறேன். பத்ரியும், ஜெயமோகனும் இந்த மரண தண்டனையை எதிர்ப்பதாக சொன்னாலும் பேரறிவாளனுக்கான தண்டனை அநீதியானது என்பதை ஏற்க மறுக்கிறார்கள். மேலும் அவ்வாறு பிரச்சாரம் செய்வது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்கிறார்கள். எப்படி என்று எனக்கு புரியவில்லை. 'பேரறிவாளன் ஒரு சதித்திட்டக் குற்றவாளிதான், ஆனால் மரண தண்டனை கூடாது என்பதனால் அவருக்கான தண்டனையை எதிர்க்க வேண்டும்' என்று ஒரு பிரச்சாரத்தை மட்டும் செய்து, அவர் அப்பாவி என்பதை சொல்லாமல் மக்களிடம் சென்றால் என்னவகையில் அது நேர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்? இன்னமும் போலிஸ் என்கவுண்டரை ஆதரிக்கும், குற்றவாளிகள் அடித்து கொல்லப்படுவதை ஆதரிக்கும் மனம் கொண்டவர்கள் நம் வெகுஜன மக்கள். தர்மபுரி வழக்கு தீர்ப்பில் மக்கள் மன நிலை என்ன? 'தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று அஇஅதிமுகவினருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டபோது இனிப்பு வழங்கிக் கொண்டாடிய தமிழர்களையும் நமக்குத் தெரியும்.' என்று பத்ரியே எழுதுகிறார். ஆனால் 'குற்றத்தில் பங்கு உண்மைதான், மரண தண்டனை மட்டும் கூடாது' என்று பிராசாரம் செய்யவேண்டும், அதுதான் நேர்விளைவுகளை தரும் என்று வலையுறுத்துவதில் என்ன லாஜிக் வைத்திருக்கிறார்? தர்மபுரி வழக்கில் கூட ஒருவேளை மக்கள் வேறு மாதிரி யோசிக்கலாம்; தேசிய உணர்வு, ராஜீவின் பிம்பம், அந்த கொடூர பயங்கரவாத செயல் தமிழகம் முழுக்க பரப்பிய அதிர்வின் நினைவுகள், எல்லாம் சேர்ந்து மக்கள் கருத்தை இன்னமும் எதிர்மறையாகவே ஆக்கும். மேலும் பேரறிவாளனுக்கான தண்டனை அநீதியானது என்கிற போது அதைத்தான் ஆதாரங்களுடன் முன்னெடுக்க வேண்டும். ஜெயமோகனும் பத்ரியும் பேரறிவாளன் குற்றவாளிதான் என்று நினைப்பதற்கான வாதம் எதையும் தனியாக தரவில்லை. மற்றவர்களை ஆதாரபூர்வமாக எழுதவில்லை என்று குறை சொல்பவர்கள், பேரறிவாளனின் பங்காக குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறித்து எழுப்பப்படும் கேள்விகளை பொருட்படுத்தவில்லை. 'நீதி மன்றம் தீர்ப்பளித்திருப்பது, அதில் மேல் மட்டத்தில் ஊழல் இருக்காது' என்பது மட்டுமே ஜெமொ வாதம். பத்ரி ரகோத்தமன் வேறு மாதிரி சொல்கிறார் என்று ஒரு வாதத்தை சொல்கிறார். அது என்ன வேறு மாதிரி என்பதை சொல்வதில்லை. எத்தனையோ பேர்களை பத்ரியும், ஜெயமோகனும் வாதங்களையும், ஆதாரங்களையும் தராமல் ஒப்பேத்துவதை சாடுவார்கள். முக்கியமான ஒரு விஷயத்தில் இவர்களுக்கு மட்டும் அந்த பொறுப்பும், கட்டாயங்களும் கிடையாது. போகிற போக்கில் எதையாவது சொல்வதும், நீதிமன்றம் சொன்னால் சரி என்கிற வாதம் போதுமானது. உண்மையிலேயே மனசாட்சி நெருடவில்லையா? இப்போதய சூழலில் இது குறித்த விவாதத்தில் இறங்குவது தேவையில்லை என்றுதான் நினைத்தேன். ஆனால் தமிழ் தேசியவாதிகள் போராட்டத்தை முன்னெடுப்பது என்பது ஒரு துவக்கம் மட்டுமே; தமிழ் தேசிய சொல்லாடல்களை ஏற்காதவர்களும் இந்த மரணதண்டனைக்கு எதிரான குரலையும் ஒலிக்கும்போதுதான் இதற்கான நியாயம் வலுப்பெறும் என்று ஜெயமோகனை போலவே நானும் நினைக்கிறேன். குறிப்பாக ஜெயலலிதா மனமிரங்க நிர்பந்தம் வரவேண்டுமானால், தீவிர தமிழ் தேசியவாதிகள் தவிர, மற்ற பலர் தங்கள் குரலை ஒலிக்கவேண்டும். அப்படி யாரும் தீவிரமாக ஒலிக்காத நிலையில், பேசாதவர்களை குற்றம் சொல்லாமல், தமிழ் தேசியவாதிகள்தான் அதற்கும் காரணம் என்கிற வழக்கமான விநோதமான தர்க்கத்தில் ஜெயமோகன் இறங்கியிருக்கிறார். கோயம்பேடு உண்ணாவிரதப் போராட்டம், ஊடக கவனத்தை பெற்று வரும் வேளையில் இது போன்ற கருத்துக்கள்தான் உண்மையாக எதிர்விளைவுகளை ஏற்படுத்தும். வேறு சிலரும் இதே போல பேசத்தொடங்கிய நிலையில் பொதுக்கருத்தை உருவாக்குவதில் என் சிறிய பங்காக, இந்த பிரச்சனையில் கடமை என்று நினைத்து இந்த எதிர்வினை. 8000 பேர்கள் ஜெயமோகனை வாசிக்கிறார்கள் ஒரு 200 பேராவது என் பதிவை வாசிக்க மாட்டார்களா? இந்த மரண தண்டனை நிகழக்கூடாது என்பதுதான் இவர்களின் முக்கியமான அக்கறையாக இருக்கும் பட்சத்தில், அதை எதிர்க்கும் காரணங்கள்தான் முன்னிலைப்படுத்தப்பட்டிருக்கும். ஜெயமோகன் பதிவில் முன்னிலைபடுத்தப்படும் கருத்து என்னவென்று வாசிப்பவர்கள் புரிந்து கொள்ள முடியும். எனக்கும் தமிழ் தேசியவாதிகள் மீது மட்டுமின்றி, அவர்கள் போரட்டத்தை முன்னெடுப்பதிலும் விமர்சனம் உண்டு. நமது முக்கிய நோக்கமான மரணதண்டனைக்கு எதிரான கருத்தை உருவாக்குதல் என்ற நோக்கத்திற்கு தீங்கிழைக்காதவரை அந்த விமர்சனங்கள் இப்போதைக்கு முக்கியமனவை அல்ல. நான் மட்டுமல்ல, தமிழரல்லாத மனித உரிமையாளர்கள், முன்னாள் மும்பை நீதிபதி சுரேஷ் இந்த தண்டனையை தாங்கள் எதிர்ப்பதற்கான வாதங்களை முக்கியப்படுத்தி பேசினார்களே ஒழிய, எதிர்ப்பதை ஒரு பாயிண்டாக சொல்லிவிட்டு, தங்களுக்கு தமிழ் தேசியத்துடன் இருக்கும் பிரச்சனைகளை பேசவில்லை. தமிழ்தேசியவாதிகள் ஒரு தீவிர அரசியலை கோஷ்டிகானமாக ஒலிக்கும்போது பல பிரச்சனைகள் நமக்கு இருக்கத்தான் செய்யும். (ஷோபாசக்தி போல் 'சாத்தியமற்ற அரசியலை' பேசாமல்) நடைமுறை அரசியலை தொடர்ந்து வலியுறுத்தும் பத்ரிக்கு மரணதண்டனை எதிர்ப்புதான் முக்கியம் என்றால், பிரச்சனைகளை விடுத்து விளைவுகளில்தான் கவனம் இருக்க வேன்டும். ஆயிரம் முறையாவது சொல்லியாகிவிட்டது; பேரறிவாளன் மீது சாட்டப்பட்ட குற்றம் அவர் 'பேட்டரி வாங்கி கொடுத்தது'; அதற்கான ஆதராம் அவரே தடா சட்டத்தின் நடைமுறையில் கொடுத்த போலீஸ் வாக்குமூலம். இதற்கு மேல் அவர் மீது குற்ற நிரூபணத்திற்கு வேறு ஏதாவது ஆதாரம் இருப்பதாக தீர்ப்பிலோ, வேறு வகையிலே தெரிந்தால் பத்ரியும், ஜெயமோகனும் முன்வைக்க வேண்டும். அதை செய்யாமல் நீதிமன்றம் சொல்லிவிட்டதால் சரி என்பது என்னவகை அறிவு பூர்வமான அணுகுமுறை? அல்லது தடாசட்டத்தின் கொடூரமான நடைமுறையில் பெறப்பட்ட வாக்குமூலத்தை ஆதாரம் என்கிறார்களா? 'சோ'வாக இருந்தால் தயங்காமல் அதை சொல்லுவார். ஒரு அப்பாவி பாதிக்கப்பட்டாலும், பயங்கரவாதம் குறித்த பிரச்சனைகளில் நாம் கடுமையாக இருப்பதுதான் சரியான அணுகுமுறை என்று நினப்பவர் அவர்; மரணதண்டனையின் இருப்பிற்கும் தீவிர ஆதரவாளர் அவர். அதே போல ஜெமோவும், பத்ரியும் பேசிவிட்டால் எனக்கு பிரச்சனையில்லை. (பிரச்சனையில்லை என்றால் அவர்களை எதிர்கொள்ளும் பிரச்சனை இல்லை.) மாறாக மனிதாபிமானமும், மனித உரிமையும் சேர்த்து பேசுவதால்தான் பிரச்சனை. ஆகையால் ஜெமோவும், பத்ரியும் நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக மட்டும் உண்மை என்றும், ரகோத்தமன் என்னிடம் தனிப்பட்ட சொன்னார் என்று போகிற போக்கில் சொல்லாமல், பேரறிவாளனை ஏன் குற்றவாளிகளாக கருதுகிறார்கள் என்று சொல்வதுதான் நேர்மையாக இருக்கும். சொல்லும்பட்சத்தில் என் கருத்தை பரிசீலிக்க தயராக இருக்கிறேன். எழுத்தில் நேர்மையாக இல்லாமல் இருப்பது அவர்கள் உரிமை. ஆனால் நாளை இடதுசாரிகள், தமிழ்தேசியவாதிகளின் அறிவுநேர்மை குறித்து பாடம் எடுக்க மட்டும் கூடாது. அடுத்தது பேட்டரி வாங்கி கொடுத்தது உண்மையாகவே இருந்தாலும், சதி திட்டத்தை தெரிந்து பங்குவகித்ததான முடிவுக்கு வரமுடியாது. அப்படி ஒரு முடிவுக்கு வந்தாலும் குற்றத்துடன் வகித்த பங்கின் தீவிரம் சார்ந்துதான் தீர்ப்பளிக்க முடியும். எந்தவகையில் பார்த்தாலும், மரண தண்டனையை ஒப்புக் கொள்ளும் சட்டகத்திலேயே கூட, இதற்கு மரண தண்டனை அதீதமானது, அநியாயமானது என்பதைத்தான் எந்த அறிவு நேர்மை கொண்டவரும் முடிவிற்கு வரமுடியும். மாறாக பயங்கரவாதம் தொடர்பான பிரச்சனைகள் இப்படி நியாயம் பேசக்கூடாது என்று நினைத்தார்களானல் அதை தெளிவாக சொல்ல வேண்டும். அடைப்படையில் மனிதாபிமானம்தான் எழுத்தோட்டமாக உள்ளதாக காண்பித்துக் கொள்ளக் கூடாது. உயர் மட்ட நீதிபதிகளின் தீர்ப்பு நியாயமானதாக இருக்கும் என்பதற்கு ஜெயமோகன் சொல்லும் காரணம் அங்கே ஊழலின்மை; ஆனால் ஊழல் என்பதல்ல முக்கிய பிரச்சனை. நீதியின் கடவுள்தன்மை கொண்டிராத மனிதர்களான நீதிபதிகளின் மனச்சாய்வும், அவர்கள் கொண்டிருக்கும் முன்னபிப்பிராயம், நம்பிக்கைகள், வழக்கின் அரசியல் பின்னணியும், மைய இந்திய அரசும் அங்கீகரிக்கும் கொள்கை எல்லாம் தீர்ப்பை பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. யாரும் நீதித்துறையின் ஊழல் காரணமாக இப்படி ஒரு தீர்ப்பு வந்துள்ளதாக இதுவரை சொல்லவில்லை. சாயப்பட்டரை வழக்கு முதல் ஸ்பெக்ட்ரம் வரை நியாயமான ஊழலற்ற தீர்ப்பு வந்தால் கூட, ராஜிவ் போன்ற ஒரு அரசியல் கொலை வழக்கில் எல்லாம் நீதியுடன் இருக்கும் என்பது ஒரு வாதமே இல்லை. , 'மக்களின் வெகுஜன உணர்வை திருப்தி செய்ய வேண்டிய கட்டாயத்தை ஒரு காரணமாக சொல்வதையும் கவனிக்க வேண்டும். சட்டமே நியாயமற்று இருப்பது என்று ஒரு யதார்த்தம் இருக்கக்கூடும் என்பது போல, நேர்மை என்பதாக பயன்படுத்தப்படும் நீதியே கூட அநீதியாக இருக்க முடியும். . "அப்சல் குரு போன்று பாராளுமன்றத் தாக்குதலில் எளிய மக்களை கொன்று குவித்த தேசவிரோதச் சதிகாரர்களைக்கூட உச்சநீதிமன்றம் வரை எல்லா வாய்ப்புகளும் வழங்கப்பட்டு தண்டிக்கப்பட்ட பின்னரும் இந்திய அரசு தண்டிக்க தயங்குகிறது" என்று மனசாட்சியே இல்லாமல் எழுதுகிறார் ஜெமோ. பின்னணி எதுவும் புரியாத வாசகர் வாசித்தால், அப்சல் நேரடியாக பாராளுமன்ற தாக்குதலில் பங்கெடுத்தது போல தோன்றும். ஆனால் அவர் சதித்திட்டத்தில் பங்கு உள்ளதாக கூட நேரடி ஆதாரம் கிடையாது. ஒரு செல்போன் உரையாடல் என்கிற சந்தர்ப்பவாத சாட்சியம் மட்டுமே அவரை சம்பந்தப்படுத்துவது; பேரறிவாளன் விஷயத்தில் அதுவுமில்லை. ஜெயமோகனை போல நானும் தமிழ்தேசியம் பேசாத அறிஞர்கள், சான்றோர்கள், பிரமுககர்கள் இந்த மரணதண்டனையை எதிர்த்து குரல் எழுப்பவேண்டும் என்றுதான் நானும் நினைக்கிறேன். 'தமிழ் தேசியவாதிகள் முன்னெடுக்கிறார்கள்; அதனால் மற்றவர்களால் பேசமுடியவில்லை' என்பது நியாயமான வாதம் அல்ல. கடைசியாக ஜெயமோகன் என்ற எழுத்தாளர் மீது மிச்சமிருக்கும் மரியாதையால் சொல்கிறேன். 'ஓர் எழுத்தாளனாக அவரது எளிய சொற்கள் எந்த பொதுக்கருத்தை உருவாக்குகிறது என்று மனசாட்சியுடன் சொல்லட்டும். ஜெயமோகனின் பதிவை படித்து மரண தண்டனை கொடூரமானது என்ற முடிவுக்கு வந்து பொதுக்கருத்து உருவாகி எதிர்க்குமா, அல்லது உண்மையில் சதியில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள்தான் தண்டிக்கபடுகிறார்கள் என்ற மனச்சமாதானம் கிடைக்குமா? எதிர்வினை முடிந்து மீண்டும் பதிவிற்கு வருகிறேன். மரண தண்டனை நாகரீக சமுதாயத்தில் ஏற்கமுடியாது என்ற அடிப்படையில் இந்த மூவருக்கான தண்டனையை எதிர்த்தாலும், அநீதியான மரண தண்டனையை அனுமதிப்பது நம் சமூகத்தின் கூட்டுக் குற்றம் என்றவகையில், பேரறிவாளனின் தரப்பை தூக்கிபிடிப்பது முக்கியமாகிறது. பேரறிவாளனுக்கு தண்டனை குறைப்பு நடந்தால், அது மற்றவர்களின் தண்டனை குறைப்பிற்கு சாதகமாகும்; பின் மற்ற மரணதண்டனை கைதிகளுக்கு சாதகமாகும். இப்போதைக்கு நம்பி காத்திருப்பதை தவிர வேறு வழி இல்லை. தொடர்புடைய மற்ற பதிவுகள்: மரணதண்டனைக்கு எதிராக. அரசியல் தூய்மையும், அரசியல் செயல்பாடும், உரையாடலும... மரணதண்டனை குறித்து சில துளிகள். |