ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Thursday, March 10, 2011

மீனவர் ராஜா முகமது.

கடந்த மாதம், 'இலங்கை கடற்பரப்பில்' மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள், 'ஈழத்து மீனவர்களால் சிறைபிடிக்கப் பட்ட' செய்தியை நாம் அறிவோம். முதலில் 106 மீனவர்களும், தொடர்ந்து இன்னமும் 22 மீனவர்கள் சிறைபிடிக்கப் பட்டதாக செய்தி வந்தது. இந்த சிறைபிடிப்பிற்கு உந்துதலாகவும், பின்னியக்கும் சக்தியாகவும் இலங்கை அரசும், இலங்கை கடற்படையும் இருந்ததாக பரவலாக நம்பப் படுகிறது. செய்தி வாசிக்கும் பொது மனத்தால் இதில் அதிகம் கவனம் செலுத்தப் படாத செய்தி, சிறை பிடிக்கும் போது தப்பிக்க முயன்ற மீனவர்களின் படகுகள் மீது, பெட்ரோல் வெடிகுண்டுகளை இலங்கை மீனவர்கள் வீசி தாக்கியது.

இந்த செய்திகளின் பின்னால், நாம் கவனத்திற்கு வரவே வராத சம்பவம் ஜெகதாபட்டினத்தை சேர்ந்த மீனவர் ராஜா முகமது என்பவர், பெட்ரோல் வெடிகுண்டு வீச்சில் சிக்கி, பாதிக்கப்பட்டு, தீவிர தீக்காயங்களுடன் படுக்கையில் இன்னமும் போராடி வருவது. சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்பது போன்ற மற்ற செய்திகளில் இவர் மறக்கப்பட்டு விட்டார்.

அரசு தரப்பில் அவருக்கு வெறும் ஐம்பதாயிரம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அதற்கு அதிகமாக செலவு செய்து, மேலும் செலவு செய்து, அவரை கவனிக்கும் வசதியில்லாமல் வேறு ஒரு இடத்தில் அவர் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார்.

மீனவர்கள் கொல்லப்பட்டால் கிடைக்கும் நஷ்ட ஈடும், கவனமும் காயம் பட்டவர்களுக்கு கிடைப்பதில்லை. இந்த நடைமுறையில் பாதிக்கப்பட்ட ராஜாமுகமதை அவரது வீட்டில், அண்மையில் மீனவர் நிலை குறித்து அறியும் நோக்கத்துடன் பயணம் சென்ற நாங்கள், தோழர் ராமநாதன் உதவியுடன் சந்தித்தோம். அவரது நிலை மனதை உருக்கக் கூடியதாக இருந்தது. துரதிர்ஷ்டவசமாக (கேசட் காலியானதால்) வீடியோ எடுக்க இயலவில்லை. புகைப்படம் எடுத்ததுடன், அவரது பேச்சை அலைபேசியில் பதிவு செய்தோம்.




இந்த இடத்தில் குறைந்த பட்ச சரியான நியாயம் என்பது இலங்கை அரசு ராஜ முகமதிற்கு தேவையான மருத்துவ செலவுகளையும், தாக்குதலில் பாதிக்கப்பட்டதற்கான நஷ்ட ஈட்டையும் வழங்க வேண்டும். மேலும் அவரது ஒரு கை அசைக்க இயலாத நிலையில் இருப்பதால், அவர் மீண்டும் தொழிலுக்கு போக இயலுமா என்பதும் கேள்விக்குறியே. இதற்கான இழப்புத் தொகையையும் இலங்கை அரசு அளிப்பதே சரியான நீதியாக இருக்கும்.

நமக்கு வாய்த்த மாநில, மத்திய அரசுகள் இருக்கும் லட்சணத்தில் இப்படி ஒரு நியாயமும் நீதியும் கிட்டுவதற்கு முயற்சிக்கும் லட்சியக் கனவு கூட நாம் காண இயலாது. மத்திய அரசும் இதுவரை (நேரில் விசாரித்த வகையிலும்) எந்த உதவியும், இழப்பீடும் அளித்ததாக கேள்விப்பட்டது இல்லை. இந்நிலையில் தமிழக அரசை நோக்கி ராஜமுகமதிற்கு உதவுவதற்கு கோரிக்கை வைப்பதும், நிர்பந்திப்பதுமே நாம் முன்னெடுக்கக் கூடிய சாத்தியம் உள்ள செயல். தமிழக அரசு எவ்வளவு கையாலகாமலும், துரோக தன்மையும் கொண்டதாயினும், தன் அரசியல் சுய நலம் கருதியாயினும் பாதிக்கப்பட்ட மீனவர்க்கு உதவும் சாத்தியம் உள்ளது.

பாதிக்கப்படும் மீனவர்களுக்கு எல்லாம் நாம் உதவ நினைப்பது நடைமுறை சாத்தியமில்லாதது. மேலும் நம்முடைய அரசியல் செயல்பாடு இந்த அநியாயங்களுக்கு நீதி கிட்டுவதாகவும், அநியாயங்களை எதிர்காலத்தில் தடுப்பதாகவும் இருக்க வேண்டுமே தவிர, பாதிக்கப்பட்ட மீனவர் ஒவ்வொருவருக்கும் நிதி உதவி செய்வதாக இருக்க முடியாது என்பதே என் கருத்து.

ஆனால் சில பாதிக்கப்பட்ட ராஜா முகமதிற்கு இத்தகைய அரசியல் நிலைபாடுகளை விட வசதியுடையவர்கள் அளிக்கும் உதவி பயனுள்ளதாக இருக்கக் கூடும். ஆகையால் இந்த பதிவை வாசிக்கும் நல்ல மனம் கொண்டவர்கள் ராஜமுகமதிற்கு உதவ விரும்பினால் என்னையோ, மா,சிவக்குமாரையோ அணுகலாம்.

குறிப்பிட்ட அளவு நண்பர்கள் நிதியுதவி அளிக்க முன்வந்தால், நேரடியாக மீண்டும் ஜெகதாபட்டினம் சென்று, ராஜா முகமதின் துணையாரிடம் நிதியை அளிக்க முடியும். உதவுபவர்களின் விபரங்கள், அளித்த தொகை வெளிப்படையாக அறிவிக்கப்படும்.

உதவ விரும்புபவர்கள் என்னை அல்லது மா.சிவக்குமாரை தொடர்பு கொள்ள:

அலைபேசி எண்: 8489681589

மின்னஞ்சல்: rosavasanth at gmail dot com , masivakumar at gmail dot com

Labels: ,


Post a Comment

---------------------------------------

Wednesday, March 09, 2011

மீனவர் பாதுகாப்பு வலைப்பதிவு.

கடந்த முப்பது ஆண்டுகளாக தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். இதற்கான காரணங்களாக எதிர்தரப்பில் முன்வைக்கப்படும் நியாயங்களும் வாதங்களும் எதுவாக இருந்தாலும், இது அடிப்படையில் மானுட விரோதத் தன்மை கொண்ட, அடிப்படை மனிததன்மையற்ற, எந்த சமூகத்தின் பார்வையின் அறத்திலும் எதிர்க்கப் படவேண்டியதாக உள்ளது.

இலங்கை கடற்படையால் மீனவர்களுக்கு நேரப்படும் துன்பங்களின் உச்சப் புள்ளியாக, அது கொலையில் முடிவுறும்போது மட்டுமே அது ஒரு செய்தியாக மாறுகிறது. அதுவும் இப்போதுதான் நிகழ்கிறது. 90களில் கூட மீனவர் சுடப்பட்டு இறப்பது, தினத்தந்தி போன்ற வெகுஜன பத்திரிகையில் மட்டுமே வரும் செய்தியாக இருந்தது. அப்போதய தமிழ் நாட்டு ஆங்கிலப்பத்திரிகைகளுக்கு இந்த செய்திகள் தீண்டத்தகாததாக இருந்தன.

ஓரளவு ஆறுதல் அளிக்கும் இன்றய சூழலிலும், கொலைச் சம்பவங்கள் தவிர, வலையை அறுத்தல், பச்சை மீனை/உப்பை திங்க வைப்பது, பிடித்த மீன்களை அள்ளிக் கொண்டு போதல், GPS போன்ற கருவிகளை பறித்தல், அடித்து உடல் ரீதியாக துன்புறுத்துதல், படகை சேதம் செய்தல், கட்டாய ஒருபாலின கலவியில் ஈடுபட வைத்தல் போன்றவை செய்திகளாக மாறுவதில்லை. இத்தகைய எல்லா செய்திகளையும் ஆவணப்படுத்தும் முயற்சியில் இந்த தளம் தொடங்கப்பெற்றுள்ளது.

தமிழக மீனவர் மீதான அத்துமீறல்களாக எந்த சம்பவம் நடந்தாலும், இந்த தளத்திற்கான அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். சம்பவம் குறித்த காலம், இடம் போன்ற குறைந்த பட்ச தகவல்கள் இருப்பது அவசியம். செய்தி அளிப்பவரின் அடிப்படை நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திய பின்பு செய்தி வலையேற்றப்படும். மற்றபடி செய்திகள் அளிப்பவரின் பார்வையில் அவரில் மொழிதலில் பதியப் பெறுபவை.

அண்மையில் மீனவர் பிரச்சனையை நேரில் புரிந்து கொள்ளும் முயற்சியாக, நாகப்பட்டினம் தொடங்கி ராமேஸ்வரம் வரை பல மீனவ கிராமங்களில் பயணித்த போது, இந்த எண்ணை சில மீனவர்களிடமும், மீனவ தலைவர்கள், களப்பணியாளர்களிடமும் அளித்துள்ளோம். இவை தவிர தனிப்பட்ட முறையில் உங்களுக்கு கிடைக்கப்பெறும் செய்திகளையும் இங்கே அளிக்குமாறு கேட்டு கொள்கிறோம்.

தொடர்பு கொள்ள வேண்டிய எண் 8489681589.

மின்னஞ்சல் முகவரிகள்: masivakumar at gmail dot com அல்லது rosavasanth at gmail dot com

(at என்பது @ஐ குறிக்கும் என்பதும், dot என்பது .ஐ குறிக்கும் என்பதும் சொல்ல வேண்டியதில்லை.)

http://tnmeenavar.blogspot.com/

Labels:


Post a Comment

---------------------------------------
Site Meter