ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Tuesday, March 29, 2005

காத்தடிக்குது.... காத்தடிக்குது....!

கானா - ஒப்பாரியாய் கொண்டாட்டம்!

"சிங்கள பைலா பாடல்கள் போல, கானா ஒரு கலாச்சார அடையாளம். அடித்தட்டு மக்களின் குதூகலம். பச்சையப்பன் கல்லூரி B மைதானத்தில் கிரிக்கெட் ஆடப்போகும் போது, டாஸ் ஜெயித்ததிலிருந்து, பேட்டிங் எடுத்தோமானால், நம்மணி வீரர்களை உற்சாகப் படுத்த தொடர்ச்சியாக 3 -4 பேர் மாற்றி, மாற்றி கானா பாடுவோம். கானாவின் மிக முக்கிய அம்சமே participation. தனிநபர் கானா பாடினாலும், சுற்றியிருப்பவர்கள், கை தட்டியும், ஊடாக பாடிக்கொண்டும், சில சமயங்களில் தாளம் போட்டுக் கொண்டிருத்தலும், வேறெந்த இசைவடிவத்திலும் சாத்தியமில்லை. கர்நாடக கச்சேரிகளுக்கு போனால், பாகவதர் பாடிக்கொண்டேயிருப்பார். நம் பக்கத்திலிருப்பவர் கொட்டாவி விட்டுக்கொண்டோ, சாப்பிட்ட போண்டாவின் பெருமைகளை பேசிக்கொண்டோ இருப்பார். ஆனால், கானாவில் அது கிடையாது. எல்லோரின் பங்குதலும் உண்டு. இசை கருவிகள் என்று எதுவுமில்லை. மேஜை, பஸ்ஸின் ஏறுமிடம், பஸ்ஸில் உச்சி, டிபன்பாக்ஸ், கரவோசை, ஷூ சத்தம் என எதுவேண்டுமானாலும் செட்டாகுமாறு பாடல்கள் அமைய வேண்டும். மிக எளிமையான சந்தங்கள் அடங்கியிருக்க வேண்டும்"

---நாராயணன்.



கானா பாடல்கள் பற்றி நாராயணன் எழுதி வருகிறார். இன்னும் எழுதுவதாக, தனது கல்லூரி கால கானாக்களை பதிவதாகவும் சொல்லியிருக்கிறார். நாரயணணை நினைக்க பொறாமையாய் இருக்கிறது. கானா கலந்த கல்லூரி வாழ்க்கை! ஒவ்வொரு கல்லூரி நினைவும் ஏதாவதொரு கானாவுடன் பின்னி கிடக்கும். அவரே ஒரு இன்ஸ்டண்ட் கானா பாடகர் என்றும் தெரிகிறது. பஸ் பயணம், சண்டைகள், ('ஆரோக்கியமான') ஈவ்டீசிங் தொடங்கி எல்லா கல்லூரி நிகழ்வுகளின் நினைவுகளும் கானா வரிகளுடன், இளயராஜாவின் ஃபுயுசன் செய்த இசை போல பிரித்தெடுக்க இயலாமல் கலந்திருக்கும். அனுபவத்தை பதிந்த கேசட் போல், ஒரு கானாவை அவிழ்த்து விட்டு நினைவுகளை மீட்டி நனவிடை தோயலாம். திருநெல்வேலியிலும், தூத்துகுடியிலும் கழிந்த என் கல்லூரி வாழ்க்கையின் குறைந்த அளவிலான குறிப்பிடத் தகுந்த சம்பவங்களும், சுவாரசியங்களும் கானா போன்ற எந்த கலை வடிவத்துடனும் பிணைக்கப் படவில்லை. நல்லவேளையாய் இளையராஜா எத்தனையோ பாடல்களை படைத்திருக்கிறார்.

இப்படி கானாவுடன் நேரடி உறவு வைத்திராமல், ஒரு செவிமடுப்பாளன் என்ற நிலையில் சில கருத்துக்களை கூற நினைக்கிறேன். கானா குறித்த என் அத்தனை அறிதல்களும் இரண்டாம் கை, இரண்டாம் கைகளிலிருந்து கிடைத்த மூன்றாம் கை அனுபவங்களாகவே உள்ளன. நந்தனம் கலை கல்லூரியில் படித்த நண்பன் விவரித்தது, விகடனில் படித்த இரண்டு கட்டுரைகள், கேசட்டில் கேட்ட சில கானாக்கள், பிறகு அண்ணன் தேவா திரையிசையில் உருவாக்கிய கானா அலையில் எல்லோருக்கும் தெரிந்த பாடல்கள் என்ற படியே கானா அனுபவம் எனக்கு அறிமுகமாகியிருக்கிறது. இன்று கானாவுக்கு அங்கிகாரங்கள் கிட்டி, அதில் ஆராய்ச்சி செய்வதும், கட்டுரைகள், புத்தகங்கள் வெளிவருவதையும் அறிகிறேம். அது எதையும் படிக்காமல், இங்கே இணையத்தில் பேசப்பட்ட ஆசாத்தின் புத்தகத்தை கூட பார்க்காமல், மேலோட்டமான என் அறிவை வைத்து, குறிப்பாய் சினிமாவின் கானா பாடலகளை அவதானித்து, கானாவின் சில பண்புகள் குறித்து எழுதுவதே இந்த பதிவின் நோக்கம்.

நாரயணனும் சொன்னதுபோல் கானாவின் வேர்கள் சென்னை நகரின் இறுக்கமான சேரிகளில் இருந்தாலும், அதை சென்னை நகரத்து (கலைக்)கல்லூரிகளே பிரபலப்படுத்தியது. விவேகாநந்தா, லோயலா போன்ற எலீட் கல்லூரிகளுக்கு இதில் எந்த பங்கும் இருக்காது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பச்சையப்பா கல்லூரி, அதன் தலித் மாணவர்கள் இந்த பிரபலப்படுத்துவதில் பெரும் பங்கு வகித்ததாக என் எண்ணம். அங்கிருந்த புறப்பட்ட கூட்டமே பின்னர் 'தலைவாசல்' படம் மூலம் சினிமாவில் கானாவை அறிமுகப்படுத்தியது என்று நாராயணணும் சொல்கிறார். ஆனால் இந்த கல்லூரி கானா என்பது நான் இங்கே அணுக விரும்பும் தேவா கானாவிலிருந்து சில பண்புகளால் வேறுபடுவதாக நினைக்கிறேன். (முதலில் சேரி கானா என்று சொல்லலாமா என்று யோசித்து பின்னர் இந்த தருணத்தில் தோன்றியபடி தேவா கானா என்று அழைக்கிறேன்.) 'தலைவாசல்' படத்தில் அறிமுகமானது ('நான் தினந்தோறும் ரிக்ஷா ஒட்டி பிழைக்கிறேன்' தவிர்த்து) கல்லூரி கானாவெனில், இந்த தேவகானத்தை சினிமாவில் அறிமுகபடுத்தி பிரபலபடுத்தி ஒரு புரட்சி செய்தவர் அண்ணன் தேவா. இந்த தேவா கானாவில் இருந்து கல்லூரி கானா கொஞ்சம் வேறுபடுவதாக தோன்றினாலும், சும்மா வார்த்தைகளில் விளையாடாமல் பொத்தாம் பொதுவாய் எல்லாவற்றையும் கானா என்றே சொல்லிச் செல்கிறேன்.

பல வருடங்கள் முன்பு வி.அரசு கானா பாடல்கள் குறித்து பேசும் போது, கானாவின் தோற்றமாக சொன்னது நினைவுக்கு வருகிறது. பொதுவான எலீட் கலாச்சாரத்திற்கு மாறான ஸபால்டர்ன் மக்களின் கலாச்சாரத்தில் சாவு என்பது ஒரு கொண்டாடப்படும் நிகழ்வாக இருப்பதை அறியலாம். இது சென்னை மட்டுமின்றி, தமிழகம் முழுவதுமே (எனக்கு தெரிந்து ஆந்திராவிலும்) காணக்கூடிய ஒரு பண்பு. சாவு, அதுவும் வயதான சாவு விழுந்த உடனேயே சாராயத்திற்கும், மோளத்திற்கும் ஏற்பாடாகும். பொணம் எரிக்கப் படும்வரை, டப்பாங்கூத்தும், ஆட்டமும், சாராயமும் வெள்ளமாய் பாய்ந்துகொண்டிருக்கும். சாவு இவ்வாறு கொண்டாடப்படும் நிகழ்வாவது குறித்து சமூகவியல் ஆராய்ச்சிகள் ஏதாவது இருக்கிறதா என்று தெரியவில்லை. 'இந்த உலக வாழ்க்கை துன்பத்தாலும், பாவத்தாலும் நிறைந்ததால், அதிலிருந்து விடுவிக்கும் சாவு கொண்டாட தகுந்தது' என்ற எளிய மதத்தனமான தத்துவ காரணம் கொண்டு இதை விளக்க முடியும் என்று தோன்றவில்லை. (ஆப்பிரிக்க சமுதாயங்கள், பல ஆதிவாசி சமுதாயங்கள் கொண்டிருக்கும் பல சாவு சடங்குகளுடன் ஒப்பிட்டு இதை புரிந்து கொள்ள முயலலாம்.)

சென்னை சேரிகளில் சாவு விழுந்தால் பல காரணங்களுக்காக பிணத்தை இரவு முழுவதும் வைத்திருக்க நேர்கிறது. அந்த இரவுப் பொழுதை கழிக்கும் விதமாய் உருவாக்கப்பட்டே கானா பிறந்ததாய் அறிகிறேன். இது நான் அணுகப் போகும் கானாக்களின் முக்கிய இலக்கணத்தை புரிந்துகொள்ள உதவுகிறது. இழவு வீட்டில் அந்த கணத்தில் தோன்றிய வார்த்தைகளால், கைகளை தட்டி உருவாக்கிய தாளத்துடன் பாடப்பட்டு கானா உருவாகியது என்று கேள்விப் படுகிறேன். இன்று வரை கானா தோன்றிய விதமாக இந்த வறலாற்றையே கற்பித்துக் கொண்டிருக்கிறேன்.

இதன் காரணமாகவும், பின்னர் கானா புழங்கிய எல்லா தளங்கள் காரணமாகவும், கானாவின் வரிகளும் மெட்டும் ஒரு கணநேர படைப்பாக்க தன்மையுடன் வெளிப்பட்டாக வேண்டியிருக்கிறது. அதில் அர்த்தம் முக்கிய இடத்தை பெற முடியாது. அர்த்தத்தை விட சந்தத்திற்கே முக்கியத்துவம் இருக்க வேண்டியது காட்டாயமாகிறது. அர்த்தம் சந்தத்தை பற்றிகொண்டு உருவாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

இந்த தன்மையுடைய கானா கல்லூரிகளில் புகுந்து அமோக வரவேற்பை பெற்றது ஆச்சரியத்திற்குரியது அல்ல. கல்லூரி மாணவர்கள் தங்கள் படைப்புத்திறனை காட்ட இதை விட வேறு சிறந்த பாடல் வடிவம் இருக்க முடியுமா? 'தடவட்டுமா விக்ஸு, நீ படிக்கிறியா செக்ஸு?' என்பது போல் கணநேரத்தில் பாடலை உருவாக்கி, மெட்டும் அமைத்து, டிபன் பாக்ஸில், பஸ் சுவரில் தாளமடித்து உடனே சந்தர்பத்திற் கேற்றவாறு பாடமுடியும்.

சேரிகளில் வாழும் மக்கள் தங்கள் முந்தய கிராம அடையாளத்தை நகர வாழ்க்கையில் நீட்டிக் கொள்வது போல், அல்லது நகர வாழ்க்கைக்கு ஏற்ப இசை வடிவம் பரிணமிப்பது போல், டப்பாங்குத்தை (நாட்டுபுற இசையை) ஒத்த, அதன்மீது நகர்புற முலாம் பூசப்பட்ட மெட்டிலேயே கானா அமைகிறது. என்றாலும் சாதாரணமாய் டப்பாங்குத்து/நாட்டுபுற இசை என்று அழைக்கப்படும் இசையிலிருந்து கானா மெட்டு தெளிவாக வேறுபடுகிறது. கானா தனது வேர்களை டப்பாங்குத்தோடு பொருத்திகொள்கிறது என்று மட்டுமே தோன்றுகிறது. கானாவின் பண்புகளான கணநேர படைப்பாக்கத்திற்கு இந்த வகை இசையே பொருத்தமாக இருக்கிறது. டப்பாங்குத்தை விட 'டண்டணக்கா' தாளம் இன்னும் வீரியத்துடன் கானாவில் ஒலிக்கிறது. பல புதிய பீட்டுகளை போட்டும் பாடமுடிகிறது.

'ஆக கிராமத்திலிருந்த புலம் பெயர்ந்த அடித்தட்டு மக்களின், நகர்புற வாழ்க்கைக்கு ஏற்ப, பரிமாண வளர்ச்சி அடைந்த ஒரு இசை வடிவம்தான் கானாவா' என்று கேட்டால், அது மட்டும் கானாவை பற்றி விளக்க போதுமானாதாய் இல்லை என்று தோன்றுகிறது. கானாவின் முக்கிய பண்பாய் இருப்பது ஒப்பாரித்தனமான அதன் கொண்டாட்டமே என்று எனக்கு தோன்றுகிறது.

இந்த பண்பு கல்லூரி மாணவர்களால் உருவாக்கப்படும் கானாவில் எந்த அளவு இருக்கிறது என்று தெரியவில்லை. நாரயணன் போன்றவர்களால் பதில் சொல்ல இயலக்கூடும். தேவா அவர்களால் திரை இசையில் புகுந்து, பிரபலமான கானாக்களின் முக்கிய பண்பாக இந்த ஒப்பாரித்தனமான கொண்டாட்டமே இருப்பதாக தோன்றுகிறது.

இங்கே கவனிக்க வேண்டியது. திட்டமிட்டு எழுதப்பட்டு, திட்டமிட்டு இசையமைத்து பதியப்பட்டு சினிமாவில் கானா பாடல் உருவாக்கப் படும் போது, சென்ற பத்திகளில் குறிப்பிட்ட கணநேர படைப்புதன்மை போன்ற பண்புகள் காணாமல் போகவேண்டியிருப்பதை கவனிக்க வேண்டும். தாளமும் தன் எளிமையை துறந்து ஆர்பாட்டமாவதுடன், பிண்ணணி இசையும் சேர்ந்துகொள்கிறது. ஆயினும் தேவா இசைத்த கானாவின் தன்மையாய் இருப்பது அதன் ஒப்பாரித்தனமான கொண்டாட்டம்தான்.

உதாரணமாய் முதலில்(?) தேவா இசையமைத்து, பாடி பிரபலமான 'கவலைப் படாதே, சகோதரா!' பாடலை எடுத்துக் கொள்வோம். பொதுவாய் பாடலகளுக்கு, அதுவும் திரை பாடலுக்கு, தேவையான கல்சர்ட் குரலாய் இல்லாத ஒரு குரல். இதில் பெரிய புதுமை இல்லை. ஏற்கனவே இளயராஜா சுருதியுடன் ஒத்துவராமலோ, சுருதி சுத்தமாய் இல்லாமலேயோ பாடி பல அற்புத பாடல்களை தந்துள்ளார். (ஒரு உதாரணம் 'மெட்டி ஒலி காற்றோடு..!'). மட்டுமில்லாமல் 'அண்ணே..அண்ணே..' போன்ற பாடல்களில் ரஸ்டிக் குரல்களை போட்டு, பிரபலபடுத்தி வழக்கமான நியதிகளை உடைத்திருப்பார். ஆனால் இந்த பாடல் அவைகளில் இருந்தும் வேறுபடுகிறது.

இந்த பாடலில் தேவா ஒரு உச்ச ஸ்தாயில் பாட்டை துவங்குகிறார். உச்ச ஸ்தாயில் என்றால், அது டி.எம்.எஸ் 'ஏரி கரை மேலே..' என்று பாடும் உச்ச ஸ்தாயி இல்லை. பாட்டிற்கும், மெட்டிற்கும் 'தேவைப்படாத'/'பொருந்தாத' என்று நினைக்கக் கூடிய ஒரு ஹை பிட்ச்! இங்கேதான் வழக்கமான சாஸ்திரிய சங்கீதம் பரிச்சயமானவரும், அதற்கு தன் ரசனையை பழக்கப் படுத்திகொண்டவரும் முகத்தை சுளிக்கக் வேண்டி வரும். அப்படி ஒரு உச்சஸ்தாயில் தொடங்குவது மட்டுமல்ல, 'யம்மா யம்மா ..'என்று பல்லவியிலேயே (சரணத்தில் 'நூறு ரூவா நோட்ட பாத்தா...!') எதிர்பாராத, மெட்டிற்கு சற்றும் பொருந்தவில்லை என்று சாதாரணமாக இசையை ரசிக்கும் மனம் கருதக்கூடிய உச்சத்தில் போய், 'எதுக்காக இப்படி கத்த வேண்டும்?' என்று வால்யூமை குறைக்கவும், காதை பொத்தவும் வைக்கும். இந்த உச்சக் குரல் ஒரு சோகத்தை வெளிப்படுத்தும் புலம்பலுக்கானது. அழுகை கத்தல் இவற்றை ஒத்த ஒப்பாரித் தன்மையை கொண்டது. ஆனால் பாட்டோ இதற்கு மாறாக ரொம்ப ஜாலியானது. பிண்ணணி 'டமுக்கு டப்பான்' இசையும், பாடலின் ஆதார சுருதியும் சந்தோஷத்திற்கானது. வாழ்வை இன்பத்தை கொண்டாடும் தன்மை கொண்டது. இதைத்தான் ஒப்பாரியாய் கொண்டாடுதல் என்று குறிக்கிறேன்.

எனக்கு தெரிந்து தேவா (வேறு யார் கானா பாட்டளித்தார்கள் அதனால் சினிமா) அளித்தததில் கானா பாடல்கள் என்று அடையாளப்படுத்தப் படும் அத்தனை பாடல்களிலும் இந்த தன்மையை பார்க்க முடியும். 'தேவையற்றதொரு' உச்ச குரலில், ஒப்பாரியாய் ஒரு புலம்பல்தொனி கலந்து வெளிப்படும் கொண்டாட்டததையே கானாவின் முக்கிய இலக்கணமாக நான் பார்கிறேன். இங்கே ஒன்றை நினைவில் வைத்துகொள்ள தோன்றுகிறது. வழக்கமான டப்பாங்குத்திலிருந்து விலகி வித்தியாசமாக தேவா சில பாடல்களை தந்திருப்பார். உதாரணமாய் 'சிவ சிவ சங்கரா..' 'திருப்பதி ஏழுமலை வெங்கடேசா!', யப்பா, யப்பா அய்யப்பா..' இந்த பாடல்களை எந்த விதத்திலும் கானா பாட்டு என்று சொல்லமுடியாது. கானாவின் மேற்சொன்ன எந்த தன்மையும் இல்லாதவை இவை. நாரயணன் பேசும் கல்லூரி கானாக்களை ஒருவேளை சிங்கள பைலா பாடல்களுடன் ஒப்பிட முடியலாம். ஆனால் நான் இங்கே அணுகும் கானாக்களின் எதிர்பிசை தன்மை காரணமாக, என்னால் சிங்கள பைலா பாடல்கள் போன்றவற்றுடனும் கூட கானாவை ஒப்பிட முடியவில்லை. உதாரணமாய் இப்போது சினிமாவில் நகைச்சுவை நடிகராய் மாறியிருக்கும் பாடகர் கர்ணா, சொற்களே இல்லாமல் வார்த்தைகளை போட்டு பாடல்கள் உருவாக்குவார். அது போன்றவற்றையே பைலா பாடல்களுடன் ஒப்பிட முடியும் என்று தோன்றுகிறது.

இந்த இலக்கணத்துடன் வந்த திரைகானா பாடல்களிலேயே மிக அற்புதமான பாடலாக எனக்கு 'காத்தடிக்குது.. காத்தடிக்குது..' பாடல் தெரிகிறது. பாடலின் வரிகள் (ஒரு திரைப்பாடலாய் திட்டமிடப் பட்டிருந்தாலும்) மிக எதேச்சைதன்மையுடன் வெளிப்பட்டதாக உள்ளது. 'வடை சுடாதடா நவாசு' போன்ற தொடக்க வசனங்களும், வழக்கமான முறையில் இல்லாமல் திடீரென தொடங்கும் பாடலும், மற்ற வரிகளும் எதேச்சையாய் சிக்கிய வார்த்தைகளில் செய்யப்பட்டது போல், சந்தத்தை முன்வைத்து இசையும் வரிகளும் எதிர்பாராமல் போகிறது. (ஏற்கனவே இருந்த கானாவை அடிப்படையாய் வைத்து இந்த பாட்டு உருவாகியிருக்கலாம். எனக்கு விவரம் தெரியவில்லை.)

'கடிச்சிகினும் ஊத்திக்கலாம் ஊத்திக்கினு கடிச்சிக்கலாம், ,
போத்திக்கினு படுத்துக்கலாம், படுத்துக்கினும் போத்திக்கலாம்'

சுத்த 'நான்சென்ஸாக' தெரியும் இந்த வரிகள் உலக வாழ்க்கையின், வாழ்வதின், நாம் கொள்ளும் நியதிகளின் அபத்தத்தை முன்வைப்பதாக தெரிகிறது. அதை தொடரும் 'காத்தடிக்குது... காத்தடிக்குது..' இந்த அபத்தமான வாழ்வில் கிடைக்க கூடிய (சிற்)இன்பத்தை குறிப்பதாகவும் வாசிக்க முடிகிறது. அதுவும் சமத்துவமாய் அனைவருக்கும் கிடைக்க கூடிய இன்பம் 'காத்தடிக்குது!'. வாழ்வின் அபத்தத்தை, நிகழ்கால இன்பத்தின் முக்கியத்துவத்தையும் ஒரு புலம்பலாய் ("பாவம் அந்த வயித்துக்கு பசிக்க சொல்லி தந்ததாரு.. ஊத்திக்கினு கடிச்சுக்கலாம்.. கடிச்சுக்கினு ஊத்திக்கலாம்...!") இந்த பாடலில் இந்த வரிகள் சொல்வது போல் தீவிரமாய் வேறு எதுவும் சொல்வதாக எனக்கு தோன்றவில்லை. (இப்படியெல்லாம் தோன்றுவது 'கொஞ்சம் ஓவரோ' என்று எனக்கே சந்தேகம் இருந்தது. ஆனால் அப்படி ஒரு சந்தேகத்தையும் வெகு காலம் வைத்திருந்து, பரிசீலித்து யோசிக்கும் போது, பாடல் வரிகள் அவ்வாறு உத்தேசித்து எழுதியிரா விட்டாலும், இப்படி ஒரு வாசிப்பு எனக்கு சாத்தியமாகிறது.)

இசையமைப்பில் தேவா ஒரு மாபெரும் ரகளை பண்ணியிருப்பார். டாப்பாங்குத்தில் புரட்சி செய்த இளையராஜவை எல்லாம் தூக்கி சாப்பிட்டு விளையாடியிருப்பார். பாடல் முடியும் போது வரும் பிண்ணணி அடிகளை கவனிக்கவும். பாடல் முழுவதும் ஒரு சோகத்தை, அபத்தத்தை உள்ளடக்கி, புலம்பும் பாவனையில் பெரும் கொண்டாட்டமாய் விரிகிறது.

இந்த பாடலுக்கு இன்னொரு முக்கியமான அம்சமும் உண்டு. திரைப்படம் என்ற கலை வெளி அதன் வணிகதன்மை, மற்றும் சமூகத்தின் பொது மதிப்பீடு காரணமாய் எதையும், குறிப்பாக மக்கள் கலைகளை, கொச்சைபடுத்தியே வெளிப்படுத்தும். கானா இசை திரையிசையில் குறிப்பிட்ட இடத்தை பெற்றாலும், அவ்வாறு இடம்பெறுதல் 'தரம்குறைந்ததாக', ஒரு சமரசமாகவே பார்க்க படுகிறது. கானா பாடல் என்பது ஹீரோ சோகமாய் இருக்கும் போதோ, அல்லது வேறு காரணங்களுக்காகவோ, படத்தின் துணை பாத்திரங்கள் ஹீரோவை குஷிபடுத்த, கதாநாயகியை போல அவ்வளவு 'கண்ணியமில்லாத' ஆட்டகாரிகளுடன் சேர்ந்த ஆடலுடன், பாடப்பட்டு காட்சியமைக்கப் பட்டிருக்கும். 'காத்தடிக்குது..' பாடலின் காட்சியமைப்பு இந்த விஷயத்தில் மாறுபட்டிருக்கும். பிரபுதேவா என்ற அற்புத ஆட்டக்காரன், தேவாவின் இசைக்கு ஏற்ப இன்னோரு ரகளையை நடத்தியிருப்பார். பாட்டும் அதன் இசையும் எததனை கொண்டாட்டத்தை வெளிப்படுத்துகிறதோ, அதே அளவு கொண்டாட்டத்தை பாடலின் காட்சியமைப்பும் வெளிப்படுத்தியிருக்கும். எல்லா வகையிலும் இதனுடன் ஒப்பிடக் கூடிய ஒரு பாடலை என்னால் தமிழ் திரையிசையில் காணமுடியவில்லை. சென்ற நூற்றாண்டின் பல சிறந்த பாடல்களில் ஒன்றாக நான் இந்த பாடலை தெரிவு செய்கிறேன்.

பொடிச்சி எதிர்பிசை குறித்த தன் பதிவில், 'தமிழில் எதிர்பிசை ஏன் உருவாகவில்லை?' என்று கேட்டிருப்பார். நானும் என் பங்கிற்கு கே.ஏ. குணசேகரன் தொடங்கி PWGயின் புரட்சி பாடகர் கதார் வரை பேசியிருப்பேன். ஆனால் அவை எல்லாமே நாட்டுப் பாடல் என்ற வடிவத்தை, அதன் அழகியலை அப்படியே கொண்டு, உள்ளடகத்தில் மட்டுமே எதிர்ப்பு என்ற தளத்தில் (பிரச்சாரமாய்) வெளிப்படுவதாக தோன்றுகிறது. பல வித்தியாசங்கள் இருந்தாலும், எலீட்தன்மையோடு வேறு பட்டாலும், நாட்டுபுறப்பாடலின் அழகியல் ஏதோ ஒரு விதத்தில் சாஸ்திரிய மற்றும் தரப்படுத்தப் பட்ட இசை வடிவங்களை 'ஒத்து இயைந்த கரகரப்புடனேயே' இருக்கும். அதனாலேயே 'மேல்மட்ட' ரசனைக்கும் ஏதோ விதத்தில் உவப்பானதாகவே இருக்கிறது. கானா பாடல்கள் தரப்படுத்தப் பட்ட இசைகளுக்கு நேரெதிரான அழகியலை கொண்டிருப்பதாகவும், எலீட் ரசனையை உறுத்துவதாகவும், அதன் அழகியல் நியதிகளை குப்புற போடுவதாகவும் தோன்றுகிறது, அந்த வகையில், சினிமாவில் அது கொச்சைபடுத்தப் பட்டாலும், கானா பாடல்கள் மட்டுமே தமிழின் எதிர்பிசையாக எனக்கு தோன்றுகிறது.

பின் குறிப்பு 1: பல கானா பாடல்கள் பெண்கள் குறித்த மலினமான கருத்துக்களை முன்வைப்பதாகவும், வழக்கமான 'பெண்கள் ஏமாற்றுபவள்' , 'சீறும் பாம்பை நம்பினாலும்,சிரிக்கும் பெண்னை நம்பகூடாது' போன்ற ஆட்டோ வசனங்களை ஒத்த 'தத்துவங்களை' கொண்டதாகவும் இருப்பதை காணலாம். இதற்கு முக்கிய காரணம் ஆண்களாலேயே கானா படைக்கப்படுவதும், எல்லா சமூகங்களை போல அடித்தட்டு சேரி சமூகமும் ஆணாதிக்கமாய் இருப்பதுவும் என்று தோன்றுகிறது. இது உள்ளடக்கதுடனான ஒரு பிரச்சனையே அன்றி, வடிவம் அழகியல் சார்ந்த பிரச்சனையாக எனக்கு தோன்றவில்லை.

பின் குறிப்பு 2: நண்பர் சுந்தர மூர்த்தி 'மழை பெஞ்சி ஊரெல்லாம் தண்ணி' என்ற நாட்டு பாடலை அடியொற்றி, பாடப்படும் பாடல்கள் 'கானா வகையில் சேருமா?' என்று கேட்டிருந்தார். மேலே உள்ள எனது விளக்கப்படி அதை கானா என்ற genreயில் சேர்க்க முடியாது என்றே நினைக்கிறேன். சுந்தரமூர்த்தியின் கேள்வியின் காரணமாகவே என் அவதானிப்புகள் இந்த பதிவாக மாறியுள்ளது. அதற்கு அவருக்கு நன்றி!

Post a Comment

---------------------------------------

Tuesday, March 22, 2005

முட்டி கொள்ளல்!

பொடிச்சி என் 'செருப்படி' பதிவில் எழுதிய பின்னூட்டத்தில் தன்னை குறிப்பிட்டதாக வெங்கட் எடுத்துகொண்டு (பொடிச்சி அதை மறுத்திருக்கிறார்), எழுதிய பதிவிற்கான எதிர்வினைகளுக்கு, தனது விளக்கத்தை ஆயாசத்துடன் தந்திருக்கிறார். தமிழக அரசியல் வறலாற்றில் முதன் முறையாய் ஊடகங்களால் பெரிதும் (அதுவும் எதிர்மறையாய் பேச வாய்பளிக்கும் அரசியலை கைகொண்டபின்) பேசப்படுபவராய் 'வளர்ந்துள்ள' ஒரு தலித் தலைவரான திருமாவளவனை, பொதுக்களத்தில் ஒருவர் சாதிய வசை என்று நான் நினைக்கும் வகையில் வர்ணித்ததற்கு, குறைந்த பட்ச எதிர்வினையாவது வைக்க வேண்டும் என்று நினைத்து, அதை கண்டித்து எழுதிய ஒரே காரணத்திற்காக என் ஒவ்வொரு வாக்கியத்தையும் விளக்கி இன்னும் எழுதிக்கொண்டிருக்கிறேன். எத்தனை ஆயாசம் (ஆயாசம் மட்டுமா?) தரும் செயல் என்பதை வாசிப்பவர்கள் ஊகித்து கொள்ளட்டும்.

என் பதிவிற்கு, நான் எழுதியதை நேரடியாய் எதிர்கொள்ளாமலும், நான் சொல்லாததை சொல்லியும், என் கருத்துக்களை திரித்துமே எதிர்வினைகள் வந்துள்ளன. (நண்பர்களாய் ஏதோ ஒரு விதத்தில் இதுவரை உரையாடியவர்களின் எதிர்வினையை மட்டும் குறிப்பிடுகிறேன். என் பெயரில் போலி மறுமொழி எழுதுவது போன்ற செயல்களை இங்கே பேசவில்லை.) அவையனைத்தையும் எதிர்கொள்வதோ, அல்லது அதை முன்வைத்து முட்டிக்கொள்வதோ சாத்தியமில்லை. அவைகளை விட்டுவிட்டு வெங்கட் (எனக்கு எழுதியதை) மட்டும் எதிர்கொள்ள காரணம் உண்டு.

சில நாட்கள் முன்பு நான் மதிக்கும் மது கிஷ்வர் 'தமிழ் வெறி' என்று உளறி கொட்டியிருந்தது குறித்து மாலன் மற்றும் சுந்தர மூர்த்தி எழுதியிருந்தனர். அது எனக்கு ஒரு முக்கியமான உதாரணம். ஏனெனில் மது கிஷ்வர் போன்ற ஒருவரே அப்படித்தான் சிந்திக்க முடியும் என்பது இந்திய சமூகத்தில் புரையோடியுள்ள வட இந்திய ஆதிக்க வெறியின் ஒரு தெளிவான அடையாளம். நான் பல தளங்களில் எதிர்கொள்ள நேர்ந்த பச்சையான பல ஹிந்தி வெறியர்கள் எனக்கு முக்கியமல்ல. நான் மதிக்கும் மது கிஷ்வரே அத்தகைய சமூக உளவியல் நோய்க்கு பலியானவர் என்பதே எனக்கு கவனிக்க தகுந்த உதாரணம்.

அதே போல வெங்கட் எழுதும் பல விஷயங்களை நான் முக்கியமாய் நினைக்கிறேன். அதை வாசித்து தனிப்பட்ட முறையில் நான் பயனடைந்திருக்கிறேன். அவருடன் ஒப்பிட்டு சொல்லக்கூடிய வகையில் அவரின் எழுத்து தளத்தில் வேறு யாரும் எழுதுவதாக தெரியாததால் அதன் முக்கியத்துவம் இன்னும் அதிகமாகிறது. அப்படி பட்டவர் எவ்விதமாய் ஒரு சமூக பிரச்சனை குறித்து கருத்து வைத்திருக்கிறார், அணுகிறார், எதிர்கொள்கிறார் என்பது மிக முக்கியமானது. அதனாலேயே இந்த முட்டிகொள்ளும் வேலையை செய்கிறேன்.

இதை படிக்கும் முன் வெங்கட்டின் பதிவில் நான் எழுதியதை ஒரு முறை படிக்கலாம்.

1. முதல் பிரச்சனை 'பாப்பான்..பறையர்..' ('ன்' 'ர்' சுய நினைவுடன் இடப்பட்டிருக்கிறது) என்று அடையாளங்களை முன்வைத்த வசைகளை ஒப்பிடுதல்.

"நாஜி என்று விளிப்பதற்கும் பார்ப்பான் என்று விளிப்பதற்கும் இடையில் இருக்கும் அடிப்படை வேற்றுமையை சாதுரியமாக மறைத்து " நான் பேசுவதாக வெங்கட் சொல்கிறார்.

வெங்கட்தான் நான் எழுதியதை சாதூர்யமாக திரிப்பதாக தெரிகிறது. அவர் சொல்வதுபோல் 'பாப்பார புத்தி' என்று சொல்வதையும். 'நாஜி புத்தி' என்று சொல்வதையும் நான் ஒப்பிடவே இல்லை.

இந்த விஷயத்தை பொத்தாம் பொதுவாக பேசமுடியாது. ஒரு குறிப்பிட்ட சொல் அந்த சந்தர்பத்திற்கு ஏற்பவே அதன் பொருளை பெறுகிறது, அந்த சந்தர்பத்தை முன்வைத்து மட்டுமே அதன் வசைதன்மையை பேசமுடியும் என்பதே என் தரப்புவாதம். ஒரு 'அலுவலகத்தில் திருடும்' உதாரணத்தில் 'பாப்பார புத்தி' என்று சொல்வது நியாயமற்றதாய் இருப்பதையும், வேறு சந்தர்ப்பத்தில் (சாப்பாடு விஷயத்தில்) அதன் பொருள் வேறுபடுவதையும் ஒரு எளிய உடனடியாய் தோன்றிய உதாரணமாய் குறிப்பிட்டேன். இன்னும் பொருத்தமான உதாரணங்களை தரமுடியும். 'பாப்பார புத்தி'என்று நான் எதை குறிப்பிட்டேன் என்பதற்கு என் விளக்கத்தையும் கொடுத்த பின்பு, இப்படி 'பாப்பார புத்தி' என்று சொல்வதையே (அதன் தர்கத்தை எதிர்கொள்ளமல்) இதுவும் ஒரு சாதிய வசைதானே என்று அறிவுகொழுந்துகள் லாஜிக் போடுவதை பேசும்போதே 'நாஜி புத்தியுடன்' ஒப்பிட்டேன். அதாவது 'பாப்பார புத்தி' 'நாஜி புத்தி' இரண்டின் ஒற்றுமை வேற்றுமையல்ல நான் சொல்வது. நாஜித்தனம் என்று ஒரு விஷயம் குறித்து பேசத் தொடங்குவதையே ஒருவர் 'இனவெறி' என்று குறிப்பிடுவது போல, 'பார்பனியம்' என்று ஒன்றை பேசுவதையே 'சாதியமாக' பார்பதையே நான் குறிப்பிட்டேன். மற்றபடி இரண்டையும் ஒப்பிடவில்லை.

ஒருவேளை நான் விளக்கம் எதுவும் தராமல் "'பாப்பார புத்தி' என்று திட்டுவது 'நாஜி புத்தி' என்று சொல்வதை போல" என்று மட்டையடித்திருந்தால் வெங்கட் எழுதியதில் நியாயம் இருந்திருக்கும். ஒரு சின்ன மறுமொழியில் கூட நான் அளித்த விளக்கங்களை கண்டுகொள்ளாமல், பின்னால் வரும் 'நாஜி புத்தி' ஒப்புமையை மட்டும் எடுத்து போட்டு வேறு எதையோ சாமர்த்தியமாக பேசுவது குறித்து மேலே சொல்ல எதுவும் இல்லையெனினும், "இதையும் நீங்கள் பாப்பார லாஜிக் என்று சொல்வீர்களா என்று தெரிந்துகொள்ள ஆசை. " என்று வெங்கட் கேட்பதற்கு பதில் "இல்லை". மீண்டும் சொல்லவேண்டுமானால் இது தர்கத்தில் பொதுவாய் ஒருவர் காட்டக்கூடிய ஒரு சாமர்த்தியம் அல்லது சாமர்த்தியம் என்று நினைத்து செய்யும் நேர்மையின்மை என்று மட்டுமே நினைக்கிறேன்.

ஆனால் கவனிக்கப் வேண்டியது அது அல்ல. என் ஒவ்வொரு வார்த்தைக்கும் இத்தனை விளக்கங்களை அளித்த பின்பு, "இன்னொன்று கவனித்தீர்களா, நான் என்னுடைய கருத்தை எடுத்துச் சொல்லவேண்டுமானால், நீங்கள் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டு என் நிலையை உங்களுக்குப் பொறுமையாகச் சொல்லியாக வேண்டும். உங்களுக்கு இது எளிது; உங்களால் தர்க்கிக்க முடியாத எல்லாவற்றையும் பாப்பார லாஜிக் என்று இழிந்துவிட்டுப் போய்விடலாம். " என்று சொல்லி ஒரு ஸ்மைலியும் போடுவதுதான் பாப்பார லாஜிக்காக எனக்கு படுகிறது. இந்த வரிகளில் சொல்லப்பட்டிருப்பதை போல் அல்லாமல், இதை 'பாப்பார லாஜிக்' என்று சொல்வதன் விளக்கத்தை பின் பகுதியில் தருகிறேன்.


2. நான் கருப்பர்கள்/வெள்ளையர்கள் முரண்பாடுடன் நமது சாதிய சூழலை ஒருபோதும் ஒப்பிடவில்லை. பொதுவாக கருப்பர்களின் போராட்டங்கள், இலக்கியம் இவற்றிலிருந்து பல உந்துதல்களையும், படிப்பினைகளியும் பெறமுடியுமே ஒழிய, அதை சாதிய சமூகத்துடன் ஒரு போதும் ஒப்பிட முடியாது. "தலித்தும் பார்ப்பனர்களும் இல்லாத பெரும்பான்மையோரின் வசதியை நினைத்துப்பார்த்தீர்களா? இந்த வசதியை இழக்காமல் இருப்பதற்கு அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்" என்று வெங்கட் சொல்வதை ஒரு பக்கம் ஒப்புகொண்டு அதை பிரச்சனையின் ஒரு பரிமாணமாக பார்கிறேன். இன்னொன்று இந்த சாதிய சமூகத்தின் படிநிலை பண்பு. இங்கே தலித்துக்கு முக்கிய முதல் எதிரியாய் வன்னியனும் தேவனும் இருக்கும் யதார்த்தம். இப்படி ஒரு படிநிலை (அம்பேத்கார் இதை "graded inequality' என்கிறார்) பண்பு இத்தனைகாலமாய் இந்த சாதிய சமூகத்தை கட்டி காக்கும் முக்கிய காரணியாகவும், மோதல்கள் அந்தந்த படிநிலையிலேயே ஏற்பட்டு மேலே இருந்த பார்பனர்கள் தொடர்ந்து, எதிர்ப்பை சமாளிக்க வேண்டிய ஒரு கட்டாயத்திற்கு கூட ஆளாகாமல் தப்பித்து அதன் பலனை மட்டும் அனுபவித்து வந்தது இன்னொரு பரிமாணம். வெங்கட் அவரின் மற்ற கட்டுரைகளில் காண்பிக்கும் முதிர்ச்சிக்கு நேரெதிராக பிரச்சனைகளை எளிதாக குறுக்குகிறார். மிக எளிதாக பல இணைய ஃபோரம்களில் கேட்கப்படும் மேலோட்டமான கேள்விகளையே ஒரு அறிவுஜீவி அதிகாரத்திலிருந்து எழுப்புகிறார். எப்படியிருப்பினும் அவர் சொல்வது இங்கே எந்தவித பொருத்தப்பாடும் இல்லாதது. நான் எழுதிய எதிர்வினையே ஒரு பார்பனரல்லாத ஜாதி வெறியின் வெளிப்பாட்டை கண்டிப்பதுதான். நான் பதிவு முழுக்க 'காஞ்சி மலம்ஸ்' என்று குறிப்பிட்டு கண்டிக்க பட்டவர் பெரியார் பெயரை சொல்லி பார்பனியத்தை எதிர்த்து எழுதி வருபவர். இது தவிரவே வேறு இடங்களில் என் பதிவில் தேவர்களின் ஆதிக்க வெறி இது குறித்தெல்லாம் பேசப்பட்டுள்ளது. இத்தனைக்கும் பிறகு பாப்பான்/தலித் என்று ஒரு இருமை எதிர்வை முன்வைப்பதாய் (ஒரு வழக்கமான மேம்போக்கு வாதமாய்) எடுத்துக்கொண்டு, வெங்கட் மட்டையடிப்பதை எதிர்கொள்ளும்போது எத்தனை ஆயாசம் வரும்?


3. வெங்கட் எழுதியது

//கடைசியாய் 'இது ரொம்ப தேவையான பதிவு' சூழலின் ஆரோக்கியம், என்றெல்லாம் மக்கள் ஜல்லியடிக்க தொடங்கியிருப்பது எதிர்பார்த்ததுதான். ஜாலியாய் எடுத்து கொள்வதோடு, சூழலில் வெளிப்படும் சொரணைத்தன்மைக்கான சான்றிதழாய் இதை கருதலாம்.

ரோ.வ. நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? என்னுடைய கருத்துடன் ஒத்துப் போவதாகப் பிறர் எழுதுவது ஜல்லியடிப்பதாக உங்களுக்குத் தெரிகிறதா? தயவு செய்து நண்பர்களை இழிவுபடுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். இதில் ஜல்லியடிக்கிறார்கள் என்று சொல்லும் நீங்கள் உங்கள் பதிவில் யாரையாவது செருப்பால் அடிக்கலாம் என்று சொல்லும்பொழுது வெறும் ஒற்றை வரியில் "இல்லை அந்தச் செருப்பில் மலத்தைத் தோய்க்க வேண்டும்" என்று உங்களுடன் ஒத்துப் போனால் அதுவும் ஜல்லியடியா? இப்படி உங்கள் பதிவில் யாராவது எழுதும் பொழுது இதே போல் "எனக்கு ஜல்லியடிக்காதே" என்று எழுதுவீர்கள் என்று எதிர்பார்க்கலாமா?

இதைத்தான் நீங்கள் என்னுடன் இல்லையென்றால், என் எதிரியாவாய் என்று சொல்லும் போக்கு என்றேன்.//

வெங்கட் பதிவில் யாரேனும் பாராட்டி பின்னூட்டமிடுவதோ அல்லது அவரோடு ஒத்து போவதோ குறித்து சொல்ல எனக்கு எதுவும் இல்லை. அதை பற்றி பேசுவதற்கு பதில் வெங்கட் எழுதியதை நேரடியாக எதிர்கொள்வேன். அதுவே நேர்மையானது என்று நினைக்கிறேன். நான் எழுதும் கருத்துக்களை எதிர்கொள்ள திராணியில்லாதவர்கள், ஒருமுறை கூட நேரடியாய் நேர்மையுடன் எதிர்கொண்டிராதவர்கள் வேறு இடங்களுக்கு போய்,

"தேவையான நேரத்தில் வந்த அருமையான பதிவு. சமீப காலங்களில் அதிகமாக எழுத தோன்றாததற்கு, இந்த மாதிரியான சூழ்நிலை கூட காரணமோ என தோன்றுகிறது.
நெகிழ்வுத் தன்மையே இல்லாத, முடிவுகளை ஏற்கனவே எடுத்துவிட்ட, தர்க்கம் என்ற பெயரில் குதர்க்கம் பேசுகின்ற வகையில் நிறைய படித்துக் கொண்டிருக்கிறேன் சமீபகாலங்களில்.

ஆனால், உயர உயர பறப்பதும் ஒரு நேரம் தரை இறங்கித்தான் ஆக வேண்டும்." என்று எழுதுவதையே ஜல்லியடிப்பதாக கூறுகிறேன். ஒரு நாகரீகம் கருதி ஜல்லியடிப்பது என்றேன். எந்தவித விளக்கமும் தரும் நேர்மையில்லாமல் வெறும் ஸ்வீப்பிங் தீர்ப்புகளை மட்டும் தந்துவிட்டு, அதையே அடுத்தவர் செய்ததாக சொல்லி முத்திரம் பெய்வதையே அவ்வாறு குறிப்பிட்டேன். சுந்தரமூர்த்தி எழுதியது குறித்து அவரால் விளக்கம் தரமுடியும். அவர் குறித்து கேள்வி எழுப்பினால் அதை அவர் நேரடியாய் எதிர்கொள்ளும் நேர்மையாய் காட்டுவார். ஏதோ அவரால் சொல்லமுடியாததை நான் சொல்லிவிட்ட காரணத்தால் வந்து என் பதிவில் பின்னூட்டமிடவில்லை. அவர் என்னுடம் ஒத்து போகும் கருத்தை நான் சொன்னதால் வந்து பின்னூட்டமிடுகிறார். அப்படி செய்யும் போது "சமீப காலங்களில் அதிகமாக எழுத தோன்றாததற்கு, இந்த மாதிரியான சூழ்நிலை கூட காரணமோ என தோன்றுகிறது." என்பதுபோல் ஜல்லியடிக்கவில்லை. "நெகிழ்வுத் தன்மையே இல்லாத, முடிவுகளை ஏற்கனவே எடுத்துவிட்ட, தர்க்கம் என்ற பெயரில் குதர்க்கம் பேசுகின்ற வகையில் நிறைய படித்துக் கொண்டிருக்கிறேன் சமீபகாலங்களில். " என்று மற்றவர்களின் மேல் பெயர் சொல்லாமல் முத்திரம் போக மாட்டார். இது குறித்து கேள்வியோ, விமர்சனமோ வந்தால் மௌனமாகி ஓடி ஒழியவும் மாட்டார். நேரடியாய் எதிர்கொண்டு தன் விளக்கத்தை அளிப்பார். உங்களுக்கும் நண்பரான சுமுவை நீங்கள் இப்படி கேவலப்படுத்தியிருக்க வேண்டாம். 'சூழல் கெட்டுவிட்டது' என்று ஜல்லியடிப்பவர்களுக்கு பதிலாய் 'இப்படி சொல்வதை சூழலில் வெளிப்படும் சொரணைத்தன்மைக்கான சான்றிதழாக கருதலாம்.' என்று என் பதிலாய் எனக்கிருக்கும் விமரசனத்தை அப்படியே வைத்ததை, உங்கள் 'நண்பர்களை கேவலப்படுதியதாக' நினைத்திருக்கவும் வேண்டாம்.

நானும், சுமுவும், சங்கரபாண்டியும். பெயரிலியும், அனாதையும் யாரும் ஒருவருடன் ஒருவர் எல்லா கருத்துக்களிலும் ஒத்து போவதில்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். வேறுபடும் தருணங்களில் அதை வெளிப்படுத்த தயங்கியது கிடையாது. சண்டைகளும் உண்டு. நான் எந்த விதத்திலும் ஒத்து போகாத உங்கள் தளத்தில் என் கருத்துக்களை எத்தனையோ முறை முன்வைத்திருக்கிறேன். இதெல்லாம் "நீங்கள் என்னுடன் இல்லையென்றால், என் எதிரி" என்ற பார்வையுடன் செய்திருந்ததாய் நினைக்கவும் உங்களுக்கு உரிமை உண்டு. (ஸ்மைலி இருப்பதாய் கருதி வாசிக்கவும்.)


4. "....என்பதற்கான மறுமொழி எனத் தெரிகிறது. இதைப் படிக்கையில் எனக்கு வருத்தமாக இருந்தது. என்னுடைய கருத்தை அவர் மறுதலித்தால் அதே பதிவின் கீழ் (அல்லது அவரது சொந்தப் பதிவில்) மறுமொழி இடுவார் என்று நம்பியிருந்தேன். நான் முட்டாள்தனமாக எழுதியிருப்பதாகக் கருதினால் அதை நேரடியாக என்னிடம் சொல்லலாம். மாறாக அதை வேறிடத்தில் பயன்படுத்தியிருப்பது நான் சற்றும் எதிர்பார்க்காத ஒன்று. " என்று வெங்கட் சொன்னது பொடிச்சியை குற்றம் சாட்டுவதாகவோ, குறைந்த பட்சம் குறைப்பட்டு கொள்வதாகவோ நான் எடுத்துகொண்டதால் என்னை பற்றியும் அதே தொனியில் எழுதியதை (ஒரு வித்தியாசம், பொடிச்சி வெங்கட்டை சொல்லவில்லை என்று மறுக்கிறார், இங்கே அதற்கு வாய்ப்பே இல்லை. வெங்கட் என்னைபற்றித்தான் பேசினார் என்பது மறுக்க முடியாதது) "பொடிச்சிக்கு இவர் சொல்லும் நியாயத்தை தனக்கு பொருத்தி பார்காமல்" என்று எழுதினேன். வெங்கட் சொன்னதை ஏற்றுகொண்டு என் வாசிப்பு தவறு என்று எடுத்துகொண்டு அந்த கருத்தை திரும்ப பெற்று மன்னிப்பு கேட்கிறேன்.

ஆனால் அந்த வசிப்பு தேவை இல்லாமலே அந்த வரிகள் நேர்மையற்றதாகவே தெரிகிறது.

//எனவேதான், அறிவாளிகளாக நான் நம்பும் ஒருசிலர் பாப்பார நாயே என்று சொன்னாலும், பற நாயே என்று சொன்னாலும் எனக்கு வருத்தமளிக்கிறது. அதேபோலவேதான் செருப்பாலடித்தலும், ஆண்குறி அறுக்க விடுக்கப்படும் அழைப்புகளும். அதையும் விடக் கொடுமையானது இதில் ஈடுபடாதவர்களை எல்லாம் If you are not with us, you are against us என்று புஷ்தனமாகப் பயமுறுத்துவது. //

நான் சொன்ன ஒவ்வொரு வரிக்கும் பின்னால் ஒரு தர்கத்தை முன்வைத்திருக்கிறேன். ஆண்குறி அறுப்பது' என்பதற்கு என்ன அர்த்தம், அதை ஏன் சொல்கிறேன் என்று விலாவாரியாய் எழுதியிருக்கிறேன். மீண்டும் அதை வேறு இடங்களில் சொல்லியிருக்கிறேன். அதை எதிர்கொள்ளாமல் ஒருவர் மொட்டையாக 'நான் ஏற்றுகொள்ளவில்லை' என்று சொல்லலாம். மட்டையடிக்கலாம். ஆனால் அதை புஷ்தனம் என்று எந்த விளக்கமும் (நான் நேர்மையின்மை என்று குறிப்பிட்டு அதற்கு பதில் தந்த இரண்டாம் முறையும் எந்த விளக்கமும்) தராமல் பொத்தாம் பொதுவாய் சொல்வது நேர்மையின்மையாகவே தெரிகிறது. எது புஷ்தனம்? நான் சொல்வதை ஏற்றுகொண்டு 'குறியறுக்க' சம்மதித்தவர்கள் எத்தனைபேர்கள் இங்கே இருக்கிறார்கள்? பத்ரியும் வெங்கட்டும் இதை ஏற்றுகொண்டதாய் எனக்கு தோன்றவில்லை. அப்படி இருக்கும் போது அவர்களை எதிரியாக கருதியா அவர்கள் தளத்தில் கருத்துக்கள் சொன்னேன்? இங்கேயே ஒரு உதாரணம் சொல்கிறேன். எனக்கு வெங்கட்டின் 'வசவுகளின் காலம்' மிகுந்த பாரபட்சமானது என்றுதான் நினைக்கிறேன். என் தளத்தில் தொடர்ந்து பின்னூட்டமிடும் மாண்ட்ரீஸர் அதை 'நடுநிலையானது' என்கிறார். அவரை எதிரி என்றா கருதுகிறேன்? நண்பர் நாராயணன் திருமா/ரரமதாஸின் தமிழை முன்வைத்த அரசியலை விமர்சித்து ஒரு பதிவு எழுதினார். எனக்கு அதனுடன் ஒப்புதல் இல்லை. அதற்காக அவரை எதிரியாகவா பார்க்கிறேன் மிக தெளிவாய் 'மன்மதன்' படத்திற்கு வக்காலத்து வாங்கியவர்களையே நான் குறிப்பிட்டிருக்கிறேன். அதே போல திருமா குறித்த சாதிய வசைக்கு வக்காலத்து வாங்கியவர்களையே குறிப்பிடுகிறேன். எதிர்பவர்களை எதிர்ப்பவர்களாய் (எதிரிகள் அல்ல) சொல்லாமல் வேறு என்னய்யா சொல்லவேண்டும்? மற்றவர்களுடன் முரண்படுவதையும், எதிர்ப்பதையும், விமர்சனத்தையும் எப்படி முன்வைத்தால் 'புஷ்தனம்' இல்லை என்பார் என்று வெங்கட் (தன் வழக்கத்திற்கு மாறாக) விளக்கினால் நல்லது.

மீண்டும் வெங்கட் " நான் If you are not with us; you are against us என்று எழுதியது உங்களை முன்வைத்து எழுதியிருதாலும் அது உங்களுக்கு மாத்திரமானதில்லை என்று தெரியும்படியாகத்தான் எழுதியிருக்கிறேன்" என்கிறார். என்னை தவிர வேறு யாரை சொல்கிறார்,அப்படி சொல்வதன் நியாயம் என்னவென்பது இருக்கட்டும். நான் எழுதுவது 'புஷ்தனம்' என்பதுதான் அவருடைய தீர்ப்பு. அதற்கு விளக்கமளிக்க (நான் கேட்டபின்னும்) எந்த அவசியமும் அவருக்கு வரவில்லை.

நான் அதிகாரம் கையில் இல்லாத எவரையும் 'புஷ்தனம்' என்று சொல்லத் துணிய மாட்டேன் என்றாலும், ஒன்று நினைவுக்கு வருகிறது. 'காலம்'(?) பத்திரிகையில் ஷோபாசக்தி கண்ட தொ.பரமசிவனின் பேட்டியை முன்வைத்து வெங்கட் ஒரு பதிவு எழுதியிருப்பார். பதிவின் முடிவில் வெங்கட் திருவாய் மலந்தருளியிருப்பார். பேட்டி குறித்து அவர் எழுதிய விஷயம் இந்த பதிவைபோல், இன்னும் மற்ற இடங்களில் வெங்கட் தொடர்ந்து எழுதிவருவது போல், 'பார்பான்' என்ற வார்த்தையை முக்கிய விஷயமாய் முன்வைத்து எழுதியது. அது எப்படி இருப்பினும் முடிவில் 'இந்த பதிவு தாழ்த்தபட்டவர்கள் மீதான பரிவினால் எழுதப்படுகிறது. இதை புரிந்து கொள்ளாதவர்கள் யாரிடமும் என்னால் உரையாட முடியாது.' வெங்கட் தனக்கு இருப்பதாக சொல்லும் 'தாழ்த்த பட்டவர்கள் மீதான பரிவை' சந்தேகப்படுபவர்கள், ஒப்புக்கொள்ள மறுப்பவர்கள் யாருடனும் எந்தவிதமான உரையாடலையும் அவரால் வைத்துகொள்ள முடியாது. இதில் இன்னொரு பிரச்சனை என்னவெனில் 'தாழ்த்தபட்டவர்கள் மீதான பரிவு' என்றால் என்ன, அதை சந்தேகப்படுவது என்றால் என்ன, என்பதன் அர்த்தங்களையும் வெங்கட்தான் தீர்மானிப்பார். பச்சையான புஷ்த்தனம் என்று எதையாவது சொல்லவேண்டும் என்றால் அது இதுதான்!

என்னை பொத்தாம் பொதுவாய் 'புஷ்தனம்' என்கிறார். அதற்கு ஒரு விளக்கமும் தருவதில்லை. நான் ஏன் புஷ்தனம் இல்லை என்று விளக்குகிறேன். இதுவரை நான் எழுதிய அத்தனையையும் மாய்ந்து மாய்ந்து, ஒவ்வொரு இடத்திலும் ஹிப்னாடைஸ் ஆகும் அளவிற்கு மீண்டும் மீண்டும் சொன்னதையே சொல்கிறேன். அதற்கு பிறகு வெங்கட் சொல்கிறார்.

"இன்னொன்று கவனித்தீர்களா, நான் என்னுடைய கருத்தை எடுத்துச் சொல்லவேண்டுமானால், நீங்கள் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டு என் நிலையை உங்களுக்குப் பொறுமையாகச் சொல்லியாக வேண்டும். உங்களுக்கு இது எளிது; உங்களால் தர்க்கிக்க முடியாத எல்லாவற்றையும் பாப்பார லாஜிக் என்று இழிந்துவிட்டுப் போய்விடலாம். "

இதுதான் எனக்கு பாப்பார லாஜிக்காக தெரிகிறது. 'மெரிட்' பேசுவது அல்ல பாப்பார லாஜிக். இன்னொருவருக்கு தகுதியிருந்தும் மறுப்பது, அதற்கு நேரெதிராய் தனக்கு இல்லாத தகுதியை கோருதல். இது சட்டமாகவும் நடைமுறையாகவும் இருந்த திடத்தன்மை சாத்தியமாகாத இன்றய சூழலில், இது போன்ற பல லாஜிக்குகளாக நவ பார்பனியம் வழங்கி வருகிறது. இணையத்தில் மீண்டும் மீண்டும் இதைத்தான் எதிர்கொண்டு வருகிறோம்.

5.நான் எழுதியதில் வெங்கட் எதிர்கொள்ளாத ஒரு விஷயம்

"'பாப்பார' என்ற அடைமொழி கொண்டு வரும் வசைக்கு இத்தனை தூரம் எழுதுபவர், தலித் சார்பாய் தன்னை சொல்லி கொள்பவர் ஒரு இடத்தில் கூட, திருமா மீதான (இந்த எல்லா விஷயமும் தொடங்கிய புள்ளியான) வசை குறித்து எந்த கண்டனமும் (என் பாணியில் அல்ல) தெரிவிக்க தேவையில்லாதவராகவும், அது குறித்து குறைந்த பட்சம் தன் கருத்தை கூட சொல்ல தோன்றாதவராகவும் இருப்பதை கவனிக்கிறேன்."

இப்போதும் கூட திருமா மீதான இழிந்த வர்ணணையை கண்டிக்கவோ, குறைந்த பட்சம் அது குறித்த தன் கருத்தை சொல்லக்கூட தேவை வரவில்லை. அது குறித்து சொன்னதாக கீழ்கண்ட வரிகளை மட்டுமே பார்க்க முடிகிறது.

// நான் தமிழக அரசியல் பற்றி அதிகம் எழுதுவதில்லை. (பொதுவில் சமூகத்தைப் பற்றித்தான் எழுதுகிறேன். அரசியலைப் பற்றி எழுதுவதில்லை). இதற்கு முக்கிய காரணம், நான் தமிழகத்தைவிட்டு நீங்கி கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் ஆகப் போகின்றன. எப்படி நாராயணனிடம் இந்தியாவின் வணிக வளர்ச்சியைத் தெரிந்துகொள்ள இந்தியாவில் இருக்கத் தேவையில்லை என்று நான் சொன்னேனோ அதற்கு நேர் எதிர்மாறாக அரசியலைப் பேச அண்மை அவசியம் என்று நினைக்கிறேன் (மக்களுடன் உரசாமல் அரசியல் பேசுவது இயலாதது). இதன் தேவை புவியியல் ரீதியில் பரப்பு குறைய குறைய இன்னும் அதிகரிக்கிறது. நான் வசித்தேயிராத அமெரிக்கத் தேர்தலைப் பற்றிப் பேசுவது எளிது, ஆனால் கும்பகோணத்தில் நான் வசித்த வார்டு 2க்குத் தேர்தல் நடந்தால் இப்பொழுது என்னால் அபத்தக் கருத்தைத்தான் உச்சரிக்க முடியும். மேலதிகமாக, ராமதாஸ், திருமா ஆகியவர்களின் நடவடிக்கைகள் நான் இந்தியாவைவிட்டு நீங்கியபின்தான் அதிகரித்திருக்கின்றது. எனவே, பரிச்சயமில்லாத விஷயங்களில் நான் அதிகம் தலையிடுவதில்லை.//

நான் மீண்டும் மீண்டும் சொன்ன இன்னொரு விடயம், பேசிகொண்டிருக்கும் பிரச்சனைக்கும் திருமா/ராமதாஸ் முன்வைக்கும் அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது. பிரச்சனை பொதுக்களத்தில் ஒரு தலித் தலைவர் குறித்து ஒருவர் முன்வைத்த மோசமான வசை. 'செருப்பாலடிப்பதில்' ஒப்புதலில்லை என்று சொல்லி, 'வசைகளின் காலம்' என்று பதிவு எழுதியவருக்கு, நான் சுட்டிகாட்டிய பின்னும் இது குறித்து கருத்து சொல்ல கூட தேவை வரவில்லை. 'திருமாவளவன் ராமதாஸிக்கு அந்த வேலைதான் செய்கிறாரா?' என்று கேட்பது வசை இல்லை என்று நினைக்கிறாரா? அல்லது அதை கண்டிக்க தேவையில்லை என்று நினைக்கிறாரா? அல்லது அதை நியாயப்படுத்துகிறாரா? எது குறித்தும் எந்த விளக்கமளிக்கவும் அவருக்கும் தேவையில்லை. (கவனிக்கவும். இந்த விஷயம் குறித்து அவர் மற்றவர்கள் போல் எதுவுமே பேசாமல் மௌனமாக இருந்தால் இந்த கேள்வி வந்திருக்காது. மௌனமாய் இருக்கும் யாரையும் 'if you are not with us, you are against us' என்று நான் சொல்லவில்லை. 'வசவுகளின் காலம்' என்று ஒரு தலித் குறித்த வசைக்கு முன்வைத்த கண்டனத்தை திரித்து பதிவு எழுதியதாலேயே இந்த கேள்வி வருகிறது.

இவரது மௌனத்தையும், இதை கண்டிப்பவர்களை கண்டிக்கும் பதிவையும் 'தலித் ஆதரவு' என்று நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் சந்தேகப்பட்டால் அவர் உரையாடமாட்டார். இதற்கு மாறாக வருபவன் போபவனிடம் எல்லாம் உரையாடி கொண்டிருக்கும் எதிராளியிடம் வெளிப்படுவது 'புஷ்த்தனம்'! ஆஹா!

இங்கே கவனிக்க வேண்டிய வேறு ஒரு விஷயம் உண்டு. வெங்கட் இந்த சந்தர்பத்தில் தலித் சார்பாய் ஒரு நிலையெடுத்து, உண்மையில் 'பெரியாரியம் பேசுபவர்கள்தான் தலித்களின் முக்கிய எதிரிகள்' என்று பிரச்சாரம் செய்யப்படும் கருத்திற்கு ஆதரவாய் இன்னொரு ஃபிலிம் கூட காட்டியிருக்க கூட முடியும். அப்படி பல ஃபிலிம்களை பார்த்தாகிவிட்டது. பல முறை வெங்கட் பார்பனரல்லாதவர்கள் 'தப்பித்து' போவதை பற்றி பேசியாகிவிட்டது. ஆனால் யதார்த்தமான ஒரு சந்தர்பத்தில் ஒரு குறைந்த பட்ச கண்டனத்தை அளிக்க கூட அவர் முன்வரவில்லை. 'தமிழகத்தில் இல்லாமல் அரசியல் பேசமுடியாது' என்று சம்பந்தமில்லாமில்லாத ஒரு சொத்தை காரணத்தை சொல்லி மட்டையடிக்கிறார்.

வெங்கட் மேலே எழுதியதிலும், மற்ற நண்பர்களின் பதில் குறித்தும் சொல்ல பல விஷயங்கள் இருந்தாலும், இந்த 'உரையாடல்களின்' அவல நாடகத்தன்மை சகிக்க முடியாததாய் இருக்கிறது.
மற்றதின் நியாயங்களை புரிந்துகொள்ள முதலில் நாம் கோப்பையை காலியாக வைத்திருக்க வேண்டும்(அந்த அட்வைஸ் நமக்கு, அய்யோ!). அதைவிட முக்கியமாக நம்மிடம் இருக்கும், நாம் உருவாக்கி வைத்திருக்கும்(மாறிகொண்டிருந்தாலும் கூட) அளவுகோல்களை கொண்டு மற்றதை புரிந்துகொள்ள முடியாது என்ற தெளிவு வேண்டும். ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கமுடியாது. ஓடிக்கொண்டுதான் பார்க்கவேண்டும். இது இன்று அறிவிலாகிப்போன உண்மை.

இட ஒதுக்கிடு என்பது எந்த புத்தகத்தாலும் ஒருவருக்கு தெளிவை ஏற்படுத்தும் சமாச்சாரம் அல்ல. அதை ஆதரித்தால் அதற்கு ஆதரவான தர்கங்களை தொடர்ந்து சமைக்க முடியும், எதிர்த்தால் எதிரான தர்கங்களை சமைக்க முடியும். இடவொதுக்கீட்டில் ஆதரவு எதிர்ப்பு என்பது நாம் அனுமானித்து கொள்ளும் axiom போன்றது. தன்னை முன்வைத்து, தன் அனுவத்தை முன்வைத்து உலகை புரிந்துகொள்ள விழையும், தர்கங்களால் சுயமைதுனம் செய்யும் மனத்திற்கு எந்த விதத்திலும் ஒரு புத்தகம் எந்த புதிய விளக்கத்தையும் தர வாய்பில்லை. அவல நாடகத்தில் பங்கெடுக்கும் நண்பர்களை கண்டால் பரிதாபமாக இருக்கிறது.

பின் குறிப்பு 1. மீண்டும் நினைவூட்டுகிறேன். இது கட்டாயத்தால் எழுதப்படும் ஒரு பதிவு. இதை வெங்கட் இதுவரை எழுதிய பல விஷயங்களுக்கான விமர்சனமாகவோ, எதிர்வினையாகவோ எழுதவில்லை. அதை வேறு ஒரு சந்தர்ப்பத்தில் செய்யும் நோக்கம் உள்ளது. அவர் இந்த 'செருப்படி' பிரச்சனையுடன் தொடர்புடையதாய் எழுதியதன் விளைவாய் நிர்பந்திக்கப்பட்டு நான் தரும் விளக்கமும், அது தொடர்பான சில இடையீடுகளும் மட்டுமே!

பின் குறிப்பு 2. இனி நான் மற்ற இடங்களில் பின்னூட்டமளித்தால் அவை சேர்க்கப்பட்டு வாரயிறுதியில் இடப்படும். எனக்கு உதவ நினைத்து, யாரோ செய்த விஷமத்தனத்தால் மன சஞ்சலத்திற்கு ஆளான நண்பர்கள் மன்னிக்கவும்.

Post a Comment

---------------------------------------

Monday, March 21, 2005

அறைகூவல்!

பிரமீள்

இதுபுவியை நிலாவாக்கும்
கண்காணாச் சரக்கூடம்.

நடுவே
நெருப்புப் பந்திழுத்து
உள்வானில் குளம்பொலிக்கப்
பாய்ந்துவரும் என் குதிரை.

பாதை மறைத்து நிற்கும்
மரப்பாச்சிப் போர்வீரா!
சொல்வளையம் இது என்றுன்
கேடயத்தைத் தூக்கி என்னைத்
தடுக்க முனையாதே.

தோலும் தசையும்
ஓடத் தெரியாத
உதிரமும் மரமாய்
நடுமனமும் மரமாகி
விரைவில்
தணலாகிக் கரியாகும்
விறகுப் போர்வீரா!

தற்காக்கும் உன் வட்டக்
கேடயம்போல் அல்ல இது.

சொற்கள் நிலவு வட்டம்
ஊடே
சூரியனாய் நிலைத்(து) எரியும்
சோதி ஒன்று வருகிறது.

சொல்வளையம் இது என்றுன்
கேடயத்தைத் தூக்கி என்னைத்
தடுக்க முனையாதே.

தீப்பிடிக்கும் கேடயத்தில்
உன்கையில் கவசத்தில்
வீசத் தெரியாமல்

நீ ஏந்திநிற்கும் குறுவாளில்
யாரோ வரைந்துவிட்ட
உன் மீசையிலும்!

நில் விலகி,
இன்றேல் நீறாகு!

(நன்றி: என் விருப்பதை கேட்டு வெளீயிட்ட நண்பர் சுந்தரமூர்த்திக்கு)

Post a Comment

---------------------------------------
மீண்டும்!

விரிவாக எழுத நினைத்தேன். முடியாது. என் பதிவில் நேற்று ரவி ஸ்ரீனிவாஸ் எழுதாத பின்னூட்டம் அவர் பெயரில் வெளியாகியது. எனக்கு இது போன்ற அற்ப விஷயங்களில் செலவழிக்க நேரமில்லை. எழுத எத்தைனையோ இருக்கிறது. படிக்கவும் நண்பர்கள் இருக்கிறார்கள். இப்போதிருக்கும் நேர நெருக்கடியில் அதையெல்லாம் எழுதாமல் ஒத்தி போட்டு கொண்டிருக்கிறேன். இந்த நிலமையில் உயிரினங்களிலேயே கேவலமான ஒன்று செய்யும் கேடுகெட்ட செயல்கள் தொடர்பாக நேரம் செலவழிப்பது சாத்தியம் இல்லை.

என் பதிவில் யார் வேண்டுமானாலும் எதிர்கருத்து சொல்லலாம். என்னை வசை பாடுவது குறித்து எனக்கு என்றைக்கும் பிரச்சனை கிடையாது. மற்றவரை பற்றி வசைகள் வரும்போது மட்டும் கவனமாய் இருப்பது என்று நினைத்திருக்கிறேன். கவனமாய் இருப்பது என்பதற்கு என்ன பொருள் என்று எனக்கே தெரியாது. அது குறித்து எதுவும் யோசித்ததும் இல்லை. இது வரை நடவடிக்கை எதுவும், இது தொடர்பாய், எடுத்ததும் கிடையாது. அதிலும் எழுதிகொண்டிருக்கும் 400 அடையாளம் தெரிந்த வலைப்பதிவாளர்களோ, வேறு யாருமோ ஒரு இணைய அடையாளத்துடன் வந்து எழுதும்போது பிரச்சனையில்லை. பெயர் கூட சொல்லாத சில புழுக்கள் வந்து விருப்பப்படி (மற்றவரை) வசைபாடிவிட்டு செல்ல நான் வசதி செய்து தர முடியாது. மற்றபடி இங்கே எந்தவித கருத்து சொல்லவும், வசைபாடவும், எந்த நாயும் வந்து மோண்டுவிட்டு போகவும் கூட தடை எதுவும் இல்லை.

இந்நிலையில் என் பெயரில் நான் எழுதாத பின்னூட்டம் வெளியானது. என் பதிவில் ரவி எழுதாத பின்னூட்டம் அவர் பெயரில் வெளியாகிறது. இது அனாவசிய தொந்தரவுகளை நேரவிரயங்களை ஏற்படுத்துவதுடன், என் Bளாகர் கணக்கின் பாஸ்வேர்ட் அறிந்த நண்பர்களுக்கு தேவையற்ற தர்மசங்கடத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதை தொடரப்போவதாகவும், அதுவும் பெருமையாக, உயிரினங்களிலேயெ இழிந்த ஒன்று அறிவிக்கவும் செய்திருக்கிறது. யார் எதை எழுதியது என்ற குழப்பத்தை தெளிவாக்குவதிலும், தொடர்ந்த கண்காணிப்பில் இருப்பதும் எனக்கு சாத்தியமில்லை. நான் வலைப்பதிவுகளில் எழுதப்படுவதில் 20%ஐ கூட முழுவதும் படிப்பதில்லை. அதனால் இதை கண்காணிக்க முடியாது. இந்த தொந்தரவினால் எங்கே மறுமொழி அளித்தாலும் அதை என் பதிவிலும் இடுவது என்று முடிவெடுத்திருக்கிறேன். (இப்படி ஒரு கட்டாயத்தை உண்டாக்கியதற்கும் உயிரினங்களில் இழிந்த ஒன்று பெருமையடித்து கொள்கிறது.) அங்கேயும் பிரச்சனை செய்வதாய், அவர்களும் இருமுறை பின்னூட்டமிடுவதாய், அது சபதம் செய்துள்ளதால் அனாமதேய பின்னுட்டமளிக்கும் வசதியை நீக்கவேண்டியதாகிவிட்டது. நேற்று இதில் நேரம் செலவழிக்க விரும்பாமல் அனாமதேயமாக வந்த பின்னூட்டங்களை(மட்டும்) நீக்கினேன். அதை மீண்டும் இட்டுள்ளேன். Bளகர் கணக்கு இல்லாதவர்கள் எனக்கு மின்னஞ்சல் செய்தால் அதை இங்கே வெளியிட முடியும்.

இதில் ஏதோ ஜனநாயகம் பாதிக்கப்பட்டதாய் யாரும் முட்டாள்தனமாய் ஒளறினால் சொல்ல எதுவும் இல்லை. என் Bளாகர் தளம் பத்திரிகையல்ல. இணயம் தரும் வசதிகளை பயன்படுத்தி என் கருத்துக்களை எழுத என்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு இடம் இது. இதில் மற்ற கருத்துகளுக்கு நான் அளிக்கும் மதிப்பும் தேவையும் காரணமாக உள்ள ஒரு வசதிதான் பின்னூட்டம். அதில் சின்ன மற்றத்தை செய்திருக்கிறேன், அவ்வளவே! இன்று யாருக்கும் யாரும் கருத்து சொல்லும் சுதந்திரத்தை மறுக்க சாத்தியம் இல்லை. உடனே ஒரு Bளாகர் கணக்கு தொடங்கி அதை செய்ய முடியும். அதனால் இந்த தொந்தரவின் காரணமாய் அனாமதேய பின்னூட்ட வசதியை நீக்கியதை ஜனநாயக மறுப்பாய் யாரும் சொன்னால் அது குறித்து சொல்ல எதுவும் இல்லை.

நான் எழுதாத பின்னுட்டத்தை என் பெயரில் எழுதிய, இன்னும் எழுதப்போவதாய் சொல்லும் உயிரினங்களில் கீழான ஒன்று பதிவு தொடங்க போவதாக சொல்லியிருக்கிறது. நல்ல விஷயம்! அது செய்த கீழ்தரமான காரியத்தை மனதில் வைக்காமல் தமிழ்மணம் அந்த பதிவிற்கும் இடம் அளிக்க வேண்டும் என்று கேட்டுகொள்கிறேன். மாறுவதற்கும், கருத்து ரீதியாய் செயலாற்றவும் எத்தகையவருக்கும் உரிமை இருக்க வேண்டும் என்று நினைப்பதால் இதை உளப்பூர்வமாகவே சொல்கிறேன் -யார் எப்படி எடுத்துகொண்டாலும்!

Post a Comment

---------------------------------------

Saturday, March 19, 2005

அறிவிப்பு!

என் பாஸ்வேர்டு திருடப்பட்டுள்ளது. அல்லது வேறு ஏதோ நடக்கிறது. எனக்கு இது குறித்த விவரங்கள் தெரியாததால் நண்பர்கள் உதவும்படி கேட்டுகொள்கிறேன்.

இப்போதுதான் காஞ்சி ஃபிலிம்ஸின் பதிவில் பார்தேன். நான் எழுதாத ஒரு மறுமொழி என் பெயரில் வெளியாகியிருக்கிறது. சுதர்சன் அவர்களுக்கு பதிலாக எழுதப்பட்டுள்ளது. (அதை மேற்கோள் காட்ட முடியவில்லை. இப்போது ஏதோ பிரச்சனையால் காஞ்சியின் அந்த பக்கம் முழுவதும் என் கணணியில் வர மாட்டேனென்கிறது. ராமதாஸை கட்டிவைத்து அடிக்க வேண்டியதாகவும், கிட்டதட்ட எனது மொழி நடையிலேயே எழுதபட்டுள்ள பின்னூட்டம். அதற்கு கீழே 'நான் discalimerஆக, 'அது என்னுடயதல்ல' என்று பின்னூட்டம் இட்டுள்ளேன்.)

இந்த மறுமொழி நான் எழுதியது அல்ல. (வேறு ப்ளாகர் கணக்கிலிருந்து) வெறுமன என் பெயரில் மட்டும் எழுதப்பட்டுள்ளதா என்று பெயரில் சுட்டினால் அது என் ப்ளாகிற்கே சென்றது. இது எப்படி சாத்தியம் என்று புரியவில்லை. பாஸ்வேர்ட் திருடப்பட்டுள்ளதா அல்லது வேறு வழிகளில் இது சாத்தியமா என்று புரியவில்லை. எது எப்படியிருப்பினும் இது நான் எழுதிய பின்னூட்டம் அல்ல என்று அறிவிக்கவே இந்த பதிவு. இப்போது தூங்கவேண்டும். இடையில் எது நடந்தாலும் நான் பொறுப்பு அல்ல. காலையில் வந்து (நண்பர்களின் அறிவுரைகளையும் கணக்கில் கொண்டு) ஏதேனும் செய்ய வேண்டும். இப்போது என் பாஸ்வேர்ட் மட்டும் மாற்றப்பட்டுளது என்று அந்த (என் பெயரில் பொய் பின்னூட்டமிட்ட) நண்பருக்கு தெரிவித்துகொள்கிறேன். என் பெயரில் பின்னூட்டமிட்ட நபரின் கோழைத்தனத்தையும், வெட்கங்கெட்டதனத்தையும் இகழும்போது, இதை சாதித்த அவரின் (வில்லன்தனமான) திறமையை வியக்கிறேன். பாராட்டுகிறேன்! மீதி நாளை.

Post a Comment

---------------------------------------

Wednesday, March 16, 2005

பதிலும் செருப்படிகளும் !

மிகுந்த அலுப்புடன் இதை எழுத வேண்டியுள்ளது. ஒரு குறியீடாகவாவது சில விஷயங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய அவசியம் இருப்பதாக நினைப்பதால், அதை தெரிவித்த பின் இது போன்ற விளக்கங்களை வேறு தந்து தொலைக்க வேண்டியுள்ளது. என்ன செய்ய, நாயை அடித்தால்...!

காஞ்சி ஃபிலிம்ஸ் தனது வழக்கமான 'புத்திசாலித்தனம், பகுத்தறிவு, லாட்டரல் திங்கிங்' எல்லாம் கலந்து தன் பதிவில் ஒரு படம் போட்டார். பீகாரில் இன்னும் ஒரு குறிப்பிட்ட ஜாதி மக்கள் மலம் அள்ளுகிறார்களாம்! இந்த 'செய்தியை' எங்கோ படித்து, இவர் மூளை ஆவியுடன் பேசும் போர்டில் கை வைத்தது போல் சுற்றத் தொடங்கி, கொஞ்சம் லாட்டரல் திங்கிங் சேர்த்ததில் ஒரு ஐடியா வந்தது.

பிகாரில் மலம் அள்ளுவது பற்றி ஒருவர் செய்தி படித்தால் பொதுவாய் என்ன செய்வார்? அது குறித்து தனது வருத்தத்தை கவலையை முன்வைத்து பதிவு எழுதலாம். இந்த அவலம் தொடர்வதற்கான காரணமான சமூக அமைபு பற்றி எழுதலாம். அது குறித்த கட்டுரை எதற்காவது சுட்டி தரலாம். இதெல்லாம் சாதாரணமாய் ஒருவருக்கு தோன்றகூடியது. இப்படிப்பட்ட பிகாரில் பாஜக தொடங்கி கம்யூனிஸ்டுகள் வரை என்ன செய்கிறார்கள் என்று ஒருவேளை கேள்வி எழுப்பலாம். இன்னும் கொஞ்சம் குதர்கமாய் 'பார்பனியத்துக்கு எதிராக' பிறபடுத்தப் பட்டவரின் ஆட்சி நடத்தபடுவதாக, பலரால் தூக்கி பிடிக்கப்படும் லல்லுவை, முன்வைத்து கேள்வி எழுப்பலாம். இன்னும் இது தொடர்பாய் ஒரு வலைப்பதிவாளர் செய்ய எத்தனையோ உண்டு. ஆனால் இதெல்லாம் சாதாரணமாய் சித்திக்க கூடியவர்கள் செய்ய கூடிய காரியம். நம்ம காஞ்சி பிலிம்ஸ் லாட்டரல் பகுத்தறிவுக்காரர். அவரால் இப்படி நேரடியாய் சிந்திக்க முடியுமா? தன் கண்ணில் ஓயாமல் ரொம்ப நாளாய் உருத்திகொண்டிருக்கும் ராமதாஸ்-திருமாவின் இணைவு ஞாபகத்திற்கு வருகிறது. ராமதாஸ் திருமா ஒரு படத்தில் பிடித்துகொண்டிருப்பதாக உள்ள ஒரு போர்டில் பீகாரில் மலம் அள்ளும் செய்தியை போட்டு, "'தம் இன மக்கள் மலம் சுமக்கும் கொடுமையில் இருக்கும்போது அதனை கவனியாது, திருமா தன் இன விரோதியாய் உள்ள ராமதாசோடு திறிகிறார் பார்" என்று (தாஸ் போன்றவர்கள் கோனார் தமிழுரை எழுதும்) அர்த்தம் தொனிக்கும் வகையில் கார்ட்டூன் வெளியிடுகிறாராம். அதற்கு தலைப்பு 'no comments'. ஒரு குறிப்பிட்ட செய்தியை எடுத்து போட்டு, அல்லது மற்றவர் சொன்னதை மேற்கோள் காட்டி, தனக்கு சொல்ல எதுவும் தேவையில்லை என்று சொல்லும் விதமாய் 'நோ கமெண்ட்ஸ்' என்று சொல்லலாம். இப்படி தெளிவாய் தன் கமெண்டை ஒரு படம் போட்டு சொல்லி விட்டு, 'நோ கமெண்ட்ஸ்' சொல்லும் கேஸை இப்போதுதான் பார்கிறேன்! நல்ல பகுத்தறிவு!

முதலில் கவனிக்க வேண்டியது பீகாரில் மட்டுமல்லாது எல்லா இந்திய மானிலங்களிலும், தமிழகத்திலும் யார் மலம் அள்ளுகிறார்கள், துப்புரவு வேலை யாரால் செய்யப்படுகிறது என்றெல்லாம் காஞ்சி ஃபிலிம்ஸுக்கு யோசனை வரவில்லை. ஒரு வேளை தமிழகத்திலும் இன்னும் துப்புரவு தொழில் குறிப்பிட்ட ஜாதியினரால் செய்யப் படுவதை சொல்லி இந்த படத்தை போட்டிருந்தாரானால் கொஞ்சமாவது பொருத்தம் இருந்திருக்கும். தமிழக நிலமை அவருக்கு தெரியவில்லையோ, அல்லது நான் தமிழகத்திலிருந்து கிளம்பி வந்த பின் பாப்பானும், வெள்ளாளனும், தேவனும் மலம் அள்ள தொடங்கி விட்டார்களோ, என்ன காரணமோ தெரியவில்லை. பீகாரில் மட்டும் இருப்பதாக இவர் படித்த ஒரு செய்தியை, தர்க்கரீதியான தொடர்பு எதுவும் இல்லாமல் திருமா/ராமதாஸ் இணைவுடன் தொடர்பு படுத்தி இவர் ஒளறிக் கொட்டுவதன் முரணை பேசுவது எனக்கு முக்கியமல்ல. இவ்வாறு இவர் செய்வதன் பிண்ணணியில் இருக்கும் இவரது நோக்கமும் உளவியலுமே முக்கியமாய் கவனிக்கப்பட வேண்டியது. இதற்கு பின்னால் வருவோம்.

காஞ்சி ஃபிலிம்ஸின் இந்த பதிவிற்கு பின்னுட்டமாய் "ராமதாஸிற்கு பீயள்ளும் வேலையைத்தான் திருமாவும் செய்கிறாரா?" என்று தாஸ் என்பவர் கேட்டிருந்தார். எல்லோரையும் விமர்சிப்பது போல் திருமாவளவனும் விமர்சனத்திற்கு உட்பட்டவரே! அதாவது ஒரு அலுவலகத்தில் எல்லோரும் லஞ்சம் வாங்கினால் எப்படி குற்றமோ அதே போல ஒரு தலித் லஞ்சம் வாங்கினாலும் அதை விமர்சிக்கலாம்! ஆனால் தலித் மீது 'விமர்சனம்' வைக்கும்போது மட்டும் அதற்கு வேறு நிறங்களில் கமெண்ட்கள் ஒரு பொது இடத்தில் வெளிப்படும். உள்ளே ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் ஊறிகிடக்கும் சாதி வெறி நினைவிலி மனத்திலிருந்து உருவாக்கிய வார்த்தைகள் மேலே வரும். இங்கே தாஸ் திருமாவை பற்றி எழுதியுள்ளது பச்சையான ஜாதி வெறி இழையோடும் ஒரு வர்ணணை. நன்றாய் கவனிக்க வேண்டும், திருமாவை தவிர வேறு யாரை பற்றி விமர்சிக்க நேர்ந்தாலும் இந்த 'பீயள்ளும் உவமை; பயன்படுத்த பட்டிருக்காது. திருமாவளவன் ஒரு தலித் என்ற ஒரே காரணத்தினாலே இந்த 'பீயள்ளும் உவமை' பயன்படுத்த படுகிறது. மிக வெளிப்படையான ஜாதி வெறி பிடித்த ஒரு கமெண்ட். இணையத்தில் உலாவுதால் சிக்கல், இல்லையெனில் இதற்கு செருப்பால் நாலு கொடுத்திருக்க முடியும்.

நம் சூழலில் அவலம் இது ஒரு சாதி வெறி பிடித்த கமெண்ட் என்பதை கூட வாதம் செய்து புரிய வைக்க வேண்டிய நிலமை. இப்படி ஒரு கருத்தை ஒரு அரேபியரையோ, கருப்பரையோ ஃபிரான்ஸ் போன்ற ஒரு நாட்டில் (மேற்கின் எல்லா நாட்டிலுமே) யாரேனும் முன்வைத்திருந்தால் பெரிய பிரச்சனையாய் வெள்ளையர்களாலேயே மாற்றப்பட்டிருக்கும். நம் தமிழ் சூழலில் இது ஒரு இனவாத கருத்து என்று விளங்கி கொள்ள கூட நாதியில்லை. முகமுடியணிந்த நாய்கள் தொடங்கி, பெரியாரியம் பேசும் காஞ்சிபோன மலம் வரை, என்றென்றும் அன்புடயதாய் சொல்லிகொள்ளும் பாலாஜி உட்பட பலரால் வக்காலத்து வேறு வாங்கபடுகிறது.

நன்றாய் கவனிக்க வேண்டும். திருமாவளவனை தாராளமாய் விமர்சிக்கலாம். அதனுடன் நான் உடன்படலாம், மறுக்கலாம், எதிர்கலாம். இங்கே தாஸ் சொல்லியிருப்பது ஒரு ஆதிக்க ஜாதி உளவியலிலிருந்து வரும் ஒரு அசிங்கமான வசை. நியாயப்படி இதற்கு, தாஸின் அடையாளம் தெரிந்தால், வழக்கு தொடுக்க கூட முடியும். இங்கே பிரச்சனை திருமாவின் அரசியல் சரியா என்பது பற்றிய விவாதமல்ல. ஒரு ஜாதி வெறி வசையை ஒருவன் பொது களத்தில் முன்வைப்பதும், அதற்கு மற்றவர்கள் வக்காலத்து வங்குவதும்.

தாஸ் எழுதியதை அவ்வப்போது படித்ததில், அவருடன் என்னால் எதுவும் பேச முடியும் என்று தோன்றவில்லை. அவருடய சூப்பர் லாஜிக் சுப்பராயத்தனமான வாதங்களுக்கு பதிலளிக்கும் தர்க்க திறமை எனக்கு கிடையாது. அதனால் அவருடன் பேசும் நோக்கம் எனக்கு ஒருபோதும் கிடையாது. (என்னை உயர்த்தி அவரை தாழ்துவதாய் யாரும் நினைக்க வேண்டாம், இது வேறு வேறு மொழிகளில் பேசிக் கொள்வது மாதிரி ஒரு சிக்கல். நான் சொல்வது எதுவும் அவருக்கு புரிய வாய்ப்பில்லை, அவர் சொல்வது புரிந்தாலும் அதிலுள்ள பிரச்சனைகளை அவருக்கு விளக்க என்னிடம் திறமையில்லை.) அதனால் அவருடன் விவாதிக்க எதுவுமில்லை. ஜாதிவெறி கருத்துக்கு செருப்படி கண்டனம் மட்டுமே தெரிவிக்க முடிகிறது.

ஜாதியத்திற்கு எதிராய் பேசுவதாய் பதிவுகள் போட்டுவருவதாய் ஃபிலிம் காட்டிவரும் காஞ்சி மலம்ஸ், தாஸ் சொல்வதற்கு வக்காலத்து வாங்குவதை கவனிக்க வேண்டும். காஞ்சி மலம்ஸ் வெளியிட்டு வரும் பெரியாரிய கருத்துகளுக்கும் தாஸுக்கும் என்ன சம்பந்தமோ? ஆனால் இந்த விஷயத்தில் இருவரும் ஒன்று சேர்ந்து கொள்கிறார்கள். கூட பாலாஜி வேறு போய் சேருகிறார்.

தங்கமணி, மயிலாடுதுறை சிவா போன்றவர்களுக்கும் காஞ்சி ஏதோ வகையில் பாராட்டபட வேண்டியவராய் தெரிந்திருக்கிறது. எப்படி என்று எனக்கு புரியவில்லை. நானும் கூட காஞ்சியில் தொடக்கப் பதிவுகளில் வரவேற்று பாராட்டி பின்னூட்டம் அளித்திருக்கிறேன். ஆனால் இவர் தொடர்ந்து ஒரு தலித் எதிர்ப்பு நிலையையே எடுத்து வந்த பின்னும் எப்படி செய்கிறார்கள் என்று புரியவில்லை. பல பார்பன நரிகளுக்கு இணையான, திரிபு தர்கத்தையும் காஞ்சி மலம்ஸ் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார். சம்பந்தமில்லாத இரண்டு விஷயங்களை ஒப்பிடுவது, இட ஒதுக்கீட்டிற்கு எதிராய் பார்ப்ன மற்ற ஆதிக்க ஜாதியினர் அளிக்கும் அதே தர்கத்தை முன்வைப்பது போன்ற வேலைகளையே இவரும் செய்து வருகிறார். திருமாவளவனின் இன்றய தமிழை முன்வைத்த அரசியலை விமர்சிக்கலாம். ஆனால் அங்கே "நல்ல மாட்டுக்கு ஒரு சூடு" என்று ஒரு உவமையை முன்வைப்பது காஞ்சி மலத்தில் வெளிப்படும், சாதிய உளவியலில் உருவான புழுவாகத்தான் தெரிகிறது. "தலித் என்று அடையாளம் தெரிய ஒரு பெண் மருத்துவ கல்லூரியில் நுழைவதுதான், அவர் துன்புறுத்த படுவதற்கான காரணம்' என்ற தொனியில் வாதத்தை தங்கமணியின் பதிவில் முன்வைத்தவர் இவர். தலித் அடையாளத்துடன் செல்வதால் ஒருவர் துன்புறுத்த படுவாரெனில், அது எத்தனை பெரிய அநியாயம் என்று இவர் கண்ணுக்கு தெரியாதது மட்டுமல்ல, இந்த வாதம் இட ஒதுக்கீட்டிற்கு எதிரானது. இதை இன்னொரு இடத்திலும் சொல்கிறார்.

"நாங்களும் சாதின்னா என்னான்னு தெரியாம தான் சாமி பத்தாங்க்லாஸ்(10வது) வரைக்கும் படிச்சிகிட்டு இருந்தோம். +1 ல் சேரதுன்னா ஜாதி செர்டிபிகெட்டு வேனுமுன்னு சொல்லிபுட்டாங்க சாமி. அப்ப தான் நாங்க மொதோ முறையா அவுங்க அவுங்க அப்பா கிட்ட பொய் நம்ம ஜாதி என்ன ஜாதி அப்பான்னு கேட்டோம் சாமி. அதுக்கு அப்புரம் தான் சாமி அதுவரிக்கும் ரமெஷ், சுரெஷ், பாலகணேசா இருந்தவனெல்லாம் செட்டி ரமெஷாகவும், கோமுட்டி சுரெஷாகவும், கருப்பு ஐயரு பாலகணெஷாகவும் ஆகிபுட்டாங்க சாமி. எங்க மனசுல அதுவரைக்கும் உங்க வெள்ள மனசு மாதிரி தான் இருந்திச்சி. கர்ணம் ஆபிசில போய் கியூ நின்னு ஜாதிங்கர கேவலத்த ஜாதி மதம் இல்லன்னு சொன்ன அசோக முத்திரைய குத்தி அரசாங்கம் தான் சாமி கொடுத்துச்சி."

விளக்க தேவையேயில்லை. அரசாங்கம்தான் ஜாதி சொல்லிகொடுக்கிறதாம். எப்படி, இட ஒதுக்கீட்டின் மூலமாக. இட ஒதுக்கீட்டிற்கு எதிராய் நேரடியாய் பேசுபவர்களை விட இப்படி பெரியார் அது இதென்று பேசும் காஞ்சி மலம்ஸ் எங்க நிக்குதுன்னு பாக்கணும்!

சம்பந்தமே இல்லாமல் சத்துணவின் தரத்தையும், இளையராஜாவின் திருவாசக சிம்பனியையும் இணைத்து கொச்சைபடுத்தியது. அதே போன்ற சற்றும் தொடர்பில்லாத ஒரு தர்க்கத்தை முன் வைத்து திருமாவை திட்டுகிறது. ஆனால் ஒரு விஷயம் காஞ்சி மலம்ஸ் திருமா/ராமதாஸையும் பிகார் மலம் அள்ளுதலையும் பற்றி எழுதியது ஒரு நேரடி விமர்சனம். அது எத்தனை முட்டாள்தனமாக, விஷமத்தனமாக இருந்தாலும், அதை ஒரு தர்கத்தை அணுகுவது போலவே அணுகியாக வேண்டும். ஆனால் இப்போது காஞ்சி மலம்ஸ் தாஸ் சொன்னதை அமோதித்து வக்காலத்து வங்கும்போது அவருடய ஜாதி வெறி மட்டுமே வெளிவருகிறது. மலம்ஸ் மேலும் புத்திசாலித்தனமாய் கேட்பதாய் நினைத்து கேட்கிறார்.

" அது சரி சாமி, பிஹார்ல மலம் அள்ளுகின்ற வேலையை செய்வதும் மனிதர்கள் தனே சாமி. அப்ப முதல்ல போயி அவங்கள மலம் வார வச்சவங்கள உங்க செருப்பால அடிச்சிட்டு வந்து மத்தவங்கள அடிக்கலாமே சாமி.
அந்த ஈன யோனியிலிருந்து பிறந்தவங்கள மலம் வார வச்சவங்க யார் தெரியுமா சாமி? அவங்கள தான் உங்களுக்கு நல்லா தெரியுமே சாமி. அவங்க இணையத்துல உலா வர்ரவங்க இல்ல சாமி. மடம் அமச்சு வாழ இலையில மலம் கழிக்கிராங்க சாமி. எங்க, இப்ப போய் அடிங்க பாக்கலாம்?"

நான் எங்கே பிகாரில் (தமிழ்நாட்டில் என்னய்யா வாழுது?) 'மலம் வார வச்சவங்களுக்கு', அல்லது சங்கராச்சாரிக்கு எங்கு வக்காலத்து வாங்கினேன். அவர்களை செருப்பால் அடிக்க வேண்டாம் என்று எங்கு சொன்னேன். பிரச்சனை ஒருவன் பொதுகளத்தில் ஒரு தலித்தை 'பீயள்ளும்' உவமை போட்டு பேசியது பற்றியது. அதை பற்றி பேசும் போது இப்படி தொடர்பில்லாமல் எதையாவது பேசுவதையே இந்த காஞ்சி மலம்ஸ் தொடர்ந்து செய்து வருவதை பார்க்கலாம். 'பீயள்ளும்' உவமை போட்டு பேசியதற்கு வக்காலத்து வாங்கியது மட்டுமில்லாமல் மீண்டும் "இப்ப சொல்லு சாமி திருமா என்ன வேலைய செய்யுறாருன்னு?" என்கிறார்.

90களில் ஒரு பெரும் தலித் எழுச்சி வந்து விவாதமும் சிந்தனையும் எங்கேயோ போய்கொண்டிருக்கும் போது, இன்னும் 50 வருடத்திற்கு முந்தய அரத பழசுகளை முன் வைத்து இந்த காஞ்சி மலம்ஸ் சொல்ல வருவது என்ன? பாப்பான், சங்கராச்சாரியார் பகவத் கீதை இதையெல்லாம் திட்டி, தனித்துவமாக தோன்றிவரும் தலித் இயக்கத்தை நிராகரிப்பதையும், விஷயத்தை திசை திருப்புவதையும் மட்டுமே! ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். காஞ்சி மலம்ஸின் லாஜிக் படியே இங்கிருக்கும் ஜாதி பிரிவினைகள் ஒரு பார்பனிய சதி. சாதிகளுக்கு இடையேயான சண்டகள் இந்த சதியின் ஒரு பகுதி. அப்படி இருக்கும் போது பாமகவும், விடுதலை சிறுத்தைகளும் தங்களுக்குள்ளான மோதலை நிறுத்தி ஒன்று சேர்வதுதான் சரியான அரசியலாக இருக்க முடியும். ஆனால் இந்த இணைவுதான் இவர் கண்ணை உறுத்துகிறது என்பதை கவனிக்க வேண்டும். அங்கதான் நிக்குது காஞ்சி மலம்ஸ்!

பாலாஜி வேறு வந்து நியாயம் கேட்கிறார். "திருமா நடத்துவது சந்தர்ப்பவாத அரசியல் என்பதால் தான் தாஸ் அப்படி கருத்து தெரிவித்தார்! " என்கிறார் இண்டர்பிரடேஷனின் நாயகர். தெரியாமல்தான் கேட்கிறேன். ஒரு பேச்சுக்கு திருமா செய்வது சந்தர்பவாத அரசியல் என்றே வைத்துகொண்டாலும், சந்தர்பவாத அரசியல் செய்பவர்களை எல்லாம் 'பீயள்ளும்' உவமை போட்டுதான் தாஸும், பாலாஜியும் பேசி வருகிறார்களா? ரவி ஸ்ரீனிவாஸ் சுஜாதாவை (அல்ல, சுஜாதாவை பின்பற்றுபவர்களை) 'முட்டாள்' என்று சொன்னதற்கே தார்மீக கோபம் கொண்டு மறுமொழிந்தவர் இவர். ஒரு பெரும் தலித் எழுச்சிக்கு காரணமான அரசியல் தலைவனை பொதுகளத்தில் எதற்கு உதவாத ஒரு நாய் 'பீயள்ளுவதாக' சொல்வதையும், அதை நியாயபடுத்தி கொண்டிருப்பதற்கும் வக்காலத்து வாங்குகிறார். இது பாப்பார லாஜிக் அல்லாமல் என்னவாம்? ' பாப்பான்' என்று சொன்னால் இவருக்கு பொத்து கொண்டு வரும், ஆனால் தலித்தை ஒருவர் கீழ்தரமாய் வர்ணிப்பதை பார்த்து கண்டனம் தெரிவிப்பது இவருக்கு கண்ணை உறுத்துகிறது.

மேலே எழுதிகொண்டே போகலாம் என்றாலும் அலுப்பு மட்டும் நேரமின்மை காரணமாய் இங்கே நிறுத்திகொள்கிறேன். திருமா, ராமதாஸ் இணைவு குறித்தும், அதன் விளைவாய் வெளிப்படும் தமிழை முன்வைத்த அரசியல் குறித்து எழுத தொடங்கிய உருப்படியான கட்டுரை ஒரு மாதமாய் பாதியில் நிற்கிறது. இது போன்ற polemicsற்கு செலவழிக்கும் நேரத்தை ஏனோ அதற்கு செலவழிக்க முடிவதில்லை. நிச்சயம் ஏதோ ஒரு வடிவத்தில் அது இங்கே வெளிவரும். அதனால் இதை இங்கேயே நிறுத்தி கொள்கிறேன்.

பிகு 1: இதை இங்கே ஒரு பதிவாய் எழுதியதற்கு காரணம் உண்டு. தாஸின் ஜாதி வெறி பின்னூட்டத்திற்கும், அதை ஆமோதித்த காஞ்சி மலம்ஸின் கருத்திற்கும் தங்கள் கண்டனத்தை இங்கே மற்ற நண்பர்கள் பதிவு செய்யமுடியும். "வன்மையாக கண்டிக்கிறேன்' என்ற வரி மிகவும் க்ளிஷேயாகி போனதாக எனக்கு தோன்றுவதால் 'செருப்பு', 'கெட்ட'வார்த்தைகள் போன்றவைகளால் எனக்கு கண்டிக்க வேண்டியுள்ளது. நண்பர்கள் அதை பின்பற்ற தேவையில்லை. தங்கள் பாணியில் கண்டிக்கலாம். கண்டிகாமலும் சும்மா இருக்கலாம். இன்னும் அநாகரிகமாய் பதிவு எழுதியதாய் என்னையும் கண்டிக்கலாம். நமது சூழல் எவ்வளவு அவலமானது என்று அறிந்துகொள்ளும் சந்தர்பத்தை உருவாக்க இதை இங்கே ஒரு பதிவாய் இட்டுள்ளேன்.

பிகு 2. ஒரு சந்தர்பத்தை உருவாக்கி தாஸ் சொன்னதை கண்டிக்கும் பொருட்டே இதை ரஜினி ராம்கியின் பதிவில் எழுதினேனே ஒழிய, இந்த பிரச்சனைக்கும் ரஜினிக்கும் எந்த தொடர்பும் இல்லை. ரஜினியை ஒரு பெரும் நிகழ்வாய் குறிப்பிட்டுள்ளேன், அதில் எந்த சந்தேகமும் எனக்கு இல்லை. ரஜினி, எம்ஜியார், வீரப்பன், சுஜாதா, சோ கூட தமிழ் சூழலை பெரிய அளவில் பாதித்த ஒரு பெரும் நிகழ்வுகள்தான். இதை வெறும் வார்த்தைகளால் திட்டி புரிந்து கொண்டதாய் நினனக்காமல், இது குறித்த ஒரு அறிவுபூரவமான ஆய்வுகளும் விவாதமும் வரவேண்டும். அதற்கு வழி செய்யும் வகையிலேயே ரஜினி ராம்கியின் புத்தகததை வரேவேற்று வாழ்த்துரைத்தேன்.

காஞ்சி தன் வழக்கமான அசட்டுத்தனத்துடன் பாபா படத்தின் பாடல் வரிகளை எழுதி ஏதோ வழிந்திருக்கிறது. அதன் பின் என்ன தர்க்கம் இருந்தாலும், பாபா படத்தின் அந்த பாடல் வரிகளை முன்வைத்து திண்ணை விவாத களத்தில் சின்ன கருப்பனுடன் நடந்த விவாதத்தில் என் கருத்துக்கள் இருக்கிறது. விரும்பியவர்கள் போய் பார்கலாம்.

பிகு3. இந்த பதிவிற்கு வரும் பின்னூட்டங்களுக்கு பதில் எதுவும் அளிக்க, குறைந்த பட்சம் உடனடியாய், அளிக்க, உத்தேசமில்லை. எழுதுபவர்களுக்கு நன்றி!

Post a Comment

---------------------------------------
Site Meter