ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Monday, December 21, 2009

மழை பெய்யாத பகற்சாலை.

சாலையில் நடப்பது மறந்து போயிருந்தது.

(ரியர் வ்யூ கண்ணாடியை தேடினேன்.) 

மழை பெய்யாத பகல் மலர்ந்திருந்தது.

தப்பித்த இசை கீற்றொன்று என்னுள் உன் இருப்பை நினைவுபடுத்தி தூண்ட,

இக்கணம் தவிர வேறு சொத்து என்னிடம் இல்லை என்று உணர்ந்தேன். 

ப்ரேக்கின் அலறல், ஆக்சிலேட்டர் உறுமல்,

புகை கலந்த இரைச்சல்களின் ஊசி குத்தல், 

நம் இருப்பையும், அடுத்தடுத்த கணங்களையும் அழிக்க,

மறந்தது போல் நின்றுவிட்டேன்.

சூரியன் குப்பை தொட்டியில் உணவு தேடிக்கொண்டிருந்தது.

பிரபஞ்சத்தின் நடுப்புள்ளியில் நின்றிருக்கிறேன்.

உணர்ந்து திகைத்து உணரும்போது

பிரபஞ்சத்தின் நடுப்புள்ளியில்தான் எல்லோரும் நிற்கிறோம்

எதிர்புறம் ஜோடியொன்று ஆழ்முத்தத்தில் திளைத்து,

பிரபஞ்ச மொன்று உயிர்ப்பதை தரிசிப்பதாக 

கற்பனை மட்டுமே செய்ய வேண்டியிருந்தது.

வழி மறந்து போய்விட விரும்பினேன்.

மறக்க விரும்பாத எல்லாவற்றையும் மறக்க விரும்பினேன்.


Post a Comment

---------------------------------------

Wednesday, December 16, 2009

sinuses-3

முந்தய பதிவுகள்.


Sinuses-1


sinuses-2


எஸ்.ராமகிருஷ்ணனின் பேச்சுதான் இந்த நிகழ்வின் மிகப்பெரிய ஆபாசம் என்று நான் கருதுகிறேன்.  ஆனந்த் என்கிறவர் சாருவிற்கும், சாரு ஆனந்திற்கும் கடிதங்கள் எழுதிக்கொண்டார்கள்.  இவை சாருவின் இணையதளத்தில் வெளிவந்தது. கடித பரிமாற்றம் நடந்து கொண்டிருந்த போது ஆனந்தை வெகுவாக புகழ்ந்தும், அவரது சமூக அக்கறைகள், நுண்ணுணர்வுகள் பற்றி சிலாகித்தும் தனது வழக்கமான (இந்த இடத்தை நிரப்பவும்) வேலைகளை சாரு செய்தார். பின்னர் என்ன பிரச்சனை என்று முழுவதும் புரியவில்லை. ஆனந்த் துரோகம் செய்துவிட்டதாகவும் ஜெயமோகனுடன் சேர்ந்து விட்டதாகவும் சொன்னார்; தான்தான்   ஆனந்தின் கடிதங்களை பல மணிநேரம் உட்கார்ந்து மெருகேற்றி தளத்தில் இட்டதாகவும் சொன்னார். அவரை அயோக்கியனாக, துரோகியாக சித்தரித்தார்; வளைக்க நினைக்கும் மலைப்பாம்பு என்கிற கலைஞர் வசனங்கள் ஆங்கிலத்தில் வந்தது. ஆனந்தின் சில கடிதங்கள் ஜேமோவின் தளத்திலும் வந்தது.


இவ்வாறாக நடந்த பின், சாருவின் பெயரை அட்டையில் தாங்கி   ̀மலாவி என்றொரு தேசம்' என்கிற தலைப்பில் புத்தகம் வெளிவரும்போது எழுந்திருக்க வேண்டிய நியாயமான கேள்வி, இந்த கடித பரிமாற்றங்கள் ஆனந்தின் விருப்பத்துடன் உரிய அனுமதி பெற்று வெளிவருகிறதா என்பது. (அவரிடம் முன்னுரை வாங்கி வெளிவருவதுதான் உண்மையான பொருளில் நேர்மையான நாகரீகமான ஒரு செயல்.)  இந்த இயல்பான சின்ன கேள்விகூட யாருக்கும் எழவில்லை. ஆனந்தின் விருப்பமில்லாமல்/அனுமதியில்லாமல் வெளி வந்தால் அதற்கு மோசடி என்று பெயர். இது குறித்து எங்கும் கேள்வி எழுப்பப்பட்டதாகவும், தெளிவு செய்யப்பட்டதாகவும் எனக்கு தெரிந்து இல்லை. இது போதாது என்று ஆனந்தை -அவர் கடிதங்களை முன்வைத்து - எஸ்ரா மிகவும் கேவலப்படுத்தினார்.  சரி, அப்படி என்றால் தொடக்கத்தில் ஆனந்தை சாரு புகழ்ந்து எழுதியது எல்லாம் ஜால்ராதானே? அப்படி செய்துவிட்டு திட்டுவது கேவலமான செயல் அல்லவா? சாரு தான் உட்கார்ந்து பலமணிநேரம் கண்விழித்து அந்த கடிதங்களை மெருகேற்றியதாக சொல்கிறார்.  சாருவால் மெருகேற்றிய பிறகும் அது சாதாரணமாகத்தான் இருக்கிறது என்கிறாரா எஸ்ரா? (ஒரு கடிதத்தை பிழை திருத்தலாம். சில வார்த்தைகளை மாற்றி பொருத்தமான வார்த்தைகளை இடலாம். அதற்கு மேலும்  'மெருகேற்றினால்'  அது எப்படி எழுதியவரின் கடிதம் ஆகும்? ஒருஜினல் மற்றும் மெருகேற்றிய வடிவம் இரண்டையும் பார்த்தல் ஒழிய இந்த சமாச்சாரத்தை என்னால் புரிந்து கொள்ளமுடியாது.) 


ஒரு எழுத்தாளனுக்கு தேவையான எந்த தார்மீகமும் இன்றி, எஸ்ரா ஒரு அரசியல்வாதியை போல நடந்து கொண்டார் என்றுதான் எனக்கு சொல்லத் தோன்றுகிறது.  சென்னையில் உட்கார்ந்து கொண்டே மாலாவியை பற்றிய சித்திரத்தை சாரு அளித்ததாக எஸ்ரா நீட்டியதெல்லாம் அதீத புகழச்சியாகத்தான் தெரிகிறது. இணையத்தை வைத்து செய்யக்கூடிய வேலைதான். அதை திறம்பட செய்பவரை பாராட்டுவதில் எனக்கு பிரச்சனையில்லை. ஆனால் சாரு இங்கிருந்து கொண்டு அந்த தேசத்தின் ஆன்மாவை படம் பிடிக்கும் ஒரு பெரும் கலைஞனாக மாறியதாகவெல்லாம் எனக்கு தோன்றவில்லை, ஒரு நாளும் தோன்றாது. அவரிடம் வெளிப்படுவது தகவல்கள் மட்டுமே என்பது என் அபிப்பிராயம். தேவை பட்டால் வேறு  விஷயங்களை வைத்தும் இதை விளக்கி என்னால் பேசமுடியும்.


எனக்கு எஸ்ரா ஏன் கீழிரங்க வேண்டும் என்று உண்மையில் புரியவில்லை. இதன் மூலம் அவர் அடைந்த பலன் என்ன என்றும் புரியவில்லை. சாருவை மட்டும் அதீதமாக பாராட்டிவிட்டு, ஆனந்தை கேவலப்படுத்தாமல் இருந்தால் கூட இப்படி தோன்றியிருக்காது. (உதாரணத்திற்கு சாருவிற்கும் ஆனந்திற்கும் உறவு பழைய நிலைமையிலேயே இருந்து, ஆனந்த் மேடையில் அமர்ந்திருந்தால் எஸ்ரா என்ன பேசியிருப்பார் என்று யோசிக்க வேண்டும்.)


மிஷ்கின் பேசியதை சாரு வீடியோ பதிவு ஏற்றினால் பாருங்கள். சுவாரசியமாக இருக்கும்.  சாருவை படித்ததில்லை என்றார். அதனால், சாரு நந்தலாலா பற்றி எழுதியதற்கு பதிலாக அவர் பேசியது எல்லாம் ஓகே.  அவர் பாராட்டினார், இவர் திரும்ப பாராட்டுகிறார்; நல்லது, இருக்கட்டும். சித்திரம் பேசுதடி, அஞ்சாதே படங்கள் சம்பந்தப்பட்ட குத்து பாடல்களால் அடையாளம் பெறுவதை நகைச்சுவையாக கூறினார். இளயராஜாவை சந்தித்த போது ' நானும் ஒரு குத்து பாட்டு போடவா?' என்று கேட்டதாக சொன்னார். ராஜாவை கடவுள் அளவிற்கு புகழ்ந்து விட்டு (தேடி பார்க்க: நந்தலா குறித்த செய்திகள்), இந்த கூட்டத்தில் இப்படி பேசியதை எப்படி பார்ப்பது என்று யோசிக்கவும். 


சாருவின் ஏற்புரை ரொம்ப மொக்கை என்று அவரது ரசிகர்கள் கூட ஒப்புகொள்வார்கள் என்று நினைக்கிறேன்- (கொள்ளா விட்டால் நான் எதுவும் செய்யமுடியாது). தனது குடிப்பழக்கம் பற்றிய அச்சு பிச்சு ஜோக்குகள், நைனா இறந்த போதும் எழுதியது போன்ற ஏற்கனவே எழுதிவிட்ட விஷயங்கள் என்று போனது. பருத்திவீரனில் ஒரு சாகச கதாநாயகத்தன்மை இருப்பதையும், வெயில் பட நாயகனுக்கு சபால்டர்ன்தன்மை இருப்பதையும் தான் மிஸ் பண்ணி விட்டதாக சொன்னார். எப்படி மிஸ் பண்ணியதை சரியாக இப்போது கண்டுபிடித்தார் என்கிற கேள்விக்குள் போக வேண்டாம். இந்த  சின்ன விஷயத்தை  ̀மிஸ் பண்ணி', வருடங்கள் கழித்து ஞானம் அடைபவரின் சினிமா விமர்சனங்களை எவ்வளவு சீரியசாக எடுத்துக் கொள்வது என்பதுதான் அறிவுப்பூர்வமான நியாயமான கேள்வியாக இருக்கும்.  ̀வெயில்' தமிழின் முக்கியமான படங்கள் வரிசையில் வரவேண்டிய சிறந்த படம் என்பது என் கருத்து (பதிவுலக நண்பர்கள் சிலருடன் பேசும்போது இதை சொல்லியிருக்கிறேன்) . சாரு கிளி ஜோசியம் சொல்வது போல் இஷ்டத்திற்கு விமர்சனம் என்ற பெயரில் எழுதுவதில் இந்த நல்ல திரைப்படத்தை  ̀மிஸ் பண்ணியது', ஆச்சரியப்பட  எதுவுமில்லாத ரொம்ப யதார்த்தமான விஷயம் என்பதாகத்தான் எனக்கு தோன்றுகிறது. 


அடுத்து இளையராஜா பற்றி வழக்கம் போல அவதூறு. கதாரை, பாப்மார்லேயை (அவருக்கு பெயர் மறந்து விட்டது, கூட்டத்தில் எடுத்து கொடுத்தார்கள்) குப்பை என்று சொன்னார் என்று கடந்த 4 வருடங்களாக பாடிவரும் அந்த ஒரே பழைய பல்லவி. மனுசன் அலுக்க மாட்டார் போலும். கையில் வேறு ஆயுதம் இல்லாத போது வேறு வழி.  இது குறித்து ராஜா அவ்வாறு பேட்டி கொடுத்ததாக சொல்வது  மோசடி என்று நான் எழுதியிருக்கிறேன். ராஜாவின் கருத்தை அப்படி பார்க்க முடியாது என்று எழுதிய பதிவை அவருக்கு அனுப்பியிருந்தேன். நாராயணனும் அவருக்கு தகவல் சொல்லியிருந்தார். ஆனால் விமர்சனங்கள் இருப்பதை கண்டுகொள்ளவே கொள்ளாமல் மீண்டும், மீண்டும் பழைய பல்லவியை சாரு பாடுவது ஒன்றும் புதிது அல்லவே. அவரின் விமர்சனத்தை கணக்கில் கொண்டு பேசும் தன்மையை பற்றிதான் பதிவின் தொடக்கத்தில் எழுதியது போல தெரிந்த விஷயம்தான்.  


ராஜா மீது புதிய அவதூறு ஒன்றையும் வைத்தார். இளயராஜா ஓ.என்.வி. குரூப் பற்றி சொன்னதுடன் தொடர்புடையது.  ராஜா பல நேரங்களில் உளரும் விஷயங்களை நியாயப்படுத்த எனக்கு எந்த தேவையும் இல்லை. (அப்படி உளரக்கூடும் என்பதுதான் எனது கருத்தும்.) அவை எனக்கு முக்கியமான கவனம் கொள்ள வேண்டிய செய்திகளும் அல்ல. அதில் இந்த விஷயமும் ஒன்றாக இருக்கலாம். ஆனால் சாருவின் திரித்தல் என்னவென்றால் பழசிராஜாவில் ராஜாவின்  இசை மோசமாக இருந்ததாக கேரளத்தில் பரவாலாக விமர்சனம் வந்ததாம். அதனால்  ராஜா அதற்கு (பாடல்கள் மோசமாக இருக்க) காரணமாக ஓ.என்.வி.குரூப்பை (சாருவிற்கு பெயர் நினைவிலில்லை, மலையாளத்தில் புகழ்பெற்ற பாடலாசிரியர் என்று மட்டும் சொன்னார்) பற்றி அப்படி சொன்னதாக  திரித்தார். இணையத்தில் இந்த கணத்தில் தேடலாம். வாசிக்க கிடைக்கும் அனைத்து விமர்சனங்களும் ராஜாவை கொண்டாடுகின்றன.  குருப் விஷயத்தில் ராஜாவை கண்டித்த அமைச்சரும், ராஜாவின் இசை போல குருப்பின் வரிகளும் முக்கியம்  என்றுதான் சொல்கிறார். (கவனிக்க வேண்டியது - சாரு உண்மையிலேயே குரூப்பின் பாடல் வரிகளின் தரத்தை அறிந்து (அதாவது இளயராஜா சொல்வது சரியா தவறா என்று ஆராய்ந்து) ராஜா பற்றி குறை சொல்லவில்லை. குரூப்பின் பாடல்வரிகளின் தரத்தை பற்றி அளவிடக்கூடிய சாத்தியம் தனக்கு இல்லாமலே, ராஜாவை பற்றி சாரு குற்றம் சாட்டுகிறார். அதாவது கேரளா மதிக்கும் ஒருவரை பற்றி பேசக்கூடது என்பதுதான் சாரு சொல்வதன் பின்னுள்ள கருத்து. ஜேசுதாசை பற்றி இவர் பேசலாம், ராஜா குரூப்பை பற்றி பேசக்கூடாதுபோலும். என்ன ஒரு யோக்கியமான பார்வை!)


கடந்த 15 வருடங்களாக இளயராஜா தனது முக்கிய இசைகளை மலையாளத்தில்தான் அளித்து வருகிறார். அவை அனைத்தும் அங்கு மிகையாக கொண்டாடப்பட்டு வருகின்றன என்பது விஷயம் தெரிந்த அனைவருக்கும் தெரியும். மேடையில் ஷாஜி போன்றவர்கள் மௌனமாக இருக்க சாரு இப்படி ஒரு திரித்தலை எந்த ஆதாரமும் இல்லாமல் செய்கிறார். 


இதே போலவே தனது பதிவில் வேறு இடத்தில்  ̀பா'  பட இசைக்காக ஹிந்தி திரை உலகில் இளையராஜாவை ஜோக்கராக பார்பதாக எழுதியுள்ளார். என்ன ஆதாரம்? மீண்டும் அப்படியே கூகிளில் தேடுங்கள். வரிசையாக ராஜாவை புகழும் கட்டுரைகள் மட்டுமே கிடைக்கும். ஒரு கட்டுரை கூட ராஜா இசையை விமர்சித்து கிடைக்காது.  ̀பா' படத்தின் பலமே ராஜா என்பதாக பல கட்டுரைகள் உள்ளன. படத்தை பற்றி பேசுபவர்கள் எல்லாம் ராஜாவை புகழ்கிறார்கள்.  அமிதாப் ராஜாவிற்கு படத்தை  பிரத்யேகமாக திரையிட என்று சென்னைக்கே வருகிறார். ராஜாவை அமிதாப்பும், பால்கியும் கடவுள் ரேஞ்சுக்கு தூக்கி வைக்கிறார்கள். பாலிவுட்டில் எல்லோரும் ராஜாவை வானளாவ புகழ்கிறார்கள். (இவை எல்லாம் சரியான விமர்சனங்களா என்ற கேள்விக்குள் போகவில்லை. எனக்கே அதை பற்றி சந்தேகம் உண்டு. சாரு பொய் சொன்னதை மட்டுமே மறுக்கிறேன்).  ஆகையால் நாம் வாழும் காலகட்டத்தின் மிக பெரிய இசை மேதையை அவதூறு செய்ய சாருவிற்கு ஆதாரம் எதுவும் தேவையில்லை. ஆனால் இவர் எழுத்தை யாராவது (அதுவும் ஆதார பூர்வமாக) விமர்சித்தால் மிக கேவலமான முறையில் எதிர்வினை செய்ய தயங்க மாட்டார். ஏனென்றால் எழுத்துதான் இவருக்கு மனைவி, அம்மா, அப்பா எல்லாவற்றையும் விட எல்லாமாம். அப்ப இளையராஜாவிற்கு இசை என்ன நொறுக்குதீனியா? ( ̀பழசிராஜா',  ̀பா'வில் ராஜா இசை பற்றி சொன்னதற்கான ஆதாரங்களை அளித்தால் மேலே பேசலாம்.)


இவ்வாறாக இந்த ஆபாச நிகழ்வு முடிந்தது. பங்கேற்ற கூட்டத்தை பற்றி சொல்ல வேண்டும். சும்மா இடைவெளி கிடைக்கும் போதெல்லாம் கைதட்டிக் கொண்டிருந்தது. வேண்டுமானால் சாரு பாணியில் ஐரோப்பாவில் எப்படி கைதட்டுவார்கள் என்று ஒப்பிட்டு ஒரு பத்தி எழுதலாம். எனக்கு நமது சாலைகளில் ஹார்ன் அடிப்பதுதான் நினைவுக்கு வந்தது. நான் பார்த்த எல்லா நாடுகளிலும் மிக அத்தியாவசியமான ஒரு தருணம் தவிர்த்து  யாரும் ஹார்ன் அடிப்பதை கேட்கமுடியாது. நம்ம ஊரில் சாலையில் ஹார்ன் அடிப்பது ஒரு வியாதி மாதிரி. யாருமே சாலையில் இல்லாமல் தனியாக போகும்போது கூட பழக்க தோஷத்தில் ஹார்ன் அடித்தபடி போவார்கள்


கைதட்டுவது விசில் அடிப்பது மீதெல்லாம் எனக்கு எந்த மரியாதை குறைவும் இல்லை. ரஜினிக்கு, கமலுக்கு, விஜய்க்கு, இன்னும் கலைஞரின் பேச்சுக்கு, பிடித்த ஏதோ ஒரு இசைக்கு கைதட்டுவது நம் பாராட்டின் வெளிபாடு. ஆனால் மேடையில் பேசும் கருத்தை நாம் உள்வாங்க கூட சில நொடிகள் தேவை. (ஏற்கனவே அந்த கருத்தை வந்தடைந்திருந்தால் வேறு விஷயம்.) கருத்து குறித்த விமர்சனத்துடன் உள்வாங்குவதற்கு இன்னும் கொஞ்சம் நேரம் பிடிக்கும். அதற்கு ஒரு தடையாக இருப்பது வாக்கியத்திற்கு வாக்கியம் வரும் கைதட்டல்.


இலக்கியம், திரைப்படம் போன்ற கலைகளை, இசை நடனம் போன்ற கலைகளை அணுகுவதுபோல அணுக முடியாது என்று நினைக்கிறேன். இசையில் தன்னை மறந்து 

அதில் ஆழ்வதும், அதில் பரிச்சயமாவதும், அடையாளம் காண்பதும் மிக அவசியமானது; ஒரு வகையில் போதுமானது. இசை குறித்த விமர்சனம் என்பது அதன் நுட்பம் குறித்தது.  இலக்க்கியத்தை பொறுத்தவரை வெறுமே அடையாளம் காண்பதும், பரிச்சயபடுத்திக் கொள்வதும் ஆபத்தானது ஆகும். உள்வாங்கி, ஆழ்ந்து அடையாளம் காணும் செயல்பாட்டினூடேயே சுய உணர்வு கொள்வதும், வாசிக்கும் போதே விமர்சித்து கொள்வதும் மிக முக்கியமான செயல்படாகும். அத்தகைய ஒரு வாசிப்பிற்கு இலக்கியவாதிகள் சார்ந்த  இந்த கூட்டம் எந்த விதத்திலும் உதவுவதாக இல்லை என்றே நினைக்கிறேன். 


இந்த கூட்டத்தில் நல்ல விஷயங்களாக சொல்ல எதுவும் இல்லையா என்று கேட்டால், அதை சொல்ல நான் இதை எழுத தொடங்கவில்லை என்பதை ஒப்புக்கொள்வதுதான் நேர்மையாக இருக்கும். சாருவின் எழுத்துக்களும், அவர் செய்யும் இடையீடுகளும் வேறு காரணங்களுக்காக முக்கியமானவை. அந்த காரணங்களை இந்த கூட்டத்தில் யாரும் தொடவில்லை என்பதே என் கருத்து.  மற்ற எல்லா துதிபாடும் போலி கூட்டங்கள் போலவே இதுவும் நடந்தேறியது. அதில் பெரிய தப்பு இல்லை. அப்படி நடக்கும் போது இது வித்தியாசமானதாகவும், இந்த கூட்டம் ரொம்ப உண்மையானதாகவும்,  கூட்டத்தில் கைதட்டுபவர்களை ஜீனியசாகவும் சொன்னார்கள். அதனால் எதிர்வினையாக இந்த பதிவை எழுதியுள்ளேன். எழுத இன்னும் பல விஷயங்கள் இருக்கும், சில அற்பமான அவதானிப்புகளை சொல்லலாம் என்றாலும் இங்கே நிறுத்திகொள்வது வேறு வேலைகளை பார்க்க உதவும் என்பதால் நிறுத்திக் கொண்டு, வொயின் சாப்பிடலாமா, பிராண்டி சாப்பிடலாமா (இரண்டும் உள்ளது) என்று யோசிக்கிறேன். 

 

பின்குறிப்பு: இது சாருவின் எழுத்து குறித்த என் மதிப்பீடு அல்ல. இந்த நூல் வெளி யீட்டு விழா சென்று வந்த அனுபவம் மட்டுமே. 


Post a Comment

---------------------------------------

Tuesday, December 15, 2009

sinuses-2

( சென்ற பதிவின் தொடர்சி)


மதன் பாபு காமெடியாக பேசியது (அவரது அடையாளமான சிரிப்பை சிரித்ததை தவிர) எனக்கு சுவாரசியமாகதான் பட்டது. நூலை படிக்கவில்லை, ரெண்டு கட்டுரை மட்டும் படித்ததாகவும் சொன்னதும், படிக்காமலே பேசியயதையும் ரசிக்க முடிந்தது.  


வசந்த பாலன் வெயில் படத்தை பற்றி சாரு எழுதியதை பற்றி வருத்தப்பட்டார். சாரு `பிடித்திருந்தால் தலைக்கு மேல் வைத்து கொண்டாடுவார், பிடிக்காவிட்டால் இரக்கமே காட்ட மாட்டார்' என்றார். இப்போது அமீரை பற்றி கொஞ்சம் மாற்றி சொல்வதையும், வசந்த பாலனை தூக்கி பிடிப்பதையும் கணக்கில் கொண்டு சொன்னாரா என்று தெரியவில்லை. சாரு இறுதியில் தனது முந்தய வெயில் பற்றிய கருத்தை மாற்றிகொண்டு பேசியதையும், 'வசந்த பாலனை பாராட்டியிருக்கேன், அது போதவில்லை போலும். இன்னும் கவனிக்கிறேன்' என்பதாக சொன்னதை கேட்டு என்ன சொல்லுவார் என்று தெரியவில்லை. 


அழகிய பெரியவன் நான் மிகவும் மதிக்கும் எழுத்தாளர். மதிவண்ணன் ஏற்பாடு செய்திருந்த  ̀உள் ஒதுக்கீடு' குறித்த கருத்தரங்கம் ஒன்று முடிந்து அவருடன் மதுவருந்தி உரையாடியிருக்கிறேன்.  அதில் என் அன்பும் மரியாதையும் கூடவே செய்தது. அதில் சிறிதளவு இந்த கூட்டத்தால் கீழிரங்கியது. அழகிய பெரியவன் சாருவை பற்றி அல்லாத விஷயங்களில் நேர்மையாக பேசினார். திண்ணியம், மேலவளவு சம்பவங்களை எழுத்தாளர்கள் எதிர்வினை வைக்காததாக சொல்லி பேசினார். அதை நேர்மையான ஆதங்கமாக பார்க்கலாம். ஆனால் சாருவின் எழுத்துக்களில் இந்த வகை அரசியல் தெரிப்பதாக சொன்னது முழு உடான்ஸ். உதாரணமாக சோபாசக்தியை எடுத்துக் கொள்வோம். அவரது அத்தனை எழுத்து சார்ந்த நடவடிக்கைகளும் தீவிர அரசியல் சார்ந்து இயங்கி கொண்டிருப்பதை உணர முடியும். எல்லா பிரச்சனைகள் குறித்தும் அவரது தனித்துவமான பிரத்யேக பார்வை என்பதாக ஒன்று இருக்கும். சாருவின் எழுத்தை ஒப்பிட்டு பார்த்தால் அப்படி எதையுமே காணமுடியாது. அவர் பேசும் அரசியல் விஷயங்கள் மேலோட்டமானது, ஏற்கனவே பலர் சொன்னதை மேலோட்டமாக திரும்ப சொல்லும் பொத்தாம் பொது கருத்துக்கள். அப்படி இல்லாத பட்சத்தில் அது அபத்தமானதாக இருக்கும். ஈழப்பிரச்சனையை சரியான உதாரணமாக கொள்ளலாம். இதர எல்லா பிரச்சனைகளிலும் கூட அந்த பிரச்சனை குறித்த ஒரளவு ஆழ்ந்த புரிதலை கூட சாருவிடம் பார்க்க முடியாது. அழகிய பெரியவனின் செயல்பாடுகளையே எடுத்து கொள்வோம். அதில் வெளிப்படுவது போன்ற ஒரு அரசியல் பார்வை அக்கறையாவது எங்காவது சாருவிடம் வெளிப்படுகிறதா? சாரு அவர் தளத்தில் கடைசியாக எழுதிய 50 பதிவுகளை எடுத்து கொள்வோம், அதில் என்னவிதமான அரசியல் அக்கறைகள் வெளிப்படுகிறது என்று பார்போம்? உலகில் எந்த எழுத்தாளனும் செய்யாத அளவிற்கு தன்னை பற்றியும், தன் பிரச்சனைகளை பற்றியும் மாஸ்டர்பேட் செய்வது ஒரு அரசியல் என்றால் அது அபரிமிதமாகவே  இருக்கிறது.


சாருவின் எழுத்து நடவடிக்கைகளில் எல்லாம் தீவிர அரசியல் இருந்துதான் ஆகவேண்டும் என்று நான் கட்டாயப்படுத்தவில்லை. ஆனால் இல்லாத தீவிர அரசியலை இருப்பதாக உடான்ஸ் விடுவது ஆபாசம் அல்லவா! அழகிய பெரியவன் கடப்பாடு கொண்டிருக்கும் அரசியலுக்கு இப்படி எல்லாம் உடான்ஸ் விடுவது நண்மை பயக்குமா என்று யோசிக்க வேண்டும். உதாரணமாக 'ரெண்டாம் ஆட்டம்' நாடகத்தை வைத்து திருநங்கையான கல்கி அவர்கள் தங்கள் பிரச்சனைகளை சாரு பிரதிபலிப்பதாகவும், சுய பால் உறவுக்கு அவர் அங்கீகாரம் தருவதாகவும் சொன்னார். அது நியாயமானது. ஆதாரத்துடன் பேசக்கூடிய விஷயம். ஆனால் அழகிய பெரியவன் முன்வைக்கும் அரசியல் சாருவிடம் வெத்து உதாராக மட்டுமே வெளிப்படுகிறது என்பதே யதார்த்தம். 


இதைவிட காமெடி ஒன்றை அழகிய பெரியவன் உதிர்த்தார். ஜெயமோகன் அம்பேத்காரை கொச்சை படுத்தி தமிழினி இதழில் எழுதிவருவதாக சொல்லி அது குறித்து சிறிது நேரம் பேசினார்.  (நான் அதை படிக்கவில்லை. ஆனால் காந்தி குறித்த தொடர் பதிவுகளில் (அதே கருத்துக்களை) ஜெமோ எழுதியுள்ளதை வாசித்திருக்கிறேன். அவை அருண்ஷோரி சொன்னது போன்றதுதான். ஆனால் அருண்ஷோரியினது போன்ற நேர்மையானதும் அல்ல. அருண்ஷோரி அம்பேத்காரை மோசமாக சித்தரிக்கும் போது  எந்த வித பாவனையும், நடிப்பும் கொள்ளவில்லை. ஜெயமோகன் அம்பேத்காரை மதிப்பதாகவும், உயர்வாக சொல்லிகொண்டே, அருண்ஷோரியை ஏற்றுக்கொள்ளாதது போலவும் சொல்லிக்கொண்டே, அம்பேத்காரை பலருக்கு கொந்தளிப்பை ஏற்படுத்தும் வகையில் கீழிரக்குகிறார். இது ஜெயமோகனிடம் வேறு இடங்களில் கண்ட உத்திதான். (காந்தி குறித்த பதிவுகளை தமிழின் முக்கிய அறிவுஜீவி நண்பர் சொல்லும்போது,   ̀லிட்டர் லிட்டரா பாலாக ஊற்றிகொண்டிருக்கும் போது நடுவில் ஒரு சொட்டு விஷத்தை' சேர்ப்பதாக சொன்னார்.)  இவை வேறு பிரச்சனகள்.)  இந்த பிரச்சனைகளையும் அதற்கான தன் எதிர்வினையையும் வைத்துகொண்டு அழகிய பெரியவன் ஒரு சிரிப்பாணி குண்டை தூக்கி போட்டார் (அது காமெடி குண்டு என்று எனக்கு தோன்றியது போல வேறு யாருக்காவது தோன்றியதா என்று தெரியவில்லை. கூட்டம் கைதட்டியது.). ஜெயமோகனின் இத்தகைய அரசியல்களுக்கு எதிர்வினையாக  ̀மம்மி ரிடன்ஸ்' என்ற சாரு கட்டுரையை எழுதியதாக போகிற போக்கில் குண்டு போட்டு சென்றார். 


சாருவின்  ̀மம்மி ரிடன்ஸ்' தொடர் பதிவுகளில் இருப்பது வெறும் தனி நபர் தாக்குதலன்றி எந்த அரசியல் உள்ளடக்கமும் இல்லாதது. தான் விமர்சிக்கப்பட்ட, தாக்கப்பட்ட ஆத்திரத்தில் விழைந்தது அன்றி எந்த அறம் அரசியல் சார்ந்து அதை அணுகுவதற்கு நியாயம் எதுவும் இல்லை. ஜெயமோகன் அற்பத்தனமானவர், அந்துமணியை கூட ஐஸ் வைப்பவர், சினிமா சான்ஸிற்காக கீழ் தரமாக நடப்பவர் ..இப்படி சாருவின் விடலை ரசிகர்கள் கைதட்டி ரசிக்கும் ஒரு வசைப்பதிவாக மட்டுமே போகிறதே தவிர ஜெயமோகன் முன்வைக்கும் எந்த அரசியலையும் எதிர்பக்கத்திலிருந்து அது தீண்டவே இல்லை. உண்மையில் ஜெமோவின் பல கட்டுரைகளை சாரு உள்வாங்கி படித்திருப்பாரா என்பதே எனக்கு சந்தேகமாக உள்ளது.  ̀மம்மி ரிடன்ஸ்' மட்டுமின்றி வேறு எந்த இடத்திலும் சாரு ஜெமோவின் இந்துத்வா என்று அடையாளப்படுத்தக் கூடிய அரசியல்களுக்கு எதிர்வினை செய்தது கிடையாது. உதாரணமாக அழகிய பெரியவன் தனது எதிர்வினையாக ஜெமோவின் கருத்துக்களுக்கு எதிரான பலவற்றை அந்த் கூட்டத்துலேயே பேசினார். சாரு அப்படி ஒரு எதிர்வினையை கூட எந்த கட்டத்திலும் வைத்ததில்லை. ஒரு கட்டத்தில் ஜெமோவை காந்தியவாதி என்றவர் சாரு. சாருவிற்கு, ஜேமோவிடம் இருக்கும் பிரச்சனை ஒரு அரசியல்வாதி மற்றொரு அரசியல்வாதியிடம் கொள்ளும் காழ்ப்பை ஒத்தது மட்டுமே. தேவை என்றால் எதிர்காலத்தில் (மீண்டும்) தற்காலிக கூட்டணி வைக்கவும் தயங்காத முரண்பாடுதான் இது. 


ஆதவன் தீட்சண்யாவிற்கு சாரு வைத்த எதிர்வினை பற்றி பேசிய போது என் பார்வையில் அழகிய பெரியவன் இன்னமும் கீழிறங்கினார். ஆதவன் தீட்சண்யா தன் பேட்டியில் ' ஒரு எழுத்தாளன் குடிக்க முடியாமலும், பிரியாணி சாப்பிட முடியாமலும் இருப்பதெல்லாம் ஒரு சமூக பிரச்சனையா?' என்கிற வகையில்தான் கேள்வி எழுப்பினார். அதில் குடிப்பதற்கு எதிரான எந்த மதிப்பீடும் இல்லை என்பது சாதரண வாசிப்பில் எவருக்கும் புரியும். ஆனால் சாரு ஆதவன் தீர்சண்யாவை குடிப்பதற்கு எதிரான சனாதன மதிப்பீடு கொண்ட கருத்தை சொன்னதாக திரித்து, அதை முன்வைத்து தாக்குகிறார். இவ்வாறு திரித்துதான் பொதுவாக  தனக்கு எதிரான கருத்துக்களை எதிர்கொள்வது சாருவின் வழக்கம். ஆதவன் தீட்சண்யாவை  ̀பார்க்க ஐஏஎஸ் அதிகாரி மாதிரி இருப்பதாக சாரு எழுதியுள்ளதன் விஷமம் அழகிய பெரியவனை பாதிக்க கூட இல்லை என்கிறபோது, இவர் அழகியவன் மட்டும்தான் என்று நினைக்க தோன்றுகிறது.  (ஆதாவன் தீட்சண்யா மீதான் பிற விமரசனங்கள் -குறிப்பாக தமிழ்நதியை தாக்கி, ஈழப்பிரச்சனை சார்ந்து அவர் வைத்த கருத்துக்கள் வேறு விஷயம்.)


சரி, அடுத்த விஷயத்துக்கு. ஷாஜியின் பேச்சை நான் பொதுவாக ரசித்தேன். ஜேசுதாசை பிடிக்காது என்று சாரு மலையாளத்தில் எழுதிய தைரியம், தன்னடக்கமான மலையாள எழுத்தாளர்கள் இடையே, நான் என்று தன்னை முன் நிறுத்தி சாரு எழுதியது ..  போன்றவை பற்றி விமர்சிக்கவோ, வியக்கவோ எனக்கு அதிகமில்லை. மேலும் சாருவின் மலையாள phenomenon  எனக்கு இன்னமும் புரியாததாகவும், பிடிபடாததாகவுமாகவே இருக்கிறது. அது குறித்த கவலையோ, பிரமிப்போ எனக்கு பெரிதாக இல்லை. அதை விளங்கி கொள்ளக் கூடிய நிலை ஏற்படும் வேறு ஒரு சந்தர்ப்பத்தில்தான் அது குறித்து பேச வேண்டும். 


கல்கி அவர்கள்  ̀ரெண்டாம் ஆட்டத்தை' முன்வைத்து பேசியது மட்டுமே இந்த கூட்டத்தில் எனக்கு நேர்மையானதாகவும், இயல்பானதாகவும் பட்டது.   ̀ரெண்டாம் ஆட்டம்'  நாடக நிகழ்வில் நடந்த வன்முறையை கலாச்சார பாசிசம் என்பதாகத்தான் நான் பார்கிறேன். ஆனால் அதை ஒட்டுமொத்தமாக சாரு ஹைஜாக் செய்வதும், தன்னை சப்தர் ஹஷ்மியுடன் ஒப்பிடுவதையும் ஏமாற்று வேலை என்றுதான் சொல்ல வேண்டும்.  ̀ரெண்டாம் ஆட்டம்' நாடகத்தை அகஸ்தோ போவால் பற்றி எதுவுமே அறியாமல் அவர் எழுதியதாக முன்னுரையில் சொல்வது கேவலமான ஃபிலிம். அதில் பங்காற்றிய மற்றவர்களை பற்றி உரிய முறையில் குறிப்பிடாதது நேர்மையின்மை. இவைகளை அந்த நாடகத்துடன் பங்காற்றிய நண்பர் ஒருவருடன் பேசிய பின்பே (ட்விட்டரில் எழுதிய பிறகு) இங்கே பதிவு செய்கிறேன். இதையெல்லாம் கல்கி விமர்சனமாக சொல்லாததில் எனக்கு பிரச்சனை எதுவும் இல்லை. அவர் அறிந்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை.  அன்று வன்முறையில் ஈடுபட்டவர்கள் இன்று தனக்கு நண்பர்கள் என்றும், அவர்கள் கருத்து மாறியிருப்பதாகவும் கல்கி சொன்னார். ஆனால் அன்று சாரு தாக்கப்பட்டதாக திரும்ப திரும்ப அவர் சொன்ன அளவின் தீவிரம் உண்மை என்று எனக்கு தோன்றவில்லை. கூட்டத்தில் கலாட்டா நடந்தது, சாரு வெளியே வந்தால் அடிக்க காத்திருப்பதாக சொன்னார்கள், காத்திருந்தார்கள் (ஆனால் அடிக்கவில்லை.), சுபகுணராஜான் சாருவை ஒருமுறை தள்ளிவிட்டதை தவிர வேறு கைகலப்பு நடந்ததாக நான் கேள்விப்படவில்லை. இது குறித்து ரொம்ப துல்லியமாக பதியவேண்டிய அவசியம் இல்லை எனினும், சப்தர் ஹஷ்மியுடன் ஒப்பிட்டுக் கொள்ளும் ஆபாசத்தை செய்யாமல் இருந்தால் இதை எழுத வேண்டிய அவசியம் நேர்ந்திருக்காது. 


பாரதி கிருஷ்ண குமார் பேசியது இதுவரை குறிப்பிட்டது போன்ற அதே ஆபாசம். சாருவின் எழுத்தின் நேர்மை, அறச்சீற்றம், சமூக அக்கறை என்று இல்லாத விஷயங்களாக தமுஎச கூட்டத்தின் பேச்சு பாணியில் அடுக்கிக்கொண்டே போனார். மீண்டும் அவை குறித்து எழுதியதை எழுத அலுப்பாக இருப்பதால் தவிர்க்கிறேன்.  ஈழப்பிரச்சனை குறித்த சாருவின் கட்டுரையை தைரியமானதாக அவர் முன்வைத்தது ஆபாச நகைச்சுவையா, அசிங்க நகைச்சுவையா, ஸிக் ஜோக்கா, ஈழமக்கள் மீதான் வன்முறையா என்று எப்படி வகைப்படுத்துவது என்று எனக்கு புரியவில்லை. இது குறித்தும் பிறகு நான் எழுதுவேன் என்று நினைப்பதால் தவிர்க்கிறேன். 


(முதலில் எழுத மறந்து விட்டது. இன்னொரு பதிவு, முடிந்தவரையில் இன்றய இரவு தூங்குவதற்கு முன்பு வரும்).


Post a Comment

---------------------------------------
Sinuses

நான் சிலேயில் பத்து நாட்கள் இருந்தபோது அங்கே வாழ்க்கை என்பதே ஒரு கார்னிவலாக இருப்பதை உணர முடிந்தது. எங்கு பார்த்தாலும் ததியாங்கியின் பாடல்களை கேட்டு கொண்டிருந்தார்கள். ததியாங்கி Reggaeton இசையின் முன்னோடிகளில் ஒருவர். எஸ்பேனால் மொழிபேசும் எல்லா நாடுகளிலும் இவருடைய பாடல்களை கேட்காமல் யாரும் ஒரு நாளை கடந்து விட முடியாது. வால்பரைசோ நகரை சுற்றி காட்டிய வேனோட்டியிடம், காரின் FMஇல் ஒலித்துக் கொண்டிருந்த பாடலை முன்வைத்து ததியாங்கியை பற்றி நான் பேசியபோது, காரை நிறுத்தி சந்தோஷத்தில் என்னை கட்டி கொண்டார். அம்மன் கோவில் பாடல்கள் தரத்தில் இருக்கும் சினிமா இசையை கொண்டாடி கொண்டிருக்கும் தமிழ்நாட்டில் ததியாங்கியின் பெயரை யாரும் கேள்விபட்டிருக்க கூட வாய்பில்லை. ஏ.ஆர்.ரகுமானுக்கு கூட தெரிந்திருக்குமா என்பது சந்தேகமே. சிலேயில் இருந்து இந்த நரகத்திற்கு வந்த மறுநாள், லஞ்ச் நேரத்தில் அபிஷேக்கிடம் ததியாங்கி பற்றியும், லத்தீன் அமேரிக்க மக்கள் வாழ்வை கொண்டாடுவது பற்றியும் பேசிக்கொண்டிருந்தேன். அவன் "தமிழ் நாட்டிலும் மக்கள் சினிமா பாட்டு கேட்டுகொண்டு வாழ்க்கையை கொண்டாடிக்கொண்டுதானே இருக்கிறார்கள்?" என்று கேட்டான். நான் அருவருத்து போய் மீதி உணவை சாப்பிடாமல் எழுந்து வந்துவிட்டேன். அத்துடன் அவனுடனான என் உறவையும் முறித்துக் கொண்டுவிட்டேன்.

கடந்த சனிக்கிழமை காலையிலிருந்தே வீட்டில் ஏகப்பட்ட வேலைகள். வீட்டை ஒழுங்கு படுத்துவதுடன், நான்தான் சமைக்க வேண்டியிருந்தது. மதியம் வெளியே சென்றபோது வாகனபுகை ஒத்துகொள்ளாமல் சைனஸ் தலைவலி தொடங்கியது. சைனஸ் என்பது எதிரிக்கு கூட வரக்கூடாது என்று நினைக்கக் கூடிய அளவிற்கு கொடியது. (எதிரிக்கு இரங்கும் சிந்தை இருந்தால் இப்படி நினைக்கலாம். யாரையாவது பழிவாங்கும் வரம் கிடைத்தால் அவருக்கு சைனஸ் வரச்சொல்லி கேட்கலாம்.) அதை தலைவலி என்ற வார்த்தையால் விவரிக்க முடியாது. நெற்றி, கண்களுக்கு கீழே மையம் கொண்டு, முகம் முழுக்க மந்தமாய் வலி பரவியிருக்கும். வலியை பற்களிலும் தாடையிலும் உணர முடியும். கை கால்கள் கூட சோர்ந்துவிடும். இப்படி கொடுமையான சைனஸ் தலைவலியிலும், மனதை மாற்றிக்கொள்ளாமல் சாருநிவேதிதாவின் 10 நூல்கள் வெளியீட்டு விழாவிற்கு சென்றேன்.

நிகழ்வு தொடங்குவதற்கு முன்னே எனக்கு பிடிக்கவே பிடிக்காத தென்னிந்திய உணவான வடையும், போண்டாவோ ஏதோ ஒன்றும் கொடுத்தார்கள். பசியில் தலைவலி அதிகமாகிவிடக்கூடதே என்று நானும் வாங்கிக்கொண்டேன். கைகளிலும், தட்டிலும் ஒரே எண்ணெய். தமிழ் மக்களால் ஏன் பிரஞ்சுகாரர்கள் போல் 90 ஆண்டுகள் வாழமுடியவில்லை என்று புரிந்தது. காபியையும், டீயையும் பாலுடன் கலந்து தயாரித்து அளித்ததை கண்டு எனக்கு குமட்டியது. என்னை போல ஐரோப்பிய மனம் கொண்டவனுக்கு இப்படி எதையும் விஷமாக்கி உட்கொள்வதை தாங்கி கொள்ளவே முடியாது. "ப்ளாக் டீ கிடைக்குமா?' என்று நான் கேட்டபோது என்னை ஒரு மாதிரியாக பார்த்தார்கள். சிலேயாக இருந்திருந்தால் பச்சை மீனும், வொயினும் கொடுத்திருப்பார்கள்; கொடுத்தார்கள். அங்கே மதுவுடனே இது போன்ற நிகழ்வுகள் துவங்குகின்றன. இங்கேயோ நிகழ்வு முடிந்து குடிக்க போகிறோம், குடிக்க போகிறோம் என்று எதோ வெடிகுண்டு வைக்கப்போவது மாதிரியான ஒரு ஆண்டி எஷ்டாபிலிஷ்மெண்ட் காரியம் செய்வது போல பில்டப் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

விழா இறுதியில் தனது பேச்சு கோர்வையற்றபோது "சரி, நான்லீனியராவே பேசலாம்" என்றார் சாரு. அதையும், அவரையும் முன்மாதிரியாக வைத்து உதாராகவும், யதார்த்தமாகவும், ஒரு மூட் வரவழைத்து கொள்வதற்காகத்தான் கலந்து கட்டி மூன்று பத்திகளை சும்மா மேலே எழுதியுள்ளேன்.

பழைய ஹிந்தி பாடல்களில் ஆழ்ந்து, ரசனை ஒன்றினை உருவாக்கி கொள்ளாத, இளயராஜா பிடிக்காது என்று கற்பித்து கொண்ட துரதிர்ஷ்டவாதிகள், யூ ட்யூபில் ததியான்கியை தேடி கேட்கவும். (அதுவும் முடியாதவர்கள் நான் வேறு ஒரு சந்தர்பத்தில் அறிமுகப்படுத்த நேரும் வரை காத்திருக்கவும்). மற்றவர்கள் இந்த பாடலை அல்லது இந்த இன்னொரு பாடலை கேட்டுகொண்டே இந்த பதிவை வாசிக்கலாம். (அண்மையில் கேட்டிருக்காவிட்டால்) இரண்டு பாடல்களும் திரும்ப திரும்ப கேட்கவைக்கும் தன்மை கொண்டவை. அதனால் இந்த பதிவை வாசிப்பதை இடையிடையே நிறுத்தி, ஒரு counter point எஃபக்டிற்காக, பாட்டை மீண்டும் ஒரு முறை கேட்டுவிட்டு, பதிவை படிப்பதை தொடரலாம்.

அறிவித்திருந்த நேரமான ஐந்தரைக்கே கிட்டதட்ட போய்விட்டேன். விழா ஆறரை போலத்தான் துவங்கியது. நான் பேசக்கூடிய பரிச்சய முகங்கள் எதுவும் தென்படாமலும், சாருவிடமும் மற்றவர்களிடம் மீள் அறிமுகம் செய்து கொள்ளும் விருப்பமில்லாமல், ஒரு மணிநேரத்தை மொக்கையாக தலைவலியோடு சிந்திப்பது போல் அங்குமிங்கும் நடந்தபடி கழித்தேன். சாருவால் மோசமாக திட்டப்பட்ட யுவன் சந்திரசேகரை பார்த்து ஆச்சரியப்பட்டதை தவிர வேறு எதுவும் குறிப்பிடும்படி அந்த ஒரு மணியில் நடக்கவில்லை. கூட்டத்திற்கு நான் வந்த காரணத்தை தர்க்கப்படுத்திக் கொண்டிருந்தேன். வீட்டின் அருகில் என்பது ஒரு அற்பமான காரணம். சாரு நிவேதிதா இன்று ஒரு செலிபிரிடியின் இடத்தை அடைந்திருக்கிறார். வேறு யாருக்கும் இல்லாத வகையில், இல்லாத அளவு அவருக்கு வாசகர்கள் இருக்கிறார்கள். இது தமிழ் கலாச்சார சூழலையும் பாதிப்பதாக இருக்கிறது. எழுத்து ஊடகம் மட்டுமின்றி, விஜய் டீவி போன்றவற்றின் நிகழ்ச்சிகள் மூலமாக சாரு தமிழ் பொதுபுத்தியில் செய்யும் இடையீடுகளையும் நான் ஆதரிக்கிறேன். இதன் தொடர்பாக தமிழ் எழுத்துலகம், கலாச்சாரம் குறித்து அக்கறை உள்ள, சாருவின் எழுத்தை கடந்த 17 ஆண்டுகளுக்கும் மேலாக வாசிப்பனான நான், இந்த 10 நூல் வெளியீட்டை முக்கிய நிகழ்வாக கருதுவதால் சென்றேன் என்பதாக சொல்லிக்கொண்டேன்.

இந்த பதிவை முற்றிலும் விமர்சன பூர்வமாக எழுதுவதற்கான காரணங்களை இவ்வாறாக சொல்லிக்கொள்கிறேன். சிறு பத்திரிகை சூழலில் அடைபட்டிருந்த காலம் முதல், புலம் பெயர்ந்த (ஈழ)தமிழர்கள் பத்திரிகை சூழலில் பாதிப்பை ஏற்படுத்திய காலம் வரை சாருவிற்கான (நான் உட்பட்ட) தீவிர ஆதரவாளர்கள் (அதே நேரம் எதிர்பாளர்களும்) உண்டு. அவர்கள் தீவிரமான சிந்தனையும், விமர்சன பூர்வமான மனப்பான்மையும் கொண்டவர்கள். சாரு தன் தீவிரத்தின் போலித்தனத்தை வெளிப்படுத்திக் கொள்ளும் போதெல்லாம் எளிதாக அதை அடையாளம் காணக்கூடியவர்கள். இதில் தமிழக சிறுபத்திரிகை சூழலில் சாருவின் பங்களிப்பை பொதிவாக பார்க்கும் நான், புலம் பெயர்ந்த ஈழத்தமிழ் சுழலில் அவர் நிகழ்த்திய பாதிப்பை ஆற்றல் விரயமாக பார்க்கிறேன். சாருவின் ஆற்றலை அல்ல, கடப்பாடுடன் கூடிய தீவிரத்தை கொண்ட ஈழத்தமிழர்கள் சாருவை முன்வைத்து விவாதித்து சண்டையிட்டு தங்கள் ஆற்றலை வீணடித்ததாக கருதியிருந்தேன். (எவ்வளவோ வீணடித்தத்தில் இது பெரிய பிரச்சனையில்லை என்றும் இப்போது தோன்றுகிறது). இன்றய இணைய சூழலில் நிலமை வேறு மாதிரி இருக்கிறது. சாருவின் சமீபத்திய ரசிகர்களுக்கு முந்தயவர்களுக்கு இருந்த தீவிரமும், விமர்சன பூர்வமான அணுகுமுறையும் இல்லை. கருணாநிதி, கமல், ரஜினிக்கு இருக்கும் ரசனை தன்மையை கொண்டதாக ஒரு ரசிக கூட்டம் அவருக்கு உருவாகியிருக்கிறது என்று நினைக்கிறேன். அதாவது ஆதரபூர்வமாக நாம் ஒரு விஷயத்தை சுட்டி காட்டி, அவர்களிடம் எதிர் ஆதரமோ தர்க்கமோ இல்லாத நிலையிலும் தீவிர ஆதரவு நிலையை கொண்டிருப்பது, சாருவை விமர்சிப்பவரை கிட்டத்தட்ட எதிரிபோல பார்ப்பது போன்ற தன்மை கொண்டதாக சொல்லலாம். இத்தகைய ஒரு சூழல் இருப்பதோ, இதில் சாரு அளவுக்கு மீறி புகழையோ, பலனையோ, அங்கீகாரத்தை அடைவது எந்த விதத்திலும் ஒரு சமூக ஆபத்து அல்ல. சமூகத்தில் யார் யாரோ அநியாயமாக பிழைக்கும் போது ஒரு எழுத்தாளன் நியாயம் என்று நாம் நினைப்பதற்கு அதிகமாக பலன் பெறக்கூடாதா? ஆனால் இந்த மொத்த விஷயத்தில் சாரு முன்வைப்பதாக அவரும் பலரும், குறிப்பிடும் அரசியலும், அவர் எழுத்துக்களில் இருப்பதாக கற்பிக்கப்படும் சப்வெர்சிவ் தன்மையும் கொச்சையாகியும், நீர்த்தும், போலியாகியும், சில இடங்களில் ஆபத்தாகவும் போகிற காரணத்தால், இத்தகைய அரசியலுக்கு, சப்வெர்சிவ் செயல்பாடுகளுக்கு ஆதரவான நான் இதை விமர்சிக்கும் வேலையை என் தளத்திலிருந்து முன்வைக்கிறேன்.  இது எனக்கு நானே சொல்லிகொள்வதாக இங்கே எழுதிக்கொள்ளும் காரணம். வாசிப்பவர்கள் தங்கள் பார்வைக்கேற்ப காரணங்களை கற்பிக்க முடியும். இனி நிகழ்வு குறித்த என் மனப்பதிவுகள். பலர் எழுதப்போவதாலும், சாரு வீடியோ தொகுப்பை தன் தளத்தில் வைக்கக்கூடும் என்பதாலும், எல்லா பேச்சுக்களை விரிவாக பதிவு செய்யாமல், என் விமர்சன கருத்துக்களை மட்டும் எழுதிச் செல்கிறேன்.

விழாவிற்கு சரியான கூட்டம், ஏகப்பட்ட கார்கள். ஃபிலிம் சேம்பர் நிறைந்து பலர் இடமில்லாமல் நின்று வழிந்த கூட்டம். ஒரு எழுத்தாளனுக்கான இத்தகைய அங்கீகாரம் தமிழ் சமூகத்தின் ஆரோக்கியமான கட்டத்தை குறிப்பதாகவே எனக்கு தோன்றியது. சற்று தாமதமாக அரங்கத்தில் நுழைந்ததில் உட்கார இடம் கிடைக்கவில்லை. பைகள், கர்சிப்களை போட்டு இடம்வேறு போட்டிருந்தார்கள். எந்த காலியான இருக்கைக்கு போனாலும் "ஆள் வராங்க" என்றார்கள். 'சாருவிற்கு வாசகனாக இருந்தும் திருந்தாத தமிழ் சமூகத்தை' அலுத்தபடி நிற்க தொடங்கினேன். ஒருவர் தனக்கு முன்னால் இருந்த வரிசையில் bag வைத்து தனது நண்பருக்காக இடம் பிடித்திருந்தார். "ஆள் வராங்களா?" என்று பக்கத்து இருக்கையிலிருந்த சம்பந்தமில்லாதவரை வரிசையாக பலர் தொந்தரவு செய்ய, பேக் வைத்தவர் அலட்டிகொள்ளவில்லை. ஒரு 15 நிமிடங்கள் பொறுத்து, நான் நேராக சென்று பேகை எடுத்து அவரிடம் கொடுத்து " உங்க ஃப்ரண்டு வந்தா எனக்கு சொல்லுங்க, அப்ப எழுந்து இடம் தரேன்" என்று அங்கே உட்கார்ந்தேன். நிகழ்வின் இறுதிவரை அந்த நபர் வரவேயில்லை.

நிர்மலா பெரியசாமியின் விழா ஒருங்கிணைப்பு கணீரென்றிருந்தது. சன்டீவியில் அவர் வாக்கியத்தை முடிக்கும்போதெல்லாம் ஏற்படுத்தும் ஒரு பிரத்யேக சத்தத்தை இங்கே தராமல் திருத்தியதில் ரம்மியமாக இருந்தது. புத்தகத்தை ஜிகினா பேக்கிங்கிலிருந்து எடுத்து தருவது, பெற்றுக்கொள்வது என்ற வைபவம் எல்லாம் முடிந்த பிறகு, மனுஷ்யபுத்திரன் பேசினார். சாருவின் உழைப்பு, வெளிப்படையான தன்மை என்று துவங்கி பேசியதில் சாருவின் நேர்மை, விமர்சனங்களை மதிப்பது என்பதாக சொன்னது மட்டும் எனக்கு நெருடியது. சா.காந்தசாமியும் சாருவின் நேர்மை, விமரசனங்களை கணக்கில் கொள்வது போன்றவற்றை பேசினார். (எழுத்தாளன் புத்திசாலியாக இருக்கக் கூடாது என்றெல்லாம் ஏதோ சொன்னார். அது பரவாயில்லை. ஆனால் பலருக்கு உவப்பான கருத்தை சொல்லக்கூடாது என்று சொன்னவர், அதை தான் ஏனோ செய்ய மறந்துவிட்டார்.) மனுஷ்யபுத்திரன் புத்தகங்களை வெளியிடுபவர். அவர் பேசியதை எல்லாம் பெரிது படுத்தக்கூடாது. சா.கந்தசாமி என்ற மூத்த எழுத்தாளர் இப்படி அப்பட்டமாக பொய் சொல்ல நேர்ந்தது என்னை படுத்தியது. (இதற்குள் அரங்க குளிரூட்டலில் தலைவலி அதிகமாக, விழா இறுதியில் சாகலாம் என்கிற நிலைக்கு தள்ளியது).

சாருவின் எழுத்தில் பல தன்மைகள் உள்ளதாக ஒருவர் கருதலாம். நிறுவபட்டவைகளை, ஒப்புக் கொள்ளப்பட்டவைகளை உடைப்பது, கலகம், பொதுபுத்தியை கேள்வி கேட்பது, நையாண்டி, வாசிப்பு சுவாரசியம் என்று நியாயமாய் சொல்லக்கூடியவற்றை பலவற்றை பேசாமால், நேர்மை, விமரசனங்களை கணக்கில் கொள்ளுதல் என்று சொன்னதில் இந்த நிகழ்வின் முதல் ஆபாசம் துவங்கியதாக எனக்கு தோன்றியது. யாராவது பின்நவீனத்துவத்தில் நேர்மைக்கு அர்த்தம் கிடையாது (குறைந்தது அதற்கு ஒற்றைத்தன்மை கிடையாது); வாழ்க்கையில் முரண்பாடுகள் இருக்கலாம்; எழுத்துக்கும் வாழ்வுக்கும் தொடர்பு இருக்க வேண்டிய தேவையில்லை என்றெல்லாம் சொன்னால் அது விவாதத்திற்குரியது. நான் ஆதரவான ஒரு நிலைபாடு கூட எடுக்க முடியும். சாருவின் எழுத்தில் வெளிப்படைதன்மை, தன்னை நிரவாணமாக்கும் தன்மை என்று எதையாவது சொன்னால் ஒப்புகொள்ளலாம், குறைந்த பட்சம் மறுப்பு சொல்லாமலாவது இருக்கலாம். (தன் சொந்த விஷயங்கள் (மற்றவர்களின் சொந்த விஷயங்கள்) பற்றியெல்லாம் அப்பட்டமாக எழுதுகிறாரே.) ஆனால் நேர்மையும், விமர்சனத்துக்கான ஜனநாயக தன்மையும் இருப்பதாக சொல்வது அப்பட்டமான பொய்.

ஒரு மறுக்க முடியாத உதாரணத்தை எடுப்போம். ஆபிதீன் சுமார் இரண்டு வருடங்கள் பல தளங்களில் புலம்பிய எழுத்து திருட்டு பற்றி சாரு வாயையே திறந்ததில்லை. போகிற போக்கில் எங்கேயோ ஆபிதீன் மோடி மஸ்தான் வேலை செய்து ஏமாற்றுவதாக பெயர் குறிப்பிடாமல் அயோக்கியத்தனமாக எழுதினார். ப்ரேம் தான் எழுதியதை சாரு தன் பெயரில் போட்டுகொண்டதாக சொன்னதற்காக, 'ஆடைகளை அவிழ்த்து கலகம் செய்ததை' ராஸலீலாவில் புனைவாக்கியவர், அதை மீண்டும் பெருமையாய் பதிவுகளில் சொல்லிகொள்பவர், ஆபிதீன் விஷயத்தில் செய்தது என்ன? (என்ன லாஜிக்? இனி நாட்டில் பொய்யாகவோ நிஜமாகவோ, திருட்டு குற்றம் சாட்டப்பட்டவர்கள் எல்லாம் போலிஸ் ஸ்டேஷனில் ஒரு முறை நிர்வாணமாக நடந்து காட்டினால் போதுமானது போலும்.) சில வருடங்களில் ஊழல் குற்றச்சாட்டுகள் மக்களுக்கு மறந்துவிடும் என்கிற அரசியல்வாதியின் தைரியத்தை போன்றதை விட, எந்த நேர்மையின் பலத்தில் இந்த விஷயத்தை எதிர்கொண்டார். இந்த ஒரு விவகாரமே பல பதிவுகள் எழுதக்கூடிய அளவிற்கு விஷயங்களை அடக்கியது. நான் ஏற்கனவே ஒரு முறை சொன்னது போல, ஆபிதீனின் கதையை தன் பெயரில் சாரு வெளியிட்டுகொண்டது கூட கயமைத்தனம் அல்ல. அது வாழ்வில் சருக்கிய ஒரு சம்பவம். அது குறித்த குற்றச்சாட்டு வந்தவுடன் நேர்மையாக எதிர்கொண்டிருக்க வேண்டும். எதிர்கொண்டிருந்தால் அந்த நேர்மையின் பலத்தில் தன் சாதனைகளை தக்க வைத்துக்கொண்டிருக்கலாம். சாரு எதிர்கொண்ட விதத்திற்கு கயமைத்தனம் என்று மட்டுமே பெயர். சாருவின் கயமைத்தனம் என்பது இதுடன் நிற்பது அல்ல. வெட்கமே இல்லாமல் ஜேமோ தமிழிசை கட்டுரையை 'திருடிய விஷயம்' பற்றி தார்மீகத்துடன் பேசுகிறார். இதுதான் சாரு ஸ்டைல். இதைத்தான் நேர்மை என்கிறார்கள். அசைக்க முடியாத உதாரணம் வேண்டும் என்பதற்காக இந்த விஷயத்தை எடுத்துக் கொண்டேன். மற்றபடி அவருடைய ஒவ்வொரு பதிவுகளிலும் சிரிப்பாய் சிரிக்கும் நேர்மைகளை வைத்து நாவலே எழுதலாம்.

விமரசனத்தை சாரு எப்படி எதிர்கொள்வார்? ஒன்று அதை கண்டுகொள்ளவே மட்டார்; அப்படி ஒன்று இருப்பதாகவே காட்டிக்கொள்ள மாட்டார். அல்லது அதை திரிப்பார். எதிராளியை கேவலமாக திட்டுவார். இதை தவிர வேறு எந்த விதத்தில் எந்த விமர்சனத்தை எதிர்கொண்டுள்ளார்? ஜெயமோகனையும், நாகார்ஜுனனையும் மிக மோசமாக திட்டியவை இதற்கான ஆதாரங்கள். என்னை பற்றியும் பொய்யாகவும், திரித்தும், வசைகளையும் கொண்டுதான் எதிர்கொண்டார். ஏதாவது ஒரு தருணத்தில் குறிப்பிட்ட விமர்சனத்தை அதன் நேரடியான பொருளில் எடுத்து அவர் எதிர்கொண்டது உண்டா? அவரது ரசிக சிகாமணிகளுக்கு அப்படி ஏதாவது ஒரு, ஒரே ஒரு, சந்தர்ப்பம் தோன்றினால் இங்கே பின்னூட்டமிடவும்.

அவருடைய தளத்தில் என்னவகை மாற்று கருத்துக்கள் வெளியாகியுள்ளன? 'ஒரு எதிர்வினை' என்று தலைப்பிடப்பட்டிருக்கும் பதிவினுள் நுழைந்தால் உள்ளே ஒரு அப்பட்டமான ஜால்ரா வினைதான் இருக்கும். இப்போதே பார்போம். உண்மையான விமர்சன நேர்மை என்பது எனது இந்த பதிவை எதிர்கொள்வது, குறைந்தது இதன் இருப்பை அக்னாலெட்ஜ் செய்வது. ஆனால் சாருவிற்கு அது ரொம்ப அதிகம். அதனால் உதாரணமாக சுரேஷ் கண்ணன் ஒரு பதிவு எழுதியிருக்கிறார். சாருவிற்கு ஆதரவாகத்தான் எழுதியிருக்கிறார். ஆனால் மேலோட்டமாக மென்மையாக சின்ன சின்ன விமர்சனங்கள் இருக்கின்றன. சாருவின் விமர்சனத்தை எதிர்கொள்ளும் துணிவு என்பது சுரேஷ் கண்ணன் கட்டுரையை இருப்பை கூட ஒப்புகொள்ளாது. ஜால்ரா பதிவுகளை மட்டுமே அது அங்கீகரிக்கும்.

நேர்மையும், விமர்சனத்திற்கு இடமளிக்கும் ஜனநாயகம் இல்லாமலேயே கூட சாருவின் எழுத்து முக்கியமானது என்றுதான் நினைக்கிறேன். ஒரு ஒப்புமை கொண்டு விளக்க வேண்டுமானால் சாருவின் எழுத்தில் நேர்மை என்பது ராணுவ அதிகாரியிடம் இருக்கும் அகிம்சை மாதிரி. அதே நேரம் ஞாநியை எடுத்துக் கொண்டால் அவர் எழுத்து நேர்மையானது, விமர்சனங்களை கணக்கில் கொள்வது. நான் என் பார்வையில் சாருவின் எழுத்துக்களை, ஞாநியின் எழுத்துக்களை விட முக்கியமானதாக பார்க்கிறேன். ஞாநியின் எழுத்துக்களை ஒரு ஆபத்தாக பார்க்கும் அளவிற்கு, சாருவின் எழுத்தை ஆபத்தானதாக நான் பார்க்கவில்லை. ஆனால் சாருவிடம் இல்லாத பண்பை (தெரிந்து கொண்டே) இருப்பதாக மூத்த எழுத்தாளர்கள் புளுகுவது அசிங்கம் அல்லவா? (நான் குறிப்பிட்ட ஒரு விஷயம் மட்டுமல்ல, இலக்கிய சூழலில் பல விஷயங்கள் பலருக்கு தெரியும். பட்டியலிடும் அவசியம் இந்த சந்தர்ப்பத்தில் இருப்பதாக தோன்றவில்லை.

(பெரிதாகி விட்டதால் மீது அடுத்த பதிவில்).

Post a Comment

---------------------------------------
Site Meter