ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Tuesday, March 22, 2005

முட்டி கொள்ளல்!

பொடிச்சி என் 'செருப்படி' பதிவில் எழுதிய பின்னூட்டத்தில் தன்னை குறிப்பிட்டதாக வெங்கட் எடுத்துகொண்டு (பொடிச்சி அதை மறுத்திருக்கிறார்), எழுதிய பதிவிற்கான எதிர்வினைகளுக்கு, தனது விளக்கத்தை ஆயாசத்துடன் தந்திருக்கிறார். தமிழக அரசியல் வறலாற்றில் முதன் முறையாய் ஊடகங்களால் பெரிதும் (அதுவும் எதிர்மறையாய் பேச வாய்பளிக்கும் அரசியலை கைகொண்டபின்) பேசப்படுபவராய் 'வளர்ந்துள்ள' ஒரு தலித் தலைவரான திருமாவளவனை, பொதுக்களத்தில் ஒருவர் சாதிய வசை என்று நான் நினைக்கும் வகையில் வர்ணித்ததற்கு, குறைந்த பட்ச எதிர்வினையாவது வைக்க வேண்டும் என்று நினைத்து, அதை கண்டித்து எழுதிய ஒரே காரணத்திற்காக என் ஒவ்வொரு வாக்கியத்தையும் விளக்கி இன்னும் எழுதிக்கொண்டிருக்கிறேன். எத்தனை ஆயாசம் (ஆயாசம் மட்டுமா?) தரும் செயல் என்பதை வாசிப்பவர்கள் ஊகித்து கொள்ளட்டும்.

என் பதிவிற்கு, நான் எழுதியதை நேரடியாய் எதிர்கொள்ளாமலும், நான் சொல்லாததை சொல்லியும், என் கருத்துக்களை திரித்துமே எதிர்வினைகள் வந்துள்ளன. (நண்பர்களாய் ஏதோ ஒரு விதத்தில் இதுவரை உரையாடியவர்களின் எதிர்வினையை மட்டும் குறிப்பிடுகிறேன். என் பெயரில் போலி மறுமொழி எழுதுவது போன்ற செயல்களை இங்கே பேசவில்லை.) அவையனைத்தையும் எதிர்கொள்வதோ, அல்லது அதை முன்வைத்து முட்டிக்கொள்வதோ சாத்தியமில்லை. அவைகளை விட்டுவிட்டு வெங்கட் (எனக்கு எழுதியதை) மட்டும் எதிர்கொள்ள காரணம் உண்டு.

சில நாட்கள் முன்பு நான் மதிக்கும் மது கிஷ்வர் 'தமிழ் வெறி' என்று உளறி கொட்டியிருந்தது குறித்து மாலன் மற்றும் சுந்தர மூர்த்தி எழுதியிருந்தனர். அது எனக்கு ஒரு முக்கியமான உதாரணம். ஏனெனில் மது கிஷ்வர் போன்ற ஒருவரே அப்படித்தான் சிந்திக்க முடியும் என்பது இந்திய சமூகத்தில் புரையோடியுள்ள வட இந்திய ஆதிக்க வெறியின் ஒரு தெளிவான அடையாளம். நான் பல தளங்களில் எதிர்கொள்ள நேர்ந்த பச்சையான பல ஹிந்தி வெறியர்கள் எனக்கு முக்கியமல்ல. நான் மதிக்கும் மது கிஷ்வரே அத்தகைய சமூக உளவியல் நோய்க்கு பலியானவர் என்பதே எனக்கு கவனிக்க தகுந்த உதாரணம்.

அதே போல வெங்கட் எழுதும் பல விஷயங்களை நான் முக்கியமாய் நினைக்கிறேன். அதை வாசித்து தனிப்பட்ட முறையில் நான் பயனடைந்திருக்கிறேன். அவருடன் ஒப்பிட்டு சொல்லக்கூடிய வகையில் அவரின் எழுத்து தளத்தில் வேறு யாரும் எழுதுவதாக தெரியாததால் அதன் முக்கியத்துவம் இன்னும் அதிகமாகிறது. அப்படி பட்டவர் எவ்விதமாய் ஒரு சமூக பிரச்சனை குறித்து கருத்து வைத்திருக்கிறார், அணுகிறார், எதிர்கொள்கிறார் என்பது மிக முக்கியமானது. அதனாலேயே இந்த முட்டிகொள்ளும் வேலையை செய்கிறேன்.

இதை படிக்கும் முன் வெங்கட்டின் பதிவில் நான் எழுதியதை ஒரு முறை படிக்கலாம்.

1. முதல் பிரச்சனை 'பாப்பான்..பறையர்..' ('ன்' 'ர்' சுய நினைவுடன் இடப்பட்டிருக்கிறது) என்று அடையாளங்களை முன்வைத்த வசைகளை ஒப்பிடுதல்.

"நாஜி என்று விளிப்பதற்கும் பார்ப்பான் என்று விளிப்பதற்கும் இடையில் இருக்கும் அடிப்படை வேற்றுமையை சாதுரியமாக மறைத்து " நான் பேசுவதாக வெங்கட் சொல்கிறார்.

வெங்கட்தான் நான் எழுதியதை சாதூர்யமாக திரிப்பதாக தெரிகிறது. அவர் சொல்வதுபோல் 'பாப்பார புத்தி' என்று சொல்வதையும். 'நாஜி புத்தி' என்று சொல்வதையும் நான் ஒப்பிடவே இல்லை.

இந்த விஷயத்தை பொத்தாம் பொதுவாக பேசமுடியாது. ஒரு குறிப்பிட்ட சொல் அந்த சந்தர்பத்திற்கு ஏற்பவே அதன் பொருளை பெறுகிறது, அந்த சந்தர்பத்தை முன்வைத்து மட்டுமே அதன் வசைதன்மையை பேசமுடியும் என்பதே என் தரப்புவாதம். ஒரு 'அலுவலகத்தில் திருடும்' உதாரணத்தில் 'பாப்பார புத்தி' என்று சொல்வது நியாயமற்றதாய் இருப்பதையும், வேறு சந்தர்ப்பத்தில் (சாப்பாடு விஷயத்தில்) அதன் பொருள் வேறுபடுவதையும் ஒரு எளிய உடனடியாய் தோன்றிய உதாரணமாய் குறிப்பிட்டேன். இன்னும் பொருத்தமான உதாரணங்களை தரமுடியும். 'பாப்பார புத்தி'என்று நான் எதை குறிப்பிட்டேன் என்பதற்கு என் விளக்கத்தையும் கொடுத்த பின்பு, இப்படி 'பாப்பார புத்தி' என்று சொல்வதையே (அதன் தர்கத்தை எதிர்கொள்ளமல்) இதுவும் ஒரு சாதிய வசைதானே என்று அறிவுகொழுந்துகள் லாஜிக் போடுவதை பேசும்போதே 'நாஜி புத்தியுடன்' ஒப்பிட்டேன். அதாவது 'பாப்பார புத்தி' 'நாஜி புத்தி' இரண்டின் ஒற்றுமை வேற்றுமையல்ல நான் சொல்வது. நாஜித்தனம் என்று ஒரு விஷயம் குறித்து பேசத் தொடங்குவதையே ஒருவர் 'இனவெறி' என்று குறிப்பிடுவது போல, 'பார்பனியம்' என்று ஒன்றை பேசுவதையே 'சாதியமாக' பார்பதையே நான் குறிப்பிட்டேன். மற்றபடி இரண்டையும் ஒப்பிடவில்லை.

ஒருவேளை நான் விளக்கம் எதுவும் தராமல் "'பாப்பார புத்தி' என்று திட்டுவது 'நாஜி புத்தி' என்று சொல்வதை போல" என்று மட்டையடித்திருந்தால் வெங்கட் எழுதியதில் நியாயம் இருந்திருக்கும். ஒரு சின்ன மறுமொழியில் கூட நான் அளித்த விளக்கங்களை கண்டுகொள்ளாமல், பின்னால் வரும் 'நாஜி புத்தி' ஒப்புமையை மட்டும் எடுத்து போட்டு வேறு எதையோ சாமர்த்தியமாக பேசுவது குறித்து மேலே சொல்ல எதுவும் இல்லையெனினும், "இதையும் நீங்கள் பாப்பார லாஜிக் என்று சொல்வீர்களா என்று தெரிந்துகொள்ள ஆசை. " என்று வெங்கட் கேட்பதற்கு பதில் "இல்லை". மீண்டும் சொல்லவேண்டுமானால் இது தர்கத்தில் பொதுவாய் ஒருவர் காட்டக்கூடிய ஒரு சாமர்த்தியம் அல்லது சாமர்த்தியம் என்று நினைத்து செய்யும் நேர்மையின்மை என்று மட்டுமே நினைக்கிறேன்.

ஆனால் கவனிக்கப் வேண்டியது அது அல்ல. என் ஒவ்வொரு வார்த்தைக்கும் இத்தனை விளக்கங்களை அளித்த பின்பு, "இன்னொன்று கவனித்தீர்களா, நான் என்னுடைய கருத்தை எடுத்துச் சொல்லவேண்டுமானால், நீங்கள் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டு என் நிலையை உங்களுக்குப் பொறுமையாகச் சொல்லியாக வேண்டும். உங்களுக்கு இது எளிது; உங்களால் தர்க்கிக்க முடியாத எல்லாவற்றையும் பாப்பார லாஜிக் என்று இழிந்துவிட்டுப் போய்விடலாம். " என்று சொல்லி ஒரு ஸ்மைலியும் போடுவதுதான் பாப்பார லாஜிக்காக எனக்கு படுகிறது. இந்த வரிகளில் சொல்லப்பட்டிருப்பதை போல் அல்லாமல், இதை 'பாப்பார லாஜிக்' என்று சொல்வதன் விளக்கத்தை பின் பகுதியில் தருகிறேன்.


2. நான் கருப்பர்கள்/வெள்ளையர்கள் முரண்பாடுடன் நமது சாதிய சூழலை ஒருபோதும் ஒப்பிடவில்லை. பொதுவாக கருப்பர்களின் போராட்டங்கள், இலக்கியம் இவற்றிலிருந்து பல உந்துதல்களையும், படிப்பினைகளியும் பெறமுடியுமே ஒழிய, அதை சாதிய சமூகத்துடன் ஒரு போதும் ஒப்பிட முடியாது. "தலித்தும் பார்ப்பனர்களும் இல்லாத பெரும்பான்மையோரின் வசதியை நினைத்துப்பார்த்தீர்களா? இந்த வசதியை இழக்காமல் இருப்பதற்கு அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்" என்று வெங்கட் சொல்வதை ஒரு பக்கம் ஒப்புகொண்டு அதை பிரச்சனையின் ஒரு பரிமாணமாக பார்கிறேன். இன்னொன்று இந்த சாதிய சமூகத்தின் படிநிலை பண்பு. இங்கே தலித்துக்கு முக்கிய முதல் எதிரியாய் வன்னியனும் தேவனும் இருக்கும் யதார்த்தம். இப்படி ஒரு படிநிலை (அம்பேத்கார் இதை "graded inequality' என்கிறார்) பண்பு இத்தனைகாலமாய் இந்த சாதிய சமூகத்தை கட்டி காக்கும் முக்கிய காரணியாகவும், மோதல்கள் அந்தந்த படிநிலையிலேயே ஏற்பட்டு மேலே இருந்த பார்பனர்கள் தொடர்ந்து, எதிர்ப்பை சமாளிக்க வேண்டிய ஒரு கட்டாயத்திற்கு கூட ஆளாகாமல் தப்பித்து அதன் பலனை மட்டும் அனுபவித்து வந்தது இன்னொரு பரிமாணம். வெங்கட் அவரின் மற்ற கட்டுரைகளில் காண்பிக்கும் முதிர்ச்சிக்கு நேரெதிராக பிரச்சனைகளை எளிதாக குறுக்குகிறார். மிக எளிதாக பல இணைய ஃபோரம்களில் கேட்கப்படும் மேலோட்டமான கேள்விகளையே ஒரு அறிவுஜீவி அதிகாரத்திலிருந்து எழுப்புகிறார். எப்படியிருப்பினும் அவர் சொல்வது இங்கே எந்தவித பொருத்தப்பாடும் இல்லாதது. நான் எழுதிய எதிர்வினையே ஒரு பார்பனரல்லாத ஜாதி வெறியின் வெளிப்பாட்டை கண்டிப்பதுதான். நான் பதிவு முழுக்க 'காஞ்சி மலம்ஸ்' என்று குறிப்பிட்டு கண்டிக்க பட்டவர் பெரியார் பெயரை சொல்லி பார்பனியத்தை எதிர்த்து எழுதி வருபவர். இது தவிரவே வேறு இடங்களில் என் பதிவில் தேவர்களின் ஆதிக்க வெறி இது குறித்தெல்லாம் பேசப்பட்டுள்ளது. இத்தனைக்கும் பிறகு பாப்பான்/தலித் என்று ஒரு இருமை எதிர்வை முன்வைப்பதாய் (ஒரு வழக்கமான மேம்போக்கு வாதமாய்) எடுத்துக்கொண்டு, வெங்கட் மட்டையடிப்பதை எதிர்கொள்ளும்போது எத்தனை ஆயாசம் வரும்?


3. வெங்கட் எழுதியது

//கடைசியாய் 'இது ரொம்ப தேவையான பதிவு' சூழலின் ஆரோக்கியம், என்றெல்லாம் மக்கள் ஜல்லியடிக்க தொடங்கியிருப்பது எதிர்பார்த்ததுதான். ஜாலியாய் எடுத்து கொள்வதோடு, சூழலில் வெளிப்படும் சொரணைத்தன்மைக்கான சான்றிதழாய் இதை கருதலாம்.

ரோ.வ. நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? என்னுடைய கருத்துடன் ஒத்துப் போவதாகப் பிறர் எழுதுவது ஜல்லியடிப்பதாக உங்களுக்குத் தெரிகிறதா? தயவு செய்து நண்பர்களை இழிவுபடுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். இதில் ஜல்லியடிக்கிறார்கள் என்று சொல்லும் நீங்கள் உங்கள் பதிவில் யாரையாவது செருப்பால் அடிக்கலாம் என்று சொல்லும்பொழுது வெறும் ஒற்றை வரியில் "இல்லை அந்தச் செருப்பில் மலத்தைத் தோய்க்க வேண்டும்" என்று உங்களுடன் ஒத்துப் போனால் அதுவும் ஜல்லியடியா? இப்படி உங்கள் பதிவில் யாராவது எழுதும் பொழுது இதே போல் "எனக்கு ஜல்லியடிக்காதே" என்று எழுதுவீர்கள் என்று எதிர்பார்க்கலாமா?

இதைத்தான் நீங்கள் என்னுடன் இல்லையென்றால், என் எதிரியாவாய் என்று சொல்லும் போக்கு என்றேன்.//

வெங்கட் பதிவில் யாரேனும் பாராட்டி பின்னூட்டமிடுவதோ அல்லது அவரோடு ஒத்து போவதோ குறித்து சொல்ல எனக்கு எதுவும் இல்லை. அதை பற்றி பேசுவதற்கு பதில் வெங்கட் எழுதியதை நேரடியாக எதிர்கொள்வேன். அதுவே நேர்மையானது என்று நினைக்கிறேன். நான் எழுதும் கருத்துக்களை எதிர்கொள்ள திராணியில்லாதவர்கள், ஒருமுறை கூட நேரடியாய் நேர்மையுடன் எதிர்கொண்டிராதவர்கள் வேறு இடங்களுக்கு போய்,

"தேவையான நேரத்தில் வந்த அருமையான பதிவு. சமீப காலங்களில் அதிகமாக எழுத தோன்றாததற்கு, இந்த மாதிரியான சூழ்நிலை கூட காரணமோ என தோன்றுகிறது.
நெகிழ்வுத் தன்மையே இல்லாத, முடிவுகளை ஏற்கனவே எடுத்துவிட்ட, தர்க்கம் என்ற பெயரில் குதர்க்கம் பேசுகின்ற வகையில் நிறைய படித்துக் கொண்டிருக்கிறேன் சமீபகாலங்களில்.

ஆனால், உயர உயர பறப்பதும் ஒரு நேரம் தரை இறங்கித்தான் ஆக வேண்டும்." என்று எழுதுவதையே ஜல்லியடிப்பதாக கூறுகிறேன். ஒரு நாகரீகம் கருதி ஜல்லியடிப்பது என்றேன். எந்தவித விளக்கமும் தரும் நேர்மையில்லாமல் வெறும் ஸ்வீப்பிங் தீர்ப்புகளை மட்டும் தந்துவிட்டு, அதையே அடுத்தவர் செய்ததாக சொல்லி முத்திரம் பெய்வதையே அவ்வாறு குறிப்பிட்டேன். சுந்தரமூர்த்தி எழுதியது குறித்து அவரால் விளக்கம் தரமுடியும். அவர் குறித்து கேள்வி எழுப்பினால் அதை அவர் நேரடியாய் எதிர்கொள்ளும் நேர்மையாய் காட்டுவார். ஏதோ அவரால் சொல்லமுடியாததை நான் சொல்லிவிட்ட காரணத்தால் வந்து என் பதிவில் பின்னூட்டமிடவில்லை. அவர் என்னுடம் ஒத்து போகும் கருத்தை நான் சொன்னதால் வந்து பின்னூட்டமிடுகிறார். அப்படி செய்யும் போது "சமீப காலங்களில் அதிகமாக எழுத தோன்றாததற்கு, இந்த மாதிரியான சூழ்நிலை கூட காரணமோ என தோன்றுகிறது." என்பதுபோல் ஜல்லியடிக்கவில்லை. "நெகிழ்வுத் தன்மையே இல்லாத, முடிவுகளை ஏற்கனவே எடுத்துவிட்ட, தர்க்கம் என்ற பெயரில் குதர்க்கம் பேசுகின்ற வகையில் நிறைய படித்துக் கொண்டிருக்கிறேன் சமீபகாலங்களில். " என்று மற்றவர்களின் மேல் பெயர் சொல்லாமல் முத்திரம் போக மாட்டார். இது குறித்து கேள்வியோ, விமர்சனமோ வந்தால் மௌனமாகி ஓடி ஒழியவும் மாட்டார். நேரடியாய் எதிர்கொண்டு தன் விளக்கத்தை அளிப்பார். உங்களுக்கும் நண்பரான சுமுவை நீங்கள் இப்படி கேவலப்படுத்தியிருக்க வேண்டாம். 'சூழல் கெட்டுவிட்டது' என்று ஜல்லியடிப்பவர்களுக்கு பதிலாய் 'இப்படி சொல்வதை சூழலில் வெளிப்படும் சொரணைத்தன்மைக்கான சான்றிதழாக கருதலாம்.' என்று என் பதிலாய் எனக்கிருக்கும் விமரசனத்தை அப்படியே வைத்ததை, உங்கள் 'நண்பர்களை கேவலப்படுதியதாக' நினைத்திருக்கவும் வேண்டாம்.

நானும், சுமுவும், சங்கரபாண்டியும். பெயரிலியும், அனாதையும் யாரும் ஒருவருடன் ஒருவர் எல்லா கருத்துக்களிலும் ஒத்து போவதில்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். வேறுபடும் தருணங்களில் அதை வெளிப்படுத்த தயங்கியது கிடையாது. சண்டைகளும் உண்டு. நான் எந்த விதத்திலும் ஒத்து போகாத உங்கள் தளத்தில் என் கருத்துக்களை எத்தனையோ முறை முன்வைத்திருக்கிறேன். இதெல்லாம் "நீங்கள் என்னுடன் இல்லையென்றால், என் எதிரி" என்ற பார்வையுடன் செய்திருந்ததாய் நினைக்கவும் உங்களுக்கு உரிமை உண்டு. (ஸ்மைலி இருப்பதாய் கருதி வாசிக்கவும்.)


4. "....என்பதற்கான மறுமொழி எனத் தெரிகிறது. இதைப் படிக்கையில் எனக்கு வருத்தமாக இருந்தது. என்னுடைய கருத்தை அவர் மறுதலித்தால் அதே பதிவின் கீழ் (அல்லது அவரது சொந்தப் பதிவில்) மறுமொழி இடுவார் என்று நம்பியிருந்தேன். நான் முட்டாள்தனமாக எழுதியிருப்பதாகக் கருதினால் அதை நேரடியாக என்னிடம் சொல்லலாம். மாறாக அதை வேறிடத்தில் பயன்படுத்தியிருப்பது நான் சற்றும் எதிர்பார்க்காத ஒன்று. " என்று வெங்கட் சொன்னது பொடிச்சியை குற்றம் சாட்டுவதாகவோ, குறைந்த பட்சம் குறைப்பட்டு கொள்வதாகவோ நான் எடுத்துகொண்டதால் என்னை பற்றியும் அதே தொனியில் எழுதியதை (ஒரு வித்தியாசம், பொடிச்சி வெங்கட்டை சொல்லவில்லை என்று மறுக்கிறார், இங்கே அதற்கு வாய்ப்பே இல்லை. வெங்கட் என்னைபற்றித்தான் பேசினார் என்பது மறுக்க முடியாதது) "பொடிச்சிக்கு இவர் சொல்லும் நியாயத்தை தனக்கு பொருத்தி பார்காமல்" என்று எழுதினேன். வெங்கட் சொன்னதை ஏற்றுகொண்டு என் வாசிப்பு தவறு என்று எடுத்துகொண்டு அந்த கருத்தை திரும்ப பெற்று மன்னிப்பு கேட்கிறேன்.

ஆனால் அந்த வசிப்பு தேவை இல்லாமலே அந்த வரிகள் நேர்மையற்றதாகவே தெரிகிறது.

//எனவேதான், அறிவாளிகளாக நான் நம்பும் ஒருசிலர் பாப்பார நாயே என்று சொன்னாலும், பற நாயே என்று சொன்னாலும் எனக்கு வருத்தமளிக்கிறது. அதேபோலவேதான் செருப்பாலடித்தலும், ஆண்குறி அறுக்க விடுக்கப்படும் அழைப்புகளும். அதையும் விடக் கொடுமையானது இதில் ஈடுபடாதவர்களை எல்லாம் If you are not with us, you are against us என்று புஷ்தனமாகப் பயமுறுத்துவது. //

நான் சொன்ன ஒவ்வொரு வரிக்கும் பின்னால் ஒரு தர்கத்தை முன்வைத்திருக்கிறேன். ஆண்குறி அறுப்பது' என்பதற்கு என்ன அர்த்தம், அதை ஏன் சொல்கிறேன் என்று விலாவாரியாய் எழுதியிருக்கிறேன். மீண்டும் அதை வேறு இடங்களில் சொல்லியிருக்கிறேன். அதை எதிர்கொள்ளாமல் ஒருவர் மொட்டையாக 'நான் ஏற்றுகொள்ளவில்லை' என்று சொல்லலாம். மட்டையடிக்கலாம். ஆனால் அதை புஷ்தனம் என்று எந்த விளக்கமும் (நான் நேர்மையின்மை என்று குறிப்பிட்டு அதற்கு பதில் தந்த இரண்டாம் முறையும் எந்த விளக்கமும்) தராமல் பொத்தாம் பொதுவாய் சொல்வது நேர்மையின்மையாகவே தெரிகிறது. எது புஷ்தனம்? நான் சொல்வதை ஏற்றுகொண்டு 'குறியறுக்க' சம்மதித்தவர்கள் எத்தனைபேர்கள் இங்கே இருக்கிறார்கள்? பத்ரியும் வெங்கட்டும் இதை ஏற்றுகொண்டதாய் எனக்கு தோன்றவில்லை. அப்படி இருக்கும் போது அவர்களை எதிரியாக கருதியா அவர்கள் தளத்தில் கருத்துக்கள் சொன்னேன்? இங்கேயே ஒரு உதாரணம் சொல்கிறேன். எனக்கு வெங்கட்டின் 'வசவுகளின் காலம்' மிகுந்த பாரபட்சமானது என்றுதான் நினைக்கிறேன். என் தளத்தில் தொடர்ந்து பின்னூட்டமிடும் மாண்ட்ரீஸர் அதை 'நடுநிலையானது' என்கிறார். அவரை எதிரி என்றா கருதுகிறேன்? நண்பர் நாராயணன் திருமா/ரரமதாஸின் தமிழை முன்வைத்த அரசியலை விமர்சித்து ஒரு பதிவு எழுதினார். எனக்கு அதனுடன் ஒப்புதல் இல்லை. அதற்காக அவரை எதிரியாகவா பார்க்கிறேன் மிக தெளிவாய் 'மன்மதன்' படத்திற்கு வக்காலத்து வாங்கியவர்களையே நான் குறிப்பிட்டிருக்கிறேன். அதே போல திருமா குறித்த சாதிய வசைக்கு வக்காலத்து வாங்கியவர்களையே குறிப்பிடுகிறேன். எதிர்பவர்களை எதிர்ப்பவர்களாய் (எதிரிகள் அல்ல) சொல்லாமல் வேறு என்னய்யா சொல்லவேண்டும்? மற்றவர்களுடன் முரண்படுவதையும், எதிர்ப்பதையும், விமர்சனத்தையும் எப்படி முன்வைத்தால் 'புஷ்தனம்' இல்லை என்பார் என்று வெங்கட் (தன் வழக்கத்திற்கு மாறாக) விளக்கினால் நல்லது.

மீண்டும் வெங்கட் " நான் If you are not with us; you are against us என்று எழுதியது உங்களை முன்வைத்து எழுதியிருதாலும் அது உங்களுக்கு மாத்திரமானதில்லை என்று தெரியும்படியாகத்தான் எழுதியிருக்கிறேன்" என்கிறார். என்னை தவிர வேறு யாரை சொல்கிறார்,அப்படி சொல்வதன் நியாயம் என்னவென்பது இருக்கட்டும். நான் எழுதுவது 'புஷ்தனம்' என்பதுதான் அவருடைய தீர்ப்பு. அதற்கு விளக்கமளிக்க (நான் கேட்டபின்னும்) எந்த அவசியமும் அவருக்கு வரவில்லை.

நான் அதிகாரம் கையில் இல்லாத எவரையும் 'புஷ்தனம்' என்று சொல்லத் துணிய மாட்டேன் என்றாலும், ஒன்று நினைவுக்கு வருகிறது. 'காலம்'(?) பத்திரிகையில் ஷோபாசக்தி கண்ட தொ.பரமசிவனின் பேட்டியை முன்வைத்து வெங்கட் ஒரு பதிவு எழுதியிருப்பார். பதிவின் முடிவில் வெங்கட் திருவாய் மலந்தருளியிருப்பார். பேட்டி குறித்து அவர் எழுதிய விஷயம் இந்த பதிவைபோல், இன்னும் மற்ற இடங்களில் வெங்கட் தொடர்ந்து எழுதிவருவது போல், 'பார்பான்' என்ற வார்த்தையை முக்கிய விஷயமாய் முன்வைத்து எழுதியது. அது எப்படி இருப்பினும் முடிவில் 'இந்த பதிவு தாழ்த்தபட்டவர்கள் மீதான பரிவினால் எழுதப்படுகிறது. இதை புரிந்து கொள்ளாதவர்கள் யாரிடமும் என்னால் உரையாட முடியாது.' வெங்கட் தனக்கு இருப்பதாக சொல்லும் 'தாழ்த்த பட்டவர்கள் மீதான பரிவை' சந்தேகப்படுபவர்கள், ஒப்புக்கொள்ள மறுப்பவர்கள் யாருடனும் எந்தவிதமான உரையாடலையும் அவரால் வைத்துகொள்ள முடியாது. இதில் இன்னொரு பிரச்சனை என்னவெனில் 'தாழ்த்தபட்டவர்கள் மீதான பரிவு' என்றால் என்ன, அதை சந்தேகப்படுவது என்றால் என்ன, என்பதன் அர்த்தங்களையும் வெங்கட்தான் தீர்மானிப்பார். பச்சையான புஷ்த்தனம் என்று எதையாவது சொல்லவேண்டும் என்றால் அது இதுதான்!

என்னை பொத்தாம் பொதுவாய் 'புஷ்தனம்' என்கிறார். அதற்கு ஒரு விளக்கமும் தருவதில்லை. நான் ஏன் புஷ்தனம் இல்லை என்று விளக்குகிறேன். இதுவரை நான் எழுதிய அத்தனையையும் மாய்ந்து மாய்ந்து, ஒவ்வொரு இடத்திலும் ஹிப்னாடைஸ் ஆகும் அளவிற்கு மீண்டும் மீண்டும் சொன்னதையே சொல்கிறேன். அதற்கு பிறகு வெங்கட் சொல்கிறார்.

"இன்னொன்று கவனித்தீர்களா, நான் என்னுடைய கருத்தை எடுத்துச் சொல்லவேண்டுமானால், நீங்கள் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டு என் நிலையை உங்களுக்குப் பொறுமையாகச் சொல்லியாக வேண்டும். உங்களுக்கு இது எளிது; உங்களால் தர்க்கிக்க முடியாத எல்லாவற்றையும் பாப்பார லாஜிக் என்று இழிந்துவிட்டுப் போய்விடலாம். "

இதுதான் எனக்கு பாப்பார லாஜிக்காக தெரிகிறது. 'மெரிட்' பேசுவது அல்ல பாப்பார லாஜிக். இன்னொருவருக்கு தகுதியிருந்தும் மறுப்பது, அதற்கு நேரெதிராய் தனக்கு இல்லாத தகுதியை கோருதல். இது சட்டமாகவும் நடைமுறையாகவும் இருந்த திடத்தன்மை சாத்தியமாகாத இன்றய சூழலில், இது போன்ற பல லாஜிக்குகளாக நவ பார்பனியம் வழங்கி வருகிறது. இணையத்தில் மீண்டும் மீண்டும் இதைத்தான் எதிர்கொண்டு வருகிறோம்.

5.நான் எழுதியதில் வெங்கட் எதிர்கொள்ளாத ஒரு விஷயம்

"'பாப்பார' என்ற அடைமொழி கொண்டு வரும் வசைக்கு இத்தனை தூரம் எழுதுபவர், தலித் சார்பாய் தன்னை சொல்லி கொள்பவர் ஒரு இடத்தில் கூட, திருமா மீதான (இந்த எல்லா விஷயமும் தொடங்கிய புள்ளியான) வசை குறித்து எந்த கண்டனமும் (என் பாணியில் அல்ல) தெரிவிக்க தேவையில்லாதவராகவும், அது குறித்து குறைந்த பட்சம் தன் கருத்தை கூட சொல்ல தோன்றாதவராகவும் இருப்பதை கவனிக்கிறேன்."

இப்போதும் கூட திருமா மீதான இழிந்த வர்ணணையை கண்டிக்கவோ, குறைந்த பட்சம் அது குறித்த தன் கருத்தை சொல்லக்கூட தேவை வரவில்லை. அது குறித்து சொன்னதாக கீழ்கண்ட வரிகளை மட்டுமே பார்க்க முடிகிறது.

// நான் தமிழக அரசியல் பற்றி அதிகம் எழுதுவதில்லை. (பொதுவில் சமூகத்தைப் பற்றித்தான் எழுதுகிறேன். அரசியலைப் பற்றி எழுதுவதில்லை). இதற்கு முக்கிய காரணம், நான் தமிழகத்தைவிட்டு நீங்கி கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் ஆகப் போகின்றன. எப்படி நாராயணனிடம் இந்தியாவின் வணிக வளர்ச்சியைத் தெரிந்துகொள்ள இந்தியாவில் இருக்கத் தேவையில்லை என்று நான் சொன்னேனோ அதற்கு நேர் எதிர்மாறாக அரசியலைப் பேச அண்மை அவசியம் என்று நினைக்கிறேன் (மக்களுடன் உரசாமல் அரசியல் பேசுவது இயலாதது). இதன் தேவை புவியியல் ரீதியில் பரப்பு குறைய குறைய இன்னும் அதிகரிக்கிறது. நான் வசித்தேயிராத அமெரிக்கத் தேர்தலைப் பற்றிப் பேசுவது எளிது, ஆனால் கும்பகோணத்தில் நான் வசித்த வார்டு 2க்குத் தேர்தல் நடந்தால் இப்பொழுது என்னால் அபத்தக் கருத்தைத்தான் உச்சரிக்க முடியும். மேலதிகமாக, ராமதாஸ், திருமா ஆகியவர்களின் நடவடிக்கைகள் நான் இந்தியாவைவிட்டு நீங்கியபின்தான் அதிகரித்திருக்கின்றது. எனவே, பரிச்சயமில்லாத விஷயங்களில் நான் அதிகம் தலையிடுவதில்லை.//

நான் மீண்டும் மீண்டும் சொன்ன இன்னொரு விடயம், பேசிகொண்டிருக்கும் பிரச்சனைக்கும் திருமா/ராமதாஸ் முன்வைக்கும் அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது. பிரச்சனை பொதுக்களத்தில் ஒரு தலித் தலைவர் குறித்து ஒருவர் முன்வைத்த மோசமான வசை. 'செருப்பாலடிப்பதில்' ஒப்புதலில்லை என்று சொல்லி, 'வசைகளின் காலம்' என்று பதிவு எழுதியவருக்கு, நான் சுட்டிகாட்டிய பின்னும் இது குறித்து கருத்து சொல்ல கூட தேவை வரவில்லை. 'திருமாவளவன் ராமதாஸிக்கு அந்த வேலைதான் செய்கிறாரா?' என்று கேட்பது வசை இல்லை என்று நினைக்கிறாரா? அல்லது அதை கண்டிக்க தேவையில்லை என்று நினைக்கிறாரா? அல்லது அதை நியாயப்படுத்துகிறாரா? எது குறித்தும் எந்த விளக்கமளிக்கவும் அவருக்கும் தேவையில்லை. (கவனிக்கவும். இந்த விஷயம் குறித்து அவர் மற்றவர்கள் போல் எதுவுமே பேசாமல் மௌனமாக இருந்தால் இந்த கேள்வி வந்திருக்காது. மௌனமாய் இருக்கும் யாரையும் 'if you are not with us, you are against us' என்று நான் சொல்லவில்லை. 'வசவுகளின் காலம்' என்று ஒரு தலித் குறித்த வசைக்கு முன்வைத்த கண்டனத்தை திரித்து பதிவு எழுதியதாலேயே இந்த கேள்வி வருகிறது.

இவரது மௌனத்தையும், இதை கண்டிப்பவர்களை கண்டிக்கும் பதிவையும் 'தலித் ஆதரவு' என்று நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் சந்தேகப்பட்டால் அவர் உரையாடமாட்டார். இதற்கு மாறாக வருபவன் போபவனிடம் எல்லாம் உரையாடி கொண்டிருக்கும் எதிராளியிடம் வெளிப்படுவது 'புஷ்த்தனம்'! ஆஹா!

இங்கே கவனிக்க வேண்டிய வேறு ஒரு விஷயம் உண்டு. வெங்கட் இந்த சந்தர்பத்தில் தலித் சார்பாய் ஒரு நிலையெடுத்து, உண்மையில் 'பெரியாரியம் பேசுபவர்கள்தான் தலித்களின் முக்கிய எதிரிகள்' என்று பிரச்சாரம் செய்யப்படும் கருத்திற்கு ஆதரவாய் இன்னொரு ஃபிலிம் கூட காட்டியிருக்க கூட முடியும். அப்படி பல ஃபிலிம்களை பார்த்தாகிவிட்டது. பல முறை வெங்கட் பார்பனரல்லாதவர்கள் 'தப்பித்து' போவதை பற்றி பேசியாகிவிட்டது. ஆனால் யதார்த்தமான ஒரு சந்தர்பத்தில் ஒரு குறைந்த பட்ச கண்டனத்தை அளிக்க கூட அவர் முன்வரவில்லை. 'தமிழகத்தில் இல்லாமல் அரசியல் பேசமுடியாது' என்று சம்பந்தமில்லாமில்லாத ஒரு சொத்தை காரணத்தை சொல்லி மட்டையடிக்கிறார்.

வெங்கட் மேலே எழுதியதிலும், மற்ற நண்பர்களின் பதில் குறித்தும் சொல்ல பல விஷயங்கள் இருந்தாலும், இந்த 'உரையாடல்களின்' அவல நாடகத்தன்மை சகிக்க முடியாததாய் இருக்கிறது.
மற்றதின் நியாயங்களை புரிந்துகொள்ள முதலில் நாம் கோப்பையை காலியாக வைத்திருக்க வேண்டும்(அந்த அட்வைஸ் நமக்கு, அய்யோ!). அதைவிட முக்கியமாக நம்மிடம் இருக்கும், நாம் உருவாக்கி வைத்திருக்கும்(மாறிகொண்டிருந்தாலும் கூட) அளவுகோல்களை கொண்டு மற்றதை புரிந்துகொள்ள முடியாது என்ற தெளிவு வேண்டும். ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கமுடியாது. ஓடிக்கொண்டுதான் பார்க்கவேண்டும். இது இன்று அறிவிலாகிப்போன உண்மை.

இட ஒதுக்கிடு என்பது எந்த புத்தகத்தாலும் ஒருவருக்கு தெளிவை ஏற்படுத்தும் சமாச்சாரம் அல்ல. அதை ஆதரித்தால் அதற்கு ஆதரவான தர்கங்களை தொடர்ந்து சமைக்க முடியும், எதிர்த்தால் எதிரான தர்கங்களை சமைக்க முடியும். இடவொதுக்கீட்டில் ஆதரவு எதிர்ப்பு என்பது நாம் அனுமானித்து கொள்ளும் axiom போன்றது. தன்னை முன்வைத்து, தன் அனுவத்தை முன்வைத்து உலகை புரிந்துகொள்ள விழையும், தர்கங்களால் சுயமைதுனம் செய்யும் மனத்திற்கு எந்த விதத்திலும் ஒரு புத்தகம் எந்த புதிய விளக்கத்தையும் தர வாய்பில்லை. அவல நாடகத்தில் பங்கெடுக்கும் நண்பர்களை கண்டால் பரிதாபமாக இருக்கிறது.

பின் குறிப்பு 1. மீண்டும் நினைவூட்டுகிறேன். இது கட்டாயத்தால் எழுதப்படும் ஒரு பதிவு. இதை வெங்கட் இதுவரை எழுதிய பல விஷயங்களுக்கான விமர்சனமாகவோ, எதிர்வினையாகவோ எழுதவில்லை. அதை வேறு ஒரு சந்தர்ப்பத்தில் செய்யும் நோக்கம் உள்ளது. அவர் இந்த 'செருப்படி' பிரச்சனையுடன் தொடர்புடையதாய் எழுதியதன் விளைவாய் நிர்பந்திக்கப்பட்டு நான் தரும் விளக்கமும், அது தொடர்பான சில இடையீடுகளும் மட்டுமே!

பின் குறிப்பு 2. இனி நான் மற்ற இடங்களில் பின்னூட்டமளித்தால் அவை சேர்க்கப்பட்டு வாரயிறுதியில் இடப்படும். எனக்கு உதவ நினைத்து, யாரோ செய்த விஷமத்தனத்தால் மன சஞ்சலத்திற்கு ஆளான நண்பர்கள் மன்னிக்கவும்.

Post a Comment

21 Comments:

Blogger Vijayakumar said...

அய்யோ அய்யோ! தமிழ்மணம் படிக்க வர்ற வாசகர்களை அங்கே இங்கேன்னு செயின் ரியாக்ஷன் பதிவை போட்டு படிக்க வச்சி, படிச்சி மண்ட காஞ்சி அலையிறோம். இன்னும் கொஞ்சம் போன செயின் ரியாக்ஷனால வாசகர்கள் எல்லாம் ரியாக்ஷ்னே இல்லாம படுத்த படுக்கையாகிறுவாங்க.

ரோஸா உங்களின் கொஞ்சம் ரிலாக்ஸான பக்கத்தையும்/பதிவையும் தான் கொஞ்சம் காண்பியுங்களேன்.

பின் குறிப்பு: பொதுவான பின்னூட்டம் இது. இந்த விவாதத்தில் ஆரம்பித்தில் இருந்த என் கவனம் இப்போது இல்லை. இந்த பதிவை முழுவது படிக்கவில்லையென்றாலும் செயின் பதிவென்று உணர்ந்தேன்.

3/23/2005 3:01 PM  
Blogger ROSAVASANTH said...

நன்றி விஜய், இது படிப்பவர்களை உத்தேசித்து எழுதியது அல்ல. கட்டாயத்தால் வேறு வழியின்றி எழுதப்பட்டது.

3/23/2005 3:17 PM  
Blogger ROSAVASANTH said...

நன்றி சம்மி, உண்மை எழுத்துக்கள் என்று எதை சொல்லுகிறீர்கள் என்று புரியவில்லை.

என் விருப்பத்திற்கு மாறாக மிகுந்த அலுப்புடன், பலர் இங்கே என்னுடன் கொண்டிருக்கும் நட்பு விரிசலாகவும், 'சூழலை கெடுப்பதாகவும், 'ஒட்டுண்ணி' என்றும் வசை பாடுவதற்கு நடுவில், நான் எழுதுவது வசை என்று திரிபடப் போவது அறிந்தும், இதை வேறு வழியின்றி எழுதுகிறேன். இதற்கு ஒரே காரணம் இதை என் கடமையாகவும், என்னிடம் இருப்பதாக நான் நினைக்கும் 'உண்மைத்தன்மை'யாகவே நினைத்து கொண்டிருக்கிறேன். வேறு எத்தனையோ எழுதி பெயர் வாங்கமுடியும். குறைந்த பட்சம் சிலவற்றை எழுதுவதை தவிர்த்து இருக்கும் பெயரையும் நட்பையும் தக்கவைத்துக் கொள்ள முடியும். அதை செய்யாமல் இதை செய்வதற்கு உண்மைதன்மையையே காரணமாக நம்புகிறேன். இது உங்களுக்கு புரியுமா என்று தெரியவில்லை.

ஆனால் இது ஒரு ட்ராப்! இதை தொடர, சக்தி எல்லாவற்றையும் இதிலேயே வீணக்கிவிட நேரும் ஒரு சுழல் என்று தெரியும். இதற்கு மேல் இதை தொடருவதாக இல்லை. நேரம் கிடைக்கும்போது நீங்கள் விரும்பும் 'உண்மையான' எழுத்துக்களை எழுதுகிறேன். நன்றி!

3/23/2005 10:58 PM  
Blogger சன்னாசி said...

//எனக்கு வெங்கட்டின் 'வசவுகளின் காலம்' மிகுந்த பாரபட்சமானது என்றுதான் நினைக்கிறேன். என் தளத்தில் தொடர்ந்து பின்னூட்டமிடும் மாண்ட்ரீஸர் அதை 'நடுநிலையானது' என்கிறார்.//
கறுப்பியின் பின்னூட்டத்துக்கு நான் எழுதிய பதிலைக் குறிப்பிடுகிறீர்களென்று நினைக்கிறேன். இப்போதும் அப்படித்தான் நினைக்கிறேன். அதை கறுப்பியின் பின்னூட்டத்துடன் பொருத்தி வாசிக்கவேண்டும் என்று கூறுவது தேவையற்றது - என்னளவில் என்ன நினைத்து எழுதினேனென்பதை மேலும் விளக்க அவசியமுள்ள அளவு அது ஒரு தவறான கூற்று எனக் கருதவில்லை. வெங்கட்டோ, நீங்களோ நானோ வேறு யாரோ, எழுதுவதை எழுதுவோம். எவ்வளவுதூரம் பேதமின்றி அதை எழுதினோமென்பதும் அதனதன் நியாயதர்மங்களும் அவரவர்களுக்கு மட்டுமே தெரிந்தது. விவாதிப்பதால், நியாயம்கேட்பதால் நிஜமான பதில்தான் வருகிறது என்பதை எவரிடம்தான் எதிர்பார்க்கமுடியும்? அடையாளம் ஏதுமின்றி வெவ்வேறு பதிவுகளில், மனதில் இருப்பதை நியாயமாக எழுதினாலே, சந்தர்ப்ப ரீதியான கண்ணிகளை இணைத்து, ஜாதி ரீதியாக இல்லாவிட்டாலும் OC/BC/MBC/SC/ST என்று அடிமனதில் பிரித்தறியும் கசடு தேங்கத்தொடங்கிவிடுகிறது பிறரிடம். ஊர் பேரைச் சொன்னாலே ஜாதி தெரிகிறது, உன் பேரைச் சொன்னாலும் ஜாதி தெரிகிறது. என் சௌகரியங்களை/சிக்கல்களை வைத்துப் பிறரது சௌகரியங்கள்/சிக்கல்களை அளக்க முயல்து அசட்டுத்தனம் என்பதில் என்னளவு தெளிவாகவே இருக்கிறேன். நீங்கள் சொல்வதிலோ வெங்கட் சொல்வதிலோ வேறொருவர் சொல்வதிலோ நான் காணும் நியாய/அநியாயங்கள் பிறருக்கு (அல்லது, "எதிர்த்தரப்பு" என்ற பிரயோகம் சரி எனப் பட்டால், 'எதிர்த்தரப்புக்கு') அசட்டுத்தனமாகப் படலாம். அதற்கு ஒன்றும் செய்ய முடியாது. முன்பே எங்கோ சொன்னதுபோல, all fingers cannot be thumbs.

3/24/2005 12:29 AM  
Blogger Venkat said...

வஸந்த் - இந்த விவாதத்தை இத்துடன் நிறுத்திவிடுவதாக முடிவெடுத்திருக்கிறேன். பல காரணங்கள் இருக்கின்றன. எல்லாவற்றையும் விட மிகவும் முக்கியமானது தோளோடு தோள் நின்று நண்பர்களாகத் துவங்கியது மெதுவாக நகர்ந்து 'எதிரணி' போக்கிற்கு மாறியிருக்கிறது. உங்களுடைய எழுத்துக்களில் வரிக்கு வரி நானும், என்னுடையதில் நீங்களுமாக நுணுகிக் கொண்டே போக இதில் வெற்று தர்க்கங்கள் மாத்திரமே மிஞ்சுவதாகத் தெரிகிறது. இப்படியான போக்கில் ஒருவரது கருத்தை இன்னொருவர் ஏற்றுக்கொள்வது என்பது இயலாததாகிப்போகும்.

மாண்டி சொன்னதைப்போல் ஐந்துவிரல்களையும் ஒருமாதிரியாக்கும் முயற்சிகள் வெற்றியடையப்போவதில்லை, அப்படியானாலும் அதனால் பயனில்லை. புஷ்தனம் என்று ஒருவரையொருவர் சொல்லிக்கொண்டாலும் இன்னும் பொறுமையாக நின்று பேசிக்கொண்டே நாம் அப்படியில்லை என்று நிரூபித்திருக்கிறோம். (ஆனால் வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு நாம் சிண்டைப் பிடித்துக் கொண்டு நிற்பதைப் போன்ற வடிவம்தான் கிடைக்கும்). இந்த அளவு எனக்குப் போதும். இருவருக்கும் பிற விஷயங்களில் எழுத நிறைய இருக்கின்றன.

வெற்று ஏரணங்களைக் கொண்டு விளையாடும் விவாதங்களில் நான் ஒரு காலத்தில் ஆசை வைத்திருந்தேன். அந்த விளையாட்டில் என்னுடைய திற்மையின் மீது அசாத்திய நம்பிக்கையும் இருந்தது. ஆனால் முடிவில் வெற்றி என்று மேட்டின்மீது ஏறி நிற்கும்பொழுது அருகில் நிற்க நண்பர்கள் இல்லாமல் போகும் அவலம் கொடுமை. அந்த அளவில் நான் நண்பர்களைத் தொலைக்க விரும்பவில்லை. உங்களிடமிருந்து எனக்குத் தெரிந்து கொள்ள நிறைய இருக்கிறது.

உண்மையில் நீண்ட பதிவுகளாலும், எதிர்வினைகளாலும் உங்களைச் சம்பாதிப்பதைவிட நேர்மையான முறையில் நடந்து கொண்டு உங்கள் நட்பைத் தக்கவைத்துக் கொள்ளும் நம்பிக்கையும் தைரியமும் எனக்கிருக்கிறது. பல விஷயங்களில் நாம் ஒத்த கருத்தைக் கொண்டிருக்கிறோம். இந்த வேற்றுமையை இப்பொழுதைக்கு அடையாளம் கண்டுகொண்டு வருங்காலத்தில் இடைவெளியைக் குறைக்கலாம் என்ற நம்பிக்கையுடன் நான் இதை முடிக்கிறேன்.

3/24/2005 3:34 AM  
Blogger ROSAVASANTH said...

http://mynose.blogspot.com/2005/03/blog-post_23.html

பதிலாக எழுதியது.

'ஓடி ஒளியாமல்' தந்த பதிலுக்கு மிகவும் நன்றி! ஆனால் நான் பெய்தது மூத்திரமல்ல, அதாவது நான் குறிப்பிட்ட அர்தத்தில்.

வெங்கட் பதிவில் நீங்கள் எழுதிய பின்னூட்டத்திற்கான என் பதிலை, வெங்கட் விமர்சித்ததிற்கான பதில் அது. உங்களைத்தான் குறிப்பிட்டேன் என்பது மிக தெளிவாகவே தெரியும். வேண்டுமெனில் பெயர் சேர்கிறேன் -அதனால் கூடுதல் நேரமையென உங்களுக்கு தோன்றுமெனில்! ஆனால் நீங்கள் என்னை பற்றிதான் வெங்கட் பதிவில் சொன்னீர்கள் என்பது இப்போதுதான் தெளிவாக தெரிகிறது.

மற்றபடி இங்கே பதில் சொல்ல எதுவுமே இல்லை. மொழி புரியாத பிரச்சனையா, மொழி புரியாமல் நடிக்கும் பிரச்சனையா என்று எனக்கே புரியாத பிரச்சனை. மேலும் நான் சொன்ன எதையாவது, பொத்தாம் பொதுவாக அல்லாமல், (நான் ஒவ்வொரு முறையும் எதிர்கொள்வது போல்) சொன்ன தர்கத்தை எதிர்கொண்டு (வேறு என்ன ஸார் சொல்ல?) பதில் ஏதேனும் சொல்லியிருந்தால் பேசக்கூடும். நான் நேரடியாக ஒவ்வொருமுறையும் எதிராளியை எதிர்கொண்டும் 'ஒற்றையடி வீச்சுகளாக மாற்றுக் கருத்து கொண்டவர்களை ஆஃப் பண்ணிவிட வேண்டும் என்ற எண்ணம்தான் தெரிகிறதே' என்று (அதையும் மேலே உள்ள பதிவிலேயே செய்துவிட்டு)சொல்லும்போது எதுவுமே சாத்தியமில்லை.

மேலே எழுதியுள்ளதும் உங்களுக்கு வசையாக அவதூறாக தெரிந்தால் என்னால் செய்யகூடியது எதுவுமே இல்லை. என் மீதான உங்கள் கவலைக்கும் ஆதங்கத்துக்கும் நன்றி. உண்மையிலேயே என்னால் இயலக்கூடுமெனில் அது குறித்து ஏதாவது செய்ய முயல்கிறேன்.

3/24/2005 8:03 AM  
Blogger ROSAVASANTH said...

மாண்ட்ரீ, உங்களுக்கு தோன்றுவதை நான் குறையாக சொல்லவில்லையே. உங்களுடன் வேறுபடுவதால் உங்களை எதிரியாக பார்க்கவில்லை என்பதுதான் சொல்லவந்தது. மற்றபடி இப்போது இட்ட பின்னூட்டத்தில் இரண்டாம் வரியில் தொடங்கி நீங்கள் சொல்வதுடன் ஒத்துபோகிறேன். உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி!

வெங்கட் உங்கள் பதிலுக்கு மிகவும் நன்றி. நானும் நிறுத்து கொள்வதாகவே இருந்தேன். ரொம்ப நுணுக்கி எதையும் விவாதிப்பதை விட, மிக எளிதாக நல்லிணக்கத்தை சாதிக்க முடியும் என்றே நானும் நினைக்கிறேன். எனக்கு அந்த பக்குவம் இன்னும் வரவில்லை. மற்றபடி தர்க்கம் என்பதே ஒரு சமனுள்ள, நேர்மையான அணுகுமுறையாக இல்லை. தர்கிக்கும்போது ஏதோ ஒரு விதத்தில் நேர்மையின்மையும் தற்சார்பும் வருகிறது, நானும் அதற்கு விதி விலக்கல்ல என்றே நினைக்கிறேன். ஆனாலும் தர்கத்தை விட்டால் வேறு வழி தெரியாததால் அதை பிடித்துகொண்டு தொங்க வேண்டியுள்ளது. இந்த பதிவால் புண்பட்டிருந்தால் மன்னிக்கவும். எந்த விரோத மனப்பான்மையும் இல்லாமல் இங்கே பின்னூட்டமிட்டதற்கு நன்றி!

3/24/2005 8:04 AM  
Blogger சன்னாசி said...

// மாண்ட்ரீ, உங்களுக்கு தோன்றுவதை நான் குறையாக சொல்லவில்லையே.//
குறையாக சொன்னதாக நானும் நினைக்கவில்லை!! எனவே, வேறு ஏதுமில்லை!

3/24/2005 9:03 AM  
Blogger ROSAVASANTH said...

நன்றி மாண்ட்ரீஸர்!

மூக்கன் பதிவில் கடைசியாக இட்டது கீழே.

மீண்டும் நன்றி.

"இதுதான் என்னுடைய கருத்து. சொல்லும் முறைகளில் மாற்றம் வராதவரை அவர் சொல்வதில் உள்ள நியாயம் யாராலும் ( அவர் நண்பர்களைத் தவிர) பொருட்படுத்தப்படாது என்கிற என் ஆதங்கம் இது. " என்பதை ஒப்புகொள்கிறேன். அது மட்டுமல்ல, திசை திருப்பிவிட சிலருக்கு வசதியானது என்றும் தெரியும். தெரிந்தே அதை சில சந்தர்பங்களில் நான் செய்துவிட நேர்கிறது. சில அந்த சந்தர்பத்தில், உரையாடல் சாத்தியமில்லை என்ற நினைப்பில் வருபவை. உங்களை பற்றி என் நேற்றய பதிவில் சொன்னது அத்தகையது. நேசக்குமார் சொல்லியுள்ளது போல், காலம் தாழத்தி எதிர்வினை செய்தால் பல விஷயங்களை தவிர்க்க முடியும். சில எதிர்வினைகள் நிதானமாக யோசித்த பின்னும் தெளீவாக முன்வைப்பவை.'செருப்படி' அப்படிபட்ட ஒன்றுதான்.அதனுடன் மாறுபடும் உரிமையும் அனைவருக்கும் உண்டு.


மீண்டும் உங்கள் கருத்துக்கு நன்றி. இந்த வரியோடு இந்த விவாதத்தை நிறுத்திகொண்டு வேறு வேலைகளை பார்க்க உத்தேசம்.

3/24/2005 9:26 AM  
Blogger ROSAVASANTH said...

காஞ்சி ஃபிலிம்ஸில் இட்டது.

//பெரியாரியம் பேசுபவர்கள் தான் தலித்களின் எதிரிகள்" என்று நம்மவர் சொன்னது சரிதானோ? //

யாரை சொல்கிறீர்கள் என்று புரியவில்லை. என்னை சொல்லியிருந்தால், நான் அப்படி சொல்லவில்லை. அப்படி பிரச்சாரம் செய்யப்படும் கருத்தை கடுமையாக எதிர்கிறேன். உங்களை பற்றி எழுதியுள்ளதை மீண்டும் வாசியுங்கள் என்பதை தவிர சொல்ல எதுவுமில்லை.

திண்ணையில் விஸ்வாமித்ரா எழுதியதை படித்தேன். விஸ்வாமித்ரா கொஞ்சம் உண்மை சம்பவத்துடன்,நன்றாய் மசாலா, வசை எல்லாம் சேர்த்து எழுதுபவர். உதாரணமாய் சின்ன கருப்பன் என்ன சொல்கிறார் என்பதை புரிந்து கொள்ளாமல் (அதாவது சின்ன கருப்பன் சோவும், துக்ளக்கும் *தாக்கப்பட்டதாக* சொல்லியிருந்தும், 'தாக்கப்படவில்லை' என்று ஏதோ அரைகுறையாய் புரிந்து கொண்டு) உளறி கொட்டியிருப்பவர். சோ பேசிய மதுரை கூட்டத்தில் ஆசிட் வீச்சு என்று நடந்தது உண்மை, ஆனால் சோ கிரிக்கெட் வீரர் போல் பாய்ந்து பிடித்ததாய் இஷ்டத்திற்கு மசாலா சேர்த்து புளுகுபவர் இவர்.

இங்கே இந்த புத்தகத்தை எழுதியவர் தாழ்த்தபட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் என்று சொல்வது உண்மையா என்று தெரியவில்லை. அவர் ஃபார்வர்டு ப்ளாக் கட்சியை சேர்ந்தவர் என்று அறிகிறேன். பார்வர்டு ப்ளாக் கட்சி கிட்டதட்ட ஒரு தேவர் கட்சி. பெரியார் இறந்த போது தமிழகத்தில் துக்கம் அனுஷ்டிக்காமல் வன்மம் காட்டிய கட்சியில் ஒன்று ஃபார்வர்ட் ப்ளாக். இம்மானுவல் படுகொலை தொடர்பாக முத்துராமலிங்க தேவர் கைது செய்யப்பட்ட போது, அதை ஆதரித்த ஒரே தமிழக தலைவர் பெரியார். அந்த வன்மத்தின் அடிப்படையிலேயே ஃபார்வர்ட் பளாகின் பெரியார் மீதான தொடர்ந்த வன்மத்தை பார்க்கமுடியும்.
ஃபார்வர்ட் ப்ளாக் கட்சியில் ஒரு தாழ்த்தபட்டவர் இருப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு.அதை தெரிந்துகொள்ளாமலேயே, தாழ்த்த பட்டவர் என்று விஸ்வாமித்ரா புளுகியிருக்க கூடும்.

எது எப்படியிருப்பினும் இதெல்லாம் கேட்டு புளித்து போன பெரியார் விமர்சனம். போய் டோண்டு போன்றவர்களிடம் சொன்னால் சந்தோஷப்படுவார்.

தலித்களை முன்வைத்து பெரியார் மீதான எதிர்கொள்ள வேண்டிய விமர்சனத்தை ரவிக்குமார் தொடங்கி பலர் செய்துள்ளனர். அவைகளே எதிர்கொள்ள வேண்டியவை. அது விஸ்வாமித்ரா போன்ற இந்துத்வ பார்பனிய வெறியர்களுக்கு உவப்பாய் இருக்காது.


கடைசியில் வரும் தேவர் ஜாதி வெறியின் ஆளுமையான முத்துராமலிங்க தேவரின் பேச்சை தந்திருப்பதை கவனியுங்கள். இஅவர் எழுதியவரை தாழ்த்தபட்டவர் என்று புளுகுவது புரிந்ததா?

3/24/2005 12:56 PM  
Blogger ROSAVASANTH said...

டோண்டு சொன்னது "சமீபத்தில் 1955-ல் ஐந்தாம் வகுப்பு படித்தப் போது எங்கள் ஆசிரியர் திரு. ரங்கா ராவ் கூறினார். "ஒருவனை செருப்பால் அடிப்பேன் என்பது சட்டப்படி ஒரு குற்றம். அதற்குத் தண்டனை உண்டு. அது நிஜமாகவே செருப்பால் அடிப்பதற்குத் தரும் தண்டனையை விட அதிகம்" என்றார். திடீரென்று ஏனோ அது இப்போது நினைவுக்கு வந்தது ஆகவே கூறினேன். சட்டம் இவ்வாறுதான் உள்ளதா என்று சட்டம் தெரிந்த வள்ளல் யாராவது எள்ளல் இல்லாமல் கூறினால் நலம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்"

என் பதில் "செருப்பால் அடிப்பேன் என்று சொன்னால் தண்டனை உண்டா? அப்படியெனில் பேப்பரில் எழுதி ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டி கையெழுத்திட்டு தருகிறேன். ஆனால் தீண்டாமை தடை சட்டம் என்று ஒன்று உண்டு தெரியுமா?"

3/24/2005 1:25 PM  
Blogger மு. சுந்தரமூர்த்தி said...

நேற்று வெங்கட்டின் பதிவைப் படித்தபின் பின்னூட்டமிட்டபோது இது சம்பந்தமாக எதுவும் எழுதத் தோன்றவில்லை. இந்த பதிவை இன்று காலை படித்த போதும் எழுத அவசியமில்லை என்றே நினைத்தேன். சொன்னதற்கு விளக்கம், பிறகு விளக்கத்திற்கு இன்னொரு விளக்கம் என்று இழுக்க அவகாசமோ, விவாதத்தில் வெற்றி வேண்டும் என்ற குறிக்கோளோ இல்லை. நான் எழுதுவது பெரும்பாலும் பின்னூட்டங்களே என்றாலும் தீர யோசித்த பிறகே எழுதுவது வழக்கம். சில நேரம் அதற்காக ஓரிரு நாட்கள் தாமதித்துகூட எழுதுவது உண்டு. இப்போது மீண்டும் இது தொடர்பான எல்லா பதிவுகளையும் இன்னொரு முறைப் படித்துவிட்டுச் சொல்கிறேன். I stand by my comment. இதில் கெட்டுப்போக எனக்கு பெரிதாக பெயர் எதுவும் இல்லை. ஒரு பதிவைப் படித்தபிறகு அது சம்பந்தமாக மேற்கொண்டு ஏதாவது சொல்லவேண்டுமென்று நினைத்தால் மட்டுமே பின்னூட்டமிடுவது வழக்கம். வெறுமனே பிடித்தது, பிடிக்கவில்லை என்றெல்லாம் எழுத மெனக்கெடுவதில்லை. அதற்குதான் காசி +, - என்று ஒரு வசதி செய்துக் கொடுத்திருக்கிறாரே. ஆகவே பழைய நண்பர்களுக்கோ, புதிய நண்பர்களுக்கோ ஜல்லியோ, கில்லியோ அடிக்கவேண்டிய அவசியத்தில் எந்த பின்னூட்டத்தையும் எழுதியதில்லை. அதை தனி அஞ்சலில் தான் செய்வது வழக்கம்.

3/24/2005 2:08 PM  
Blogger ROSAVASANTH said...

நன்றி சுந்தர மூர்த்தி.

ஒரு வாரமாய் வலைப்பதிவுகளில் அதிக நேரம் படிப்பதிலும், எழுதுவதிலும் செலவழித்து வருகிறேன். திங்கள் வரை எதுவும் எழுத உத்தேசமில்லை. இங்கே இத்தோடு ஜகா.

திண்ணையில் எனக்கு சில வருடங்கள் முன்பே அறிமுகமான விஸ்வாமித்ரா என்ற இந்துதவ வெறியன் எழுதிய ஒரு கட்டுரையை, காஞ்சி ஃபில்ம்ஸ் மறுபதிவு பண்ண, (எதிர்பார்த்து நான் காஞ்சியில் ஆருடம் சொன்னது போல்) டோண்டு கூதுகலித்து மீண்டும் மறுபதிவு செய்து ஒரு கண்ராவி நாடகம் நடந்து வருகிறது. இவைகளை படித்ததில், ஒற்றை வரி கூட நேரடி மேற்கோள்கள் மூலம் அணுகி ஒரு விமர்சனம் என்ற தகுதி தரும் வகையில் கூட இதில் எதுவும் இருப்பதாய் தெரியவில்லை. ஒரு தேவர்ஜாதி(என்று நினைக்கும்) வெறியர் வழக்கம் போல அவிழ்த்து விடும் வசவுகள் மட்டுமே கிடைக்கிறது. இது குறித்து பேச எதுவும் இல்லை, என்றாலும் நண்பர்கள் யாராவது நேரத்தை விரயம் செய்யக்கூடும் என்பதாலும், காஞ்சி என்னை ஏதோ கேட்ட மாதிரி இருந்ததாலும் எழுதினேன்.

பெரியாய் மீது எனக்கு சில விமரசனங்கள் உண்டு. நான் முழுவதும் ஒப்புகொள்ளவிட்டாலும், ரவிக்குமார் தொடங்கி மற்ற தலித் எழுத்தாளர்கள் முன் வைத்துள்ள விமர்சனங்களை எதிர்கொள்ளும் நோக்கம் உண்டு. அது போன்ற வேலைகளே எனக்கு முக்கியமே ஒழிய காஞ்சி ஃபில்ம்ஸ் (ஒரு வேளை கேட்டிருந்தால்) என்னை கேட்டது போல் இவைகளுடன் மன்றாடும் நோக்கமும் அவசியமும் எனக்கு இல்லை.

அடுத்த வாரம் பார்கலாம். நன்றி!

3/24/2005 2:28 PM  
Blogger VAIKKAMPEN said...

நன்றி ரோஜாவசந்தன்.

கேள்வி: நாத்திகம் பேசுபவன் ஒழுக்கமுடன் இருக்கமாட்டான், அயோக்கியத்தனமும் அடாவடியுடனுமே வாழ்வான் என்று என் வீட்டில் கூறுகிறார்களே?
பதில்: அப்படியல்ல என்று நிரூபித்து வாழ்ந்து காட்ட வேண்டும். ஒழுக்கத்தாலும் அன்புப்பேச்சாலும் நேர்மையுடன் இருந்து காட்டி நாத்திகம் தவறானதல்ல என்று உணரவைக்க வேண்டும்.

மேற்க்கூரிய கேள்விக்கு பதில் சொன்னவர், உணமை இதழில் கேள்விபதில் பகுதியில் தமிழர்த்தலைவர் வீரமணி. நாத்திகத்துக்கு மட்டுமல்ல, பெரியாரிசத்துக்கும் இது பொருந்தும்.

பெரியாரிசத்துக்கெதிராக பதிவுகள் முளைக்கும் வேளையில் தலித்தியக்கருத்துகளுக்கும் பெரியாரிசத்துக்கும் நியாயத்தோடு எதிர்கொண்டு தர்க்கிர்த்தவர் நீங்கள். ஆனால் சமீப நாள்களில் உங்கள் எல்லா நடவடிக்கை மற்றும் பதிவுகளும் எனக்கு அதிர்ச்சியையே தந்தன.

என் எதிர்ப்பை உங்களிடம் காண்பிக்க எனக்கும் வேறு வழி தெரியவில்லை. உங்களை ஆயாசப்படுத்தும் சாத்தியக்கூறுடன் ஒவ்வொரு மறுமொழியிடும் போதும் விரும்பிச்செய்யவில்லை. வெறுத்தேன்.

பிளாகர் password திருடுவது அவ்வளவு கடினமான காரியம் இல்லை. அப்படிச்செய்வதில் எனக்கு விருப்பமும் இல்லை. நேரம் செலவழிக்கவேண்டி வரும். அவ்வளவே (நம்பமுடியாவிடில், உங்கள் நண்பர்களிடம் bruteforce algorithm பற்றிக் கேட்டுப் பாருங்கள்). எனவே என் கையில் ஏந்தப்பட்ட ஆயுதம் இயலாமையால் கீழேபோடப்படவில்லை.

இணையக்காட்டில் எத்தனையோ மரங்கள் பயிரிட்டு கனிகள் கொடுக்க சாத்தியப்படும் தருணங்களில், முட்ச்செடிகள் எதற்கு நடவேண்டும்?

நான் முடித்துவிட்டேன், இனி தொடர்வதும் தொடராததும் உங்கள் விருப்பம். தூண்டுவதும் திருத்துவதும் உங்கள் விருப்பம்.

நன்றி.

வைக்கம்ம்பெண்

3/25/2005 3:41 AM  
Blogger ROSAVASANTH said...

வைக்கம்ம்பெண், உங்கள் கருத்துகளுக்கு மிகவும் நன்றி. நீங்கள் சொன்ன சில விஷயங்கள் எனக்கு சரியாய் புரியவில்லை. இப்போது வேலை அதிகமாய் இருக்கிறது. நீங்களும் அப்படியே வலைப்பதிவு எழுதத்தொடங்கி, எங்கே என்னுடன் முரண்படுகிறீர்களோ அதை முன்வைத்தால் பயனுள்ள வகையில் உரையாட முடியும்.

நான் செய்வது எல்லா வகையிலும் சரியானது என்றோ, அல்லது சரியானது என்று ஒன்று முழுமையாய் இருப்பதாகவோ எனக்கு தோன்றவில்லை. சில நேரங்களில் எதிர்ப்புகளை பார்க்கும் போது நம்பும் விஷயத்தில் விடாப்பிடியாய் இருக்க வேண்டியுள்ளது, மற்றபடி எதையும் பரிசீலிப்பதே எனக்கு விருப்பமானது. இன்னொரு சந்தர்பத்தில் பேசலாம்.
நன்றி!

3/25/2005 1:52 PM  
Blogger ROSAVASANTH said...

காஞ்சி ஃபிலிம்ஸில் சின்ன விவாதம். ஒரு வசதிக்காக இங்கே!

http://kanchifilms.blogspot.com/2005/03/blog-post_111163093476106558.html

அனானிமஸ்: இவரை விட்டுவிடுங்கள் பெரியாரின் உண்மையான விசுவாசியாகவும் அவரின் கொள்கைகளை பரப்புவதற்கு பேருதவியும் செய்த பேராசிரியர் குணா அவர்களும் பெரியாரின் மறுபக்கத்தை தெரிவித்துள்ளார். அவர் ஒன்றும் பிராமனரல்லர் அத்துடன் எந்தவொரு அவாளின் தூண்டுதலும் இன்றி எழுதியுள்ள புத்தகங்களை யாரும் படிக்கவில்லை போல் தெரிகிறது. முதலில் அவரின் புத்தகங்களை படியுங்கள், பிறகு எழுதியவர் என்ன சாதி என்ன குலம் என்று ஆராய்ச்சி செய்யுங்கள்.


ரோஸாவசந்த்: யாரும் ஜாதி என்ன, குலம் என்னவென்று விசாரிக்கவில்லை. அது குறித்து பேசிய காரணத்தினாலேயே (அது உண்மையா என)பேசப்படுகிறது.

குணாவின் புத்தகத்தை படித்திருக்கிறேன். குணா பெரியாரின் உண்மையான விசுவாசி எப்படி அல்லது கொள்கையை பரப்ப என்ன செய்தார் என்று அனாநிமஸ் விளக்கினால் ஏதேனும் அது குறித்து சொல்ல முடியும். குணா தனித்தமிழ் என்ற சட்டகத்தில் 'திராவிடத்தால் வீழ்ந்தோம்' என்று பெரியாரை முன்வைத்து எழுதினார். குணாவின் தனித்தமிழ் என்ற வலதுசாரி நோக்குக்கு தெளீவாகாவே பெரியார் எதிரானவர். மதம், தேசியம் மட்டுமில்லாது மொழி சார்ந்த அடிப்படைவாதத்திற்கும் பெரியார் எதிரானவர். அதனால் குணாவால் பெரியாரை விமர்சிப்பதை தவிர வேறு எந்த முடிவுக்கும் போக வாய்பில்லை. ஆனால் 'மறுபக்கம்' எதையும் குணா கண்பித்ததாய் தெரியவில்லை. குணாவின் புத்தகத்திற்கு எதிராக, பதிலளிக்கும் வகையில் நான்கு புத்தகமாவது வந்துள்ளது. விடுதலை ராஜெந்திரன் கூட கடைசியால் ஒன்று எழுதினார். அனானிமஸ் அது குறித்து கேள்வியாவது பட்டிருப்பாரா என்று தெரியவில்லை.

ஆனால் பொத்தாம் பொதுவாக குணாவை இழுத்து வருபவர்கள் குணாவுடன் ஏதாவது உடன்படுகிறார்களா என்று சொல்லிவிட்டு பேசவேண்டும். குணா பெரியாரை விமர்சித்தாலும், தன் தனித்தமிழ் என்ற சட்டகத்தின் அடிப்படையிலான நம்பிக்கைக்கு நேர்மையானவர். அதற்கு எதிரான பெரியாரை விமர்சிப்பதை தவிர அவருக்கு வழியில்லை. ஆனால் குணாவை முன்வைத்து, அதே நேரம் குணாவுக்கும் எதிராக இருந்துகோண்டு , பொத்தாம் பொதுவாக பெரியாருக்கு எதிராக எது கிடைத்தாலும் அதை பயன்படூத்திகொள்ளும் குள்ளநரித்தனமே தெரிகிறது. அனானிமஸ் தன் கருத்துக்களை, இப்படி மட்டையடிக்காமல், கருத்துக்களாய் முன்வைத்தால் இது குறித்து அர்த்தமுள்ள வகையில் ஏதாவது பேசமுடியும்.

சுந்தரமூர்த்தி: ரோசாவசந்த்
//குணா தனித்தமிழ் என்ற சட்டகத்தில் 'திராவிடத்தால் வீழ்ந்தோம்' என்று பெரியாரை முன்வைத்து எழுதினார்.//
//குணாவின் புத்தகத்திற்கு எதிராக, பதிலளிக்கும் வகையில் நான்கு புத்தகமாவது வந்துள்ளது. //
குணாவின் நூலையும், அதற்கு பதிலாக வந்த கருணா மனோகரனின் "திராவிடத்தால் வீழ்ந்தோமா?" இரண்டையும் படித்திருக்கிறேன். மனோகரனின் புத்தகம் தற்போது கைவசம் உள்ளது. தேவையானால் சில பகுதிகளை தட்டச்சு செய்துபோட முடியும். குணாவின் அடிப்படை "தமிழ்/தமிழரல்லாதவர்". அவருடைய அடிப்படைவாதத்தில் பிராமணரும், பெரியாரும் ஒரே தளத்தில்--அதாவது தமிழருக்கு எதிராக--சதி செய்த(ப)வர்களாக இருக்கிறார்கள். இந்த இரண்டையுமே அனாமதேயம் ஏற்றுக்கொள்கிறாரா?

இன்னொரு கொசுறு: குணாவின் தர்க்க அடிப்படையில் 'மூலிகை பெட்ரோல்' ராமர் பிள்ளை பெரிய அறிவியலாளர். அதை பிராமண அறிவியலாளர்கள் சதிசெய்து அமுக்கிவிட்டார்கள். "இடையன் குளத்துச் சித்தன்" என்ற அந்த கட்டுரையைப் படித்தால் அணுக்கரு இயற்பியலையே தலைகீழாக புரட்டிப் போட்டிருக்கிறார்.

தங்கமணி: யாருக்கு புரிகிறதோ, பயனளிக்கிறதோ, வசந்த், சுந்தரமூர்த்தியின் பதில்கள் எனக்கு பயனளிகின்றன. நான் குணாவை வாசித்ததில்லை. ஆனால் அ.மார்க்ஸ் எழுதிய புத்தகம் (பெரியார்?)பெரியார் உண்மையில் ஒரு விடுதலைவிரும்பி என்பதையும், எல்லாவித கருத்துருவாக்கங்களையும் அவர் தகர்த்தே வந்தார் என்பதையும் சொல்லுகிறது. அதனடிப்படையில் குணாவுக்கு பெரியாரை எதிர்ப்பதைத் தவிர வேறு வழியிருக்காதுதான்.

ஆனால் வசந்த், நீங்கள் சொல்லுகிறபடி இந்த நவ-பெரியாரிய எதிர்ப்பாளர்கள் (அப்படிச் சொல்வது இந்த கும்பலுக்கு தகுமா?)கையில் கிடைத்த எதையும் எடுத்து பெரியார் மேல் வீச ஆவேசம் கொண்டவர்களாக இருக்கிறார்களே தவிர அவர்களுடைய ச்சாதி உணர்வைக் காண முயலவேயில்லை. கேட்டால் பிராமணத்துவேசத்தை பெரியார் பரப்பினார் என்கிறார்கள். ஒருவன் தன்னை பிராமணன் என்றழைத்துகொள்வதும், எண்ணுவதுமே இன்னொருவனை சூத்திரன் என்பதாகும் என்பதை ஏன் இவர்கள் புரிந்துகொள்ளவில்லை? பிராமணன் என்பதற்கு சொல்லப்படும் நியாயங்களை (சோ முதல் சங்கரச்சாரி வரை) இந்த எவர்களும் பின்பற்றாத பொழுதிலும், பிராமணர்களுக்கு எதிரானது எனப்பொங்கி வருவதற்கு இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? இதில் இருக்கும் இந்த இரட்டை நிலையைக்கூட இவர்கள் தந்திரமாக மறைக்கிறார்கள். இங்கு பிராமணதர்மத்தைக் காப்பாற்ற ஒருவனும் இல்லாத போதும் பறையனாகவும், பள்ளனாகவும், இன்னும் சாதித்தொழில் புரியும் அனேகர் உள்ளனர் என்ற எளிய உண்மையைக்கூட மறுக்கும் அளவுக்கு சாதி வெறியையே காட்டுகிறார்கள்.

(இத்தோடு இந்த வாரம் போதும் என்று மீண்டும் நினைக்கிறேன்.)

3/25/2005 2:42 PM  
Blogger ROSAVASANTH said...

http://dondu.blogspot.com/2005/03/blog-post_111165195524744737.html

நான் சொன்னது :ஹலோ, இப்படி ஒரு கனவு வராமல் யாருமே இல்லை என்று தோன்றுகிறது. சிறுவயதில் பயத்தின் குறியீடாய் தேர்வு ஆகிபோவதை இது விளக்குகிறதோ? பயத்தின் குறியீடாய் நம் அடிமனதின் ஆழத்தில் இது தங்கிவிட்டதோ? இதை பார்க்கும் போது தேர்வில் பெயிலானதால் தற்கொலை செய்துகொண்ட சிறார்கள் குறித்து புரிந்துகொள்ளலாம்.

தேர்வு இல்லாமல் சமூகம் சிறுவர்களை வாழ விடமுடியாதா? அதெப்படி முடியும் என்று கேட்ககூடாது. அரசன் இல்லாமல் முடியுமா என்ற கேள்வியிருந்த காலம் போய், இன்று அது ஒரு யதார்த்தம். பலர் ஒப்புகொள்ளவிட்டாலும் திருமணம்(என்ற சம்பரதாயம்) இல்லாமல் சிலர் வாழமுடிகிறது. இப்படி இந்த தேர்வையும் புதைத்துவிட்டு ஒரு சமூகம் இயங்க முடியாதா? இப்போது இதை யோசிக்க தொடங்கினால் என்றாவது சாத்தியமாகலாம் என்று தோன்றுகிறது.

நாரயணண்: வசந்த், இதைப்பற்றி எழுத வேண்டுமென்று நினைத்திருந்தேன். நீங்களே சொல்லிவிட்டீர்கள். தேர்வு என்பதை ஒரு டுபாக்கூர் சமாச்சாரமாக தான் பார்க்க முடிகிறது. நன்றாக ஞாபகம் வைத்துக் கொண்டு, பேப்பரில் வாந்தி எடுப்பதை எந்த வகையில் பார்ப்பது என்று புரியவில்லை. எனக்கெல்லாம் டிகிரி முடித்து 8 வருடங்கள் கழித்துதான் நான் என் வாழ்நாளில் எவ்வளவு நாட்களை வீணடித்திருக்கிறேன் என்று தெரிந்தது. நான் படித்த ஒரு விஷயமும் இன்றைக்கு உதவவில்லை என்பது தான் கொடுமை. இங்கே தமிழ்நாட்டில், பெருமைக்காக மாஸ்டர் டிகிரி வாங்கிய ஆட்கள் எல்லாம், போலிஸ் ஸ்டெஷனில் புகார் எழுதிக் கொடுக்க தெரியவில்லை, வங்கியின் மேலாளரோடு பேசி, வங்கி கணக்கை மாற்ற எழுதித் தர தெரியவில்லை, ஆர்.டி.ஓ அலுவலகத்தில் வாகன உரிமமிட இருக்கும் விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்ய தெரியவில்லை, இவற்றுக்கெல்லாம் மேலாக, பொதுவாழ்வில், பஸ்ஸில் காலை மெறித்தால், மன்னிப்பு கேட்கும் அடிப்படை குணத்தைக் கூட கல்வி கற்றுத் தரவில்லை. என்னத்த சொல்றது ? ஏட்டுச் சுரைக்காயெல்லாம் குழம்புக்குக் கூட உதவாது என்பதை ரொம்ப லேட்டாக, ஆனால் லேட்டஸ்டாக தான் புரிந்து கொள்ள முடிந்தது. யாரேனும் கல்வியாளர்கள், கல்வி முறை பற்றி விவாதித்தால் பங்கேற்க தயார்.

3/25/2005 3:30 PM  
Blogger enRenRum-anbudan.BALA said...

Dear Roza,

My reply to your comment in Mookan's post (now removed!) is in my blog
http://balaji_ammu.blogspot.com/2005/03/blog-post_19.html

Also, 4 more PALLAVIS are yet to be identified :-) WAITING!!!!!

enRenRum anbudan
BALA

3/26/2005 6:14 PM  
Blogger ROSAVASANTH said...

காஞ்சி ஃபிலிம்ஸிலிருந்து கடைசியாக....

சுந்தரமூர்த்தி:குணாவின் எழுத்துக்கள் முதலில் அறிமுகமானது பெங்களூரில் ஒரு நண்பர் மூலமாக. "தமிழிய மார்க்சியவாதி" ('இந்து' ராம் மாதிரி ஒரு specialized Marxist) என்ற குறிப்போடு குணாவின் நூல்களைக் கொடுத்தார். குணாவின் சமீபத்திய நூல்களைப் படித்தால் பரிணாம வளர்ச்சியடைந்து தனித்தமிழ் வலதுசாரியாக மாறியிருக்கிறார். இப்போதைய அவரது பார்வையில் தமிழரல்லாத வந்தேறிகள் எல்லோருமே தமிழர்களை சுரண்டவந்தவர்கள். இந்த அடிப்படைவாதம் எவ்வளவு தூரம் போகிறதென்றால் தலித்துகளிலேயே மிகவும் மோசமாக நடத்தப்படுகிற தெலுங்கு பேசும் அருந்ததியர்கள் கூட தமிழரைச் சுரண்ட வந்த வந்தேறிகள் தாம். அவர்கள் தமிழகத்திற்கு வந்து என்னத்தைக் கண்டார்கள் என்று தான் புரியவில்லை.

ரோஸாவசந்த்:அருந்ததியர்களை மட்டுமல்ல, லம்பாடிகள் தொடங்கி இன்னும் பல ஆதிவாசிகள் குறித்தும் மிக மோசமாக எழுதியிருப்பார் குணா. 'இடவொதுக்கீட்டால் பயன் பெறுவது அவர்கள்தானே?' என்று ஆவேசமாக கேட்டிருப்பார். தமிழ் பாசிசம் என்பதற்கு மிக சரியான உதாரணம் அவர்தான். கர்நாடகத்தில் கன்னட வெறி அல்லது தேசியம் ஒரு வலதுசாரிதனமை கொண்டதாக பரிணமித்தது போல் தமிழ் தேசியம் (அதற்கான சூழலும், பிண்ணணியும், காரணங்களும் மிக தீவிரமாய் இருந்தும்) பரிணமிக்காததற்கு பெரியாரையே காரணமாய் சொல்லவேண்டும். அவர் 'திராவிடம்' என்று இல்லாத ஒரு தேசியத்தை அறிமுகபடுத்தியதியதிலேயெ(அதுகுறித்த அவரது விளக்கங்களிலும்) அவரது மேதமையும், எல்லா விதத்திலும் பாசிசத்திற்கு எதிரான அவரது சிந்தனையும் தெளிவுபடும். இது குறித்து திண்ணையில் வெகுகாலம் முன்பு எழுதினேன். கிடைத்தால் எடுத்து போடுகிறேன்.

பின் குறிப்பு: இந்த பின்னூட்டத்திற்கும் டோண்டு எழுதியதற்கும் எந்த தொடர்பும் இல்லை.

(பின்னர் காஞ்சி டோண்டுவிற்கு எழுதியதற்கான பதில் கீழே!)

//வாங்கிய திட்டுகளை டோன்டு ஐயா பார்க்கவிலையா? //

காஞ்சி ஸார், நான் ஒருவேளை உங்களை திட்டியிருந்தால் அது கடைசியாய் எழுதிய செருப்படி பதிவில்தான். அதில் எனக்கு இப்போதும் மாறுதல் கிடையாது. அதுவும் திருமாவளவன் மீதான வசையை நன்றாய் நியாயப்படுத்திவிட்டு, இன்னும் உங்கள் நிலைப்பாட்டில் மாற்ரமும் இல்லாமல், வேறு ஃபிலிம்கள் காட்டிவரும்போது நிச்சயம் எனக்கு மாறுதல் இல்லை.

அதற்கு முன் எழுதிய எதுவும் திட்டுக்கள் அல்ல, உங்களுக்கும் டோண்டுவுக்கும் வித்தியாசம் எதுவும் கிடையாது என்று சுட்டிக்காட்டியது மட்டுமே. அது உங்களுக்கு திட்டாக தெரியும்போது மீண்டும் நீங்கள் டோண்டுதான் என்று உறுதியாகிறது.

நீங்கள் யாராகவும் இருங்கள், பெரிய பிரச்சனை இல்லை. அதை எல்லாம் பெரியார் பெயரை சொல்லிகொண்டும், ஜாதியை எதிர்த்து போராடுவதாக ஃபிலிம் காட்டிக்கொண்டு செய்யவேண்டாமே!

//புதுவை மாணவி செல்வி, அவருக்கு சாதி சான்றிதழ் கிடைக்காததால், தேர்வு எழுத மறுக்கப்பட்டு மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டதை கண்டித்து நான் சொன்ன சாதி அடையாள மறுப்புக்காக, வாங்கிய திட்டுகளை டோன்டு ஐயா பார்க்கவிலையா? //

ஜாதி சான்றிதழ் கிடைக்காமல் தேர்வு எழுத மறுக்கப்பட்டு... என்ன புது கதை இது? செய்தியை படித்திவிட்டு எழுத வேண்டாமா?

(தலித்திய பார்வையில்)பார்பனர்களை விட ஆபத்தானவராக உங்களை பார்கிறேன். இதை திட்டுக்கள் என்று திரிக்கும் உங்கள் புத்தி பார்பனர்களை விட ஒரு படி மேலே போகிறது.

டோண்டுவால் பெரிய ஆபத்து எதுவும் கிடையாது. அவர் பேச்சு யாரிடமும் எடுபடப் போவதில்லை, அவரை போலவே சிந்திக்கும் சிலரை தவிர. மற்றபடி யாரும் அவரை கண்டுகொள்ளப் போவதில்லை. மேலும் அவரிடம் ஒருவகை (பழமைவாதியின்) நேர்மை வெளிப்படுவதாகவும் நினைக்கிறேன். ஆனால் பெரியார் பெயரை சொல்லி, நீங்கள் பேசி வரும் விஷயங்கள் மிகவும் ஆபத்தானவை, இன்றய சூழலில் கடுமையாய் எதிர்க்கப்படவேண்டியவர் உங்களை போன்றவர்கள்தான் என்று நினைக்கிறேன். இது உங்களுக்கு திட்டுவதாகத்தான் தெரியும். அப்
படி தெரியும் போது பார்பனர்கள் செய்யும் (ஒரு ஜாதியை திட்டுவதாக்)பெரியார் குறித்த விமர்சனத்தை குறை சொல்ல உங்களுக்கு என்ன் யோக்யதை இருக்கிறதோ புரியவில்லை.

மீண்டும் பெரியாரியம் பேசுபவர்கள்தான் தலித்களின் எதிரிகளா என்று கேட்காதீர்கள்! உங்களை நான் அப்படி நினைக்கவில்லை. பெரியாரியம் பேசுவது போல் நடிப்பதாக, பாவனை செய்வதாக அல்லது அப்படி தனக்குத்தானே நம்பிகொண்டிருப்பதாக மட்டுமே நினைக்கிறேன்.

உங்களிடம் ஏதாவது பரிசீலனை இருக்கும் என்று நினைத்து இங்கே எழுத வந்தேன். அந்த நம்பிக்கை இனி இல்லை. இனி இங்கே எழுதும் நோக்கம் எதுவும் இல்லை. நன்றி!

3/27/2005 12:40 AM  
Blogger enRenRum-anbudan.BALA said...

Roza,
Answers (for pallaviyum saraNamum) have been posted at
http://balaji_ammu.blogspot.com/2005/03/20.html#comments
enRenRum anbudan
BALA

3/27/2005 4:24 AM  
Blogger ROSAVASANTH said...

நாரயணன் பதிவிலிருந்து...

http://urpudathathu.blogspot.com/2005/03/blog-post_27.html#comments

தங்கமணி: நாராயணன், எனக்கு விளையாட்டு என்பது playfulness என்ற அளவில்தான் ஒத்துக்கொள்ள முடியும். விளையாட்டு என்பது விளையாட்டின் கணத்துக்கண சந்தோசத்தைக் கொண்டதாக இருக்கவேண்டும், இரண்டு நாய்க்குட்டிகள் விளையாடுவதுபோல. விளையாட்டுப்போட்டி என்பதே ஒரு முரண்நகை. அதுவே இயல்பான விசயமல்ல என்றே படுகிறது. விளையாட்டுப்போட்டிக்கும் யுத்தத்துக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. அது விளையாட்டும் இல்லை என்றுதான் நினைக்கிறேன்.
நன்றி!

ரோஸாவசந்த்: //விளையாட்டுப்போட்டிக்கும் யுத்தத்துக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. அது விளையாட்டும் இல்லை என்றுதான் //

அப்படி தோன்றவில்லை தங்கமணி. ஒரு வேளை கிரிக்கெட் இல்லயென்றால் இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டை போட்டு மக்களின் ஈகோவை தணிக்க வேண்டியிருந்திருக்கும். இன்று போரின்(அதுவும் மிகவும் அபாயகரமாய் மாறக்கூடிய ஒரு போரின்) தேவையில்லாமல், கிரிகெட்டை பார்த்து மக்கள் அந்த சந்தோஷத்தையும், போட்டி மனப்பானமையையும் பெறுகின்றனர். அந்த வகையில் கிரிக்கெட் யுத்தத்தை தவிர்பதாய், அதை பதிலீடு செய்வதாய் உள்ளதாய் தோன்றுகிறது.

நாராயணன்: வசந்த், கிரிக்கெட் வேண்டுமானால் அப்படியிருக்கலாம். ஆனாலும், கிரிக்கெட்டும் கொஞ்சம் அபாயகரமான விளையாட்டுதான் என்று சில சமயம் தோன்றுகிறது, அதைப் பார்க்கும் மக்களைப் பொறுத்து. கொல்கத்தாவில் இலங்கையிடம் சென்றதற்கு முந்திய உலகக்கோப்பை செமி பைனலில் தோற்ப்போம் என்று தெரிந்தவுடன் ஈடன் கார்டன் எரிந்தது. சென்ற உலகக்கோப்பையில் முதலாட்டம் ஆஸ்திரேலியாவுடன் தோற்றவுடன், கங்குலியின் வீடும், திராவிடின் வீடும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டது. என்ன சொல்லி இதனை நம்மால் விளக்க முடியும்?

ரோஸாவசந்த்: //கிரிக்கெட்டும் கொஞ்சம் அபாயகரமான விளையாட்டுதான் என்று சில சமயம் தோன்றுகிறது, //

நாநா, நான் சொல்லவந்தது கிரிக்கெட் ஆபத்தா, ஆபத்தில்லையா என்பது பற்றியல்ல. ஒருவேளை கிரிக்கெட் என்பது போரை பதிலீடு செய்கிறதோ, கிரிகெட் -நீங்கள் ஆபத்தானதாக் குறிப்பிடும் - தேசிய ஆசாபாசங்களுக்கும், கோபங்களுக்கும் ஒரு வடிகாலாக இருக்கிறதோ என்ற ஒரு வியப்பை மட்டுமே! உங்கள் பழைய பதிலுக்கு நன்றி!
(ஒரு வேளை கிரிக்கெட் இல்லையென்றால் மக்கள் அபிலாஷைகளை தீர்க்க போர் தேவைப்பட்டிருக்கலாம்.)

PKசிவக்குமார்: Narain wrote: "மேலும், ரவிக்குமார் தவிர்த்த தலித் எழுத்தாளர்களே, பெரியாரின் பெருமைகளையும், இருப்பினையும், தலித் மக்களின் மீதான அவரின் பங்கையும் நிறுவுகின்றனர். (மதிவாணன், அழகியபெரியவன், சிவகாமி)"

Can you please tell me where and when Sivakami wrote, proving Periya's need, contributions to Dalits etc.

I just want to read it to learn about it.

Thanks for your help.

ரோஸாவசந்த்: சிவக்குமாரின் கேள்வி தொடர்பாக,(என்னை கேட்கவில்லை எனினும்).

சிவகாமி சமீபத்திய எழுத்துகளில் பெரியாரை மிகவும் தாக்கியே எழுதியிருக்கிறார்.உதாரனமாய் புதிய கோடாங்கியிலேயே எழுதியிருக்கிறார். நாராயணன் அதை அறியாமல் இருந்திருக்கலாம். அதை முன்வைத்தே சிவக்குமார் கேள்வி எழுப்பியுள்ளதாக நினைக்கிறேன்.

ஆனாலும் நாராயனன் சொன்னது உண்மையாய் இருக்க வாய்புண்டு. சிவகாமி தனது பழைய எழுத்துகளில் பல இடங்களில் பெரியாரை புகழ்துள்ளார். (பழைய) கோடங்கியில் எழுதியுள்ளார். நேரடியான அவரது கணையாழி பேட்டியில் கூறியுள்ளார். உண்மை இதழுக்கு அளித்த பேட்டியில் வானளாவவே புகழ்ந்துள்ளார். அதெல்லாம் பழசு.இப்போது ரவிக்குமார், அ.மார்க்ஸ் ஈகோ சண்டை பெரிதாகி அதற்கு பெரியாரை பலி கொடுக்க முடிவு செய்தபின் சிவகாமி தன் நிலைபாட்டையும் மாற்றிகொண்டுள்ளார். இது சிவகாமிக்கு மட்டுமல்ல. ரவிக்குமாருக்கும் மற்ரவர்களுக்கும் கூட பொருந்தும். (காரல்) மார்க்ஸைவிட பெரிய ஆளாக பெரியாரை ரவிக்குமார் புகழ்ந்து பேசியதையும், "பிற்படுத்த பட்டவர்களின் பிரதிநிதியாக மட்டும் பெரியாரை பார்க்க முடியாது' என்று திருவாய் மலர்ந்தருளியதையும் பெரியாரியம் தொகுப்பில் பார்க்கலாம். காலத்தால் கருத்துக்களில் மாற்றம் ஏற்படலாம்தான். ஆனால் இது கருத்து மாற்றம் மட்டுமா என்பதுதான் ஆராய்சிக்குரியது. அதை இங்கே, அதுவும் சிவக்குமாரை வைத்துகொண்டு செய்ய முடியும்' என்று தோன்றவில்லை. என் பதிவில் இந்த பிரச்சனையை அணுகும் நோக்கம் உள்ளது. அதற்கு தேவையான ரவிக்குமாரின் சில கட்டுரைகள் கைவசம் இல்லை. பார்போம்!

3/28/2005 2:10 PM  

Post a Comment

<< Home

---------------------------------------
Site Meter