ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Thursday, April 29, 2021

சங்கி!

 இன்று தமிழ் சூழலில் ̀சங்கி’ என்ற முத்திரை குத்தல் எந்த காரணத்திற்காகவும், யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதுதான் நிலைமை. ஒருவர் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாஜக என்கிற கட்சிக்கோ, இந்துத்வம் என்கிற கருத்தியலுக்கோ ஆதரவோ, தர்க்க நியாயமோ சேர்ப்பாரெனில், அப்போது சங்கி என்ற சொல்லாடல் பொருத்தமானதாக இருக்கலாம். ஆனால் இன்று திமுகவை பற்றி என்ன விமர்சனம் வைத்தாலும் வைத்தாலும், பொது கும்பல் மனப்பான்மையில் இருந்து விலகி வேறு மாதிரி பேசினாலே சங்கி என்று ஒருவர் அழைக்கப்படுவார்.

உதாரணமாக கொரோனா இரண்டாம் அலையின்போது வடக்கே நடப்பதை எல்லாம் பார்த்து மனம் பதைத்து, அதே நேரம் தமிழ்நாட்டில் நடப்பதையும் ஒப்பிட்டுப் பார்த்து, எடப்பாடி அரசு இதை மேலாக கையாள்கிறது என்று ஒரு பொதுஜனம் நினைப்பது சகஜமானது; பொதுப்புத்தி அப்படி யோசிக்கவே வாய்ப்புண்டு. கொஞ்சம் சிந்திக்கும் ஒருவர், இதற்கு முந்தய எல்லா அரசுகளும் சேர்ந்து உருவாக்கிய கட்டுமானமும், இந்த அரசின் செயல்பாடும் சேர்ந்து காரணம் என்றும் நினைக்கலாம். மாறாக, இது முற்றிலும் தவறு, இருபது ஆண்டுகாலம் ஆட்சி செய்த காங்கிரஸ் இந்த நாட்டை கற்காலத்தில் வைத்திருந்தது, இன்னொரு 20 ஆண்டுகாலம் ஆட்சி செய்த திமுக மட்டுமே தமிழகத்தை நவீனமாக்கி எல்லா கட்டமைப்புகளையும் உருவாக்கியது, 32 ஆண்டுகாலம் ஆட்சி செய்த அதிமுக அதை தொடர்ந்து சீரழித்து மட்டுமே வந்தது, கடந்த 10 ஆண்டுகாலமாக சீரழிந்ததையும் மீறி எல்லாம் இவ்வளவு மேலானதாக இருக்கிறது என்றும் ஒருவர் நினைக்க, அதை பகர நிச்சயம் இடம் உண்டு. ஆனால், திமுக மட்டுமின்றி, எல்லா ஆட்சிக்கும் இந்த முன்னேற்றத்தில் பங்கிருக்கிறது என்று நினைப்பவரிடம் சங்கித்தனம் என்ன இருக்கிறது? அவரை சங்கி என்று சொல்வது ஒரு கருத்தியல் சகிப்பின்மை அன்றி வேறென்ன? உண்மையில் திமுக பாஜகவுடன் கூட்டணி வைத்த வரலாற்றை பற்றி பேசினால் கூட, அதையும் சங்கித்தனம் என்று அழைப்பார்கள் என்பதுதான் இன்றய ஆபாச யதார்த்தம்.
இன்னொரு அராஜக உதாரணமாக, மாரி செல்வராஜ், ரஞ்சித் போன்றவர்கள் நீலச்சங்கி என்று அழைக்கப் படுவது. (தலித் அரசியலின் விமர்சனங்களை சகிக்காமல் நீலச்சங்கி என்பதும், பாப்பானாகிவிட்டன், உங்களை எல்லாம் பேச வச்சதே நாங்க என்று சொல்வதெல்லாம் வரலாற்றின் பின்னணியில் எவ்வளவு அருவருப்பான ஒரு சாதிய உளவியல் என்பதை இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்போம்.) மாரி செல்வராஜ் 95/97 பிரச்சனையில் செய்தது தவறு என்று வைத்துக் கொண்டாலும் கூட, அது திமுகவிற்கு எதிரான ஒன்று, அவ்வளவுதானே, அதில் சங்கித்தனம் என்ன உள்ளது? அவரது திரைப்படத்தில் இந்துத்வ கருத்தியலோ, அதற்கு சாதகமான நியாயமோ எங்காவது வெளிபடுகிறதா? ரஞ்சித் தொடர்ந்து இந்துத்வ கருத்தியலுக்கு எதிராகத்தான் பேசிவருகிறார். அவரது காலா திரைப்படம் ரஜினி ரசிகர்கள் பலரையுமே கடுப்பாக்கியது என்பதுதான் உண்மை. இதில் சங்கித்தனம் எங்கு வருகிறது? அதாவது திமுகவினருக்கு உவப்பாக இல்லை என்றால் அது சங்கித்தனம் என்பதுதான் இங்கே லாஜிக்.
இந்த காரணங்களால் இவனுங்க என்ன யோக்கியமா என்ற அளவில் கேள்வி எழுப்பாமல், இப்படி எல்லாம் மானாங்கண்ணியாக சங்கி முத்திரை குத்திக்கொண்டிருந்தால் மட்டும் பாஜகவிற்கு அரசியல் செய்ய இங்கே இடமே இல்லாமல் போய்விடுமா என்று கேட்டு பார்க்கலாம். அது பேக் ஃபயர் ஆவது சாத்தியம் என்பது ஒரு பக்கம் இருக்க, திமுகவே மீண்டும் எதிர்காலத்தில் பாஜகவுடன் உறவு கொண்டால், இந்த சங்கி ஹோலியாட்டத்துடன் சேர்ந்து ஆடி, ஒட்டுமொத்த இந்துத்வ எதிர்ப்பு அரசியலும் நாசமாக போகும் என்பதுதான் நிஜமான பிரச்சனை. அதனால் திமுக பாஜகவுடன் உறவு கொண்ட வரலாறு என்ன, அதற்கு ஏதாவது நியாயம் வரலாற்றில் உள்ளதா, இப்போது திமுக ஆட்சி அமைந்தால் அத்தகைய உறவிற்கான சாத்தியம் உள்ளதா என்று பார்ப்பது முக்கியமாகிறது.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம், திமுக ஆதரவாளர்களில் -அறிவுஜீவிகள், பொருளாதார அறிஞர்கள், மானுடவியலாளர்கள் என்று- யாரும் ‘பாஜகவுடன் கூட்டணி அமைத்தது ஒரு வரலாற்றுப் பிழை’ என்று அவ்வளவு பெரிய அரசியல் சறுக்கலை ஒப்புக்கொண்டு விமர்சித்துக் கொள்வதில்லை. கூட்டணி வைத்ததற்கு புதுப்புது நியாயங்களையே கற்பித்து திரும்ப திரும்ப முன்வைக்கிறார்கள். திமுக மீண்டும் அத்தகைய உறவிற்கு முனைந்தாலோ, உறவு ஏற்பட்டாலோ, மீண்டும் வாந்தி வரவழைக்கும் புதிய நியாயங்களையே முன்வைப்பார்கள் என்பதை மின்னம்பலம், முரசொலியில் பப்ளிஷ் ஆகும் மானுடவியல் ஆய்வு பேப்பர்களை வாசித்தால் அறியலாம். இப்படி ஒரு விசித்திர விமர்சன வீர்ய சிந்தனா மரபு உருவாகியிருப்பதாலும் இதை பற்றி பேச வேண்டியுள்ளது.


அன்றய திமுக-பாஜக உறவிற்கான முக்கிய நியாயமாக கூறப்படுவது - வாஜ்பாய் ஆட்சிக்கு பல்வேறு வழிகளில் ஜெயலலிதா குடைசல்கள் கொடுத்துக் கொண்டிருந்த நேரம், சுப்பிரமணிய சுவாமி சதி செய்ய, காங்கிரஸ்-அதிமுகவால் திமுக ஆட்சிக்கு பெரியதொரு நெருக்கடி நேர்ந்தது என்பதுதான். இதைத்தான் ‘டீ பார்ட்டி’ என்று ஏதோ செப்டம்பர் 11 சதித்திட்டத்திற்கு இணையாக தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். `டீ பார்ட்டின்னா என்னன்னு தெரியுமா?’ என்று இன்றய தலைமுறையை நோக்கி படு சீரியசாக கேட்பதன் பின்னுள்ள தர்க்கம் என்னவெனில், அன்று திமுக அரசுக்கு மிகப்பெரிய நெருக்கடி ஏற்பட்டது, அதனால் ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள பாஜகவுடன் உறவு கொண்டது என்பது. இந்த பிரச்சனைக்கு பிறகு வருவோம். உண்மை என்னவெனில் திமுக அதற்கு முன்பே பாஜகவுடன் உறவுக்கு தயாராக இருந்தது என்பதுதான். அந்தந்த சந்தர்ப்பங்களில் அதை வெளிப்படையாகவும் கூறியது.
1991-96 காட்டாட்சிக்கு பிறகு, ஜெயலலிதாவின் அதிமுக சட்டமன்ற தேர்தல் தோல்வியை தொடர்ந்து, பாராளுமன்ற தேர்தலிலும் முற்று முழுதாக தோற்கடிக்கப் பட்டது. தமிழ் மாநில காங்கிரஸ் 20 இடங்களிலும், திமுக 17 இடங்களிலும் வென்றது. முடிவுகள் வந்த சில மணி நேரங்களிலேயே, எல்லா சாத்தியங்களுக்கும் தாங்கள் கதவுகளை திறந்து வைத்திருப்பதாக கூறிய முரசொலி மாறன், ‘நாங்கள் எந்த தளத்திலும் தீண்டாமையை பேணுவதில்லை’ என்று அறிவித்தார். மிக தெளிவாக பாஜகவுடனும் சேர எங்களுக்கு தயக்கங்கள் எதுவும் இல்லை, அந்த சாத்தியத்தையும் பரிசீலித்துக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் இதன் ஒரே பொருள். அவ்வாறே எல்லோராலும் அன்று அது புரிந்து கொள்ளப் பட்டது.
அப்போது, திமுக-ரஜினி- தமாகா என்கிற ̀மாயத்தை நிகழ்த்திய’ பின், திமுக-தமாகா அரசியல்வாதிகளுடன் ̀சோ’ நல்ல உறவில் இருந்தார். அவர் பாஜக-திமுக பேச்சுவார்த்தைகளுக்கு ஏற்பாடு செய்ய தயாராக இருந்தார். ̀திமுக தயாராக இருக்கிறது’ என்று துக்ளக்கில் வெளிப்படையாகவே எழுதினார். யாரும் மறுத்ததில்லை. (சோ அப்போது மட்டுமல்ல, பிறகு 97இல் ஜெயலலிதா பாஜகவுடன் முதன் முதலில் கூட்டணி வைத்த போதும், ̀பாஜக அவசரப்பட்டுவிட்டது, திமுகவும் கூட்டணிக்கு தயாராக உள்ளது’ என்று எழுதினார். 2000ல் வீரப்பன் ராஜ்குமாரை கடத்தும்வரை அவர் திமுக ஆதரவாளராகவே இருந்தார்.)
இன்னமும் பல மாநில கட்சிகள் பாஜகவுடன் கூட்டணி வைக்க தயாராகாத நேரம் அது. ஆந்திராவில் வெற்றி பெற்ற சந்திரபாபு நாயிடு கூட ‘பாஜகவுடன் எந்த உறவும் சாத்தியம் இல்லை’ என்று உடனடியாக சொன்ன காலகட்டம் அது. அப்போது தீவிர பாஜக எதிர்ப்பை தன் கருத்தியலின் அடிப்படையாக வைத்திருந்த திமுக, எல்லா கதவுளையும் திறந்து பாஜகவுடனும் பேச தயாராக இருந்தது என்பது தெளிவு.
தீண்டாமை என்ற வரலாற்றின் மிகப் பெரிய கொடுமையை குறிக்கும் சொல்லை, தங்களின் சுய லாபம் சார்ந்து பயன்படுத்திய குதர்க்கமான சாதூர்யம், திமுகவின் அரசியல் சந்தர்ப்பவாதத்தை மிகச் சரியாக வரலாற்றில் சாராம்சப் படுத்துகிறது எனலாம். இத்தகைய rhetoric தர்க்கத்தை திமுகவினர் பல்வேறு சந்தர்ப்பங்களில் பயன்படுத்தியுள்ளதை காணலாம்.
திமுக எப்போதுமே அரசியல் லாபத்திற்காக பல்டி அடிக்க தயராகவே இருந்தது. டிஸ்மிஸ் செய்யப்பட்டு தனக்கு பல கொடுமைகளை இழைத்த இந்திரா காங்கிரஸுடன் 80ல் கூட்டணி வைத்தது மட்டுமல்ல; எம்ஜியார் இறப்புக்கு பின், அதிமுக உடைந்து திமுக ஆட்சிக்கு வந்த உடனேயே, அதுவரை நாளாந்திரம் திட்டி வந்த காங்கிரசுடன் உறவின் முறைகளை நல்லபடியாக மாற்றிக் கொண்டதும் இன்னொரு உதாரணம். ஒரு கட்டத்தில் கலைஞர் தேசிய முண்ணனியில் இருந்து விலகி, ஜெயலலிதாவை காலி செய்ய, காங்கிரசுடன் சேருவார் என்று பேசப்பட்டது. என் திமுக நண்பர்கள் அதை ராஜ தந்திரம் என்று சொன்னார்கள். மருங்காபுரி, மதுரை கிழக்கு தேர்தல் முடிவுகளினாலும், சட்டசபையில் ஜெயலலிதா தாக்கப்பட்டதனால் மக்களிடம் உண்டான உணர்வுகளினாலும், பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் பற்றி காங்கிரஸிற்கு கணிப்பு இருந்ததால் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது. அந்த கணிப்பு நிஜமாகி திமுகவும் அந்த தேர்தலில் பூஜ்யம் வாங்க நேர்ந்தது.
96 பாராளுமன்றத்தில் வாஜ்பாய் பெரும்பான்மையை நிருபிக்க வாய்ப்பில்லை என்று சில நாட்களிலேயே தெரிந்து விட்டதால், திமுகவும் திறந்திருந்த கதவுகளை மூடி, ஐக்கிய முன்னணியிலேயே ஐக்கியமாகி, தேவகவுடா, பின் குஜ்ரால் அரசுகளில் பங்கு வகித்தது. ஜெயின் கமிஷன் அறிக்கை ராஜிவ் கொலை தொடர்பாக திமுகவை குற்றம் சாட்டியதை முன்வைத்து, காங்கிரஸ் குஜ்ரால் அரசை கவிழ்த்தது.
அப்போது திமுகவை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்ற ஒரே ஒரு நிபந்தனையை மட்டுமே காங்கிரஸ் முன்வைத்தது. திமுகவை கழட்டி விட்டிருந்தாலோ, நிலைமையை காரணம் காட்டி திமுகவை வேறு சமரசத்திற்கு உட்படுத்தியிருந்தாலோ, குஜ்ரால் அரசு பிழைத்திருக்கலாம். ஆனால் அன்று ஐக்கிய முண்ணனி காங்கிரஸின் அந்த நிபந்தனையை ஏற்க மறுத்து, திமுகவிற்காக (வரலாற்றில் தமக்கு இன்னொரு முறை கிடைக்கப் போகாத) ஆட்சியை தியாகம் செய்தது. இந்த தகவலுடன் இந்த ̀டீ பார்ட்டி’ சார்ந்த தர்க்கங்களை அணுகுகிறேன்.



பாரதிய ஜனதா என்ற பெயரே பரவலாக தெரியாத தமிழகத்தில், அந்த கட்சியுடன் பாமக, மதிமுக போன்றவற்றை சேர்த்து கூட்டணி அமைத்து, தமிழகத்தில் அதற்கு ஒரு இருப்பையும், அடையாளத்தையும் ஜெயலலிதா உருவாக்கி தந்தார். கோயம்புத்தூர் குண்டு வெடிப்பு நிகழ்வின் தயவால் அந்த கூட்டணி அமோக வெற்றியும் பெற்றது. அந்த வெற்றியால் கிட்டிய மத்திய அதிகாரத்துடன் திருப்தி கொள்ளாத ஜெயலலிதா, திமுக ஆட்சியை கலைக்க விரும்பினார். ஆனால் அதற்கு சாக்கு சொல்ல போதுமான காரணங்கள் இல்லை.
கோயம்புத்தூர் குண்டு வெடிப்பும், அதை தொடர்ந்து மத்தியில் பாஜக ஆட்சியும் வந்தவுடன், திமுக சுதாரித்து, இஸ்லாமிய தீவிரவாதத்தின் மீது கறாரான நடவடிக்கைகள், இஸ்லாமிய மக்கள் மீதும் அடக்குமுறைகள், பொடா போன்ற ஜனநாயக விரோத சட்டங்கள் என்று மத்திய பாஜக அரசின் கண்காணிப்பிற்கு நல்ல பையனாக நடந்து கொண்டது; அதற்கான சரியான சர்டிஃபிகேடாக இடதுசாரி, ஜனநாயக, மனித உரிமை சக்திகளால் திமுக விமர்சிக்கப்பட்டது. அப்போது சென்னை வந்திருந்த வினோத் மிஸ்ரா ‘பொடா திமுகவிற்கும் பாஜகவிற்கும் இடையே உள்ள கள்ள உறவில் பிறந்த கள்ளக் குழந்தை’ என்றார். ஜெயலலிதாவின் எல்லா கெடுபிடிகளுக்கும் ஈடுகொடுத்த வாஜ்பாய், திமுக ஆட்சியை கலைக்க மட்டும் ஒப்புக் கொள்ளவில்லை. இதனால் ஜெயலலிதா மத்திய ஆட்சிக்கு கொடுத்து வந்த பல்வேறு குடைசல்களின் ஒரு பகுதியான அவரது ஒரு டெல்லி பயணத்தின் போது சுப்பிரமணிய ஸ்வாமி ஒரு டீ பார்ட்டி வைத்தார்.
வாஜ்பாய், ஜோஷி உட்பட்ட பல பாஜககாரர்களும் வந்து ஜெயலலிதாவை தாங்கு தாங்கென்று தாங்க, ஊடக கேமாராக்கள் முன்னால், திமுகவிற்கு எதிராக என்ன பெரிய சதித்திட்டம் அந்த பார்ட்டியில் தீட்டப்பட்டது என்று ஆய்வாளர்களிடம்தான் கேட்கவேண்டும். அந்த பார்ட்டியில் ஜெயும், சோனியாவும், சுப்ரமணியசாமி அருகிருக்க சில நிமிடங்கள் பேசிக் கொண்டார்கள் என்பதுதான் ஒரே முக்கிய செய்தி. ஆனால் அதற்கு பிறகு நிறைய பேசியிருப்பார்கள்தான். அடுத்த மாதம் வாஜ்பாய் அரசு கவிழ்ந்தது. ஜெயலலிதா தன் ஆதரவை வாபஸ் வாங்கியதும், தயாராக இருந்த திமுக (6 சீட்டுடன்) பாஜகவிற்கு ஆதரவளித்தது.
இந்த தருணத்தில் திமுக அரசிற்கு என்ன ஆபத்து இருக்கிறது, அதை சமாளிக்கக் கூடிய என்ன சக்தி அவர்களிடம் இருந்தது என்று பார்ப்போம். ஜெயலலிதாவின் கெடுபிடிகளுக்கு பணிந்து வாஜ்பாய் திமுகவை ஆட்சி நீக்கம் செய்ய ஒப்புக்கொள்ளவில்லை. இதை அவர் திமுகவின் ஆதரவை ஒரு ரகசிய நிபந்தனையாக பெற்ற பின் செய்திருப்பார் என்று கொண்டாலும் கூட, திமுக ஆதரவினால் வாஜ்பாய் ஆட்சி நீடிக்க வாய்ப்பில்லை. அதிமுகவின் ஆதரவை இழந்தபின் பாஜகவிற்கு எண்ணிக்கை இல்லை. அவர்கள் கவிழ்ந்துதான் ஆகவேண்டும். இன்னொரு பக்கம் அதிமுக ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சியமைக்கவும் எண்ணிக்கை பலம் இல்லை. அடுத்த பெரிய கட்சி என்ற தகுதியில், கே ஆர் நாராயணன் அழைத்தபோது காங்கிரஸ் அதற்கு முயற்சி செய்யவே இல்லை. அதனால் காங்கிரஸ் அப்போது திமுகவை டிஸ்மிஸ் செய்யக் கூடிய வாய்ப்பே இல்லை. ஆகையால், அதுவரை ஜெயாவின் மிரட்டல்களால் தொங்கிக் கொண்டிருந்த கத்தி இப்போது கீழே விழுந்து விட்ட நிலையில், அந்த குறிப்பிட்ட தருணத்தில் திமுக ஆட்சி மீது எந்த கத்தியும் இல்லை.
ஒரே ஒரு உள்ளடக்க தர்க்கமுள்ள வாதத்தை கற்பிக்க முடியுமென்றால், ஜெயலலிதாவின் அழுத்தங்களுக்கு பணிந்து அநியாயமாக டிஸ்மிஸ் செய்யாத வாஜ்பாய்க்கு நன்றி கடன் இருந்தது, அதனால் ஆதரித்தார்கள் என்று மட்டுமே சொல்லமுடியும். இந்த ஒரு நன்றி கடனுக்காக, கவிழப்போகும் அரசுக்கு ஆதரவு மட்டுமின்றி, அடுத்த தேர்தலில் கூட்டணி, இந்துத்வாக்களுக்கு உவப்பான பல நடவடிககைகள் (ஆர் எஸ் எஸ் ஷாகா ஒன்றில் கே என் நேரு கலந்து கொண்டதுடன், அவர்களின் அடையாள சல்யூட் அடித்த புகைப்படம் அன்று வெளிவந்தது ), தமிழகத்தின் பட்டி தொட்டிகளில் எல்லாம் பாஜகவிற்கு அறிமுகம், குஜாராத் குறித்த மௌனம் என்று அடுத்த நான்கு ஆண்டுகளை கழித்தார்கள் என்று சிலர் நம்பலாம். ஆனால் அப்படி திமுக நன்றியுள்ளவர்களாக யாருக்குமே நடந்து கொண்ட வரலாறு இல்லை. உதாரணமாக தங்களுக்காக ஆட்சியையும், எதிர்காலத்தையும் தொலைத்த ஐக்கிய முன்னணிக்கு அப்படி ஒரு நன்றியை திமுக காட்டவில்லை. அன்றும் ஐக்கிய முன்னணி குற்றுயிராயினும் உயிருடன் இருந்தது. 99 தேர்தலுடன் அதற்கு சமாதி கட்டப்பட்டது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஜெயலலிதாவை ஐக்கிய முன்னணிக்குள் இழுக்க முயற்சி செய்ததாக எம் எஸ் எஸ் பாண்டியன் ஒரு இந்து கட்டுரையில் குறிப்பிட்டிருப்பார். அதை அவர்கள் கடுமையாக மறுத்திருப்பார்கள். பதிலுக்கு (ஜோதி பாசு பேசியதாக என்று நினைக்கிறேன்) ஒரு பழைய செய்தியை போட்டு பாண்டியன் ‘வாசிப்பவர்கள் அவரவர் முடிவுக்கு வந்து கொள்ளலாம்’ என்று பதிலளித்திருப்பார். யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ள வாய்பில்லாத அந்த செய்தியை பாண்டியன் சேமித்து வைத்து அளித்தது ஆச்சரியத்திற்கு உரியது. ஆனால் அதன் மூலம், மார்க்சிஸ்டுகள் ஜெயலலிதாவை இழுத்தார்கள், அதனால் ஒதுக்கப்பட்ட திமுக வேறு வழியின்றி பாஜகவிடம் போய் தஞ்சம் அடைந்தது என்று ஒரு மானுடவியல் ஆய்வுக்கட்டுரையில் வேண்டுமானால் முடிவுக்கு வர முடியலாம்; கறாரான தர்க்கத்துடன் முடிவெடுப்பவர்கள் அதை ரொம்ப சந்தேக கேஸாக பார்ப்பார்கள். (திமுக பாஜக பக்கம் போக தயாராக இருந்ததால் கூட அப்படி பேசியிருக்கலாம்.)
ஆனால் வாஜ்பாய்க்கான நன்றி கடனாக நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரித்ததோடு, ஜெயலலிதா ஒதுக்கியதை விட 2 அதிகமாக்கி 7 இடங்களை ஒதுக்கி, பாஜகவுடன் கூட்டணி அமைத்து, 99 பாராளுமன்ற தேர்தலை திமுக சந்தித்தது. கூட்டணி கட்சிகளுக்கு இடம் ஒதுக்குவதில் திமுக காட்டும் தாராள் மனோபாவத்தை அனைவரும் அறிவர். மேலும் அப்போது மட்டுமல்ல, அதற்கு அடுத்த இருபது வருடங்களில் எந்த சந்தர்ப்பத்திலும் பாஜக 7 சீட்டிற்கு தகுதியான எந்த மக்களாதாரவையும் பெற்றுவிடவில்லை. இப்போதுகூட அதிமுக 20 சட்டமன்ற தொகுதிகளை ஒதுக்கியதை பலர் கிண்டலடிக்கின்றனர்.
கவனிக்க வேண்டியது இப்போது திமுக ஆட்சிக்கு என்ன ஆபத்து இருக்கிறது? ஒருவேளை ஜெயலலிதா கணிசமாக வென்று, காங்கிரஸ் மத்தியில் ஆட்சி அமைத்தால் அப்படி ஒரு ஆபத்து உருவாகலாம். இதெல்லாம் எப்பவும் இருக்கும் ஆபத்துதான். அதை எப்படி மக்கள் ஆதரவே இல்லாத பாஜகவுடன் தமிழகத்தில் கூட்டணி அமைத்து முறியடிக்க முடியும்? கூட்டணி அமைக்காமல், தேர்தலுக்கு பிறகு ஒரு வேளை தேவைப்பட்டால் கூட ஆதரவளித்திருக்கலாம். (தெலுகு தேசம் கட்சி அப்படி செய்தது.)
இதை விட முக்கியமாக அடுத்து வந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தன் தலை மீது மண்ணை வாரி போட்டுக் கொண்டது என்றும் சொல்லலாம். (பாஜகவிற்கு முதல் முதலாக 4 சட்டமன்ற உறுப்பினர்களை அளித்த தேர்தல் அது.) 1996ல் ஜெயலலிதாவுடன் காங்கிரஸ் அமைத்த கூட்டணியை எதிர்த்து, திமுகவுடன் சேர்வதற்காகவே பிறந்த தமாக கட்சி, 2001 தேர்தலில் திமுக எவ்வளவோ முயன்றும் கூட்டணிக்கு மறுத்துவிட்டது. திமுகவுடன் கூட்டணி வைக்காததற்கு -திமுகவின் சில உள்ளடி வேலைகளும் ஒரு காரணமாக சொல்லப்பட்டாலும்- பாஜகவுடனான கூட்டணிதான் ஒரே வெளிப்படையான காரணமாக இருந்தது.
இப்போதய மோடி ஆட்சி போல இல்லாவிட்டாலும், அன்றய பாஜக ஆட்சியிலும் கிரிஸ்தவர்கள் மீது தாக்குதல், வரலாற்றை இந்துத்வபடுத்தல என்று மதசார்பின்மை பேசுபவர்கள் எதிர்க்கும் பலவேறு சமாச்சாரங்கள் நடந்தன. அவற்றோடு சில மாதங்கள் நீடித்த குஜராத்தின் முஸ்லீம்கள் மீதான தாக்குதல் எல்லாவ்ற்றிற்கும் திமுக அமைதி காத்தது. என்ன கரணமடித்து யோசித்தாலும் திமுக ஒரு desperate modeல் இருந்து கொண்டு வேறு வழியின்றி சிவசேனா போன்ற கட்சிகள் இருக்கும் பாஜக கூட்டணியில் சேர்ந்து, ஆட்சியில் பங்கு பெற்று, 2004 தேர்தலுக்கு சில காலம் முன்பு, காங்கிரஸுடன் கூட்டணி கனிந்து வரும்வரை இதையெல்லாம் பொறுத்துக் கொண்டிருந்தது என்று நம்ப ஆதாரம் எங்கும் இல்லை.
அன்று ஜெயலலிதா உருவாக்கிய பாஜகவுடனான பாமக, மதிமுக கூட்டணி கச்சிதமாக இருந்தது. அதில் அப்படியே அதிமுகவிற்கு பதில் போய் அமர்வது திமுகவிற்கு அரசியல்ரீதியாக லாபமாக இருந்தது. மற்றபடி மத்தியில் கிடைத்த அமைச்சரவை பதவிகள் மட்டுமே ஒரே காரணமாக இருந்தது. இவையன்றி வேறு நெருக்கடிகளும், நிர்பந்தமான காரணங்கள் எதுவும் கிடையாது.




ஒரு அரசியல் கட்சி, அரசியல் லாபங்களுக்காகவும், அதிகாரத்திற்காகவும், கட்சி மூலவர்களின் வளங்களுக்காகவும் சமரசம் செய்வது இயல்புதானே என்று தோன்றலாம். தேர்தல் அரசியலின் அடிப்படை பண்பே சமரசம்தான். வாக்கு சதவிகிதத்திற்கு ஏற்ப பிரதிநிதித்துவம் இல்லாமல், தொகுதிகளின் வெற்றி எண்ணிக்கை அதிகாரத்தை தீர்மானிக்கும் நிலையில், கூட்டணியும், அதற்கான சமரசமும் தேர்தல் அரசியலின் முக்கிய நிர்பந்தம் ஆகிறது. ஆனால், எவ்வளவு மோசமானதாக இருந்தாலும், நம் பார்வையில் எந்த ஒரு அடிப்படை காரணத்திற்காக ஒரு கட்சியை ஆதரிக்கிறோமோ, அந்த காரணத்தையே காட்டிக் கொடுத்த பின்னும், இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா என்று சொல்வதானால், அரசியல் என்பதன் அர்த்தம் என்ன என்று யோசிக்க வேண்டும். அப்படியானால் எதிர்தரப்பை நோக்கி எழுப்பப்படும் கூச்சல்களுக்கு என்ன அர்த்தம்? குறிப்பிட்ட கொள்கை அடையாளம் கொண்ட கட்சிக்கே அதன் அடிப்பாடை கொள்கையை காக்கும் கடப்பாடு இல்லையெனின் எதிர்தர்ப்பை பற்றி பேச என்ன முகாந்திரம் உள்ளது? மேலும் அவனை விட அதிக கட்ப்பாடு கொண்டவனை முத்திரை குத்துவது அயோக்கியத்தனம் இல்லையா?
திமுக பாஜகவுடன் சேர்ந்ததற்கு மத்திய மந்திரிசபை அதிகாரங்கள்தான் காரணம் என்று கடந்த பதிவில் வாதிட்டேன். ஒரு பேச்சிற்கு ஆட்சியை காப்பாற்றிக் கொள்ளத்தான் பாஜகவுடன் கூட்டணி அமைந்தது என்று வைத்துக்கொள்வோம். ஆட்சிக்கு உருவான ஒரு நெருக்கடியை சமாளிக்கத்தான், திமுக பாஜகவுடன் சேர்ந்திருந்தால் கூட அதை நியாயப்படுத்துவது மட்டும் யோக்கியமானதா என்று யோசிக்க வேண்டும். அது நியாயம் என்றால், அந்த நியாயத்தை எடப்பாடிக்கும், பன்னீர் செல்வத்திற்கும் கூட தரலாமே. நன்றாக யோசிக்க வேண்டும், அவர்களும் ஆட்சியையும் அதிகாரத்தையும் காப்பாற்றிக் கொள்ளத்தானே பாஜகவிற்கு அடிபணிந்தார்கள். சசிகலா சோனியா காந்தியை போல கட்சியையும், ஆட்சியையும் கட்டுப்படுத்திக் கொண்டு, பன்னீர் ஒரு பொம்மை முதல்வராக தொடர முடிந்திருக்கும் என்றால் அவர் ஏன் புரட்சி செய்யப் போகிறார்? தினகரன் எடப்பாடியை இறக்கிவிட்டு, தான் உட்கார்ந்து கொள்ள முயலவில்லை எனில், எடப்பாடி ஏன் பாஜகவிடம் போய் சரணடைய போகிறார்? உண்மையில் 1999 திமுகவை விட இவர்களுக்குதான் உண்மையான நெருக்கடி இருந்தது. எடப்பாடிக்கும், பன்னீருக்கும் நியாயம் சொல்வது மோசம் என்று நினைத்தால், அந்த மோசமான நியாயம் கூட திமுக பாஜகவுடன் சேர்ந்ததற்கு இல்லை என்பதை உணர வேண்டும். மேலே உள்ள தர்க்கம் எடப்பாடி, பன்னீர் ஆதரவாக தமிழ் சூழலில் திரிக்கப்படுமே ஒழிய, அது சுட்டும் அடிப்படை முரணை எதிர்கொள்ளும் அளவிற்கு கூட அறிவார்த்த சூழல் இங்கில்லை.
நிச்சயமாக திமுக அதிமுகவில் இருந்து வித்தியாசமான கட்சி; அந்த வித்தியாசத்தை எவ்வாறு துல்லியப்படுத்துவது என்பதும், துல்லியப்படுத்துகிறேன் பேர்வழி என்று தத்துவ நாடகங்களை அரங்கேற்றுவதும், அங்கே தத்துவங்கள் விதூஷக பாத்திரம் கொள்வதும்தான் பிரச்சனை.
எவ்வளவு மோசமான சமரசங்கள் செய்தாலும் திமுக தீவிர கொள்கை அடையாளம் கொண்ட கட்சி; அதிமுகவிற்கு திமுக எதிர்ப்பு என்பதை தவிர வேறு கொள்கை அடையாளமே கிடையாது. என்ன நடந்தாலும் திமுகவை ஆதரிப்பது என்ற ஒரு அரசியல் நிலைபாட்டை பொய்மை, பாசாங்கு, கபடம், போலித்தனமின்றி, வெளிப்படையாக பேசி நடைமுறை அரசியலில் எடுக்க முடியும். அதன் போக்கில் கடந்த காலத்தை பேசாமல் இருப்பது கூட பிரச்சனையில்லை; கடந்த காலத்திற்கும், வரலாற்றில் அது மீள நிகழும்போதும் என்ன வகையான தர்க்க நியாயங்கள் முன்வைக்கப்படுகிறது, என்னென்ன உளறப்படுகிறது, அதன் சுயமுரண்கள் என்ன என்பதுதான் பிரச்சனை.
அத்துடன் சில்லுண்டிகள் ரொம்ப சவுண்டு விட்டால், பார்க்கிறவனை எல்லாம் சங்கி என்று சொன்னால், அவர்கள் யோக்கியதையை வசையரசியல் தளத்தில் பேசாமல் இருக்க முடியாது. அந்த போக்கிற்கு எதிர்வினையாகத்தான் இந்த பதிவுகளை எழுதினேன் என்பதை ஒப்புக்கொள்கிறேன்.
தேர்தல் அரசியல் மிக விநோதமானது. கடந்த கால தியாகங்கள், கடப்பாடுகள் மீது இரக்கமற்றது. நடைமுறை நிர்பந்தங்கள் மிக விவஸ்தையற்றவை. விசித்திர முரண்களை கொண்டது. ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமானால், பாஜகவுடன் எந்த காலத்திலும் கூட்டணி வைக்காதவர்கள், வைக்கப்போகாதவர்கள் கம்யூனிஸ்ட்டுகள் மட்டுமே. திராணாமுல் காங்கிரஸ் பிறந்தவுடன் பாஜகவுடன் கூட்டணிக்கு போன கட்சி. ஆனால் இன்று வங்காளத்தில் பாஜக வருவதற்கு வழி செய்ததும், செய்துகொண்டிருப்பதும் மார்க்சிஸ்டுகள்தான்; அங்கு மமதாதான் இப்போது பாஜக எதிர்ப்பு முகம். ஆகையால் ரொம்ப கறாரான கன்சிஸ்டன்சியை நிலைபாட்டில் கொள்வதும், எதிர்பார்ப்பதும் சாத்தியமில்லை.



இவை எல்லாம் ஒரு பக்கம் இருக்க, திமுக மீண்டும் பாஜகவுடன் சேருமா என்றால், அதற்கு இதுவரை தர்கித்தது போல் அல்லாமல், வரலாற்று தடயங்களை வைத்து ஊகமாகத்தான் பதில் சொல்ல முடியும். நிச்சயமாக திமுக ஆட்சிக்கு வந்த (வந்தால்!) அடுத்த நொடி, தனது போராளி கெட்டப்பை எடுத்து விட்டு, தொனியை அப்படியே மாற்றிக் கொள்ளும். மம்தா பானர்ஜி காட்டுவது போன்ற முரணான முரண்டு அணுகுமுறையை திமுக கொள்ளாது. அதுதான் நாற்பதாண்டுகால மரபு.
இவ்வாறாக நடுவண் அரசுடன் அனுசரணையாக நடந்து கொள்வதை தாண்டி உறவு கொள்ள தயாராகுமா என்றால், ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும். 1996க்கு பின், இடையில் ஓராண்டு தவிர்த்து, திமுக மத்திய அதிகாரத்தில் 2014வரை தொடர்ந்து இருந்து வந்திருக்கிறது. மாநில ஆட்சியை விட மத்தியில் பகிர்ந்து கொண்ட அதிகாரம், திமுக கட்சி மூலவர்களின் வளத்திற்கு முக்கிய காரணியாக இருந்து வந்திருக்கிறது. ஏழு ஆண்டுகளாக நிகழ்ந்துள்ள இந்த வேலையிழப்பை சரி செய்ய எந்த சமரசமும் செய்வார்கள் என்பதுதான் என் கணிப்பு.
ஆனால் திமுகவை சேர்த்துக் கொள்ளும் மனநிலையில் பாஜக கொஞ்சம்கூட இல்லை என்பதுதான் தற்போதய நிலை. தமிழகத்தில் தேவைப்படும்வரை அதிமுகவுடன் சேர்ந்து அரசியல் செய்வது, முடிகிறபோது தனியாகவே திமுகவை எதிர்த்து அரசியல் செய்வது என்ற அணுகுமுறைதான் தங்களது எதிர்காலத்திற்கு நல்லது என்று பாஜகவிற்கு தெரியும். திமுக எதிர்ப்பு அரசியல் வெளியை முழுவதும் கைப்பற்றுவதுதான் அதன் நோக்கம். அதனால் இவங்க ரெடியானாலும் அவங்க ரெடியாக இருக்கப் போவதில்லை.
90களை போல கூட்டணிகளை நம்பி பாஜக இப்போது இல்லை. எதிர்காலத்திலும் திமுக போன்ற கட்சிகளின் தயவில் ஆட்சி நடத்த பாஜக விரும்பாது. திமுகவிற்கும் காங்கிரஸுடனும் மற்ற எதிர்கட்சிகளுடனும் சேர்ந்து, யாருக்கும் பெரும்பான்மை இல்லாத, தன்னை நம்பியுள்ள ஒரு ஆட்சியில் இருப்பதுதான் மரியாதையாக இருக்கும். அதைத்தான் விரும்பும். ஆனால் அந்த நிலை வர அப்படி ஒரு பலமான கூட்டணி அமைந்து வெற்றி பெற வேண்டும். அதற்கான அறிகுறிகள் இப்போது தெரியவில்லை.
சென்ற பாஜக ஆட்சியில் பண மதிப்பிழப்பு போன்றவற்றால் மக்கள் தீவிர துன்பங்களை அனுபவித்தார்கள். ஆனால் அதை ஒரு உன்னத நோக்கத்திற்காக அனுபவித்ததாக, நாட்டிற்காக செய்த தியாகமாக கருதிக் கொண்டார்கள். தேசியவாத அரசியலில் தங்கள் பங்கு அது என்று நினைத்தார்கள். (பாஜக வெற்றி பெற்றதை அப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.) இப்போது கரோனா தொற்று தொடங்கிய பின் அனுபவிக்கும் கணக்கற்ற கொடுமைகள் அனைத்தும் தீவிர கோபத்தை மக்களிடையே ஏற்படுத்தியிருக்கும்.
இந்நிலையில் 2024 தேர்தலில், முழுமையாக தோற்காமல், தொட்டுக்கோ தொடச்சிக்கோ என்று பாஜக வெற்றி பெற்றால், ஆட்சியமைக்க வெளியில் இருந்து வரும் ஆதரவு மிக இன்றியமையாததாக இருக்கும்போது, அதை அளிக்கும் அளவு எம்பிக்கள் திமுக கையில் இருக்கும்போது, நிச்சயமாக கூட்டு சேர்வார்கள் என்பதற்குதான் வரலாறு சான்று பகர்கிறது. மத்தியில் கிடைக்கும் அதிகாரம் என்பதை தவிர்த்து அதற்கு வேறு எந்த காரணமும் இருக்காது. ஈழத்தில் அந்த பக்கம் இறுதி அழிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே, இந்த பக்கம் பேரங்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு, எந்த கருத்தியல் முட்டுக்கட்டையும் இருக்காது. ஆனால் மீண்டும் அந்த கூடா நட்பிற்கு பல வரலாற்று, சமூகவியல், நிர்பந்தவியல் காரணங்கள் கண்டு பிடிக்கப் படும். 67இல் ராஜாஜியுடனான கூட்டணியில் துவங்கும் இந்த வரலாற்றை அவதானித்து நினைவில் வைத்த நேர்மையாளர்களுக்கு இது நன்கு தெரியும்.





Post a Comment

---------------------------------------

Sunday, May 08, 2016

கொள்கை அடையாளம்

தேர்தல் என்பது நம் ஆதர்ச அரசை அதிகாரத்தில் அமர்த்த,  வாக்களர்களின் கருத்தை முத்திரைக் குறியாக பெற்று,  அதை பிரதிநிதப்படுத்தும் ஒரு ஜனநாயக வழிமுறை போல் தோன்றினாலும் அப்படியல்ல; அதிகாரத்திற்கு அங்கீகாரம் கேட்டு நிற்பவர்களால், நம் அங்கீகாரத்தை ஒரு பிரதிநிதிக்கான முத்திரை மூலம் அடையாளப்படுத்திய பின், கூட்டுத்தேர்வுகளின் அதிர்ஷ்டம் சார்ந்த சாத்தியங்களால்,  ஒரு அரசு உருபெறும் வழிமுறை. தேர்தல் சார்ந்து பரந்த அளவில் பொதுவாகவும், உள்ளூர் அளவில் குறிப்பாகவும் பல கேள்விகள்  இருக்கும்; எல்லாவற்றிற்கும் பதிலாக ஒரே ஒரு வாக்கு மட்டுமே அளிக்க முடியும். 

ஊழலும், எதேச்சதிகாரமும், கோட்டிக்காரத்தனமும்  தவிர வேறு எந்த செயலுமற்ற தற்போதய அரசு தொடரவேண்டுமா என்கிற கேள்வி அறிவாளிகள், சான்றோர்கள் மற்றும் போராளிகள் பலருக்கும் அவ்வளவு முக்கியமான கேள்வியாக தெரியவில்லை போலும்; வேறு எதை எதையோ  பேசிக் கொண்டிருக்கிறார்கள். முக்கியமானது என்று நினைப்பதால் நாமும் ஒரே விஷயத்தை திரும்ப திரும்ப எத்தனை முறை பேசுவது என்று  வேறு விஷயங்களை இந்த பதிவில் பேசுகிறேன். 

தேர்தல் சாரா அரசியல் இயக்கங்களுக்கும், தனிப்பட்ட மனிதர்களுக்கும் கூட,  கொள்கை என்பது நடைமுறை சமரசங்களுக்கு  ஆட்பட்டதுதான்; சமரசங்கள் செய்வதால் மட்டும்,  கொண்டிருக்கும் அரசியல் கொள்கையற்றது என்றாகிவிடாது. கூட்டணி இன்றியமையாததாக ஆகிவிட்ட இன்றய சூழலில், சமரசம்தான் தேர்தல்சார் அரசியல் கட்சியின் கொள்கையையே தீர்மானிக்கும் நிலை வந்திருக்கிறது. 

அவ்வகையில் கொள்கை என்பது நடைமுறை செயல்பாட்டை முற்றிலும் தீர்மானிக்கும் காரணி அல்ல; அதை சமரசம்தான் தீர்மானிக்கப் போகிறது. சமரசங்களையும், துரோகம் என்று சொல்லப்படுபவற்றையும் மீறி,  ஒரு அடையாளமாக படிவது கொள்கை. கொள்கை என்பது ஒரு கட்சியின் சொல்லாடல்களுக்கான அடையாளம் மட்டுமே.  ஆனால் அது மிக முக்கியமானது என்பதுதான் வரலாறு சொல்லும் பாடம். நடைமுறையில் அதன் பாதிப்புகள் நுண்மையாக பல தளங்களில் இருக்கும்; அதை எளிதாக மேலோட்டமான பார்வையில் முடிவு செய்துவிட முடியும் என்று தோன்றவில்லை.  

இன்று கொள்கை அடையாளமே இல்லாத ஒரு கட்சி என்றால் அது தேமுதிகவும், அதற்கு பின் அதிமுகவும் ஆகும். அதிமுகவிற்காவது வரலாற்றின் வழியாக ஒட்டிக்கொண்ட கொள்கை பாவனைகள் உண்டு.; அது சார்ந்த கருத்துதிர்ப்புகள் உண்டு. (முரண்நகையாக, பாவனை செய்யப்படும் அந்த கொள்கைகளுக்கு நேரெதிரான நிலைபாடுகளை கொண்டவர்களால் கொள்கைரீதியாக ஆதரிக்கப்படும் கட்சி அதிமுக.)

 தேமுதிகவிற்கு கோமாளித்தனத்தை தவிர வேறு எந்த கொள்கை அடையாளமும் இல்லை. ஒருவேளை தேமுதிகவை பெருமளவு வாக்காளர்கள் அங்கீகரித்து, அந்த கட்சி தமிழக அரசியலில் தீவிர பாதிப்பை எதிர்காலத்தில் ஏற்படுத்துமானால், அதன் கேடான விளைவுகள், இந்த கொள்கை அடையாளம் எவ்வளவு முக்கியமானது என்பதை விளக்கும் வகையில் சிறந்த உதாரணமாகும் என்பது என் கணிப்பு. 

திமுக தீவிர கொள்கை அடையாளத்தை கொண்டது.  பார்ப்பன எதிர்ப்பு, தமிழ் சார்ந்த அரசியல், பிராந்திய அரசியல், நாத்திகம், இந்து மத எதிர்ப்பு போன்ற  அதன் கொள்கை அடையாளத்திற்காகவே, ஆதரிக்கப்படுவதை விட,  பலரால் தீவிரமாக எதிர்க்கப்படுகிறது; அதற்காக ஜெயலலிதா அரசின்  எந்த சீரழிவையும் நியாயப்படுத்தும் அளவிற்கு செல்லக்கூட திமுக எதிர்ப்பாளர்கள் தயங்குவதில்லை. இதன் சிறந்த உதாரணம் அறம் சார்ந்த அரசியலின் குறியீடாக ஒரு சாராரால் முன்வைக்கப்பட்ட  சோ மற்றும் அவரது ஆதாரவாளர்களின் ஜெ ஆதரவு நிலை.  

ஆனால் திமுகவின் கொள்கை அடையாளம் எதுவோ, அதையே தங்களின் தீவிர கொள்கையாக சொல்லிக் கொள்ளும் பலரும் கூட திமுகவை தீவிரமாக எதிர்க்கின்றார்கள். தங்களுக்கு எதிரான கொள்கை அடையாளம் கொண்ட  ஆட்சியில் இருக்கும் அதிமுகவை ஒரு சமாதானத்திற்கு எதிர்த்துவிட்டு,  ஆட்சியில் இல்லாத நிலையிலும் திமுக எதிர்ப்பையே பிரதானமாக முன்வைக்கின்றனர். இதற்கு சொல்லும் காரணம் திமுக தன் கொள்கைகளுக்கு துரோகம் செய்துவிட்டது என்பது;  துரோகி எதிரியை விட மோசம் என்கிற தர்க்கத்தின் வரலாற்று வன்முறை புரியாமல் இந்த வாதத்தை முன்வைக்கிறார்கள். 

திமுக தன் கொள்கை அடையாளத்திற்கு இழைத்த துரோகங்கள் நிதர்சனமானவை; அதானால் அதன் கொள்கை அடையாளம் வேறு என்றாகிவிடாது. அதன் கொள்கை அடையாளத்தின் ஒரு நடைமுறை வெளிபாடுதான் சமத்துவபுரம், உழவர் சந்தை, அருந்ததியர்களுக்கான உள்ஒதுக்கீடு, அர்ச்சகர் சட்டம், தமிழ் வழி கல்விக்கான ஆணை என்று பலவற்றை அடுக்கலாம். இன்னும் சொல்லப்போனால் படங்களுக்கு தமிழில் பெயர் வைப்பதற்கும், பெயர்பலகை தமிழில் இருப்பது போன்றவைகளுக்கான முன்னெடுப்புகள் ஜெயலலிதா ஆட்சியில் நடந்திருக்காது. சமரசங்களையும் துரோகங்களையும் தாண்டி கொள்கை அடையாளம் நடைமுறையை பாதிக்கும் என்பதற்கு, தீவிரமாக ஆய்ந்தால் இன்னும் பல ஆதாரங்கள் கிடைக்கும்.  துரோகம் என்று சொல்லப்படுவது அதிகாரத்திற்காகவும், ஊழலை முன்வைத்தும் செய்யபடுபவை.  ஊழல் மிக முக்கியம் என்றாலும் அதுவே எல்லாவற்றையும் தீர்மானிப்பது அல்ல; அது தீர்மானிக்காத சந்தர்ப்பங்களில் கொள்கை அடையாளமே நடைமுறைக்கு உகந்தது.  மேலும் கொள்கை அடையாளத்தை வேஷமாக கொள்வதாக சொல்லப்படும் திமுக/அதிமுகவே இன்று பாசிச சக்திகள் அதிகாரத்திற்கு வராமல் தமிழகத்தை  காத்து வருகிறது. 

கொள்கை அடையாளத்தை தீவிரமாகவும், அதிக நம்பகத்தனமையுடனும் கொண்ட கட்சிகள் என்றால் அது பாமக, விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சி, மற்றும் பாஜக. இதில் கொண்ட கொள்கை அடையாளத்திற்காகவே அரசியலில் இருந்தே புறக்கணிக்கப்பட்டு அப்புறப்படுத்த வேண்டிய கட்சி பாமக.  

சாதி அமைப்பு என்பது கொடூர ஒடுக்குமுறை சார்ந்தது என்றாலும், ஏதோ ஒருவகையில் பல நெகிழ்வுகளையும், சாதிகளுக்குள்ளான உறவாடல்களும் கொண்டது. சாதியமைப்பில் உள்ள பகைமுரண் இன்னொரு சாதியை, முற்றிலும் அழித்தொழிப்பதை நோக்கமாக கொண்டதல்ல. சாதிகளுக்குள்ளான முரண் என்பதும் இடைநிலை சாதிகளுக்கும் தலித் சாதிகளுக்குமான பகை மட்டும் அல்ல. உதாரணமாக நான் பள்ளியில் படித்த காலத்தில், திருநெல்வேலியில் தேவர்களுக்கும் கோனார்களுக்குமான பகை பிரபலம். தலித்களை பொது சமூக பங்கெடுப்புகளில் இருந்து அன்னியப்படுத்தி வைத்தாலும், தலித்களின் இருப்பையே அழிக்கும் தீவிரத்துடனானது அல்ல; தலித்களின் இருப்பும் சாதிய சமூகத்திற்கு தேவை. அந்த வகையில் சாதியமைப்பை பாசிசம் என்று வரையறுக்க முடியாது. 

ஆனால் நவீன சாதிய அரசியல் என்பது பாசிசமாக பரிணமிக்கிறது; அது தலித்களுக்கு எதிராக ஒன்றுபடுவது, அவர்களை சமூக நடவடிக்கைகளில் இருந்து முற்றிலும் ஒதுக்கி அவர்களின் இருப்பையே அழிப்பது என்கிற நோக்கில் இயங்குவது. இந்த பாசிச அரசியலில் தமிழகமே தற்போது முன்னணியில் நிற்கிறது. இதை  முன்னெடுத்து  உலகமே காறித் துப்பும் நிலைக்கு தமிழகத்தை கொண்டு வந்ததில் முக்கிய பங்கு வகித்தது பாமக.  குரூர சாதி அடக்குமுறையின் யதார்த்தத்தில், தலித் அல்லாத எல்லா சாதிகளையும் தலித்களுக்கு எதிராக ஒருங்கிணைத்தது போன்ற பாசிசம் வேறு இருக்க முடியாது; அதை ஒரு மிகவும் பிற்படுத்தப்பட்ட ஜாதியினர் முன்னெடுப்பது போன்ற வக்கிரம் இருக்க முடியாது. சேட்டுப்பையன் மாதிரி தமிழில், வளர்ச்சி பற்றி பேசும் அன்புமணியின் நவீன முகமுடியில் மயங்கி, இந்த சாதிய பாசிசத்தை இன்று தன் கொள்கை அடையாளமாக  கொண்ட கட்சியை  வெற்றி பெற வைத்து அங்கீரிப்பது என்றைக்குமான வரலாற்றுக் களங்கமாக தமிழகத்திற்கு இருக்கும்.  

ஏற்கனவே சாதி வெறி சார்ந்த பல களங்கங்கள் தமிழகத்தின் அடையாளமாகிவிட்ட நிலையில், விடுதலை சிறுத்தைகளை பரவலாக வெற்றி பெற வைப்பது இதற்கு எதிரான நடவடிக்கையாக கருதிக் கொள்ளலாம்.  சாதிய பாசிச எதிர்ப்பை, தன் கொள்கை அடையாளமாக கொண்ட கட்சியாக விடுதலை சிறுத்தைகளும், திருமாவும் இன்று உருப்பெற்றுள்ளனர்.  அருந்தியர்கள் மீதான தாக்குதல்  என்கிற சம்பவ நடைமுறைகளை மீறி இந்த அடையாளம் படிந்திருக்கிறது. சம்பவங்கள் சார்ந்த விமர்சனங்களை முன் வைக்க மறக்காமல், இந்த சாதிய எதிர்ப்பு அடையாளம் சார்ந்து திருமாவை ஆதரிக்க வேண்டியுள்ளது. 

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை பரவலான கவனத்தை பெற்றது. தமிழ் தேசியம் சார்ந்த அரசியல் என்பதே பாசிசம் என்பதாக ஒரு கருத்து இங்கே சில அறிவுஜீவிகளால் உருவாக்கப்பட்டுள்ளது. நான் அப்படி நினைக்கவில்லை.  இந்திய அரசியலில் மட்டுமின்றி, இடதுசாரி அறிவுஜீவி அராஜகத்தாலும் தமிழர்களுக்கேயான பிரத்யேக பிரச்சனைகள் இனவெறி முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கப்படுகின்றன; இவைகள் தவிர்க்க இயலாமல் தமிழ் சார்ந்த அரசியலுக்கு நியாயம் வகுக்கின்றன. ஆனால் நாம் தமிழர் கட்சியின் உதிர்ப்புகள் அனைத்தும், இந்த பிரச்சனைகளை மேலும் தீவிரமாக்கும் பாசிச அரசியலை கொண்டது. இதனால் தமிழர்களின் பிரச்சனைகள் மேலும் சிக்கலாகும் என்பதை விரிவாக வேறொரு சந்தர்ப்பத்தில்தான் அலச வேண்டும். சுற்றுச்சூழல் சார்ந்த அக்கறை, மணல் கொள்ளையை தடுப்பது போன்ற வாயளவிலான உதிர்ப்புகளை விட, இவர்கள் அதிகாரத்திற்கு வந்தால் பாசிச அரசியலே முன்னிலை வகிக்கும். அந்த வகையில் பாமகவிற்கு அடுத்து புறக்கணிக்கப்பட வேண்டிய கட்சி நாம் தமிழர்.  பாஜக என்கிற ரொம்ப காலமாக மேலே தொங்கிக்கொண்டிருக்கும் எப்போதைக்குமான ஆபத்தை பற்றி இந்த தேர்தலில் பெரிதாக கவலைப்பட சந்தர்ப்பம் இன்னமும் அமையவில்லை என்று தோன்றுகிறது.  ஆகையால் விடுதலை சிறுத்தைகள் பரவலாக வென்று, திமுக தலைமையில் அதிகாரம் வருவதே இருக்கும் தீமைகளுக்குள் குறைந்த தீமை கொண்ட சாத்தியமாக  தெரிகிறது; அப்படி நடந்தால் அடுத்த ஐந்து வருடங்களில், மீண்டும் அதிலிருந்து தப்பிக்க, பெருந்தீமையை தேர்ந்தெடுக்காமல், நிஜமான மாற்றை தேடலாம். 


நம் காலத்தின் தலையாயதும் மிக அவசரமான அக்கறை கொள்ளவேண்டியதுமான பிரச்சனை சுற்றுச்சூழல்தான். மீண்டு வரவே முடியாத அழிவை நோக்கி நாம் சென்று கொண்டிருப்பது கண்ணெதிரே உள்ள நிதர்சனம். உலகமே அதை நோக்கி செல்வதால், அது இயல்பானது என்று கருத வேண்டிய மனநிலை வாய்க்கிறது. எந்த கட்சிக்கும் இது குறித்து உண்மையான அக்கறை மட்டுமல்ல, போலியான அக்கறை கூட இல்லை. அதை பற்றி பேசக்கூடிய ஒரே கட்சியாக, அதையே தனது கொள்கை அடையாளமாக முன்வைக்கக்கூடிய கட்சியாக வந்திருப்பது  ̀பச்சை தமிழகம்’. உதயக்குமார் போராளி என்கிற நிலையில் இருந்து கட்சித்தலைவராக, தேர்தல் அரசியலில் ஒரு வழி நடத்துபவராக பரிணமிக்க நிறைய மாற்றங்களை கொள்ள வேண்டியிருக்கிறது;  அதை வரலாறு கற்றுக்கொடுக்கலாம். கூடங்குளம் மட்டுமின்றி தமிழகம் முழுவதற்குமான சூழலிய பிரச்சனைகளை கையிலெடுக்கும் கட்சியாக வளர்தெடுக்க வேண்டும். எல்லோரும் இன்னமும் வளர்ச்சி பற்றி பேசிக்கொண்டு இருக்கும்போது, இன்றய அதி முக்கியமான பிரச்சனையை பேசக்கூடிய ஒரே கட்சியின் வேட்பாளரான உதயக்குமார் வெல்வது எதிர்கால தமிழகத்திற்கு மிக முக்கியமானது. 

Post a Comment

---------------------------------------

Wednesday, October 07, 2015

இந்து அடையாளமிலி-4


(முந்தய பகுதிகள்: இந்து அடையாளமிலி-3 ,  இந்து அடையாளமிலி-2,  இந்து அடையாளமிலி-1 )


அடையாளம் சார்ந்த எந்த அரசியலுக்கும் ஒரு பாசிச பரிமாணம் இருந்தே தீரும்; ஏதோ வகையில் ஒடுக்கப்படும் ஓர் அடையாளம் சார்ந்து அந்த அரசியல் கட்டமைக்கப்படும் போது, ஒடுக்குமுறையின் தீவிரத்திற்கு ஏற்ப, இந்த பாசிசப் பரிமாணம் மழுக்கடிக்கப்படும். பெரும்பான்மை மக்களின் அடையாளம் சார்ந்த தேசியம், உள்முரண்களால் தடைபடாதபோது, பாசிசமாகப் பரிணமிக்கவே தவிர்க்க முடியா சாத்தியங்களிருக்கும். அவ்வாறான திராவிட இயக்கம், அதிகாரத்தில் இருந்தும், சில உதிரி சம்பவங்கள் தவிர்த்து, பாசிசமாகப் பரிணமிக்காத வரலாற்றை, இன்னொரு கட்டுரையில்தான் அணுகவேண்டும்.

புறக்கணிக்கப்படுவதாகத் தங்களைக் கருதும் பெரும்பான்மை மக்கள், தங்களுக்கான அரசியலை உருவாக்குதல் தேவையா என்றால் - சிறுபான்மையினரின் அதிகாரம் ஜனநாயகமற்ற முறையில் இல்லாத நிலையில், தேர்தல் ஜனநாயகம் மூலம் பேரம் பேசுவதன்றி ஒட்டுமொத்த அதிகாரத்தை அவர்கள் கைப்பற்றச் சாத்தியமில்லாத நிலையில் - தேவையில்லை என்பதே பதில். இந்தபாதிக்கப்படுவதுஎன்கிற கற்பிதமே பல சந்தர்ப்பங்களில் பொய்யானது. உதாரணமாக ஷா பானு வழக்கின் தீர்ப்பை பாராளுமன்றத்தின் மூலம் காங்கிரஸ் செல்லுபடியற்றதாக்கி, இஸ்லாமிய மதவாதத்திற்குச் சார்பாக நிலை எடுத்ததில், பாதிக்கபடுவது இஸ்லாமியப் பெண்களே தவிர பெரும்பான்மை இந்துக்கள் அல்ல; இஸ்லாமியப் பெண்களுக்கு நிகழ்ந்த அநியாயம், இந்துக்களுக்கு நிகழ்ந்த பாரபட்சமாக அரசியலாக்கப்பட்டது. அண்மையில் அல்லோல கல்லோலப்பட்ட வீரமணி பேட்டியில் 'தாலியை பற்றிப் பேசும் நீங்கள் பர்தாவைப் பற்றி பேசுவீர்களா?' என்று கேட்டதை மாபெரும் பாயிண்டாக இணையத்தில் பேசினார்கள். பெண் விடுதலை பேசும் ஒருவர், தாலியை பற்றிப் பேசி பர்தாவைப் பற்றிப் பேசவில்லையெனில், அதற்கான காரணம் என்னவாக இருந்தாலும், அவர் இந்துப் பெண்களின் விடுதலை பற்றி மட்டும் பேசுகிறார், முஸ்லீம் பெண்களுக்காக பேசத் தயராக இல்லை என்று மட்டுமே அர்த்தப்படும். இதில் பாரபட்சம் நிகழ்வது இஸ்லாமிய பெண்களுக்கே ஒழிய இந்துக்களுக்கு அல்ல; இந்தக் கேள்விகளை முன்வைப்பவர்கள் தந்தை வழிச் சமூக மதிப்பீடுகளைத் தீவிரமாகக் கொண்டவர்கள் என்பதால், இந்துக்களுக்கு எதிரானதாக அவர்களால் பொய்யாகக் கற்பிக்கப்படுகிறது. 'இந்து மதத்தின் அநீதிகளை மட்டும் கேள்வி கேட்கிறாயே, மற்ற மத அநீதிகளைக் கேட்பதில்லையே' என்று இந்துமத அநீதிகளை எதிர்க்கும் ஒருவரால் கேட்கமுடியாது. அன்னிய நிதி சார்ந்த மதமாற்றம் போன்ற உதாரணங்களில், இந்துக்களுக்கு அநீதி நிகழ்வதாகக் கருதினால், அதை நேரடியாக அடையாளச்சுமை இன்றியே எதிர்க்க முடியும்; அதற்கான எதிர்வினையாக இந்து அடையாளம் சார்ந்த அரசியலைக் கையில் எடுக்கும்போதே, எதிர்க்கும் தார்மிகம் விட்டுப்போகிறது. இந்து அடையாளத்தை அரசியல்படுத்திக் கொள்ளாத காந்தி, மதமாற்றத்திற்கு எதிராகவே நிலைபாடு கொண்டிருந்ததும், எதிர்வினை ஆற்றியதும் கவனத்திற்குரியது. ஆனாலும் இடதுசாரிகளும், பெரியாரியர்களும் மற்ற மத அடிப்படைவாதத்தை விமர்சிக்காமல், சில சந்தர்ப்பங்களில் நியாயத்தையும் அதற்கு அளிப்பது, இந்துத்வ அரசியல் பலம் பெறவே உதவும். மற்ற மத அடிப்படைவாதத்தை நிராகரித்துக் கருத்துச் சொல்ல, நாம் சொந்த மத அடையாள அரசியலைத் தழுவ வேண்டிய தேவையும் இல்லை

தமிழகத்தில் இந்துத்வம் வலிமையற்று இருப்பதற்கு திராவிட அரசியல் காரணமாயினும், தனிப்பட்ட ஓர் இந்து தனக்கான மத அடையாள உணர்வற்று இருப்பது முக்கிய காரணம். இந்துக் கடவுள்களை நம்பும் இவ்வளவு பெரிய மக்கள் கூட்டம், திராவிட அரசியலை மனத்தடையின்றி ஆதரித்து வந்ததற்கும், வருவதற்கும் கூட, இந்து அடையாள உணர்வின்மை ஓர் அடிப்படை காரணம். இந்து அடையாள உணர்வு, மற்ற மத இருப்பின் எதிர்பிரஞ்ஞை சார்ந்து உருவாவது; தமிழகம் போலல்லாது, வட இந்தியாவில் பெருமளவு இந்துக்களின் பிரஞ்ஞையில் இந்து என்ற அடையாளவுணர்வு கலந்திருப்பதற்கு, நூற்றாண்டுகளாக இஸ்லாமிய ஆட்சியைக் கொண்டிருந்த அவர்களின் வரலாறு முக்கிய காரணம். தமிழகம் முழுவதும் பரவலாக இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் இருந்தாலும், அவர்களை இன்னுமொரு சாதியாகவே - குறிப்பாக கிராமப் பகுதிகளில் - கருதி, உறவு கொண்டிருந்ததை அறியலாம். மற்றொரு சாதி மற்றொரு கடவுளை வணங்கி, வேறு சடங்குகளைக் கொண்டிருப்பது பழகி ஏற்றுக்கொண்ட ஒன்று என்பதால், மற்ற மதத்தவரின் இருப்பு இந்து என்ற அடையாள உணர்வைக் கிளறுவதில்லை. தமிழகத்திற்கு வெளியிலிருந்து இறக்குமதியான இந்துத்வ அரசியல், நீண்ட பிரயத்தனத்திற்கு பின் 90களில் வலுபெற்று, இந்து அடையாள உணர்வை ஊட்டி வருகிறது. ஆயினும், கோயம்புத்துர் வெடிகுண்டு போன்ற சம்பவங்கள் நடந்த பின்னும், இந்துத்வம் எதிர்பார்த்த அளவு தமிழக மக்களை தங்களுடன் அணிசேர்க்க முடியவில்லை.  

ஒரு தனிப்பட்ட தமிழ் இந்து தனது பிரஞ்ஞையில் கொண்டிருந்தது சாதிய அடையாளம். பரம்பரை வரலாற்றுச் சொல்லாடல்களால் கையளிக்கப்படும் அந்தச் சாதிய அடையாளம் பழமைவாதத்தன்மையைக் கொண்டது; சாதியமைப்பில் தன் படிநிலைக்கு ஏற்ப ஆதிக்க உணர்வையும், கீழ்படிதல் உணர்வையும் ஒருங்கே கொண்டது. திராவிட இயக்கப் பாதிப்பில் கீழ்படிதலில் இருந்து விடுபட்ட, ஆனால் ஆதிக்க உணர்வை தக்கவைத்துக் கொண்ட இடைநிலை ஜாதிகள், சாதிய அடையாளத்தை காலத்திற்கு ஏற்ப நவீனபடுத்திக் கொண்டது. இந்த நவீனமான சாதிய அடையாளம், இந்துத்வத்தன்மை கலந்தது; பழமையான அடையாளத்தில் இல்லாத பாசிசதன்மையைக் கொண்டது. இந்தச் சாதிய அடையாள அரசியல், தொண்ணூறுகளில் தொடங்கி இரண்டாயிரத்திற்குப் பிறகு தீவிரம் அடைகிறது. இஸ்லாமிய, கிறிஸ்தவ எதிர்ப்பின் மூலம் இந்துக்களைத் தங்களுடன் அணி சேர்க்க முடியாத இந்துத்வம், இந்தச் சாதிய அரசியலுக்கு உறுதுணையாக இருந்து, அந்தந்த சாதியின் இருப்பை உறுதி செய்வதன் மூலம், இந்துக்களைத் தன்னுடன் அணிதிரட்ட முயன்று வருகிறது

துவக்கத்தில் ஆதிக்க சாதி எதிர்ப்புச் சொல்லாடல்களை உதிர்த்த பாமக இதில் அகப்படவில்லை; சாதியத்தை எதிர்த்த முற்போக்கினர் பாமகவை ஆதரிக்கும் வரலாற்றுத் தவறும் நிகழ்ந்தது. தலித்களுக்கு எதிராக எல்லா இடைநிலைச் சாதிகளையும் ஒன்று சேர்க்கும் முயற்சியை பாமக 2013இல் முதன்முறையாக நடத்தவில்லை; 2000த்தின் துவக்கத்திலேயே நடந்தது. அதற்குப் பின்னான அரசியல் ஆட்டத்தினிடையில் விடுதலைச் சிறுத்தைகளுடன் சமரசமாகி இணைந்து உருவாக்கிய தமிழ் சார்ந்த அரசியலில் இது மறந்து போனது; மற்ற முற்போக்குகளுடன் தமிழ்த் தேசியத்தையும் பேசிய சிலர் மீண்டும் இந்த அரசியலை ஆதரித்தனர். இப்போது எல்லா வேஷமும் கலைந்து, தூய சாதியப் பாசிசமாக பாமக தன்னை வெளிப்படுத்திய பின், இந்துத்வம் தன் ஆளுகைக்குள் கொணர எல்லா வாயில்களும் திறந்துள்ளன

நீண்ட கால பிரயத்தனங்கள் எதிர்பார்த்த பயன்களைத் தராததால், இந்துத்வம் இப்போது கொண்டிருக்கும் நம்பிக்கை, இந்தச் சாதிய அடையாள அரசியல் சார்ந்த இந்து ஒருங்கிணைப்பு. இதனால்தான் ̀இந்து ஆன்மிக சேவைக் கண்காட்சி' என்ற பெயரில் வெளிப்படையாகக் சாதிகளின் கண்காட்சிகளை நடத்திக் கொண்டிருக்கிறது. இந்துத்வத்தின் இந்த முன்னெடுப்பும் அதன் அணிச்சேர்க்கைக்குப் பயனற்று போகும் என்று நான் கணித்தாலும், இந்த அரசியல் சமூகத்தில் ஏற்படுத்தப் போகும், ஏற்படுத்திக் கொண்டிருக்கும் பாதிப்புகள் சாதரணமானதல்ல.  

தொடரும் சாதியமைப்பு, அதன் ஏற்றத்தாழ்வு இசைவுகளுக்கு எதிராக காலமாற்றத்தால் அழுத்தப்படும் நிர்பந்தங்களுக்கு எதிர்வினையாக, பெரும் வன்முறைகளை இந்தியா முழுக்க நிகழ்த்தி வருகிறது; சாதி அரசியல் தேர்தல் அரசியலுடன் பிணைந்தும் உள்ளது. ஆனாலும் தமிழ்நாட்டில் தற்போதய நேரடிச் சாதிய அரசியல் அமைப்புரீதியாக பூதாகாரமாகி, அதன் கண்காணிப்புகளும் வன்முறைகளும் அனுதினமும் வெளிபடுவது போன்ற மோசமான நிலைமை, இந்தியாவில் வேறு எங்கும் இருப்பதாகத் தோன்றவில்லை. கருத்து வெளியில் இந்த அரசியலின் சில வெளிபாடுகளாக ̀மாதொரு பாகன்' நாவல் பிரச்சனையாக்கப்பட்டது; கண்ணன் என்ற எழுத்தாளரின் முழு நூலகமும் எரிக்கப்பட்டது; தலித் எழுத்தாளர் துரை குணா சமூக ஒதுக்கம் செய்யப்பட்டார். இந்த அரசியலுடன் இயல்பான தோழமையாய் இப்போது இந்துத்வமும் இணைந்திருக்கிறது


இந்துத்வ அறிவுத்தரப்பு ̀ஆன்மிகச் சேவை கண்காட்சி'யில் ̀விமர்சனத்துடன்' பங்கெடுத்தது போல், ̀மாதொரு பாகன்' பிரச்சனையிலும் விமர்சனங்களுடன் பங்கெடுத்துக் கொண்டது.  ̀மாதொரு பாகன்' நாவலில் ஒரு பகுதியில் விவரிக்கப்படும் திருவிழா நடைமுறை, அதன் மற்ற பகுதில் வரும் விவரிப்புகளைப் போலவே, இந்துச் சமூகத்தின் ஒரு பகுதிதான். ஆழமான கற்பு மதிப்பீடுகளை கொண்ட அதே மக்களால்தான், ஒரு மீறலாக இதுவும் அங்கீகரிக்கப்பட்டது; பழைமைவாத மனம் கொண்ட ஓர் இந்துவிற்கு - குறிப்பாகத் தனக்கு அதனுடன் நேரடி சம்பந்தமில்லாத போது - அந்த நடைமுறை அடையாளம் சார்ந்த நெருடலை ஏற்படுத்துவதில்லை; திண்ணையில் உட்கார்ந்து கிசுகிசுப்பதற்கு மேல் அதில் எதுவுமில்லை. இந்து என்ற அடையாளமிலி தொலைந்து, இந்துத்வம் கலந்த சாதிய அரசியல் அளிக்கும் அடையாளத்தின் தூய்மைக் கற்பிதம் சார்ந்தது இந்தப் பிரச்சனை.

Post a Comment

---------------------------------------

Tuesday, October 06, 2015

இந்து அடையாளமிலி-3

 ̀இந்து வேறு, இந்துத்வம் வேறு' என்கிற வடிவான வாதத்திற்கு இருக்கும் சவலான கேள்வியே, ஏன் இந்துக்களுக்கான எந்த அரசியலும், இந்துத்வம் என்று நாம் அறியும் சட்டகத்தின் வெளியே இயங்க முடியவில்லை என்பது. இந்துவிற்கான அரசியல் என்பது, மற்ற மதத்தினரின் இருப்பை முன்வைத்து தன்னை இந்துவாக அடையாளப்படுத்திக் கொண்டு, தான் வஞ்சிக்கபடுவதாகவும் பாதுகாப்பற்று இருப்பதாகவும் கருதுவதால் உருவாவது. அவ்வாறு கருதுவதற்கான காரணங்களைப் பொய்யாகவும், நியாயமாகவும், கற்பிதமாகவும் சமூக யதார்த்தம் வழங்குகிறது. அரசியல் சட்டம் என்பது நாட்டின் எல்லா மக்களுக்கும் பொதுவான நியாயத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்பது மதசார்பின்மைவாதிகளின் கோரிக்கையாகத்தான் இருக்க முடியும். ஆனால் எங்குமில்லா அதிசயமாக இந்துத்வவாதிகள் மட்டுமே இந்தியாவில் அப்படிக் கோருகிறார்கள்; எல்லாவகை மதச்சார்பின்மை அரசியலைச் சேர்ந்தவர்களும் அதை எதிர்க்கிறார்கள்இந்த ஓர் உதாரண விஷயத்தைக் கொண்டே, இந்துத்வ அரசியலை பொய்யான, நியாயமான, கற்பிதமான காரணங்களால் சமைக்க முடியும். ஆகையால் இந்து என்ற அடையாளம் கொண்ட அரசியல் அனைத்தும் தவிர்க்க முடியாமல் இந்துத்வத்தின் பகுதியாகத்தான் இருக்குமா என்று கேட்டால், அதற்கு ஒரே விதிவிலக்காக இருப்பது காந்தியம்

காந்தி தன்னை முழுமையாக இந்துவாக அடையாளப்படுத்திக் கொண்டவர்; ஆனால் மற்ற அடையாளத்தின் எதிர்வாக தன் இந்துத்தன்மையைக் கற்பிதப்படுத்திக் கொள்ளவில்லை. மற்றதை உள்ளடக்குவதன் மூலமாகவே தன்னை இந்துவாக அடையாளப்படுத்தினார். சமணத்தின் அகிம்சையையும் சத்யாகிரக வழிமுறையையும் தழுவுவதும், ஈஸ்வர அல்லா தேரே நாம் என்பதும் அவருக்கு இந்துத்தன்மைதான். அடையாள இறுக்கமற்றும், பன்மைத்தன்மை கொண்டும், மற்றதை உள்வாங்கியும், காலத்திற்கும் சிந்தனைக்கும் ஏற்ப மாற்றத்தை ஏற்றுப் பரிணமிப்பதையும் அவர் இந்துத்தன்மையாகக் கற்பித்தார். இதை எல்லாம் விட, பெரும் நாசங்களை ஏற்படுத்திப் பிரிந்து போகும் பாகிஸ்தானை வெறுக்கக் கூட அவரது அரசியலில் இடம் இல்லை. இந்திய அரசியலில் உண்மையான முழுமையான ஒரே இந்து அவர்தான்; அவரது இந்துத்தன்மை இந்துத்வாவிற்கு இயல்பில் எதிரானது என்பதால்தான், இந்துத்வர்கள் பிரிட்டிஷார்களை விட அவரை வெறுத்தனர்.  


இந்துவாக தன்னை அடையாளம் கண்டு அரசியல்படுத்திக் கொண்டாலும், அதை இந்துவிற்கான அரசியலாக காந்தி மாற்றிக் கொள்ளவில்லை; அதாவது இந்து அடையாளத்தை அரசியல்மயப்படுத்தவில்லை. அதனாலேயே, மற்ற நேரடி இந்துத்வ எதிர்ப்பு அரசியலை காட்டிலும், காந்தியம் இந்துத்வத்திற்கு பெரும் சவலாக இருந்தது. ஆனால் காந்தியமும் ஒரு மித இந்துத்வம்தான் என்று சிலர் புத்தகம் எழுதுகிறார்கள்; காந்தியம் இந்துத்வத்தின் முந்தய படி என்று நானும் பத்தாண்டுகளுக்கு முன்னால் நினைத்திருந்தேன். இந்தப் பார்வையை முழுக்க அபத்தமானதாக இப்போதும் கருத முடியவில்லை. மார்க்சிய பெரியாரிய சொல்லாட்சிக் கருத்தாளரான .மார்க்ஸ் கூட காந்தியை முன்வைக்கும் காலகட்டம் இது. காந்தியம் பேசுவது பின்நவீன மோஸ்தராகிப் போனதோ என்று தோன்றும் இந்தக் கட்டத்தில், காந்திய அரசியலைக் கறாராக பரிசீலிக்கும் தேவை உள்ளது. இந்தக் கட்டுரையின் நோக்கம் அதுவல்ல; காந்தியத்தை இந்துத்வம் உள்ளடக்கிக் கொள்ளும் தோற்ற மயக்கம் பற்றி மட்டும் கவனிப்போம்.  

காந்தியத்தின் பாதிப்பு இன்றும் எல்லாவகையிலும் இருந்தாலும், சில உதிரி உதாரணங்களைத் தவிர்த்து, காந்திய அரசியலின் ஆளுகை இந்திய அரசியல் வெளியில் காந்தியுடன் முடிந்து போனது. பெரியாருக்கு திராவிடர் கழகமும் திமுகவும் போல், காந்தியின் அரசியல் அவரது வழிதோன்றல்களால் பரவலாக அரசியல் வெளியில் தொடரப்படவில்லை. பெரியார் இடையில் ஒரு பத்து ஆண்டுகளுக்கு மேல் திமுகவினரை திட்டி வந்தாலும், திமுகவின் அரசியல் சொல்லாட்சிகள் பெரியாரிடம் இருந்து பிரிக்க முடியாதவை; அப்படி ஒரு உறவு காங்கிரசிற்கு - காந்தியைப் பயன்படுத்திக் கொள்ளும் மேம்போக்கு பாவனைகளைத் தாண்டி - கிடையாது. முழுப் புரட்சிக்கு அழைத்த சோசியலிஸ்டான ஜெயபிரகாஷ் நாராயணனின் இயக்கம், காந்தியத்தின் பாதிப்பைக் கொண்டிருந்தாலும், இந்துத்வத்தின் இருப்பைக் கேள்விக்கு உள்ளாக்கவில்லை; மாறாக சர்வாதிகாரத்திற்கு எதிரான கிளர்தலில், இந்துத்வத்தைச் சமரசத்துடன் உள்ளடக்கிக் கொண்டது. இவ்வாறாக காந்தியம் இந்திய அரசியல் பெருவெளியில் நேரடிச் சவாலாக இல்லாத நிலையில், ஆனால் அதன் பாதிப்பு சமூகம் முழுக்க இருக்கும் நிலையில், இந்துத்வம் தனக்குள் காந்தியத்தை கரைத்துக் கொள்வது ஒர் அணுகுமுறை அவசியமானது. இவ்வாறாக நிகழும் பின்காந்திய கூத்துக்களைத்தான் காந்தியம் என்று நாம் இன்று தமிழ் இணையச் சூழலில் பார்த்து வருகிறோம். காந்தியை ஆதர்சமாக முன் வைக்கும் சின்னக்கருப்பன் மோடியை ஆதரிக்கிறார்; இஸ்ரேலின் கொடூர ஆக்ரமிப்பையும் அடக்குமுறைகளையும் நியாயப்படுத்துகிறார். காந்தி முழுமையாக பாலஸ்தீனர்களின் நியாயத்தை ஆதரித்து எழுதிய கட்டுரையை இங்கு ஒப்பிட்டுப் பார்க்கலாம்; காந்தி இருந்திருந்தால் பாலஸ்தீனத்தின் போராட்ட வன்முறையை நிராகரித்தாலும், போராட்ட நியாயத்தை இன்றும் நிச்சயம் அங்கீகரித்திருப்பார்.

இந்துத்வத்தின் அறுதிப் பெரும்பான்மை ஆட்சியில், கோட்சேக்கு சிலை வைக்கும் முயற்சிகள் நடந்தால், அதை எதிர்க்கும் எந்த ஒரு தார்மிக எழுத்தாளரும், ஆட்சி அதிகாரப் பின்னணியையும் இந்துத்வத்தையும்தான் முதலில் கண்டிப்பார். ஜெயமோகன் மட்டுமே அதற்கும் இடதுசாரிகளையும், பெரியாரியர்களையும் திட்டுவார். இடதுசாரி அரசியலும், பெரியாரியமும், அம்பேத்கரியமும் பரஸ்பர உறவில் காந்தியின் அரசியலுக்கு எதிரானது. அவர்கள் காந்தியை விமர்சிப்பதிலும் எதிர்ப்பதிலும் எந்த ஆச்சர்யமும் இல்லை; நேர்மையின்மையும், நகைமுரணும் இல்லை. காந்திய எதிர்ப்பில் அவர்கள் கொண்டிருக்கும் மூர்க்கத்தை வேண்டுமானால் விமர்சிக்கலாம்; ஆனால் இந்துத்வத்திற்கும் காந்தியத்திற்குமான முரண் தீவிரப்படும் தருணங்களில் எல்லாம், அவர்கள் நேர்மையுடன் காந்தியத்திற்கு ஆதரவாக நின்றிருக்கிறார்கள்; அதை இந்துத்வத்திற்குள்ளான சகோதரச் சண்டை என்று வேடிக்கை பார்க்கக் கூட முனையவில்லை. இப்படி இருக்கையில் ஒரு காந்தியவாதி அதைவிட உண்மையாக நேர்மையாக காந்தியத்தின் பக்கம் நின்று இந்துத்வத்தை எதிர்க்க வேண்டும்; ஆனால் காந்தியவாதியாக தன்னை முன்வைக்கும் ஜெயமோகன், மைய இந்துத்வம் காந்தியை மதித்து உள்வாங்கியுள்ளதாகவும், ஏதோ சில விளிம்பு முனை இந்துத்வங்கள் மட்டுமே உதிரிகளாக காந்தியை எதிர்ப்பதாக எழுதுகிறார்; திருகல்வாதமாக கோட்சேக்கு சிலை வைக்கும் முயற்சிகளுக்கு, காந்தியைத் திட்டும் இடதுசாரிகள் பெரியாரியர்கள் பக்கம் பழியைத் திருப்புகிறார். உண்மையான காந்தியவாதியான காந்தி, தன்னைத் தொடர்ந்து தாக்கி வந்த அம்பேத்கர் குறித்து எந்தக் குற்றத்தையுமே சொல்லாததையும், தருணம் அமையும்போது பெரியாருடன் உரையாடல் நிகழ்த்தியதையும் இந்த அணுமுறையுடன் ஒப்பிட்டுக் கவனிக்க வேண்டும்

கோட்சே காந்தியைக் கொன்ற பிறகு, பல இடங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் இனிப்பு வழங்கிக் கொண்டாடிய செய்திகள் உண்டு. 1964இல் கோபால் கோட்சே விடுதலையானதற்கான கொண்டாட்டங்களின் விளைவாய் நடந்த கபூர் கமிஷன் விசாரணை, 'சாவர்கருக்கு காந்தியின் கொலையில் பங்கிருப்பதான கதையாடலைத் தவிர மற்ற அனைத்தையும் ஆதாரங்கள் தகர்கின்றன' என்று இறுதியாக எழுதியது. இவைகளை மறுத்து இந்துத்வவாதிகள் வாதிட முடியும். அது எப்படி இருந்தாலும், இந்துத்வாதிகளில் பெரும் எண்ணிக்கையினர் காந்தியை வெறுப்பதையும், கொலையை நியாயப்படுத்துவதையும் தனிப்பட்ட தொடர்புகள் மூலம் எளிதாக அறியமுடியும். இணையம் மூலம் அறிமுகமான அரவிந்தன் நீலகண்டன் போன்றவர்கள் காந்தியைப் பற்றி நல்லவிதமாகவே சொல்லிவந்தாலும், சிறு வயதில் இருந்து நான் தனிப்பட்ட முறையில் அறிந்த அத்தனை ஆர்எஸ்எஸ்காரர்களுமே, ஏதாவது ஒரு கட்டத்தில் காந்தியின் கொலைக்கு நியாயம் கற்பித்தவர்கள்; ஐந்து வருடங்கள் முன்பு தொடர்பு மீண்டும் ஏற்பட்ட என் இந்துத்வ பள்ளித்தோழனை, அண்மையில்தான், காந்தி கொலையை நியாயப்படுத்தி எழுதியதற்காக, ஃபேஸ்புக் நட்புப் பட்டியலில் இருந்து நீக்கினேன். காந்தியைக் கொல்லும்போது கோட்சே ஆர்எஸ்எஸ்ஸில் ஒரு உறுப்பினரா, கொல்லும் முன் சாவர்கரை சந்தித்து ஆசி பெற்றது உண்மையா, ஆர்எஸ்எஸ்ஸிற்கு சதித்திட்டத்தில் பங்கு உண்டா என்ற ஆராய்ச்சிகளின் உதவியின்றி எளிமையான ஒரு முடிவிற்கு வரமுடியும்; சாவார்கரும், கோல்வால்கரும் மிகத் தெளிவாக முன்வைத்த காந்திய எதிர்ப்பு என்ற அரசியல் கருத்தியல்தான் காந்தியைக் கொன்றது; கோட்சே அதை நிகழ்த்திய கருவி மட்டுமே. அவர்களுக்குச் சதித்திட்டத்தில் நேரடி தொடர்பிருந்ததா என்பது இந்த கருத்தியல் உண்மைக்கு முன் மதிப்பில்லாதது

இந்துத்வ கருத்தியல் கொண்டு, அதே நேரம் காந்தியையும் மதிக்கும் ஒரு தரப்பு இருப்பதற்கான வாய்ப்பை நான் மறுக்கவில்லை; ஆனால் அந்தத் தரப்பு காந்தியை வெறுக்கும் தரப்புடன் எப்போதுமான சமரசத்துடனேயே இருக்கும். ஆனால் ஒரு காந்தியவாதி நிச்சயமாக அந்தச் சமரசத்தைச் செய்யமுடியாது. பொத்தாம் பொதுவான தர்க்கத்தின் மூலம், இந்துத்வத்தை காந்தி கொலையில் இருந்து விடுதலை செய்வது, ஜெயமோகன் முன்வைக்கும் காந்தியத்தைக் காவிப்படுத்துகிறது. ஜெயமோகன் கருத்துக்களில் எடுத்தாண்ட, காந்தியை முன்வைக்கும் ராமச்சந்திர குஹா, எந்தச் சமரசமும் இன்றி இந்துத்வாவைத் தீவிரமாக எதிர்ப்பதை எத்தனையோ கட்டுரைகளில் பதிவு செய்திருக்கிறார். இந்து மதத்திற்கும், இந்துத்வாவிற்குமான வேறுபாடுகளை பெரிதும் கவனப்படுத்திய, காந்தியை முன்வைக்கும் அஷீஷ் நந்தி, இந்துத்வ எதிர்ப்பை மனசுக்குள் செய்வதில்லை; 2002 நிகழ்வதற்கு பத்து ஆண்டுகளுக்கு முன், மோடியைப் பேட்டி எடுத்த அவர், 'ஒரு text book fascist, எதிர்கால பெருங்கொலைகாரனாகும் சாத்தியமுள்ளவனை' சந்தித்ததாகச் சொல்கிறார். ஜெயகாந்தன் உதிர்த்த பல அரசியல் கருத்துக்களையும் இந்துத்வத்திலிருந்து வேறுபடுத்தி பார்க்கமுடியும்.


காந்தியத்திற்கும் இந்துத்வத்திற்குமான வேறுபாட்டை பொதுப்புத்தி புரிந்து கொள்ள வேண்டுமெனில், அப்படி ஒரு வித்தியாசம் யதார்த்தத்தில் இருந்தாக வேண்டும். ஆனால் இந்துத்வப் புடை சூழ, ஜெயமோகன் காந்தியை முன்வைக்கும்போது, இந்துத்வ எதிர்ப்பு அரசியல் காந்தியத்தை நேர்மறையாக அணுகுவதைத் தடுக்கிறது; காந்தியம் இந்துத்வத்தின் மிதமான ஒரு பகுதிதான் என்கிற கச்சா நிலைபாட்டிற்கு இந்துத்வத்திற்கு எதிரான பொதுப்புத்தியைத் தள்ளுகிறது. இன்றய தேவையான காந்தியப் பரவலுக்கு, இவ்வாறாக ஜெயமோகன் ஊறு விளைவிக்கிறார். அவரது நோக்கம் அதுதான் என்று நான் சாரம்சப்படுத்தவில்லை; அவர்தான் தன் சாராம்சத்தை பரிசீலித்துக் கொள்ளவேண்டும்

Post a Comment

---------------------------------------
Site Meter