ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Friday, April 07, 2006

எல்லா நேரங்களிலும் சில மனிதர்கள்-2.

மொத்தம் ஐந்து பதிவுகளில், நான் எழுதிய பதிவிற்கு எதிர்வினையாய் தொடங்கி, தமிழகத்து மீனவர்கள்/இலங்கை மீனவர்களுக்கு இடையேயான பிரச்சனைகளை விரிவாக வந்தியத்தேவன் அலசியிருந்தார். இதில் முதல் மற்றும் இறுதி பதிவு (மற்ற அவரது பின்னூட்டங்கள்) தவிர்த்து மற்ற மூன்று பதிவுகளும், விரிவான தகவல்களுடன் 'பிரச்சனையை' அலசுவதாக இருக்கின்றது.

'சலம்பல் பதிவு' என்பதாக வந்தியத்தேவனால் வர்ணிக்கப் பட்ட என் முதல் பதிவு, ஸ்ரீகாந்த போன்றவர்களுக்கு கூட ( அதாவது சில அரசியல் சார்புகளால் இயல்பாக கொதிநிலைக்கு ஆட்படுத்தப் படுபவர்களை தாண்டி) உண்டாக்கிய கோபத்தை சமன் படுத்தி, பிரச்சனை வேறு ஒன்று என்பதாக முன்வைப்பதில் அவர் கணிசமான வெற்றியையும் பெற்றிருக்கிறார். எழுத்து நேர்த்தி மட்டுமில்லாது, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் மீன் பிடிப்பதால் தமிழக/ஈழத்து மீனவர்களிடையேயான பிரச்சனை குறித்த புரிதல் மற்றும் அதை தகவல் ஆதாரங்களோடு முன்வைத்து பேசியது அதற்கான காரணம். எனக்கும் அதில் வாசிக்கவும், அறிந்த கொள்ளவும் புதிய விஷயங்கள் இருந்தன என்று சொல்வதில் எந்த தயக்கமும் இல்லை. விவாத களத்தில் வெற்றி தோல்வி, எதிராளியின் கருத்து வாசக கூட்டத்தை கவர்ந்திழுப்பது, நமது தரப்பு மீதான கவனம் கைவிட்டுப் போவது இவற்றை பற்றிய கவலைகளுக்கு அப்பாற்பட்ட திறந்த மனதை வைத்திருந்தாலொழிய, பிரச்சனை பற்றிய அறிதலை நோக்கி பயணிக்க இயலாது. அந்த வகையில் வாந்தியதேவனின் இடைபட்ட மூன்று பதிவுகளை முக்கியமானதாகவும், இந்த பிரச்சனை குறித்த எல்லா விவாதத்திலும் கணக்கில் கொள்ள வேண்டிய தாகவுமாகவே நான் பார்கிறேன்.

நான் துவங்கிய, மையப்படுத்திய பிரச்சனையுடன் இது எவ்வளவு தூரம் உண்மையிலேயே தொடர்பு உள்ளது, அது எந்த வகையில் அலசப்பட்டுள்ளது என்று பார்க்க வேண்டியது ஒரு இயல்பான சுய பிரஞ்ஞை மட்டுமின்றி, எனக்கு அது கடமையும், கட்டாயமும் ஆகும். எனது பதிவு, சென்ற வியாழன் நடந்த, மீனவர்கள் மீதான தாக்குதலை, டெகான் க்ரோனிகிளில் வந்த செய்தியை முன்வைத்து எழுதப்பட்டது என்பது வாசித்த அனைவருக்கும் தெரியும். வந்தியத்தேவன் (நான் இரண்டு முறை விளக்கம் அளித்த பின்பும்) திரிப்பது போல், இந்து பத்திரிகையில் செய்தி வந்திருக்கிறதா என்று நான் தேடியதற்கான காரணம், இந்து ராம் பற்றி எதையும் வெளிச்சம் போட்டு காட்ட அல்ல. அப்படி எதையும் நான் எழுதவும் இல்லை, நான் முன்வைத்த பிரச்சனையும் அதுவல்ல. டெகான் க்ரோனிகிள் இணையதளத்திற்கு ஒருமுறை கூட போயிராத நான், செய்திக்கான ஒரு சுட்டியை அளிக்கவே இந்து இணையதளத்தில் தேடினேன். அது கிடைக்காததால் செய்தி வராததை குறிப்பிட்டு, டெகான் க்ரோனிகிளில்(செய்திதாளில்) வந்த செய்தியிலிருந்து பெரும்பாலானதை அப்படியே எடுத்து என் பதிவில் இட்டேன். இதை இவ்வளவு தூரம் நீட்டி முழக்கி சொல்ல காரணம் ஒன்றே ஒன்றுதான். அது என்னை, இதை படித்தாயா, மனதிற்குள் கேள்வி கேட்டாயா, கூகிளிலாவது தேடினாயா, என்று கேட்கும் வந்தியத்தேவன் அந்த செய்தியை ஒழுங்காய் படித்தாரா என்பதுதான் நான் கேட்கும் முதல் கேள்வி. அவர் என்னை அறிவுறுத்துவது போல், டெகான் க்ரோனிகிளை தேடி எடுத்து படித்தாரா என்று நான் கேட்கவில்லை. எனக்கு எதிர்வினை வைப்பதற்கு அடிப்படை தேவையான, என் பதிவில் எழுதியிருந்ததை ஒழுங்காய் படித்தாரா என்பது மட்டுமே என் கேள்வி.

இன்னமும் கூட என்னால் டெகான் க்ரோனிகிள் இணையதளத்தில் செய்தியின் சுட்டியை தரமுடியாததால், நேரடியாய் ஆங்கிலத்தில் கீழே தட்டுகிறேன். Chennai, Friday 31 March 2006 Deccan Chronicleஇல் முதல் பக்கத்தில் உள்ள செய்தியிலிருந்து,

Two Boats with eight fishermen have gone missing after the Sri Lanka Navy opened fire on a flotilla of Tamilnadu fisherman near Danushkodi in Rameswaram in the early hours of thursday.

The Lankan navy also sank one boat and towed away another. Eight fishermen in the two boats jumped into the sea and were rescued by friends.

According to the sources in the fishries department it all started when Sri Lankan Navy men started chasing nearly 300 boats carrying fishermen from Rameswaram who are trying to cast their nets in Lankan waters near Katchadeevu. The fishermen were chased Sri Lankan Navy men through Indian waters up to the Danushkodi coast. (தேவையானது மட்டும் இங்கே, முழு செய்தியை வேண்டுமானால் பிறகு தட்டுகிறேன்.)

என் பதிவில் செய்தியாக நான் எழுதியது: கச்சத்தீவு அருகில், இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்ததாக சொல்லப்படும், ராமேஸ்வரத்திலிருந்து வந்த மீனவர்கள் நிறைந்த 300 படகுகளை 'விரட்டுவதில்' தொடங்கி, அவர்களை இந்திய கடற்பரபிற்குள் தனுஷ்கோடி கடற்கரை வரை துரத்தியிருக்கிறது. (இதில் 'சொல்லப்படும்' என்பது எனது சேர்க்கை.)

கச்சத்தீவு அருகில் (இலங்கை கடற்பரப்பில்) மீன் பிடிக்கவும், வலைகளை கச்சத்தீவில் காயப்போடவும் அதே 1974 ஒப்பந்தப் படி தமிழகத்து மீனவர்களுக்கு முழு உரிமை இருப்பதை வந்தியத்தேவனும் அறிந்து வைத்திருக்கிறார். தனது 5 பதிவுகளில் இரண்டு இடங்களில் இதை குறிப்பிடுகிறார். ஆக இந்த செய்தியை எடுத்துகொண்டோமெனில், தமிழகத்து மீனவர்கள் தங்களுக்கு முழு உரிமையுள்ள கச்சத்தீவிற்கருகில் மீன் பிடித்து கொண்டிருக்கும் போது, இலங்கை படையால் தாக்கப்பட்டு, (இந்தியாவில் இருக்கும்) தனுஷ்கோடி கடற்கரை வரை இந்திய கடற்பரப்பினூடாக துரத்தப் பட்டுள்ளனர். இதை முன்வைத்தே எனது பதிவு.
வந்தியத்தேவன் 'நீளமாய் ஆழமாய்' அலசியுள்ள பிரச்சனைக்கும், என் பதிவில் நான் எடுத்து கொண்ட செய்திக்கும் பிரச்சனைக்கும் எந்த அளவிற்கு தொடர்பு என்பதை கவனிக்க வேண்டும். அவர் எந்த அளவிற்கு தொடர்பு என்று விளக்கும் அளவிற்கு இறங்கி வரமாட்டார். ஒரு அனானியுடன், 'ரோஸா சலம்புவது போல' என்று சாக்கு சொல்லிவிட்டு, சலம்பும் நேரத்தில் கூட அதை செய்யமாட்டார். என் சலம்பல் பாஷையில் சொல்வதானால், அவர் தனது அலசலுடன் இந்த நிகழ்வை தொடர்பு படுத்த வேண்டுமெனில், குறைந்த பட்சமாய் இந்த செய்தி பொய் என்று சாதித்து, மீனவர்கள் தங்களுக்கு உரிமையில்லாத இலங்கை கடற்கரையருகில் இருந்ததாக அனுமானிக்கவாவது வேண்டும். அவர் அது குறித்து சிறிய அக்கறைகூட எடுக்காததை பார்த்தால் அவர் கவனமாய் என் பதிவை கூட படிக்கவில்லை என்றுதான் தெரிகிறது. ஒருவேளை படித்து விட்டு கண்டுகொள்ளாமல் இருந்தாலும் அதில் எனக்கு பெரிய ஆச்சரியம் இல்லை. ஏற்கனவே மூன்று 'ஆழமான' பதிவுகளும் போட்டு, பலரது பாராட்டையும் பெற்று தன் பரந்த அறிவை நிலைநாட்டிவிட்ட அவருக்கு, இது குறித்து விளக்கமளிக்கும் அளவிற்கு இறங்கி வரவேண்டிய கட்டாயம் நேரிடும் என்று தோன்றவில்லை.

பிரச்சனை குறித்து எந்த வித ஞானமும் இல்லாதவருக்கும், மிக நேரடியான பார்வையில் புரியக்கூடிய விஷயம். இலங்கை கடற்படை செய்தது மிக அக்கிரமமான, இந்திய குடிமகன்கள் மீது நிகழ்த்திய சட்டவிரோத தாக்குதல், மற்றும் இந்தியா எல்லை மீதான அத்து மீறல். இந்தியா இதற்கு ஏதாவது எதிர்வினை ஆற்றியிருக்க வேண்டும், மாறாக எந்த அலட்டலும் இல்லாமல் மௌனமாக இருக்கிறது. இந்த விஷயத்தை மட்டும் முன்வைத்து என் பதிவின் சாராம்சமாக நான் கேட்கும் கேள்வியாக, மீண்டும் மீண்டும் கேட்டது (வந்தியதேவன் அப்பட்டமாக திரிப்பது போல் இந்து பத்திரிகை பற்றி பேசாமல்) எனது இரண்டாவது பதிவிலிருந்து கீழே.

இலங்கை கடற்படை இந்திய கடற்பரப்பில் நுழைவதற்கும், இந்திய கடற்பரப்பில்-சில நேரங்களில் கடற்கரை வரை கூட வந்து- இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை, அங்கே தயாராக இருக்கும் இந்திய கடற்படை எப்படி அனுமதிக்கிறது? இந்த விஷயத்தில் இவ்வளவு சோப்ளாங்கியாய் இருக்கும் இந்திய கடற்படை, மற்ற விஷயங்களில் -புலிகள் கப்பல், ஈழதமிழ் அகதிகள் விஷயங்களில்- அத்தனை திறமையுடையதாகவும் கடுமையானதாகவும் இருக்கிறது? தான் என்ன ஆட்டம் ஆடினாலும் இந்தியா தன்னை எதுவும் செய்யாது என்று இலங்கைக்கு எப்படி இவ்வளவு தைரியம் வருகிறது? இந்த அட்டூழியம் குறித்து, எது எதற்கோ கூக்குரல் இடுபவர்கள் - பத்திரிகை டீவி, அரசியல் கட்சிகள், தொடங்கி வலைப்பதிவுகள் வரை -யாரும் முனகுவது கூட இல்லையே, ஏன்?

எல்லாவற்றிற்கும் எதையாவது பதிலாக தர இவர்கள் தயாராக இருப்பார்கள் என்று அறிந்தே இருந்ததால் 'இந்திய இறையாண்மைக்கு சவால் விடும் வகையில், இந்தியாவுடன் எந்தவிதத்திலும் வலிமையில் ஒப்பிடமுடியாத ஒரு அந்நிய நாட்டுபடை, உறுப்பை நுழைப்பதை பற்றி இந்தியா ஏன் மௌனமாய் இருக்கிறது?' என்ற கேள்வியை மட்டும் கேட்டிருந்தேன். சம்பவம் நடந்து இந்த ஒரு வாரத்தில் என்ன கண்டனம், நடவடிக்கை நடந்திருக்கிறது? அது குறித்து ,மேற்படி செய்திகளே இல்லை. காணாமல் போன மீனவர்கள் பற்றிய செய்தி கிடக்கட்டும்.தன் எல்லைக்குள் நடந்த அத்துமீறல் பற்றி இந்தியா எதுவுமே வாய் திறக்கவில்லையே என்பது கேள்வி. அதற்கு ஏதோ கேனத்தனமான (ஸாரி, அதை வேறு எப்படியும் எவ்வளவு யோசித்தும் சொல்ல முடியவில்லை) பதில் வந்தியத்தேவனிடம் இருந்து வந்ததே தவிர வேறு என்ன விளக்கம் இருக்கிறது!

அவர் பதிவை மீள் வாசிப்பு செய்து என் கேள்விகளுக்கு இன்னமும் பதில் தெரியாவிட்டால் மீண்டும் கேட்டால் தருவதாக சொல்கிறார். ஏகப்பட்ட நண்பர்கள் அவர் பதிவை படித்து தெளிவாகி எல்லா கேள்விகளுக்கும் விடை கண்டுகொண்டிவிட்ட பின்னர், அவர் என் கேள்வி எதையும் நேரடியாக அணுகி, அது குறித்து பேசுவார் என்று எனக்கு தோன்றவில்லை. திறந்த மனதுடன் வாசிக்கும் வாசகர், அவர் பதிவில் தேடி, நான் சொல்வது போல பிரச்சனை திசை திருப்பப் பட்டுள்ளதா இல்லையா என்று பரிசீலித்து கொள்ளாலாம்.

தமிழகத்து மீனவர்கள் ட்ராலர் படகுகளில் வந்து, ஈழத்து மீனவர்களின் அடிமடியில் கைவைக்கும் பிரச்சனை வேறு. கடந்த சில ஆண்டுகளாக இருக்கும் இந்த பிரச்சனையின் காரணமாகத்தான் இலங்கை கடற்படை இந்திய மீனவர்களை தாக்குகிறது என்று சொல்வதை போல ஒரு அபத்தம் ஒன்று உண்டா? ஈழத்தில் இருக்கும் ஒரு தமிழனாவது, தங்கள் ,மீது இலங்கை கடற்படைக்கு அப்படி ஒரு அக்கறை இருக்கும் என்று நம்பமுடியுமா? அவர் நீட்டி முழக்கி ஈழத்து மீனவர்கள் ட்ராலரால் பாதிக்கப் படுவது பற்றி மூன்று பதிவுகள் போட்டதற்கும், இந்த பிரச்சனைக்கும் என்ன தொடர்பு? மிஞ்சி போனால் இந்திய மீனவ்ர்களில் சிலர்(அல்லது பலர்) எல்லை தாண்டி அத்து மீறுகிறார்கள் என்பதை தவிர வேறு எந்த ஆதாரத்திற்கும் அது உதவாது.

அவர் சொல்வது போல் எல்லா மீனவர்களும், trawlersஇல் மீன் பிடிப்பதாகவும் அல்லது அப்படி ட்ராலரில் எல்லை கடந்து போனவர்கள் மட்டுமே இலங்கை படையால் தாக்கப் பட்டதாகவும் சித்தரிப்பதை எந்த விதத்திலும் ஏற்றுகொள்ள முடியாது. சென்ற வாரம் தாக்கப் பட்ட 300 படகுகள் ட்ராலர்கள் என்று செய்தியில் ஒரு இடத்திலும் இல்லை, வெறும் boats என்பதாகத்தான் குறிப்பிடப்படுகிறது. இதற்கு முன்பு சாதாரண படகுகளில் சென்ற பலர் தாக்கப்பட்டுள்ளதற்கு, கடந்த 20 ஆண்டு வறலாற்றில் ஏராளமாக ஆதாரங்கள் உண்டு. விரிவாக சில நாட்களில் முன்வைக்க முடியும், வைக்கிறேன்.

எல்லா மீனவர்களுக்கும் கடலில் உள்ள எத்தனையோ ஆபத்துக்களை போல ஒன்றுதான் இலங்கை கடற்படை. கடந்த வாரம் ஆனந்த விகடனில் ( 2.04.06- சுட்டி கொடுக்க முடியாததால், சந்தாதாரராயிருந்தால் நீங்களே இணையத்தில் தேடி படிக்கவும்) , ராமேஸ்வரம் ஓலைக்குடா கடற்கரையில் வசிக்கும், கண்தெரியாத மீனவர் அருள் சேசுராஜ் பல இடங்களில் 'சிங்கள கடற்படையின் எந்த நேரத்திலும் தாக்கலாம்' என்ற ஆபத்தை பற்றியே பிரதானமாய் பேசுகிறார். அவர் சொல்வதிலிருந்து,

".... கொஞ்ச நேரத்திலே 'பாங்னு' காதை கிழிக்கிற சத்தம். என்னன்னு புரிபடறதுகுள்ளே 'விஷும், விஷும்'னு என் ரெண்டு பக்கமும் காத்தை கிழிக்கிற சத்தம். 'ஆத்தீ! இது சிலோன் நேவிக்காரன் தோட்டா சத்தமாச்சே'ன்னு முக்குளிப்பான் நீச்சல்ல தண்ணிகுள்ளே போயிட்டேன். மயக்கம் தெளிஞ்சு எந்திரிச்சா தனுஷ்கோடி பக்கத்துல ஒரு தீடைலே கிடக்கேன். மக்கா நாள் ஊர்காரங்க வந்து காப்பாத்திட்டாங்க அப்புறமாத்தான் தெரியுது.. என் கூட கடலுக்கு வந்த ஃபெர்ணாண்டை சிலோன் நேவிக்காரன் சுட்டுக் கொன்னுட்டாங்கன்னு!"

ராமேஸ்வரம் வட்டாரத்துல அருள்சேசுராஜை பற்றி அத்தனை பேருக்கும் தெரிந்திருக்கிறது. "ஓ..அவரா! வைராக்கியக்கார ,மனுஷன். நாங்க ரெண்டு கண்ணை வெச்சுகிட்டே சிலோன் காரனுக்கு பயந்து உசிரை கையில பிடிச்சுகிட்டு பாடு பாக்குறோம். ஆனா மனுஷன்...."

"சிலோன் நேவிக்காரன் எந்த நேரத்திலேயும் சுட்டுருவான்னு உசிரை கையில புடிச்சுகிட்டுதான் கடலுக்கு போகவேண்டியிருக்கு. வலைய அத்துபோடறது, கூட்டிட்டு போய் சித்ரவதை பண்றதுன்னு அவிங்களோட அட்டூழியம் நிறய. என் சொந்தத்துலயே சிலோன் நேவிக்காரன் சுட்டு எட்டு பேரு செத்து போயிருக்காங்க. போன வாரம் கூட ஒருத்தர் தப்பிச்சு அரைகுரை உசிரோட நீந்தி வந்திருக்காரு. நானெல்லாம் இன்னிக்கு உசிரு பொழச்சு நிக்கிறேன்னா என் பொம்பளையாளு செஞ்ச புண்ணீயந்தான் சாமி!......."

கண்தெரியாத அவரது மீனவ வாழ்க்கை பற்றி பேசும் ஒரு கட்டுரையில், இயற்கை சார்ந்த மற்ற ஆபத்துக்களை விட, நேவிக்காரன் அட்டூழியம் பற்றியே அதிகம் பேசுகிறார். (வந்தியதேவனின் தகவலுக்கு, தனி ஆளான அவரிடம் இருப்பது ட்ராலர் படகு இல்லை என்பது மட்டுமில்லை, மோட்டார் பொருத்திய படகு கூட இல்லை. துடுப்புடன் அவர் வள்ளத்தில் நிற்கும் படமும் உள்ளது.) கையில் விகடன் இருந்ததால் இதை தட்டியிருக்கிறேன். இது வரை நாம் கேள்விபட நேர்ந்த மீனவர்கள் ஒலிக்கும் எல்லா குரல்களிலும் சிங்களக் கடற்படை பற்றி சொல்லாமல் விட்டது கிடையாது.

அநியாயமானதாக இருந்தாலும், நிருபமா ராவ் சொன்னதாக பத்ரி எழுதிய பதில் கொஞ்சமாவது நான் பேசிய பிரச்சனையுடன் தொடர்புள்ளது. பத்ரி தான் ஒரு மெஸெஞ்சர் மட்டும்தான் என்று சொல்லி அந்த கருத்துடன் தனக்கு சம்பந்தமில்லை என்கிறார். ஆனால் வந்தியதேவன் அதை வசமாக பற்றிக்கொண்டார்.

//ஏதேனும் கைது நடந்தால் இலங்கைக் கடற்படை உடனடியாக இந்தியத் தூதரகத்துக்குத் தகவல் அளித்துவிடுவதாகவும், உடனேயே இந்தியத் தூதரகமும் அவர்களை விடுவிக்கும் முயற்சிகளை எடுப்பதாகவும் சொன்னார். அதே சமயம் இலங்கைக் கடற்படை நிறுத்தச் சொல்லி நிறுத்தாமல் போன படகுகள்மீதுதாம் துப்பாக்கித் தாக்குதல் நடக்கிறது என்றும் அதற்கான காரணம் இலங்கைப் படைகளுக்கு இந்தப் படகுகள் தமிழக மீனவர்களுடையதா அல்லது விடுதலைப் புலிகளின் கடத்தல் படகுகளா/ஆயுதப் படகுகளா என்பது தெரியவில்லை என்பதும்தான் என்றும் சொன்னார்.//

பழக்கத்திற்கு மாறாக, ஆத்திரத்தை ரொம்பவே அடக்கிகொண்டு கேட்கிறேன். இப்படி ஒரு பதிலை சிறிய அளவில் கூட பரிசீலனைக்கு இல்லாமல் எடுத்து கொண்டு பேச உங்களுக்கு எல்லாம் கொஞ்சம் கூட கூச்சமாக இல்லையா? இலங்கை கடற்படை எங்காவது தான் வலியப் போய் சுட்டதாக சொல்லுமா? இலங்கை சொல்வது இருக்கட்டும். அதை அப்படியே ஏற்றுகொண்டு, அதை ஒரு காரணமாய் பத்ரியிடன் சொல்லும் ஒரு நாட்டின தூதுவரின் சார்புகளை பார்க்க வேண்டாமா? போரடிக்கிறது, ஆனாலும் வேறு ஏதாவது சரியான உதாரணம் உண்டா? இந்தியாவில் ஐஐஎஸ்சியிலும் வாரணாசியிலும் பயங்கரவாத தாக்குதல் நடக்கிறது. பாகிஸ்தான் தனக்கு அதற்கும் தொடர்பில்லை என்று பாகிஸ்தானுக்கான தூதரிடம் சொன்னால், இப்படி கேள்வி கேட்காமல் அவரும் எல்லோரும் அதை ஏற்றுகொண்டு, அதை ஒரு பாயிண்டாக தன் கட்டுரையில் சொல்வார்களா? என்ன கொடுமை! சென்ற வாரம் நடந்த தாக்குதலில் புலிகளாக இருக்குமோ என்று தெரியாமல், கச்சத்தீவு அருகில் வலை பரப்பிக் கொண்டிருந்தவர்களை, தாக்கி, தனுஷ்கோடு வரை புலிகள் என்று நினைத்து துரத்தி வந்தார்களா? கேட்பவனை கேனயனாக நினைப்பது மட்டுமில்லாமல், தனக்கு தேவை என்றால் எவ்வளவு கேனத்தனமான வாதத்தை முன்வைக்கிறார்கள். எதோ தப்பா சொல்லியிருந்தா மன்னிச்சு, பெரிய மனசு பண்ணி, இது கேனத்தனமா இல்லையான்னு நீங்களே யோசியுங்கள்.

வந்தியதேவன் எழுதியதில் நானே ஏற்றுகொள்ளும் (ஈழத்து தமிழக மீனவர்களிடையேயான பிரச்சனை குறித்த) கருத்துக்கள் தவிர மற்றவற்றை அக்கு அக்காக கழற்றி பேச மீண்டும் ஆசைதான். யாரும் கண்டுகொள்வார்களா என்பது அல்ல என் பிரச்சனை. அது குறித்து ஒரு போதும் கவலைப்பட்டது கிடையாது. இதை எழுதுவதில் உள்ள அலுப்பும் கழிவிரக்கமும் தான் தாங்கமுடியவில்லை. நான் சட்டசபை தேர்தலை பற்றி எழுதக்கேட்டால், பாராளுமன்ற தேர்தலை பற்றி எழுதிவிடபோகிறேன் என்று வந்தியத்தேவன் கிண்டலடிக்கிறார். ஆனால் பாராளுமன்ற தேர்தலை பற்றி பேசி, சட்டசபை தேர்தலை பற்றித்தான் பேசுவதாக இத்தனை பேர்களையும் நம்பவும் வைத்து பலத்த பாராட்டையும் அவர் பெற்றிருக்கிறார். இங்கே இப்போதைக்கு நிறுத்திகொள்ள விழைகிறேன்.

Post a Comment

6 Comments:

Blogger Srikanth Meenakshi said...

ரோசா,

வந்தியத்தேவன் பதிவின் பின்னூட்டத்தில் நான் சொன்னது போல் நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் கொடுத்துக் கொள்ளும் தனிப்பட்ட பதிலடிகளில் எனக்கு ஆர்வமில்லை (இருப்பினும், இந்த personal angle இல்லாவிட்டால் நீங்கள் இருவருமே இத்தகைய விஷயமுள்ள விவாதத்தில் ஈடுபட்டிருப்பீர்களா என்ற சந்தேகம் உண்டு :-)).

விஷயத்தைப் பொறுத்த வரையில், என் பார்வையில்,

1. பொதுவாக வந்தியத்தேவனின் பதிவுகள் (2,3,4) நீங்கள் குறிப்பிட்ட நிகழ்ச்சிக்குப் பின்புலனையும் வரலாற்றையும் வழங்குகிறது என்றுதான் நான் இன்னமும் நினைக்கிறேன். குறைந்தபட்சம் பிரச்னையின் இன்னொரு பரிமாணத்தை முன்வைக்கவாவது செய்கிறது என்று நினைக்கிறேன். நீங்கள் கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் விடையளிக்காவிட்டாலும், உங்கள் கேள்விகளுக்கு சம்பந்தமேயில்லாத விஷயங்களைப் பற்றிப் பேசியதாக (சட்டமன்ற/பாராளுமன்ற தேர்தல்) நினைக்கவில்லை.

2. வந்தியத்தேவன் பார்வையில் இவை பெரிய மீனவர்கள், பெரிய படகுகள் சார்ந்த பிரச்னை. உங்கள் பார்வையில் ஏழை மீனவர்கள், சிறிய படகுகள். இரண்டிலும் உண்மை இருக்கலாம் என்று மையமாக வைத்துக் கொள்வது வசதி என்றாலும், எந்த அளவு எது உண்மை என்று எனக்கு விளங்கவில்லை என்பதுதான் உண்மை.

3. இந்திய எல்லைக்குள் அத்துமீறல், துப்பாக்கிச் சூடு இரண்டுமே (பின்னது கடுமை கூடியதாக) ஏற்றுக்கொள்ள இயலாதவை (துப்பாக்கிச்சூடு பற்றி வந்தியத்தேவனும் குறிப்பிட்டிருந்தார்).

4. புலிகள் கப்பல்களைத் துரத்துகிறார்கள், இலங்கை ராணுவத்தைக் கண்டுகொள்வதில்லை என்ற முரண்பாட்டில் எனக்கு சுவாரசியமில்லை. இரண்டையும் செய்ய வேண்டும் என்ற நிலைப்பாடுடைய எனக்கு பிந்தையதை ஏன் செய்யவில்லை என்ற கேள்வி மட்டும்தான் மிஞ்சி இருக்கிறது.

5. நிருபமா ராவின் பதில் குறித்த உடன்பாடின்மையோடு உடன்படுகிறேன். எந்த நாட்டிற்காக எந்த நாட்டில் தூதுவராக இருக்கிறார் என்பதில் அவருக்குக் குழப்பமிருக்கலாம்.

உங்களது முதல் பதிவைப் படித்த பின்னர், ஒரு ஆத்மதிருப்திக்காக இந்தியக் கடற்படைக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன் - பதில் வரவில்லை, பதில் வரும் என்று நான் நினைக்கவுமில்லை. அந்த மடல்:

My name is Srikanth Meenakshi, I am an Indian citizen living in USA. I request you to please not let my non-residency deter you from reading the rest of the mail.

There was a news report recently about Sri Lankan Navy firing upon fishermen who ventured out to sea near the Sri Lankan waters along the Indian coast line in Tamil Nadu. These men were fired upon and chased right up to Dhanushkodi inside the Indian territorial waters.

If this were a freak occurence or a one time aberration, it would probably not merit much concern. However, it is not. In fact, it is a frequent occurence and is a regular night mare in the lives of these fishermen.

These fishermen are Indian citizens who deserve the protection of one of the world's best naval infrastructure.

I am at a loss to understand why these incidents are allowed to occur and why our coast guard are not rising to the occasion to provide the much needed protection.

I believe, trust and take pride in the Indian defence establishments, and I would really like to know if there is something wrong with my perception that the Indian Navy is not providing adequate protection in this situation.

In the interest of brevity, let me end with that question. I am sure you understand my line of thought and I would much appreciate a response.

Thank you very much,

In solidarity,

Srikanth Meenakshi.

இந்த மடல் மற்றும் உங்கள் பதிவில் இருக்கும் எல்லாக் கேள்விகளுக்கும் வந்தியத்தேவன் பதிவுகளில் விடைகள் இல்லாவிடிலும், சூழ்நிலையின் பரப்பை அறிந்து கொள்ள அவை உதவின. உங்களது இந்த பதிலும் அவ்வாறே.

உங்கள் இருவருக்கும் எனது நன்றிகள்.

4/07/2006 9:45 PM  
Blogger SnackDragon said...

ரோசா,
வந்தியத்தேவனின் பதிவுகளை வாசித்தவரையில் எனக்கு சொல்லவேண்டும் என்பதை இங்கு சொல்கிறேன்.

கேள்வி மிகவும் எளிமையாக இருந்தாலும் கூட அதையும் இந்த அளவுக்கு திசைதிருப்பவேண்டும் எனில் அதன் தேவை வந்தியத்தேவனுக்கு இருக்கலாம். எல்லா வாசகர்களுக்கு இருக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்க்க முடியாது.

இந்திய_தமிழக_மீனவர்களை காக்கும் பொறுப்பு யாருடையது? [இனி உங்களையும் "இந்தியத்_திமிழக_மீனவ்ர்கள்" என்றே குறிப்பிட வேண்டுகிறேன்]கேள்வி இவ்வளவுதான்.
சிறந்த விடையை கீழே வந்தியத்தேவன் தனக்கு தேவையானதை தேர்ந்தெடுக்கலாம். நியாயமாக , யதார்த்தமாக சிந்திப்பவர்கள் மற்றதை தெரிந்தெடுக்கலாம்.

1) இந்திய அரசினுடையது
2) இலங்கை அரசினுடையது
3) இலங்கை மீனவர்களுடையது
4) புலிகளுடையது :-)
5) யாருடையதுமில்லை

வந்தியத்தேவன் நீட்டிமுழக்கி எழுதிய இரண்டு தாக்கல் பதிவுகளிலுமாகட்டும், மூன்று தகவல் பதிவுகளிலும் ஆகட்டும். மேலே கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் எங்காவது உள்ளதா? தெரிந்தவர்கள் சொல்லவும்.

வந்தியத்தேவனின் வாதங்கள்

1) கடற்படையும்,கோஸ்ட் கார்டும் சேர்ந்துபணியாற்றவேண்டும் அப்படியே பணீயாற்றினாலும், மத்திய அரசின் உத்தரவு இல்லாமல் எதும் செய்யமுடியாது.

என்ன பித்த்லாட்டமான வாதம்? இது எப்படி இருக்கிறது என்றால், நடந்த 300 படகுஇகளின் விரட்ட்லையும் , பல சந்தர்பங்களில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடுகளியும் கணக்கில் கொண்டு பார்த்தால், போலீஸ் குடியிருபில் புகுந்து ஒரு பெண்ணை வன்புணர்வு செய்யும்ப்போதோ அல்லது ஒரு நபரை கொலை செய்யும்போதோ , தமிழக அரசின் உத்தரவு அல்லது ஐ.கின் உத்தரவு இல்லாமல் "எதுவம் செய்ய முடியாது" என்று சொல்வது போல் உள்ளது.

ஐந்து பதிவுகளில் எங்காவது சுடுவதை கண்டித்திருக்கிறாரா வந்தியத்தேவன்? ஒரு இடத்தில் ஐநாவுக்குப் போகலாம் என்று , செய்யக்குடிய வாய்ப்புகளைப்பற்றி பெருந்தன்மை காட்டியுள்ளார். துப்புக்கெட்ட கடற்படையும் கோஸ்ட் கார்டும் மதிய அரசின் உத்தவு இல்லையென்றால் சுட்டால் கூட சும்மா இருப்பார்களாம். நாம் போய் மீனவர்களைக்காக்க ஐநாவில் முறையிடவேண்டுமாம்.வந்தியத்தேவனின் நியாயாம் எப்படி? புல்லரிக்கவில்லை?

[நேர அவகாசத்தின் பேரில் ஏதாவது எழுத இருந்தால் எழுதுவேன்]

4/07/2006 11:12 PM  
Blogger SnackDragon said...

//விடுதலைப் புலிகளின் கடத்தல் படகுகளா/ஆயுதப் படகுகளா என்பது தெரியவில்லை என்பதும்தான் என்றும் சொன்னார்//

நிரூபமா சொன்னதில், இதுதான் பிரச்சினை என்று அவர்கள் சொல்வதி ஒரு வாதத்துக்கு ஏற்றுக்கொண்டால் கூட, கண்ட இடத்தில் சுட முடியுமா? இருபது வருட வரலாற்றில், பதிரிக்கும், ரோசா வசந்துக்கும், கார்த்திக்கும் ஏன் நிருபமாவுக்கு கூட வித்தியாசம் தெரியாது என்றால் ஒத்துக்கொள்ளலாம். இலங்கை கடற்படைக்கு கூடா வித்தியாசம் தெரியாது ?சந்தேகம் இருக்கும் பட்சத்தில் கைது செய்யலாம், விசாரிக்கலாம் ஆனால் துப்பாக்கி எடுத்து சுட முடியுமா? இதையே இன்னும் இருபது வருடங்கள் சொல்லி இன்னும் ஆயிரம் பேரை கொல்லலாமா?

அட அது கிடக்கட்டும், எது இந்திய எல்லைக்குள் இலங்கை கடற்படையை நுழைய அனுமதிக்கிறது? அதைப்பேசுங்கள் புத்திசாலிகளே. அப்புறம் என்ன ..ரை கோஸ்ட் கார்டு கார்டு பண்ணுகிறார்கள்?

4/07/2006 11:35 PM  
Blogger SnackDragon said...

//விடுதலைப் புலிகளின் கடத்தல் படகுகளா/ஆயுதப் படகுகளா என்பது தெரியவில்லை என்பதும்தான் என்றும் சொன்னார்//

நிரூபமா சொன்னதில், இதுதான் பிரச்சினை என்று அவர்கள் சொல்வதி ஒரு வாதத்துக்கு ஏற்றுக்கொண்டால் கூட, கண்ட இடத்தில் சுட முடியுமா? இருபது வருட வரலாற்றில், பதிரிக்கும், ரோசா வசந்துக்கும், கார்த்திக்கும் ஏன் நிருபமாவுக்கு கூட வித்தியாசம் தெரியாது என்றால் ஒத்துக்கொள்ளலாம். இலங்கை கடற்படைக்கு கூடா வித்தியாசம் தெரியாது ?சந்தேகம் இருக்கும் பட்சத்தில் கைது செய்யலாம், விசாரிக்கலாம் ஆனால் துப்பாக்கி எடுத்து சுட முடியுமா? இதையே இன்னும் இருபது வருடங்கள் சொல்லி இன்னும் ஆயிரம் பேரை கொல்லலாமா?

அட அது கிடக்கட்டும், எது இந்திய எல்லைக்குள் இலங்கை கடற்படையை நுழைய அனுமதிக்கிறது? அதைப்பேசுங்கள் புத்திசாலிகளே. அப்புறம் என்ன ..ரை கோஸ்ட் கார்டு கார்டு பண்ணுகிறார்கள்?

4/07/2006 11:35 PM  
Blogger SnackDragon said...

//வந்தியத்தேவன் பார்வையில் இவை பெரிய மீனவர்கள், பெரிய படகுகள் சார்ந்த பிரச்னை. உங்கள் பார்வையில் ஏழை மீனவர்கள், சிறிய படகுகள். இரண்டிலும் உண்மை இருக்கலாம் என்று மையமாக வைத்துக் கொள்வது வசதி என்றாலும், எந்த அளவு எது உண்மை என்று எனக்கு விளங்கவில்லை என்பதுதான் உண்மை. //
மீனாட்சி வந்தியத்தேவனின் வலையில் சிக்கிய மீனாகியுள்ளார். நல்லது, வந்தியாவுக்கு வாழ்த்து ;-)

4/08/2006 1:21 AM  
Blogger Thangamani said...

வேலையின் காரணமாக பல நாட்களாக இணையத்தின் பக்கம் வரவில்லையாதலால் உங்களின் இந்தப் பதிவை நான் இப்போதுதான் வாசித்தேன். இது போன்ற ஆதங்கத்தை, கேள்வியை, வருத்தத்தை நானும் பலமுறை எழுப்பியே வந்துள்ளேன்.

இந்திய அரசு இந்தப்பிரச்சனையை கையாளும் முறை குறித்து பல கேள்விகள் இருக்கின்றன. உங்களது இந்தப்பதிவு அப்படியான கேள்விகளை உரக்க எழுப்பியது குறித்து என் நன்றி.

(இந்தப்பின்னூட்டத்தை இங்கு இடுவதற்கு பதிலாக அந்தப்பதிவில் எழுதிவிட்டேன். அதனால் இங்கு மறுபடியும்..)

4/09/2006 6:11 AM  

Post a Comment

<< Home

---------------------------------------
Site Meter