ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Sunday, October 26, 2008

தீபாவளி.

(உளரல்.காமில் எழுதத் துவங்கியது பெரிதாகி விட்டதால் இங்கேயே இடுகிறேன்).

தேர்தல் அரசியல் தலைவர்களில், கலைஞர் மட்டும் இன்னும் கொள்கை பிடிப்பாய் தீபாவளி வாழ்த்து தெரிவிக்காமலிருக்க, கலைஞர் டீவி தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளில் ̀சன்'னுடன் போட்டியிடும் காலத்தின் கட்டாயத்தில், தீபாவளி பற்றிய சில கருத்துக்கள்; தீபாவளி பற்றி ஏதோ வகையில் எதிரெண்ணம் கொண்டவர்களை முன்வைத்து.

கிட்டத்தட்ட 15 வருஷங்கள் தீபவளியை கொண்டாடாமலும், விலகியும், பட்டும் படாமலும், தவிர்த்தும் வந்து, கடந்த மூன்று வருடங்களாய் கொண்டாடுகிறேன்; கொண்டாடுவது என்பது புத்தாடை, வெடிகளுடன், ̀சகலை' வீட்டில் கொண்டாட்டங்களில் பங்கேற்பது. மகன் பிறந்த பிறகு தீபாவளியை தவிர்ப்பது வன்முறையாகவும், அராஜகமாகவும் தோன்றுகிறது.

தமிழ்நாட்டில் பெரியார் இயக்க பாதிப்பில், கொள்கை பிடிப்புள்ள ஒரு கூட்டம் தீபாவளி பற்றி எதிர் எண்ணம் கொண்டு, ராவணனை/நரகாசூரனை -என்ற திராவிடன/ ̀சூத்திரனை'- கொன்ற தினமாக கருதி, கொண்டாட்டங்களை தவிர்த்து வருகிறது. இஸ்லாத்திற்கோ, கிரிஸ்தவத்திற்கோ , முடிந்தால் பௌத்தத்திற்கு மாறுவது இந்த பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வு. (எல்லா பிரச்சனைக்கும் தீர்வு என்று சொல்லவில்லை.) மிக தெளிவாக ̀நாம் வேறு; தீபாவளி நமக்கானதல்ல' என்ற எண்ணம் திடமாக வந்து, கொண்டாடாததன் மனக்குறை இருக்காது; குறிப்பாக குழந்தைகளுக்கு இருக்காது. இந்துவான அடையாளத்தை மாற்று மதத்தில் கரைக்காமல், குழந்தைகளிடம் தீபாவளியை பிடுங்குவது நிரப்ப முடியாத வெற்றிடத்தையும், மனக்குறையையும், தாழ்வு மனப்பான்மையை ஒத்த ஒரு மனநிலையையையுமே ஏற்படுத்தும்.

மேலும் எந்த ஒரு செயலுக்குமான பொருளை நாம் புதிது புதிதாக கற்பிக்க இயலும்; 80களின் (இளைஞ)தீபாவளி கொண்டாட்டத்தின் முக்கிய அம்சமாக முந்தய தினம் முட்ட முட்ட தண்ணியடிப்பதே. மூன்று மதத்தவரும் சம அளவில் வாழும் தூத்துக்குடியில் வாழ்ந்த போது, 80களின் தெரு முக்கு க்ரூப்களில், இந்துக்கள் தீபாவளியன்று (எல்லோரும் கலக்க) பார்ட்டி தருவதும், ரம்ஜானில் இஸ்லாமிய இறுப்பினர்களும், கிரிஸ்மஸ் அன்று கிருஸ்தவ நண்பர்கள் தருவதும் ஒரு பண்பாடாய் உருவானது. அந்த தீபாவளி நீர் கொண்டாட்டத்திற்கு நரகசூரனோ, ராவணனோ, ராமனோ, கிரிஷ்ணனோ அருத்தம் தருவதில்லை. ஆகையால், இப்போதைக்கு தீபாவளியை வேறு தினத்திற்கு, வேறு சந்தர்ப்பத்திற்கு மாற்றவோ, இதே அளவு குதுகலத்தை பதிலீடு செய்யவும் இயலாததால், எல்லாரையும் தீபாவளி கொண்டாட அறைகூவுகிறேன். மீறி கொண்டாடாதவர்களை நான் திட்ட மாட்டேன். கொண்டாடுபவர்களை யாரும் திட்டாதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். கொண்டாடும் அனைவருக்கும் என் தீபாவளி வாழ்த்துக்கள்!

Post a Comment

---------------------------------------
Site Meter