ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Tuesday, January 10, 2012

கறுப்பு வெள்ளையை கருப்பு வெள்ளையாக பார்த்தல்.

பொலிடிகல் கரெக்ட்னெஸ் பற்றி பாடம் எடுப்பதையும், அதை முன்வைத்து எதிர்வினை புரிவதையும் எழுத்தில் இனி செய்யக் கூடாது என்று முடிவு செய்திருந்தேன். பொலிடிகல் கரெக்ட்னெஸ் என்பதில், இன்னமும் ஒண்ணாங்கிளாஸ் பாஸ் செய்யாத தமிழ் சூழலில், அப்படி எல்லாம் விபரீத முடிவு எடுக்கக்கூடாது என்று தெரிகிறது. மறத்தமிழர்கள் பச்சையாக காட்டும் ஆணாதிக்க வெறியை இணையத்தில் வாசிக்க நேரும்போதெல்லாம், வேறு ஏதோ நாட்டில் நடக்கும் வன்முறை செய்தியை வாசிப்பதுபோல எதிர்கொள்ளும் பழக்கம் கிட்டத்தட்ட வந்துவிட்டது.

நேற்று மதியம்கூட ஸ்ருதிஹாசன் பீர் சாப்பிடும் படம் ஒன்றை எடுத்துப் போட்டு, அதை ஒரு அதிர்ச்சியளிக்கும் விஷயமாக சொல்லி, அந்த செய்தியை இணையத்தில் பரப்பும்படி வேறு கேட்டுக் கொள்ளும் ஃபேஸ்புக் செய்தியை பார்த்தேன்; அதற்கு நிறைய 'லைக்'கள் வேறு; ஸ்ருதிஹாசன் பீர் சாப்பிடுவதில் உனக்கேன் இந்த கொலைவெறி என்று ஒருவர் கேட்கக்கூட நாதியில்லாத அளவில் தமிழ் சூழல் உள்ளது. நேற்றிரவு அன்றாடம் ட்விட்டரில் உரையாடும் நண்பர்கள், அவ்வளவு பச்சைத் தமிழ்தனமாக இல்லாவிட்டாலும், அதே தமிழ் ஜோரில் எதிர்வினை செய்திருக்கிறார்கள்; பல கொக்கிப் பிடி கேள்விகளும் கேட்டிருக்கிறார்கள். இப்போதய சுகாசினி சர்ச்சையில், போஸ்டர், தக்காளி, முட்டை வீசுதல், தமிழ் அடையாளக் குழப்பம் பற்றிய அறிவுச் சொறிதல்வரை வளரும் அளவிற்கு சீரியஸாக இல்லையென்றாலும், சில தெளிவுகளுக்காக, எழுதுவதில் எனக்கே இருக்கும் மொக்கையை சகித்து மெனக்கிடுகிறேன்.

அதற்கு முன் சுகாசினி மீது பரிவு கொண்டு பேச எனக்கு காரணம் எதுவும் கிடையாது; குஷ்பு மீதான தாக்குதல் நடந்த அந்த ஒரு சந்தர்ப்பத்தை தவிர, சுகாசினி சொல்லும் எதையும் நான் ஆதரித்தது கிடையாது. அவர் எதை பற்றி பேசினாலும், ஐந்து நிமிடம் கேட்கும் பொறுமை கூட கிடையாது; எலீட் குரலான அவரை பலமுறை திட்டக் கூட தயங்கியது கிடையாது; எதிர்காலத்திலும் அதற்கான சந்தர்ப்பங்கள் இன்னும் அதிகம். இந்த சந்தர்ப்பத்தில் சுகாசினி பற்றிய சர்ச்சை என்று அல்லாது, குறிப்பிட்ட பிரச்சனையின் அரசியல் பரிமாணங்களும், நம் மக்களின் எதிர்வினையும், என்னை நோக்கிய கேள்வியுமே என்னை எழுத வைக்கிறது. அதே போல அழகான ஆண் என்பதன் இலக்கணத்திற்கு எம்ஜியார், கமல், அரவிந்த்சாமி, அஜீத்தை ஒருநாளும் நான் உதாரணமாக கொண்டதில்லை. நடிகைகள் விஷயத்திலும், பெரும்பான்மை தமிழ் மக்களின் ரசனைக்கு எதிராக, 'கலர்' கண்டு அழகியல் இலக்கணத்தை நான் கற்பித்து கொண்டதில்லை. இவை எல்லாம் என்னை ஒருமுறை வாசித்தவர்களுக்கும் தெரியும் என்றாலும், விவாதம் என்று வந்துவிட்டால், சதாம் குர்து இனத்தவரை கொன்றதை பற்றி பேசினால், புஷ் செய்த அக்கிரமங்களை பதிலாக முன்வைப்பது ஒரு விவாத அணுமுறையாகி விட்டதால் இந்த சுய விளக்கத்தை சொல்கிறேன்.

அதே போல சுகாசினி இதற்கு முன்வாழ்க்கையில் என்னவெல்லாம் பேசினார் என்ற முழுத் தகவல்கள் என்னிடம் கிடையாது; தெரியாது; நண்பர் டிபிசிடி அளித்த இந்த செய்தியை மட்டும் வைத்தே பேசுகிறேன். இந்த செய்தியையும் தட்ஸ்டமில் போன்ற ஒரு நம்பகதன்மையில்லாத தளத்தை வைத்து பேசுவதில் பிரச்சனையிருந்தாலும் ஒரு கருத்து சார்ந்த விவாதத்திற்காக அதை அப்படியே எடுத்துக் கொள்கிறேன்.

சுகாசினி இப்போது சொன்னது என்ன? 'எம்ஜியார், கமல், அரவிந்த்சாமி, அஜீத் போன்று அழகானவர்களை' கதாநாயகனாக அறிமுகப்படுத்த வேண்டும் என்று ஒரு சாதாரண ரசிகையாக தான் கேட்டுக் கொள்வதாக சொல்லியுள்ளார்; அவ்வளவுதான் சொல்லியுள்ளதாக செய்தி வந்துள்ளது. நேரடியாக அவர் தமிழ் கலாச்சாரத்தின் அதி முக்கிய கருத்தாக்கமான 'கலர்' பற்றி எதுவும் சொல்லவில்லை. அவர் சொன்னதை பற்றிய ஒரு தனிப்பட்ட வாசிப்பாகத்தான் 'கலராக' கதாநாயகர்கள் வேண்டும் என்று அவர் கேட்பதாக பொருள் கொள்ள முடியும். ஆனாலும் அப்படி அவர் சொன்னதாகவே எடுத்துக் கொள்வோம். அதிலேதான் என்ன பிரச்சனை என்று கேட்டதற்கு யாரும் திருப்தியான பதில் எதுவும் சொல்லவில்லை.

ஒருவர் தனக்கு வெள்ளை நிறத்தில் கதாநாயகர்கள் பிடிக்கும் என்று சொல்வது ரேசிசமா? அப்படியானால் கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு என்று நான் சொன்னால் அது என்ன? அதை ஒரு சமூகத்தின் பொதுவான ரசனையாக கட்டமைப்பதும், முன்னனுமானமாக கொள்வதும், கருப்பாக இருக்கும் ஒருவரை மட்டமாக பேசியிருந்தால் அதுவும்தான் பிரச்சனை. நிச்சயமாக சுகாசினி அப்படி நேரடியாக கருப்பான ஒருவரை மட்டமாக சொல்லவில்லை 'எம்ஜியார் கமல், அஜித்தான் தேவை, தனுஷ் தேவையில்லை என்பது ரேசிசம் இல்லையா' என்று கேட்கிறார் தமிழ் சசி. 'தனுஷ் தேவையில்லை' என்ற கருத்தை சசி எங்கே வாசித்தாரோ எனக்கு தெரியாது; வெளிவந்த செய்தியில் நான் வாசிக்கவில்லை. ஆனால் ஒருவேளை தனுஷின் கலரை பற்றி அவர் பேசியிருந்தால் கூட, அதில் எந்த தவறும் இல்லை. அதை ஒரு எதிர்வினையாக நிச்சயம் பார்க்கமுடியும். 'வொயிட்டு கலரு கேர்ளு..' என்று பாடுபவருக்கு, பெண்மட்டும் வொயிட்டாக இருக்க வேண்டும் என்று நினைப்பவருக்கு, அவர் கருப்புதான் என்று உணர்த்துவது ஒருவகையான எதிர்வினைதான். (உண்மையில் 'வொயிட் கலரு கேர்ளு' என்று தனுஷ் பாடுவதில் கிடப்பது அல்ல ரேசிசம், 'கேர்ளு ஹார்ட்டு ப்ளாக்கு..' என்று எதிர்மறையான ஒரு விஷயத்திற்கு கருப்பு நிறத்தை குறியீடாக்குவதுதான் நிறம் சார்ந்த ரேசிச மனப்பான்மை.)

'வெள்ளை கலர் பிடிக்கும்' என்று ஒருவர் கருதுவதும், கருத்து சொல்வதும் ரேசிசமா என்று நேரடியாக கேட்பதை விடுவோம்; சமூக பொது அழகியலாக அது இருப்பதனால், அதன் பிரச்சனைகளை மனதில் கொண்டு, அவ்வாறு கருதுவதை எதிர்ப்பதாக கொள்வோம்; அப்படியானாலும் உண்மையில் எதிர்க்க வேண்டியது சுகாசினி பேசியதையா? மேலும் சுகாசினி பேசியதை எதிர்க்கும் அருகதை யாருக்காவது இங்கு இருக்கிறதா? நிச்சயமாக அதற்கான அருகதை சேரனுக்கு கிடையாது. சேரனுக்கு மட்டுமின்று எனக்கு @போட்டு பேசிய யாருக்கும் கூட இருப்பதாக தெரியவில்லை.

சேரன் எத்தனை கறுப்பு நடிகைகளை தனது படத்தில் நடிக்க வைத்துள்ளார்? சேரனை விடுவோம், இந்த செந்தமிழன் சீமான் நடிக்க வைத்துள்ள கறுப்பு நடிகைகள் ஒன்றாவது உண்டா? நடிகைத் தேர்வு என்பது வெகுஜன ரசனையை கணக்கில் கொண்டு மட்டும் நடப்பது அல்லவே; இவர்களின் அழகியல் ரசனை, இன்னபிற ரசனைகள் சார்ந்தும் நடப்பதுதானே. தன் படத்தில் நடிக்க கலரான, புத்தம் புதிய, இளைமையான நடிகை வேண்டும் என்று தெளிவாக இருப்பவர், பெண்கள் மட்டும் தங்களை போன்று வயசாகி கன்னச்சதை தொங்கும் 'ஹேண்ட்சம் கருப்பர்களை' ரசிக்க வேண்டும் என்பது என்ன எண்ணம்? இதைத்தான் ஆணாதிக்க ரேசிசம் என்கிறேன். நண்பர்கள் புரியவில்லை என்கிறார்கள். இதென்ன அவ்வளவு கடினமான கான்செப்டா? பெண்களுக்கான அழகியலாக வெள்ளையையும், ஆண்களுக்கான அழகியல் என்று வரும்போது மட்டும் சுய அடையாளத்தை முன்வைத்து கருப்பை ரசிக்க வேண்டும் என்று பெண்களை நோக்கி சொல்வதைத்தான் ஆணாதிக்க ரேசிசம் என்கிறேன். வெள்ளை கதாநாயகியை தனக்கு தேர்வு செய்துவிட்டு, சுகாசினியை கறுப்பு கதாநாயகர்களை ரசிக்க சொல்வது நிறம் சார்ந்த ஆணாதிக்க திமிர் அன்றி வேறென்ன? (அடிப்படையில் இது ஆணாதிக்கம் சார்ந்த பிரச்சனை என்பதால் இதை நான் ரேசிச ஆணாதிக்கம் என்று சொல்லியிருக்க வேண்டும்.) இதைத்தானே தமிழ் அரசியலை முன்வைக்கும் சேரன், சீமான், பாரதிராஜா பொன்ற அனைவரும் செய்கின்றனர்.

அந்த காலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த நிலை கூட இல்லாமல், கலைஞரின் பொன்னர்-சங்கரில் கூட நீல நிற கண்களுடன் நடிகைகள் இருக்கும் இன்றய சூழலில், சுகாசினி சொன்னதை சூழலுக்கான எதிர்வினையாக பார்க்கமுடியும். நடிகைகள் எல்லாம் உங்களுக்கு வெள்ளை வெள்ளையாக வேண்டும்; இதில் நடிகர்கள் வெள்ளையாக இருக்க ஒரு பெண் ஆசைப்பட்டால் அது ரேசிசமா? என்ன லாஜிக் இது! இன்று நிலவும் அழகியல் அடிப்படையில், தங்களுக்கும், தங்களது ரசனைக்கும் பங்கு கேட்கிறார் சுகாசினி. தொடர்ந்து நிலவும் சமூக ரசனையை பற்றி தொடர் விமர்சனம் செய்யாத யாருக்கும் சுகாசினிக்கு எதிர்வினை வைக்கும் தகுதி இருப்பதாக எனக்கு தெரியவில்லை. தினமும்தானே தமிழ் சேனலில், எஃபெம்மில், நண்பர்களிடத்தில், பேருந்தில், பொது இடத்தில் என்று எங்கும் வெள்ளை கலரை புகழும், தீ ஃபிகரை வியக்கும் வசனங்களை கேட்கிறோம். இதில் எத்தனை இடத்தில் இவர்கள் எதிர்வினை செய்திருக்கிறார்கள்? அதை பற்றிய பிரஞ்ஞையில்லாமல், சுகாசினிக்கு மட்டும் பொங்குவதன் உளவியல் ஆணாதிக்கம் சார்ந்தது என்று நான் கருதுகிறேன். சுகாசினியின் பேச்சுக்கு எதிர்வினை வைத்தவர்களால் சின்ன சுயவிமரசனத்தை கூட செய்து கொள்ள முடியவில்லை; ஒரு கறுப்பு கதாநாயகியை யதார்த்தத்தில் முன்வைக்காத, சேரனை குற்றம் சொல்ல கூட யாருக்கும் தோன்றவில்லை.

மேலும் இது ஏதோ சினிமாக்காரர்களின் தேர்வு சார்ந்த பிரச்சனையும் அல்ல. நமது வெகுஜன ரசனை சார்ந்ததும்தான். கன்னங்கரேல் இளைஞன் ரொம்ப கலரான பெண்ணை மணம் செய்ய விரும்புவதாக, வெளிப்படையாக சொல்வதை கேட்கும் யதார்த்தத்தில்தானே நாம் இருக்கிறோம். ஒருவேளை உண்மையில் நம் வெகுஜன ரசனைக்கு கறுப்புதான் பிடிக்கும் என்றால், பணம் செலவழித்து மும்பையிலிருந்து அழைத்து வந்து, ஹோட்டல் வாடகை எல்லாம் கொடுத்து செலவு செய்ய வேண்டிய கட்டாயம் நம் சினிமாக்காரர்களுக்கு இருக்காது. நம் சமூகத்தின் பொதுமகன் வெள்ளை கதாநாயகியுடன் கற்பனையில் குலாவ சினிமாவிற்கு செல்கிறான்; சினிமா அதை அளிக்கிறது. இந்த சமூக இயக்கத்தில் எந்த பிரச்சனையும் இல்லாத போது, பெண்களும் அதே போன்ற கதநாயகர்களை விரும்பினால் அதை ரேசிசமாக பார்க்கமுடியாது; நிலவும் யதார்த்தத்திற்கு எதிர்வினையாகத்தான் பார்க்கமுடியும்.

இதையெல்லாம்விட நம் கருப்பு கதாநாயகர்களே மேக்கப் போட்டு வெள்ளையாகத்தானே தோன்றுகிறார்கள். 'மண்டேலா மண்டையா' என்று திட்டப்படும் செந்தில் கூட மூஞ்சியில் சிகப்பு சாயம் பூசாமல் தோன்றுவதில்லையே. இதில் ஒரிஜினலாகவே 'கலரில்' ஒரு கதாநாயகனை கேட்டால் அதில் என்ன பெரிய பிரச்சனை?

'அயன்' படம் வெளிவந்த போது ஏதோ ஒரு டீவியில் இயக்குனர் ஆனந்த், தமன்னா, ஜெகன், சூர்யா கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சி. படக்குழுவை சேர்ந்த ஒருவர் இயக்குனரை கேட்கிறார், "ஏங்க இவன் (ஜெகன்) இப்படி அண்டங்காங்காக்கா மாதிரி இருக்கான், இவனைப்போய் எப்படி தமன்னாவிற்கு அண்ணனா சூஸ் பண்ணிங்க?' டைரக்டரும் ஏதோ பதில் சொல்கிறார். அதற்கு பிறகு டைரக்டர் ஆனந்தே தமன்னாவிடம்,

" அது எப்படி நீங்க இவ்வளவு கலரா இருக்கீங்க?" என்று கேட்கிறார். தமன்னா தான் வெயிலுக்கு எடுக்கும் முன்னெச்சரிக்கைகள், குங்குமப்பூ, பப்பாளி அரைத்து தேய்த்தல் என்று பலதை வரிசையாக சொல்கிறார்.

"ஓ.. இதெல்லாம் செஞ்சா உங்களை மாதிரி கலரா மாறிரலாமா?" (ஒரே சிரிப்பு)

தமன்னாவும் சிரித்து "இல்ல.. பேசிக்கா இது ஹெரிடிடரியா வர்ரது, அதுக்கு மேலே ப்ருகாஷனா..."

இந்த இயக்குனார் இன்னொரு விழாவில் சுகாசினியின் ரேசிசத்தை கண்டித்தால், நம் மக்கள் அதற்கு விசில் அடித்தால் ஆச்சரியமே படவேண்டாம்.

Post a Comment

7 Comments:

Blogger ராஜ நடராஜன் said...

//ஸ்ருதிஹாசன் பீர் சாப்பிடுவதில் உனக்கேன் இந்த கொலைவெறி என்று ஒருவர் கேட்கக்கூட நாதியில்லாத அளவில் தமிழ் சூழல் உள்ளது. //

இது தமிழ் சூழல் குறித்த விசயமில்லையென்று நினைக்கின்றேன்.இதில் ஸ்ருதிக்கென்ற அடையாளமாக கமலின் goodwillம் உடன் அடங்கியிருப்பதாக அவரது ரசனை சார்ந்தவர்களின் எதிர்வினையாக கூட இருக்ககூடும்.

எனது சகோதரி ஹாஸ்டலில் நண்பிகளுடன் ஒரு நாள் கொண்டாட்டமாக பீர் அடிப்பதற்கும்,டேய் மாமு!உன் தங்கச்சிய பப்புல மப்புல பார்த்தேண்டா என்று நண்பன் சொல்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

நேற்று ஸ்ருதியின் இந்திப் படம் ஒன்று க்ளைமாக்ஸ் காண நேர்ந்தது.இந்தப் பொண்ணுக்கு தேவையா என்ற எண்ணமே டைட்டில் கார்டு போடும் போது தோன்றியது.

சுகாசினி சொன்னது என்ன என்ற விபரம் தெரியாததால் நோ கமெண்ட்ஸ்.

1/10/2012 6:20 AM  
Blogger ROSAVASANTH said...

/சுகாசினி சொன்னது என்ன என்ற விபரம் தெரியாததால்/ பதிவில் சொல்லியிருக்கிறேன்; சுட்டி அளித்திருக்கிறேன்.

1/10/2012 10:29 AM  
Blogger தமிழ் சசி | Tamil SASI said...

இந்தப் பதிவில் என் பெயரை நீங்கள் எழுதியிருப்பதால் மட்டும் இந்த அதிமுக்கியத்துவம் வாய்ந்த பதிவுக்கு என்னுடைய மறுமொழி :))

நான் டிவிட்டரில் எழுதியது இது தான்

//
@rozavasanth @TPKD சேரன் பேசியதில் என்ன ரேசிசம்? எம்.ஜி.ஆர், கமல், அஜீத் தான் தேவை, தனுஷ் தேவையில்லை என்பதில் ரேசிசம் இல்லையா ?
//

இது நீங்கள் எழுதியதற்கு ஒரு எதிர்வினை. நீங்கள் இவ்வாறு எழுதியிருந்தீர்கள்

//

@TPKD_ என்னவோ எழவு? வெள்ளை என்று எங்கு சொன்னார்? சொன்னாலும் என்ன தப்பு? சேரன் பேசுவதுதான் ஆணாதிக்க ரேசிசம்!

//

சுகாசினி கூறுவது பற்றியோ, சேரன் கூறுவது பற்றியோ எனக்கு பெரிய அக்கறையில்லை. தமிழ் சினிமா என்ற மசாலா பொழுதுபோக்கிற்கு தேவைக்கு அதிகமாகவே தமிழ் சூழலில் முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம் (பொழுதுபோக்கு தேவை என்றாலும்). சுகாசினி கூறியது சரியானது தான், சேரன் கூறியது மட்டும் தான் "ஆணாதிக்கம்" என்று நீங்கள் சொன்னதால் தான் "சேரன் கூறியதில் என்ன ஆணாதிக்கம்" என கேள்வி எழுப்பினேன். கறுப்பு குறித்தோ, வெள்ளை குறித்தோ நான் எதுவும் எழுதவில்லை. அதுவும் சுகாசினி கூறியது ரேசிசமே அல்ல என்பதால் தான் அதை எழுதினேன். சேரன், சுகாசினி என இருவர் கூறியது குறித்தும் ஒரு சமமான பார்வை உங்களிடம் வெளிப்பட்டிருந்தால் அந்தக் கேள்வியை நான் எழுப்பியிருக்க வாய்ப்பில்லை.

சுகாசினியை அப்படியே கீழே "quote" செய்கிறேன்.

"
ஹீரோக்களில் எம்.ஜி.ஆர், கமல், அரவிந்த் சாமி, அஜித் போன்ற ஹேண்ட்சம் ஹீரோக்களை தமிழ் ரசிகைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டுகிறேன். நடிகைகளை மட்டும் அழகழகாக அறிமுகப்படுத்துகிறீர்களே, ரசிகைகளுக்கும் அழகான ஹீரோக்களை அறிமுகப்படுத்த வேண்டுகிறேன் என்றார்.
"

எம்.ஜி.ஆர், கமல், அஜித் போன்ற அழகானவர்கள் வேண்டும் என்றால் அடுத்த வீட்டுப் பையன் போல இருக்கும் தனுஷ் போன்றவர்கள் வேண்டாம் என்றே அனைவருமே புரிந்து கொள்வார்கள் (கூகாசினி அவ்வாறு வெளிப்படையாக கூறாவிட்டாலும்). அழகானவர்கள் தான் வேண்டும் மற்றவர்கள் தேவையில்லை என்பது தான் இதன் உட்பொருள். இதில் ரேசிசம் இல்லையா ?

சரி...நீங்கள் சேரனைப் பற்றி என்ன புரிந்து கொண்டிருக்கிறீர்கள் ? நீங்களும் சேரன் சொன்னதன் உட்பொருளை தான் நீங்களாகவே எடுத்துக் கொண்டீர்கள்.

"பெண்கள் மட்டும் தங்களை போன்று வயசாகி கன்னச்சதை தொங்கும் 'ஹேண்ட்சம் கருப்பர்களை' ரசிக்க வேண்டும் என்பது என்ன எண்ணம்? இதைத்தான் ஆணாதிக்க ரேசிசம் என்கிறேன். "

ஆனால் சேரன் தன்னைப் பற்றி எதுவும் கூறவில்லை, "வயசாகி கன்னச்சதை தொங்கும்" ஹீரோ பற்றியும் எதுவும் சொல்லவில்லை. பொதுவாக கறுப்பு ஹீரோக்களை தான் சொல்லி இருக்கிறார். கறுப்பாக இருப்பவர்கள் எல்லோரும் ஹேண்ட்சம் ஹீரோக்கள் என்றும் சொல்லவில்லை. கறுப்பாக இருப்பவர்களிலும் ஹேண்ட்சம் ஹீரோக்கள் இருக்கிறார்கள் என்றே சொல்லியிருக்கிறார். அதை வேறுமாதிரியும் புரிந்து கொள்ளலாம். நீங்கள் தான் சேரன் தன்னையே சொன்னதாக புரிந்து கொள்கிறீர்கள்.

நீங்களும் கறுப்பு வெள்ளையை கருப்பு வெள்ளையாக பாருங்கள் :))

*****

சேரன் கூறியது இது தான் (தட்ஸ்தமிழ் செய்தியில் இருந்து)

"சுஹாசினி பேசிய ஹேண்ட்சம் ஹீரோக்கள் எல்லோருமே வெள்ளை நிறமுடையவர்கள் என்பதால் அப்படி சொல்லி இருக்கிறார். கறுப்பாக இருப்பவர்களிலும் ஹேண்ட்சம் ஹீரோக்கள் இருக்கிறார்கள் மேடம். அவர்களையும் ரசியுங்கள் என்றார்.
"

1/10/2012 11:08 AM  
Blogger ROSAVASANTH said...

சுகாசினி தன் பேச்சில் வெள்ளையை பற்றி பேசவில்லை என்று நான் வாதிடவில்லை. சுகாசினி பேசியதற்கு வந்த எதிர்வினையை முன்வைத்து, 'நேரடியாக அவர் கறுப்பை மட்டம் தட்டி பேசாதபோது அவ்வாறு எடுத்து கண்டிப்பதன் முகாந்திரம் பற்றி சொல்லும்போது சொன்னேன். மற்றபடி தனிப்பட்ட வாசிப்பாக அவ்வாறு எடுக்கலாம் என்றும், அவ்வாறு எடுத்தும்தானே பதிவையே எழுதியுள்ளேன்.

சேரன் நேரடியாக சொல்லாவிட்டாலும் (விஷால் தவிர) மற்ற கருப்பு கதாநாயகர்கள் வயதாகி, கன்னச்சதை தொங்குவதாகத்தானே யதார்த்தத்தில் உள்ளனர். பெண்கள் ரசிக்க வேண்டியதை பற்றி (தன்னை பற்றிய சுய விமரசனம் இல்லாமல்) அவர்களுக்கு எடுத்து சொல்வதன் பிரச்சனையைதான் பேசியுள்ளேன்.

1/10/2012 12:20 PM  
Blogger ROSAVASANTH said...

/நீங்களும் கறுப்பு வெள்ளையை கருப்பு வெள்ளையாக பாருங்கள்/

கருப்பு வெள்ளையாக பார்ப்பது என்ற தலைப்பு இந்த பதிவை பற்றிதான்; ஒரு எளிமைப்படுத்தப்பட்ட சட்டகத்தில் எழுதியிருப்பதாகத்தான் நானும் நினைக்கிறேன்.

சுகாசினியை கண்டித்தவர்கள் கருப்பு-வெள்ளையாக பார்ப்பதாக நான் நினைக்கவில்லை; அவர்கள் ஒழுங்காய் எதையும் பார்க்கவே இல்லை என்பதுதான் என் கருத்து.

1/10/2012 12:24 PM  
Blogger Suresh ET said...

சுஹாசினியும் சேரனும் வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு கருத்துக்களை வைத்திருக்கலாம். அவர்களின் hypocrisy'ஐ பற்றிப் பேச எனக்கு எந்த ஆர்வமும் இல்லை. இந்த குறிப்பிட்ட இடத்தில் அவர்கள் உதித்த கருத்துக்களை மட்டும் வைத்துப் பேசுவோம்.

முதலில்:

//ஒருவர் தனக்கு வெள்ளை நிறத்தில் கதாநாயகர்கள் பிடிக்கும் என்று சொல்வது ரேசிசமா?//

அந்தக்கருத்தை அவர் அமெரிக்காவிலோ ஐரோப்பாவிலோ வெளிப்படுத்தினால அது ரேசிசம் இல்லையா? ஆம் எனில் ஏன்? அதில் பெரும்பாலான காரணங்கள் இந்திய/தமிழ் சூழலுக்கும் பொருந்துமா பொருந்தாதா?

//"அப்படியானால் கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு என்று நான் சொன்னால் அது என்ன?"//

இதை ஒரு condescending/patronizing பார்வை என்றே பார்க்க முடியுமே தவிர ரேசிசம் என்று அல்ல. ஏனெனில் ரேசிசம் என்பது ஒவ்வொரு சூழலின் சமூக, வரலாராற்றுப் பின்புலம் சார்ந்தது. வெள்ளைத்தோலே அழகு என்றும் அந்த அழகை அடைய எல்லா விதமான அழகு சாதனங்களையும் உபயோகிக்கச்சொள்ளும் நாடு இது (இதை இந்த அளவிற்கு பட்டவர்த்தனமாக எந்த சமுதாயத்திலும் பார்க்கவியலாது). வெள்ளைத்தோலுடைய பார்பனரல்லாத பெண்களை 'பாப்பாத்தி' என்று செல்லமாக அழைத்த சமூகம் இது. (சினிமா, திரைப்படங்களின் போக்குகளையும் இங்கே சேர்த்துக் கொள்ளலாம்.) இந்த சூழலில் வெள்ளைத்தோல் பார்பனர் ஒருவர் மறைமுகமாக வெள்ளைத்தோல் நடிகர்கள் வேண்டும் என்று சொல்வது ரேசிசம் அன்றி வேறென்ன? (உ-ம: அதை ஒரு கருப்புதோல் தலித் ஆணோ/பெண்ணோ சொன்னால் அது ரேசிசம் ஆகாது.) அவ்வாறு அவருக்கு வெள்ளைத்தோல் ஆண்கள் பிடித்திருக்க எல்லா 'ஞாயங்களும்' உருவாகக்கூடிய அதே அடிப்படையில் தான் அவரை racist என்றளைபதற்கான ஞாயங்களும் உருவாகின்றன.

Imagine this:
"I like white skinned people/they are the most beautiful, not saying anything about those who are dark skinned." இதை racist 'ஆ இல்லையா என்று கேட்டு ஒரு அமெரிக்காவில் poll நடத்திப் பார்க்கலாமே? (இதில் "பொதுபுத்தி சார்ந்த மதிப்பீடுகள்" போன்றவை irrelevant என்பதே என் கருது.)

Because the Indian society has been long socialized to 'accepting' that light skinned people = beautiful, the idea doesn't cease to become racist. What Suhasini said was racist the same way all Fair and Lovely, Fairever ads (the products themselves) are.

இரண்டு:

சுஹாசினி: "நடிகைகளை மட்டும் அழகழகாக அறிமுகப்படுத்துகிறீர்களே, ரசிகைகளுக்கும் அழகான ஹீரோக்களை அறிமுகப்படுத்த வேண்டுகிறேன் என்றார்."

ஆக அவரளவில் அழகு = வெள்ளை/light skinned என்பதை தெளிவாக இரு பாலருக்கும் பொருத்தியே பார்கிறார். இதில் எந்த அனுமானமும் இல்லை. மேலும் உங்களின் கருத்துப்படியே பார்த்தாலும் -- "அதை ஒரு சமூகத்தின் பொதுவான ரசனையாக...பேசியிருந்தால் அதுவும்தான் பிரச்சனை" -- சுஹாசினி தன்னை ஒரு "சாதாரண பெண் ரசிகை என்ற அளவில்" சமூகத்தின் பொதுவான ரசனையாகவே முன்வைக்கிறார்.

சேரனின் hypocrisy தன் படங்களில் யாரை நடிகைகளாக தேர்ந்தெடுத்தார் என்ற அடிப்படையிலிருந்து வரத்தேவை இல்லை. சுஹாசினியின் கருத்தில் உள்ள முற்பகுதியில் -- "நடிகைகளை மட்டும் அழகழகாக அறிமுகப்படுத்துகிறீர்களே" -- உள்ள பிரச்சனனையை கண்டு கொள்ளாமல் விட்டதிலேயே தெரிகிறது.

//"அதன் பிரச்சனைகளை மனதில் கொண்டு, அவ்வாறு கருதுவதை எதிர்ப்பதாக கொள்வோம்; அப்படியானாலும் உண்மையில் எதிர்க்க வேண்டியது சுகாசினி பேசியதையா?"//

ஆம். ஆனால், சேரன் போல 'selective'ஆக, ஆனதிக்கபோக்கோடு அல்லாமல், முழுமையாக.

1/11/2012 6:41 AM  
Blogger ROSAVASANTH said...

சுரேஷ், விரிவான கருத்துக்கு நன்றி.

நிச்சயமாக சமூக பின்புலம், வரலாறு, அங்கீரிக்கப்பட்ட பொதுக்கருத்தியல் எல்லாவற்றுடன் ஒப்பிட்டுத்தான் பார்க்கவேண்டும். இங்கே எழுதியுள்ளது சுகாசினிக்கு எழுந்த குறிப்பிட்ட எதிர்வினையின் பிரச்சனைகளை பேசுவது மட்டுமே. மற்றபடி ஐரோப்பிய அமேரிக்க சூழலில் வெளிப்படையாக வெள்ளை நிறத்தை பொதுவில் சிலாகிப்பதை ரேசிசமாகவே கொள்ள முடியும்; இந்தியச் சூழலுக்கும் பொருந்தும். ஆனாலும் தனிப்பட்ட தேர்வை பற்றி அப்படி சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. புலால் உண்பதை ஒரு சமூக உணவு பழக்கமாக ஏற்றுக் கொண்டு, தனிப்பட்ட தேர்வாக வெஜொடேரியனாக இருப்பதை நாம் முத்திரை குத்த முடியுமா? அந்த மாதிரி தனிப்பட்ட முறையில் பாலியல்/அழகியல் பார்வையாக ஒருவருக்கு வெள்ளை நிற ஆண்களை/பெண்களை பிடிக்கும் என்ற தனிப்பட்ட தேர்வை நாம் மறுக்க முடியுமா? கொஞ்சம் குழப்பமாகத்தான் இருக்கிறது.

1/11/2012 12:08 PM  

Post a Comment

<< Home

---------------------------------------
Site Meter