ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Tuesday, December 06, 2005

சட்டி சுட்டதடா!

(சென்ற வாரத்திற்கு முந்தய வார வெள்ளி அன்று எழுதத் தொடங்கியது. பாதி எழுதி முழுவதும் முடிக்க இயலாததால், ஊறவைத்து இன்று முடித்து உள்ளிடுகிறேன். அதற்குள் பிரச்சனைகள் பழசாய் போயிருக்கலாம். பழசை மறக்காதவர்களை மனதில் கொண்டு...)


1. இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் மழையில் பல கிராமங்கள் முற்றிலுமாக மூழ்கியிருக்கும் காட்சிகளை தொலைகாட்சியில் மட்டும் பார்த்துகொண்டிருக்கிறேன். அது குறித்து பதற்றம் கொள்வதாக நினைத்துகொண்டிருக்கும் போது, வேறு ஒரு ஊரில் இருக்கும் பெற்றோரின் வீட்டு வாசலில் உள்ள தண்ணீர் எந்நேரமும் உள்ளே வரகூடிய செய்தி மட்டுமே, நிலைமையின் உக்கிரத்தை கொஞ்சமாவது உணர்த்துவதாய் உள்ளது. மனம் என்னவோ திருமாவளவன் மக்களின் துயரத்தை முன்வைத்து கேட்கும் நேர்மையின்மை நிறைந்த கேள்வியால்தான் அதிகம் பாதிப்படைகிறது. நான் அறிந்து இதுவரை ஒரு ஐந்து இடங்களிலாவது கேட்டிருக்கிறார். முதலில் சுகாசினியை பார்த்து கேட்டார். இப்போது சற்று தாமதமாகவேனும் இந்த கலாச்சார பாசிசம் பற்றி முணுமுணுக்க துணிந்துள்ள பத்திரிகையாளர்களை பார்த்து கேட்கிறார், " நாட்டில் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டு அவதியுறும்போது, அது பற்றிய கவலை இல்லாமல் நீங்கள் குஷ்பு சுகாசினிக்கு ஆதரவாக கூடியிருக்கிறீர்களே!".

திருமா அண்மையில் உச்சரித்து அறியாத, சில வருடங்கள் முன்பு திருமா உதிர்க்கும் எல்லா வாக்கியத்திலும் ஒரு முறையாவது இடம்பெறும், 'புரட்சியாளர் அம்பேத்கார்' வேறு சந்தர்ப்பத்தில் சொன்னதைத்தான் திருமாவிற்கு சொல்லவேண்டும், "சுயநலமாய் சிந்திக்கும் போது அறிவு வேலை செய்யாது!". புத்திசாலித்தனமாய் பேசிவிட்டது போல் தனக்கு மட்டும் தோற்றமளிக்கும், ஆனால் மற்ற அனைவருக்கும் அதன் முட்டாள்தனம் புரியும். எல்லோரும் திருமாவளவன் ராமதாஸ் கூட்டத்தை பார்த்து கேட்கவேண்டிய ஒரு கேள்வி! மழையில் சென்னை நகரம் தத்தளித்த போது சுகாசினியின் பேச்சை கண்டித்து நாடு முழுக்க துடப்பக்கட்டை, செருப்பு ஆர்ப்பாட்டமும், கொடும்பாவி, கொம்பு படம் போட்டு சுகாசினியின் படத்தை வேலைமெனெக்கிட்டு அச்சடித்து பின் எரித்து மறியல் செய்து, குஷ்பு நீதி மன்றம் செல்லும் போதும் ஆர்பாட்டம் செய்துவிட்டு சுகாசினியை பார்த்து கேட்கிறார். ஏதோ யோசனை இல்லாமல் ஒருமுறை பேசலாம். மீண்டும் சன் டீவியிலும், இரண்டு நாட்கள் கழித்து வெள்ளத்தில் கிராமங்கள் மூழ்கி கொண்டிருக்கும் போது, அது குறித்து ஒரு வார்த்தை பேசாமல் தமிழ் பண்பாட்டை பாதுகாக்க ஒரு பால்தாக்கரே பாணி பண்பாட்டு இயக்கத்தை தொடங்கி வைத்து பேசும் பாசிஸ்டுகள் நடுவேயும், இப்படி ஒரு கேள்வியை கேட்க திருமாவிற்கு எவ்வளவு சுரணையின்மை தேவைப்படும்! (ஆனால் பால்தாக்கரே இப்படி போலியாய் கேட்கவும் மாட்டார். "நானும் பெண்ணியவாதிதான்" என்று திருமா போல பொய் சொல்லவும் மாட்டார்.) திருமா பண்பாட்டு இயக்கத்தை துவக்கி வைத்து உதிர்த்த பல முத்துக்களில் இரண்டு,

" சுகாசினி மட்டுமில்லாமல், அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்போரும் கூட தமிழ்நாட்டில் இருக்க முடியாது"

"தமிழ்நாடாய் இருக்க துடப்பத்தையும், செருப்பையும் காட்டினார்கள், ஈழத்தில் துப்பாக்கியால் பதில் சொல்லியிருப்பார்கள்"

அடுத்து இவர்கள் என்ன செய்ய போகிறார்கள் என்பது பற்றியும், அதிகாரம் உண்மையிலேயே கையில் இருந்தால் என்ன வெல்லாம் செய்யக் கூடும் என்பது பற்றிய பகிரங்கமான ஒப்புதல் இது. இது ஏதோ வாய் தவறி 'ஒரு பேச்சுக்காக' சொன்னதாக எடுக்க முடியாது. தொடர்ந்து திருமா இந்தவகையிலேயேதான் பேசி வருகிறார். ஏற்கனவே 'சுகாசினியை நடமாடவிடக் கூடாது' என்று சொல்லியிருக்கிறார்.




2. எழுதப் புகுந்தாலே விரக்தியும் சோர்வும் வந்து சேர்வதாக கற்பித்து கொண்டிருக்கும் சமயத்தில், சன் டீவி பார்பதை மட்டும் தவிர்க்க இயலாமல் போகும் பழக்க தோஷத்தின் போலித்தனம் எதை தின்றால் தெளியும் என்று தெரியவில்லை. எதையாவது இங்கே தட்டினால் மட்டுமே ஒரு இளைப்பாறுதல் கிடைக்கும் போல் தெரிவதால் இந்த பதிவு. எழுதுவதால் கிடைக்கும் மகிழ்ச்சியை முன்னிட்டு, எனக்கு பிடித்த விஷயமாய், ஜெயஸ்ரீ கேட்டுகொண்டபடி தலைவரின் 'என்றென்றும்' நிகழ்ச்சி பற்றி எழுத முயன்றால், வாக்கியங்கள் எல்லாம் சொத சொதவென ஊறிபோய் பிறக்கிறது. நடந்த மறுநாளே சுட சுட எழுதியிருக்க வேண்டும். இப்போது எனக்கே போரடிக்கிறது. நடந்த/நடக்கும் அசிங்கமான சம்பவங்களை முன்வைத்து எல்லாவற்றையும் சேர்த்து நீளமாய் எழுத நினைப்பதை வழக்கம் போல எழுத முடியாமலே போய்விடுமோ என்று தோன்றுவதால், அரிப்பை சொரிந்து கொள்ளவாவது வேண்டும் என்ற உந்துலில்.

கருத்துரிமையை தமிழ்நாட்டு பாசிஸ்டுகளிடமிருந்து மீட்டெடுக்க, என் ராம் தலைமையில் தொடங்கப் பட்டுள்ள முயற்சி பற்றி நிறையவே விமர்சனம் இருக்கும். ஆனால் அதை சொல்ல கூடிய நிலைமையில் சூழல் இல்லை. ஒருவேளை ஜெயலலிதா என்.ராம் மற்றும் இந்து கும்பல் மீது தாக்குதல் தொடுத்து, அதனால் 'பத்திரிகா தர்ம'த்திற்கு கேடு விளைய கூடுமென்றால், 'நீ மட்டும் ரொம்ப யோக்கியமா?' என்ற கேள்வியை, வாட்ச் பண்ணி வைத்ததையெல்லாம் முன்வைத்து கேட்கமுடியும். இப்போது இருக்கும் அவல நிலையில் என் ராம் மற்றும் சிபிஐ(எம்) சார்ந்தவர்களின் மெல்லியதாகவாவது ஒலிக்கும் குரலை நிபந்தனையின்றி ஆதரிக்க மட்டுமே முடிகிறது. யாராவது பேசவேண்டுமே என்று மட்டுமே தோன்றுகிறது. மேலும் இவையெல்லாம் ஒற்றை வார்த்தைகள் தரும் சட்டகத்தில் அடங்க கூடியதும் அல்ல. ஈழப்பிரச்சனையில் அயோக்கியத்தனமாய் எழுதும் இந்துப் பத்திரிகைதான் குஜராத் கலவரம் பற்றி பல உண்மைகளை வெளிகொணர்ந்தது, பல முக்கிய கட்டுரைகளை வெளியிட்டது.

ஞாநி தன் வழக்கமான நேர்மையுடன் எழுதியுள்ளார். வலையில், நான் வேறு விஷயங்களில் மிகவும் எதிர்க்கும் முகமுடி எழுதியது கூட எனக்கு பெருமளவு ஒப்புதலாக, ஆறுதலாகத்தான் இருந்தது. இவ்வாறு அவர் எழுதுவதற்கு பின்னால் இருக்கும் வேறு அரசியல் குறித்து பேசும் திராணி இல்லை. அப்படி ஒரு அரசியல் இருக்கலாம். ஆனால் அது மட்டும்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது என்பது சிலருக்கு சனி நீராட உதவுமே ஒழிய, பிரச்சனையின் கால்தடத்தை புரிந்துகொள்ளக் கூட உதவாது. திருமா/பாமக பற்றி வெறுப்பு வெளிப்படையாய் தெரியும் மொழியில் அவர் ஏற்கனவே எழுதியிருந்தாலும், அதன் நீட்சியாக மட்டும் அவரது பதிவை என்னால் பார்க்க முடியவில்லை. இப்போது பல கட்டுரைகளில் மேடை டீவி பேச்சுகளில் தோலுரிந்து போன பெரும்பான்மை பெரியாரிஸ்டுகளையும் விட, கற்பு குறித்து முற்போக்கான கருத்துக்களை அவர் உண்மையிலேயே கொண்டிருப்பதும் ஒரு அடிப்படை காரணமாய் எனக்கு படுகிறது. ஏனெனில் ஒரு குருமூர்த்தியால் திருமாவை எதிர்க்க வேண்டிய கட்டாயத்தில் கூட இப்படி எழுத முடியாது.

சிலர் திடீரென 'முற்போக்கு வேடம்' போடுவதையும், இவர்கள் பேசுவதன் பின்னுள்ள் அரசியலையும் கட்டுடைக்கும் முன்னால் இந்த வாய்ப்பை அவர்களுக்கு கொடுத்தவர்களை பற்றி பேசுவதல்லவா இன்னும் முக்கியமானது. அரசியல் பேரலையில் பாசிஸ்டாய் உருமாறிப்போன திருமாவளவன் மட்டுமில்லாது, ஒரு பெரிய பட்டியலில் அடங்கும் எல்லா பெரியாரிஸ்டுகளும் அல்லவா இந்த பொன்மேடையமைத்து கொடுத்திருக்கிறார்கள். ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்திலாவது நாம் உச்சி முகர்ந்திருக்க கூடிய அறிவுமதி, பாமரனின் எழுத்துக்கள் எல்லாம் இத்தனை கேவலமாய் இருக்கக் கூடும் என்றால், அவர்களை விட ஆரோக்கியமாய் இருப்பவர்களின் மூலங்களை நோண்டுவதில் நியாயம் மட்டுமில்லாது அறிவும் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை.




3. NDTVயில் நடந்த கலந்துரையாடலை என்னால் பார்க்க முடியவில்லை. சாருஹாஸன் அருமையாய் பேசியதாய் கேள்விப்பட்டேன். அதற்கு எதிர்வினையாய் சன் நியூஸ் விவாதம் என்ற பெயரில் ஒரு அசிங்கத்தை நடத்தியதை, என்னால் முடிந்தவரை பாதிக்கு மேல் பார்த்தேன். அரை மணி நேரத்திற்கு மேல் அதை தாங்கிகொள்ள முடியவில்லை.

நடு நிலமை என்பதை பாவனை செய்ய குஷ்பு/சுகாசினிக்கு ஆதரவாய் பேசும் சுதா ராமலிங்கம், அஜிதா என்று இரு பெண்களை அழைத்திருந்தனர். இருவரும் (என்னை பொறுத்தவரையில்) பலவீனமான முறையில் தங்கள் கருத்தை முன்வைத்தனர், அல்லது பல ஆண் தடிமாடுகள் போட்ட காட்டுக் கத்தலில் பலவீனமாகவே தங்கள் கருத்துக்களை முன்வைக்க முடிந்தது. கொஞ்சம் பலம் பொருந்திய தர்க்கத்துடன் பேச முனைந்த போதெல்லாம், மற்றவர்கள் இடைமறித்து கூச்சலிட்டத்தில் அமுங்கி போனது. பேச கூட விடாமல் தன் 'கருத்தை' அழுத்தி அழுத்தி கத்தியதில் முதலிடம் வகித்தவர் விழுந்த நட்சத்திரம் திருமாவளவன். குறைந்த பட்ச சகிப்புதன்மையை ஒரு தொலைக்காட்சியில் வரும் உரையாடலில் கூட காட்ட இயலாதவராய் இருந்தார். அதற்கு பிறகு வருவோம்.

அஜிதா அவர்கள் கொஞ்சம் கூட திருமா மீது வெறுப்பு கலக்காமல் பேசியது என்னை மிகவும் பாதித்தது. ஒவ்வொருமுறையும் திருமாவை (மட்டும்) 'நண்பர் திருமாவளவன்' என்று விளித்தார். சொல்வதை விளக்க முயன்ற போதெல்லாம், திருமாவுக்கு விளங்கும் வகையில் தலித் சார்ந்த ஒரு இணை உதாரணத்தை தர முயன்றார். ஆனால் அதெல்லாம் மண்டையில் ஏறாத ஒரு போதையில் திருமா இருந்தது தெரிந்தது. எல்லாவற்றையும் அராஜகமான முறையிலேயே எதிர்கொண்டார்.

இது தவிர இன்னும் இரண்டு பெண்கள். ஒருவர் தீர்க்கமான குங்கும போட்டுடன் ஒரு சாமியாரினியோ என்று ஐயம் கொள்ளும் வகையில் வந்திருந்தார். ஆனால் மருத்துவர் என்று பெயர் போட்டார்கள். (குமரி அனந்தன் மகள் என்று பின்னால் அறிந்தேன்.) கற்பின் பெருமை பற்றியும், அதன் காரணமாக மட்டும் இந்தியநாட்டின்/இந்திய கலாச்சாரத்தின் (கவனிக்கவும், தமிழ்நாடு என்று குறிப்பிட்டு சொல்லவில்லை) பெருமை பற்றியும் நீண்ட விளக்கம் கொடுத்தார். "விவேகானந்தர் வெளிநாடுகளுக்கு சென்று பார்த்தபின், 'இன்னும் இந்தியாவை முன்பு போலவே போற்றுகிறீர்களா?' என்று ஒருவர் கேட்டபோது அவர் சொன்னார், 'முன்பு இந்தியாவை போற்றினேன், இப்போது வணங்குகிறேன்' " என்று தொடங்கி, பிஜேபி கட்சி உறுப்பினரிடம் கேட்க கூடிய ஒரு சிற்றுரையை அவர் நிகழ்த்திய போது, அஜிதாவின் பேச்சின் இடையே புகுந்து பேசவிடாமல் காட்டு கூச்சல் போட்ட திருமா அதை கேட்டவிதமும், காட்டிய மௌனமும் சம்மதத்திற்கான அறிகுறியாகவே இருந்தது. (அதில் ஆச்சரியமடைய ஏதுமில்லை, ஏற்கனவே குருமூர்த்தி மற்றும் திருமா இருவரும் எழுதிய ஒத்த வரிகளை ஒருவர் பட்டியலிட்டுருக்கிறார். ஆனால் என்னை பொறுத்தவரை திருமா குருமூர்த்தியையும் மிஞ்சிவிட்டதாகவே தோன்றுகிறது. அதற்கு இன்னொரு பதிவில் வருவோம்.)

இன்னொரு பெண் திராவிடர்கழக அருள் மொழி. விவாதத்தின் அபத்தக் காமெடி ட்ராக் இவருடையது. அவருடய நிலைபாட்டின் oxymoron தன்மைகளை புரிந்துகொள்ள, தர்க்கத்தின் எல்லா முரணியல் தன்மைகளையும் பிரயோகிக்க வேண்டியிருக்கும். தெளிவாக பெரியார் வழியில் கற்பை நிராகரிப்பதாகவும், பெண்களுக்கான பாலியல் தேர்வை ஆதரிப்பதுமாக சொன்னார். ஆனால் அதை செய்யும் பெண் அதற்கான முதிர்ச்சியையும் அறிவையும் பெறவேண்டும் என்று கூடுதலாக சொன்னார். அதாவது கிட்டத்தட்ட குஷ்பு சொன்னதுதான், ஆனால் அதற்கான வயது ஆகவேண்டும் என்கிறார். (அது என்ன முதிர்ச்சி, அதை பெற்றுவிட்டதாக எப்போது கருத முடியும் என்ற சிக்கலான கேள்விகளுக்குள் போகாமல், குறிப்பிட்ட வயதாகவேண்டும் என்பதாக கொள்கிறேன்.) அது என்ன வயது என்று அவர் சொல்லவில்லை என்பதால் ஒரு பேச்சுக்கு 25 என்று வைத்துகொண்டால், 25 வயதுக்கு மேல் கல்யாணம் செய்து கொள்ளாமல் ஒரு பெண் உறவு கொள்ளலாம், கன்னிதனமையை பாதுகாக்க தேவையில்லை, அதாவது குஷ்புவின் கருத்தைத்தான் சொல்கிறார், ஆனால் அதற்கு வயது நிபந்தனை மட்டும் விதிப்பதாக கொள்ளலாம். அப்படி சொன்னவர் மிக அயோக்கியதனமாய் பேசிய, 'ஊர் மேய்வது' என்ற வார்த்தைகளை பயன்படுத்தி, நடிகைகள் பெண்ணியவாதிகள் உள்ளிட்ட பல பெண்களை ஒருமையில் மீண்டும் மீண்டும் பேசிய ஆண் கூட்டத்துடன் தன்னை அடையாளம் கண்டு கொண்டார். இந்த போராட்டம் நியாயமானது என்கிறார். 'ஒருவேளை தங்கருக்காகத்தான் இது தொடங்கியது என்றால், அதில் தவறு ஒன்றும் இல்லை. யாராவது ஒருவர் தங்கருக்கு ஆதரவாக பேசவேண்டும் அல்லவா?' என்றார். அதாவது தங்கர் ஆதரிக்கப் படவேண்டியவர். நடிகைகளை பற்றி சொன்னதையோ, சொல்லாமல் வெளிவந்ததையோ, சொல்லாமலேயே மன்னிப்பு கேட்டதயோ விட்டுவிடுவோம். "நமது சமுதாயத்தில் ஒரு ஆண் எப்படி வேண்டுமானாலும் வாழ முடியும். ஆனால் பெண்களால் இப்படித்தான் வாழ முடியும் என்பதைத்தான் எனது திரைப்படங்களில் நான் தொடர்ந்து பதிவு செய்து வருகிறேன். தமிழ்ப் பெண்களுக்கென கலாச்சார¬ம், ஒழுக்க நெறியும் உண்டு." என்று பேசிய தங்கர் ஆதரிக்க வேண்டியவர். வன்முறை கலந்த ஒரு தெருப்போராட்டத்தை நடத்தும் இரண்டு கட்சிகளை தன் பின்னால் வைத்திருக்கும் தங்கர் பாவம், ஆதரவே இல்லாமால் தவிக்கிறார். அவருக்கு அதரவு தருவது என்பது செருப்பு துடப்பக்கட்டை முட்டை தக்காளியுடன் குஷ்பு மீது தாக்குதல் நடத்துவது. சகோதரி அருள்மொழி தனது பெண்ணிய பெரியாரிய பார்வையில் புல்லரிக்க வைத்துவிட்டார். மேலும் பழ.கருப்பைய்யா, சீமான், திருமா இவர்கள் மிக கேவலமாய் பேசிய பேச்சுகளை எல்லாம் அவர் மௌனத்தால் ஒப்புகொண்டதாக(குறிந்த பட்சம் சகித்து கொண்டதாக)வே கொள்ளவேண்டும். மௌனமாய் இருந்தது மட்டுமில்லாது சுகாசினியின் 'தமிழ் வெறுப்பு' பற்றி பேசும் போது, கூட்டத்துடன் அவரும் ஒரு கோவிந்தா போடுவதை பார்த்தால் அந்த முடிவுக்குதான் வரமுடியும். ஆக பார்பன, வட இந்திய எதிர்ப்பு என்பதை மூர்க்கமான வெறுப்பாய் கொள்ளும்போது, ஆணாதிக்கம் எவ்வளவு கேவலமாய் வெளிப்பட்டாலும் இவர்களுக்கு பிரச்சனையில்லை.

நிகழ்சியை நான் பார்க்கத் தொடங்கிய போது, 'மக்கள் தாங்களாகவே வெகுண்டெழுந்து தெருவில் இறங்கி போராட்டத்தில் குதித்தார்கள், இதற்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை' என்று திருமா அண்டப்புளுகு புளுகிக் கொண்டிருந்தார். வழக்கு தொடர்ந்த நபர்களின் சார்புகள், 'போரட்டம் தொடரும்' என்று மீண்டும் மீண்டும் திருமா, ராமதாஸ் விட்ட அறிக்கைகள், அதைவிட 'மக்கள் இப்படி எத்தனை பிரச்சனைக்கு கொதித்தெழுவார்கள்' என்று எந்த மரமண்டையும் கேட்கும் லாஜிக்கலான கேள்விகளை எல்லாம் விட்டு விட்டு, என் யோசனைக்கு வருவது பாப்பாபட்டியும் கீரிப்பட்டியும்தான். 'ஓவ்வொரு தேர்தலிலும் தலித்கள் தாங்களாகவேதான் முன்வந்து போட்டியிடாமல் இருக்கிறார்கள். போட்டியிட்டவ்ர்களும் தாங்களாகவேதான் ராஜினாமா செய்தார்கள்' என்ற தேவரிய புளுகிற்கு இணையான வேறு ஒரு புளுகை சுட்ட வேண்டுமானால் அது திருமா இங்கே சொல்வதுதான்.

நக்கீரன் கோபால், "தன்னைப் போல் பிறரை நேசி என்று சொல்வார்கள். குஷ்பு தன்னைப் போல் பிறரை யோசி என்பதாக பேசியிருக்கிறார்" என்று தொடங்க, பழ. கருப்பய்யா என்ற தடிமாடு குலுங்கி குலுங்கி சிரித்தது. வேறு சிரிப்பொலிகளும் கேட்டது. ஆனால் திருமாவும் சிரித்தாரா அல்லது எப்படி சிரித்தார் என்பதையும், அருள்மொழியின் முகபாவத்தையும் கேமிரா கோணம் காரணமாய் பார்க்க முடியவில்லை. முகபாவம் எப்படியிருந்தாலும் ஒரு பெண்ணின் கருத்தை எதிர்கொள்ள, நிலவும் மதிப்பீடுகளின் பிண்ணணியில் அவர் சொந்த வாழ்க்கையை தாக்குவதன் மூலம் எதிர்கொள்வது குறித்து, 'கற்பை நிராகரிக்கும்' அருள்மொழிக்கு குறைந்த பட்ச மாற்றுக் கருத்தாய் சொல்லக் கூட எதுவுமில்லை என்று தெரிகிறது. மற்றபடி கோபால் பேசியது பற்றி சொல்ல என்ன இருக்கிறது! குஷ்பு பிரச்சனை ஒரளவு அணைந்துபோனபின் ஒரு நக்கீரன் வாங்கி படித்தேன். நடிகை ஒருவரின் பிண்னணி வாழ்க்கை பற்றி ஒரு சுக்கு காப்பித்தனமான ஒரு தொடர். நடிகையின் படத்தில் முகமுடி போட்டு முகத்தை மறைந்தாலும், படிக்கும் அனைவருக்கும் அவர் யார் என்று தெளிவாக தெரியும். (ஒரு ஆணாய் இருக்க கூடிய) எழுதுபவரின் பெயர் கண்ணகி. (இவர்களே எழுதியிருக்க கூடிய) ஒரு வாசக கடிதம் , ' தமிழ் பெண்கள் கற்பை கேவலப்படுத்தினாலும், குஷ்புவின் புடவை அணிந்த படத்தை போட்டு நக்கீரன் கண்ணியம் காத்திருப்பதாக' சொல்கிறது. ஆனால் அதே பத்திரிகையில் ஒரு நடிகையின் சொந்த வாழ்க்கையை முன்வைத்து ஆபாசத்தொடர், இன்னொரு பக்கத்தில் நவ்யா நாயர் குளிக்கும் படத்தை போட்டு, 'தங்கர் விவாகாரத்துக்கு பிறகு ஃபேமஸ் ஆகிவிட்டதாய்' கமெண்ட்.

இதில் இன்னொரு ஜோக் என்னவெனில், வீரப்பனின் மனைவி முத்துலெட்சுமியின் பேட்டி ஒன்றின் முடிவில், 'இவ்வாறு பேசிய முத்துலெட்சுமியின் கையில் பெரியாரின் 'பெண் ஏன் அடிமையானாள்?' என்ற புத்தகம் இருந்தது', என்று நிறைவுறுகிறது. பதிவிரதை தன்மைகளின் எல்லா கற்பிதங்களையும் உடைத்து பேசும் பெரியாரின் புத்தகத்திற்கும், வீரப்பனை கடவுளாய் பேசும் முத்துலெட்சுமியின் பேச்சுக்கும், அவர் (நக்கீரனுக்கு உவப்பானதாய் முன்வைக்கும்) தமிழ் தேசியத்திற்கும் என்ன தொடர்பு? முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரை 'கற்பின் மேன்மையை பேசும் பத்திரிகையில், சம்பந்தமே இல்லாத இடத்தில் பெரியாரின் 'பெண் ஏன் அடிமையானாள்?' பற்றிய குறிப்பு. இவர்களை எல்லாம் ஏதோ மெண்டல்கள் என்று அலட்சியபடுத்த முடியாது. (காக்கைப் பாடினியாரை அப்படி அலட்சியப் படுத்தலாம்.) தமிழ் சமுதாயத்தின் மிக பெரும் சிந்தனைக்கான வெளியை இவர்கள் ஆக்கரமித்திருக்கிறார்கள்.

பழ. கருப்பய்யா பேசியதை கேட்கவேண்டுமானால், கிராமத்தில் தின்று கொழுத்த ஏதேனும் ஒரு ஆண்டையை பிடித்து இந்த பிரச்சனை பற்றி கருத்து கேட்டால் போதும். ஒருவேளை கொஞ்சம் முற்போக்காய் ஏதேனும் கருத்து கிடைக்கலாம். சும்மா மிகைபடுத்துவதற்காக சொல்லவில்லை. ஏனெனில் பழசு தீவிர தமிழ் தேசியவாதி, மற்றும் பண்பாட்டு காப்பாளர். அதனால் அவர் ஒரு கிராமத்து ஆண்டையைவிட இன்னும் கேவலமாய் பேச எல்லா சாத்தியமும் உண்டு. நடிகைகளை, குஷ்பு பேசியதை, ஒரு இடத்தில் பெண்ணியவாதிகளை 'ஊர் மேய்வது' போன்ற வார்த்தைகளை போட்டு அவர் பேசியதல்ல பெரிய விஷயம். அதையே கிட்டதட்ட திருமாவும் பேசியதுதான் விசேஷம்.

திருமாவளவன் பேச்சுக்களை செய்தியாய்/பேட்டியாய்/கட்டுரையாய் பலமுறை படித்திருந்தாலும், அவர் பேட்டியை நேரடியாய் சில ஆண்டுகளுக்கு முன்னால் (பாமக கூட்டுக்கு எல்லாம் முன்னால்) விண் டீவியில் கேட்க நேர்ந்தது. மிக நிதானமாக, பொறுமையான குரலில், முதிர்ச்சியுடன் பேட்டி அளித்திருப்பார். அதற்கு பிறகு இப்போதுதான் ஒளி/ஒலி வடிவில் அவர் பேச்சை கேட்கிறேன். இப்போது அவர் திடீரென பால்தாக்கரேயாக மாறிவிட்டால் கூட பெரிய பிரச்சனையில்லை. ஆனால் அவர் இன்றும் ஒடுக்கப் பட்ட மக்களின் குரலாக, ஒரு திருவுருவாக திகழ்கிறார். சென்னைச் சுவர்களில் எல்லாம் திருமாவளவனின் உருவம். இதற்கு முன் எந்த தலித் தலைவரும் தமிழக அரசியலில் அடைய முடியாத இடத்தை பிடித்திருக்கிறார். இப்படி பட்ட முகத்துடன் அவர் பாசிசமாய் பேசுவதென்பதுதான் தாங்கக் கூடியதாக இல்லாத சிக்கல்களை உருவாக்குகிறது.

சரத்குமார் மீண்டும் மீண்டும் குஷ்பு பேசியது 'ஒரு அத்துமீறல்' என்பதாக குறிப்பிட்டு கொண்டிருந்தார். தமிழ்நாடெங்கும் "அடங்க மறுப்போம், அத்துமீறுவோம்' என்று போஸ்டர் அடிக்க காரணமான தலைவனின் முகத்தில், அந்த வார்த்தை எதாவது ஒரு உணர்சியை தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறதா என்று கவனித்தேன். அந்த வார்த்தையின் அரசியல்ரீதியான பிரச்சனையே அவர் மண்டையில் ஏறியதாக தெரியவில்லை.

அஜிதா மிக மென்மையான குரலில், ஒரு வேண்டுகோளாய் திருமாவிடம் பெண்ணியவாதிகளை பற்றி கேவலமாய் பேசவேண்டாம் என்று கேட்கிறார். அப்படிப்பட்ட மென்மையான வேண்டுகோளை ஒரு ஒதுக்கப்பட்ட சமுதாயத்தை பிரதிபலிக்கும் ஒருவர், எப்படி இத்தனை அராஜகமாய் ஒதுக்க முடியும் என்பது இன்னமும் புரியவில்லை. மித மிஞ்சிய (அரசியல்/அதிகார) போதையின் காரணமாய் ஏற்படும் வெறியில் மட்டுமே முடியும் என்று தோன்றுகிறது. ('பெண்ணியம் பேசுபவர்கள் எப்படியும் அலையட்டும், மற்றவர்களிடன் அதை பிரசாரம் செய்யவேண்டாம்' என்பது போன்ற தொனியில் திருமாவின் கருத்து இருந்ததாய் நினைவு.) அஜிதா வேண்டுகோள், பெண்ணிய வாதிகளின் செயல்பாடுகள் எல்லாம் ஒரு பாலியல் வேட்கையால் மட்டுமே உந்தப்படுவதாக சொல்வது நியாயமாகாது, அப்படிப்பட்ட கருத்துக்களை 'நண்பர் திருமாவளவன்' தயவு செய்து வெளியிடவேண்டாம் என்பதாக இருந்தது. தான் ஒரு மேட்டிமை சூழலில் இருப்பதாலும், திருமா ஒடுக்கப்பட்டவர்களின் பிரதிநிதியாய் இருப்பதாலும் அஜிதா தேவையற்ற ஒரு மென்மையுடன் அந்த வேண்டுகோளை வைத்திருக்கலாம். அந்த கருத்தை முழுமையாய் கூட சொல்லவிடாமல், பெண்ணியவாதிகளை எல்லாம் மிக மோசமாய் காய்ந்து தள்ளிவிட்டு, முடிவில் திருமா சொன்னார்,"நாங்களும் பெண்ணியவாதிகள்தான்!".

இந்த கலந்துரையாடலில் பழ.கருப்பைய்யாவின் பேச்சே மிக ஆபாசமானதாக பலருக்கு தோன்றகூடும். என்னை பழசின் பேச்சு அத்தனை பாதிக்கவில்லை.

நம் சமுதாயத்தின் பொது புத்தி, அதன் நார்மலான சிந்தனையோட்டமே தலித் மக்களின் இருப்புக்கு எதிரானவை. தலித் சார்பான சிந்தனைகளை கேவலபடுத்தும் சொல்லாடல்களை கொண்டவை. ஆரோக்கியமாய் தோற்றமளிக்கும் பார்வை என்று சொல்லப்படுவது உள்ளே மிகவும் அழுகிபோனவை. மிக எளிதாக பொது மதிப்பீட்டை வைத்து ஒரு தலித்தை ஒரு பொது மேடையில் குற்றமுள்ளவராய், குறைபாடு உள்ளவராய் உணரவைத்து கேவலப்படுத்த முடியும். அப்படிப்பட்ட யதார்த்தத்தில் ஒரு ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர், அதே போன்ற யதார்த்தம் பொருந்த கூடிய பெண்ணியவாதிகளை பற்றி, 'கேவலமாய் பேசவேண்டாம்' என்ற மென்மையான ஒரு வேண்டுகோளை மிதிப்பதுதான் உச்சக் கட்ட ஆபாசமாய் தெரிகிறது. திருமா இனி ஒரு காலத்திலும் திரும்பி வருவார் என்று எனக்கு நம்பிக்கையில்லை.

இது தவிர சில நகைச்சுவைகள் உண்டு. இயக்குனர் சீமான் சுகாசினி 'கிழித்துவிடுவேன்' என்றதை 'அது எவ்வளவு பெரிய வன்முறை' என்பதாக பேசிக்கொண்டே போனார். ஒரு பெண்ணின் மீது முப்பது வேறு வேறு இடங்களில் வழக்கு தொடுத்து இழுத்தடித்து, செயல்படவிடாமல் தடுப்பதும், ஒடிப்போக சொல்வதும் வன்முறை இல்லை, 'நானாக இருந்தால் கிழித்திருப்பேன்' (அதன் அர்த்தம் அனைவருக்கும் தெரியும்) என்று சொல்வது வன்முறையாம். சரத்குமார் இன்னும் ஒரு படி மேலே போனார். 'கோர்டில் சந்தித்து கொள்கிறேன்' என்று சுகாசினி இரவு பத்துமணிக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பியது வன்முறையாம். இதில் இன்னொரு ஆபாசம் என்னவென்றால், ஒருங்கிணைப்பாளர்கள்/நடுவர்கள் என்று இரு சன் டீவி வேலையாட்கள். அவர்களும் சேர்ந்து மற்ற ஆண்தடிமாடுகளுடன் சேர்ந்து கத்தியது இருக்கட்டும். கடைசியாக முடிவுரை வாசிக்கும் போது, குற்றப்பட்டியலில், எஸ். எம்.ஸ் அனுப்பியதையும் மற்ற குற்றத்துடன் ஒன்றாக சேர்த்துகொண்டார்கள்.

சரத்குமார் சொன்ன ஒரு விஷயத்தை பார்வையாளர்கள் பலர் கவனித்து இருக்க மாட்டார்கள். தனக்கு எஸ்.எம்.எஸ் அனுப்புவதன் குற்றப் பிண்ணணியை விளக்கும்போது, "நான் ஒரு படிச்சவன், எனக்குன்னு ஒரு ஸ்டேட்டஸ் இருக்கு, ஒரு கம்யூனிட்டி பேக்கிரவுண்ட் இருக்கு.." என்று சொல்லிகொண்டு போனார். வாய் தவறி சொல்லிவிட்டது புரிந்ததோ என்னவோ, அடுத்தமுறை சொல்லவில்லை. "கம்யூனிடி பேக்கிரவுண்ட்" என்பது ஜாதியை குறிக்கிறது என்று எல்லோருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். அங்கே கூடியிருந்த பெரும்பான்மையானவர்க்கு ஒரு கம்யூனிடி பேக்கிரவுண்ட் உண்டு. அது இல்லாத பெண்களின் மென்மையான வேண்டுகோள் நிராகரிக்கப்படும். கம்யூனிடி பேக்கிரவுண்ட் உள்ளவ்ர்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பி "கோர்டில் பார்த்துகொள்கிறேன்" என்று சொன்னால் அது கிரிமினல் குற்றம். அந்த கம்யூனிடி பேக்கிரவுண்ட் இல்லாதவர்கள், அல்லது கம்யூனிடி பேக்ரவுண்டுக்கு ஒத்து வராமல் தங்கள் கருத்தை பேசினாலோ, தங்கள் மீதான அவதுறுக்கு சற்று அளவுக்கு மீறி குதித்தாலோ, அவர்கள் மீது தமிழகமெங்கும் நீதிமன்றங்களில் கிரிமினல் வழக்குகள் தொடுக்கப்படும். அது வன்முறையல்ல என்பது மட்டுமல்ல, அது ஒரு கலாசார செயல்பாடும் ஆகும் என்பதுதான் இந்த ஆபாச நிகழ்ச்சியின் மூலம் நாமெல்லாம் அறியக்கூடிய பாடம்.




4. சற்று காலம் தாழ்த்தி வந்த எதிர்ப்புகள் மட்டுமில்லாது, தொடர்ந்து (புத்திசாலித்தனம் என்று நினைத்து) தொலைக்காட்சியில் மீண்டும் மீண்டும் காட்டப்பட்ட காட்சிகளின் பாதிப்பில் பொதுவாகவே மக்களின் 'இரக்க மனம்' காரணமாகவும், திருமா நடந்த கலாச்சார பாசிச நிகழ்வுகள் பற்றிய செய்திகளினால் சிறிதளவு கலங்கியிருப்பதாக தெரிகிறது. அதன் ஒரு விளைவுதான் 'மக்கள் தாங்களே போராட்டத்தில் குதித்ததாகவும், தங்களுக்கும் அதற்கும் தொடர்பில்லை' என்று கைககழுவும் புளுகு. அதே போல பல பத்திரிகை அலுவலகங்களை தானே நேரடியாய் திருமா தொடர்பு கொண்டதாகவும் தெரிகிறது. ஒரு தலித் பெண்கள் அமைப்பு (Dalit women Federation) திருமா ராமாதாஸ் கலாச்சார பாசிசத்தை கண்டித்து வெளிப்படையாய் ஒரு கண்டன பேரணி நடத்த இருந்ததாகவும், திருமாவின் பலத்த முயற்சிக்கு பிறகு அது தடுக்கப் பட்டதாகவும் தெரிகிறது.

பலருக்கு அலுப்பை தரக்கூடும் என்றாலும், பல காரணங்களுக்காக நான் இந்த குறிப்பிட்ட விஷயம் குறித்து இங்கே எழுத இன்னும் நிறைய இருக்கிறது.




5. ராமதாசும், திருமாவும் இணைந்ததால் அந்த பகுதியில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை/பாதிப்புகளை பற்றி, நேரமும் முயற்சியும் எடுத்து விரிவாக, எழுதுவதாக சொல்லி, குழலி ஒரு பதிவு போட்டார். வழக்கம் போல அதை வரவேற்று பாராட்டி கொஞ்சம் உணர்ச்சியும் கலந்து ஏகப்பட்ட பின்னூட்டங்கள். வட மாவட்டம் குறித்த பல செய்திகள் எனக்கு இரண்டாம் கை, மூன்றாம் கை தகவல்களாகவே மட்டும் கிடைக்கிறது, அல்லது கிடைக்கவே இல்லை என்ற அளவில் இந்த முயற்சியை, சில முதற்கை தகவல்களுடன் அவர் எழுதுவார் என்ற நம்பிக்கையில் நானும் வரவேற்கிறேன்.

குழலியின் பதிவுகள் பொதுவாக எனக்கு ஆர்வமளித்தது கிடையாது. அவரின் தர்க்கமுறை குறித்து நல்ல அபிப்ராயமும் கிடையாது. அதை தர்க்கம் என்பதை விட வேறு ஒரு வார்த்தையால்தான் என்னால் அழைக்கமுடியும். குஷ்பு பிரச்சனைக்கு பின் அவரின் பல பதிவுகள் குமட்டலூட்டுபவை. ஒப்புகொள்ளாவிட்டாலும் கூட வீரவன்னியனிடம் இருக்கும் போர்குணம் கூட இவர் எழுத்துக்களில் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை.

என்றாலும் இப்படிப்பட்ட முயற்சியில் அவர், தனக்கிருக்கும் தொடர்புகளை வைத்து இறங்கினால் அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றே நினைக்கிறேன். அவர் எழுதப் போகும் எல்லாவற்றையும் யாரும் முழுமையாக ஏற்றுகொள்ளப் போவதும் இல்லை. ஒரு அன்னத்தை போல(அல்லது யதார்த்தமாய் எலுமிச்சை சாறு போலவோ) பாலையும் தன்ணீரையும் நம்மால் பிரித்தெடுக்க இயலாவிட்டாலும், விமர்சனபூர்வமான ஒரு அணுகுமுறையின் வெளிச்சத்தில் பலவற்றை கழித்துவிட்டும், வகுத்துவிட்டும் நம்மால் வாசிக்க இயலும், என்பதால் அவரது சுய சார்புகளினால் ஆபத்து எதுவும் நேர வாய்பில்லை.

ராமதாஸ்-திருமா இணைந்தது பல வகை மற்றங்களை நிச்சயமாய் கொண்டு வந்திருக்கும். ஒரு கிராம அளவில் இரு சமூகங்களுக்கிடையே/இயக்கங்களுக்கிடையே ஏற்படக்கூடிய முரண்கள், மேலிடத்தில் அது ஏற்படுத்தக் கூடிய விளைவுகளை முன்னிட்டாயினும் சுமுகமாய் தீர்த்துவைக்கும் முயற்சிகள் நடக்கும், நடந்திருக்கும். முன்பு போல் முரண்களை பிரச்சனையாக்குவதற்கு தயக்கம் ஏற்படும். திருமா தலைமையிலான தலித் எழுச்சிக்கு பின்பு, சில நடைமுறைகளும், மாற்றங்களும் தங்கள் உரிமைகள் என்ற விழிப்புணர்வு வந்த பின்பு, இந்த இணைவின் காரணமாய் சில வன்கொடுமைகள் தடுக்கப் பட கூடிய வாய்ப்புகள் உண்டு. அந்த வகையில் இந்த இணைப்பை தமிழக அரசியலில் ஒரு மைல்கல் என்று முன்னமே ஒருமுறை சொல்லியிருக்கிறேன். உண்மையிலேயே அப்படி ஒரு மாற்றம் வந்திருக்கிறதா, எந்த அளவில் மாறியிருக்கிறது, சமரசம் யாரால் அதைகமாய் பெறபெற்றிருக்கிறது என்பதெல்லாம் மிகவும் ஆராய்ச்சிக்குரியது. அது குறித்த ஒரு முயற்சியாய் குழலி எழுதுவதாய் அறிவித்ததை வரவேற்பதில் பிரச்சனையில்லை.

ஆனால் சிறிதளவு கூட விமர்சனப் பார்வையின்றி வரும் பாராட்டுக்களும் பின்னூட்டங்களும்தான் நெளிய வைக்கின்றன. தங்கமணி ஒரு படி மேலேபோய் 'ஆபத்தான காரியத்தில் இறங்க போகிறீர்கள், உண்மையை சொல்ல போகிறீர்கள்' என்று எட்டு போட்டு புல்லட் ஒட்டுகிறார். குழலி எழுதியுள்ள பதிவின் மொழியில் இருக்கும் ஆதாரப்பிரச்சனை அவருக்கு *கூட* புலப்படாமல் போனதேன்?

பதிவு முழுக்க குழலி மையப்படுத்துவதுபோல் வன்னியர்கள் தலித்துகளுக்கிடையிலான பிரச்சனையை 'இனப்பகை', 'புரிதல் இல்லாபகை' போன்ற வார்த்தைகளினால் குறிப்பிடமுடியுமா? குஜராத்தில் இஸ்லாமியர்கள் மீது நடந்த தாக்குதலை, 'மதகலவரம்' என்ற வார்த்தையால் விளக்குவது நியாயமாகுமா? அது கூட ஒருவேளை பொருந்திவரலாம். தென்மாவட்டங்களில் தலித்கள் மீது நடந்த வன்முறையை 'சாதிக் கலவரம்' என்று குறிப்பிடுவது எவ்வளவும் பெரிய அயோக்கியத்தனம்? அந்த நேர்மையின்மையை பல பத்திரிகைகள் பல காரணங்களுக்காக கடைபிடித்தது. 'தனித்தொகுதி ஏற்படுத்திய காரணத்தினால்தான் பாப்பாபட்டியிலும் கீரிப்பட்டியிலும், காலம் காலமாய் தாயாய் சகோதரனாய் பழகிய மக்கள் அடித்துகொள்வதாய்' ஒரு 'மாணிக்கம்' வலைப்பதிவில் எழுதியது. இந்த சொல்லாடல்கள் பல சாதிய நடைமுறைகளை போலவே, சில சந்தர்ப்பங்களில் அதைவிட வன்முறையானவை (ரத்தத் தெறிப்பு இல்லாத வன்முறைதான்!)

சாதிய நடைமுறை அமுலில் இருக்கும் சமூகத்தில் மாமுல் வாழ்க்கை, அமைதியான சூழல் இவையெல்லாம்தான் உண்மையான வன்முறைகள். அமைதியான சமூகத்தில் சாதிய நடைமுறை, சாதிய ஒழுங்கு மீறப்படாமல் இருக்கிறது. அவை கேள்வியின்றி ஏற்றுகொள்ளப் படும்போது, எல்லாம் நன்றாக இருப்பதாக, நன்றாய் நடப்பதாக தோற்றமளிக்கிறது. இதில் பிறழ்வு நேரும் போது, இதை மீறி செயல்படும்போது, ஆதிக்க சாதிகளிடமிருந்து வரும் கண்மண் தெரியாத வன்முறைதான் 'சாதிகலவரம்' என்ற பெயரால் பொதுபுத்தியால் அழைக்கப் படுகிறது. தலித் அல்லாதவர்கள் பெரும்பான்மை வகிக்கும் சமுகத்தில், தலித் ஒரு தனித்தொகுதி மூலம் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படமுடியும் என்ற யதார்தத்தில், தலித் நகராட்சி தலைவராவது சாதிய நடைமுறையிலிருந்து ஒரு பிறழ்வு. அந்த பிறழ்வின் காரணமாய் தலித் மீது ஏவும் வன்முறைதான், 'தாயாய் சகோதரனாய் பழகியவர்கள் அடித்துகொள்வதாய்' நாகரீகமாய் போன மாணிக்கங்களால் சொல்லப்படும் 'பகை'.

அதே போலத்தான் படையாச்சிகளின் சாதிய மேலாண்மையும் அவர்கள் நிகழ்த்திய வன்கொடுமைகளையும் 'புரிதல் இல்லாத பகை' என்ற ஒற்றை சொல்லாடலில் குழலியால் குறுக்கப்படுகிறது. ஒரு சொட்டு ரத்தம் இல்லாமல் வெறும் சொற்களால் அந்த வன்முறையை நிகழ்த்தும் அவர், விவேக வேடம் பூண்டு, ஆராய்ந்து எழுதப் போவதாய் சொல்கிறார். மகாஜனங்கள் கைதட்டுகிறார்கள், கண்ணை கசக்குகிறார்கள். இதற்கு முன்னமே கூட 'பாமக எந்த வன் கொடுமையையும் எந்த காலத்திலும் நியாயப்படுத்தியதில்லை' என்று கூசாமல் சொல்லியிருக்கிறார். ஆனால் ராமதாசே தீண்டாமை வன்கொடுமை சட்டத்தை நீக்கக் கோரி பேட்டியளித்தது எல்லாம் பத்திரிகைகளில் (ஒரு உதாரணம் 'துக்ளக்') பதிவாகியுள்ளது. இந்நிலையில் அவர் நடுநிலைமை என்ற ஒரு பாவனைக்காகவேனும் சுயவிமர்சனம் செய்துகொள்வார் என்று எனக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலும் கூட, ஏற்கனவே சொன்ன காரணங்களின் நம்பிக்கையில் அவரின் முயற்சியை வரவேற்பதில் எந்த தயக்கமும் இல்லை. ஆனால் விமர்சனம் என்பது துளிகூட இல்லாத ஒரு விசிலடிச்சான் சூழலில், இந்த விமர்சனத்தை எழுத வேண்டிய கட்டாயம் உள்ளது.




6. திருமா ராமதாஸ் இணைவு என்ற புதிய 'மைல்கல்லை' அடைவதற்கு முந்தய காலகட்டத்தில், தலித்-பிற்படுத்த பட்டவர்கள் மோதல் உச்சத்தில் இருந்த போது, பிற்படுத்த ஜாதிகளுக்கிடையே 'ஒற்றுமை'யையும், அவர்கள் அரசியல் செயல்பாடுகளுக்கு ஒரு பொதுத்தளம் அமைக்கும் முயற்சியாய் சில கூட்டங்கள் நடைபெற்றது யாருக்காவது நினைவு இருக்கலாம். சேதுராமன் போன்றவர்கள் பிற்படுத்தப் பட்டவர்கள் ஒன்றிணைய வேண்டிய 'அவசியத்தை' பலமுறை வலியுறுத்தியும், பாமக அதில் முக்கிய பங்கு வகிக்க வேண்டியது பற்றியும் குறைந்த பட்சம் ஒருமுறையாவது கருத்து சொல்லியிருப்பார். அத்தகைய முயற்சிகளின் போது ஒலித்த கருத்துக்களை கவனித்தால், அது எந்த விதத்திலும் பார்பன/முற்பட்ட ஜாதிகளுக்கு எதிரான பிற்பட்ட ஜாதிகளின் ஒன்றிணைப்பை பற்றி பேசவில்லை, மாறாக தலித்களுக்கு எதிராகவும், 90களில் ஏற்பட்டுள்ள தலித் எழுச்சியின் காரணமாய் எழுந்துள்ள பயத்தின் காரணமாகவும் உருவானவை என்பது தெளிவாக தெரியும். இவற்றில் சில முடிந்தால் மற்ற முற்பட்ட ஜாதி சக்திகளிடம் கூட்டணி வைக்கவும் தயங்காதவை.

கட்ந்த ஒன்றரை ஆண்டில், தமிழ் என்ற 'பொது அடையாளத்தில்' திருமா ராமதாசை முன்வைத்து நிகழ்ந்த இணைப்பினால் சில மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும் என்று தோன்றினாலும், தென் மாவட்டங்களில் தேவர்கள் எந்தவித சமரசத்திற்கும் தயாரக இல்லாத பிடிவாதத்துடன் தொடர்வதையும், தலித்கள் மீதான பல வன்கொடுமைகள் இன்னும் தொடர்வதுமே யதார்த்தமாக உள்ளதாய் தெரிகிறது. இதில் பசும்பொன் முத்துராமலிங்கம் என்பவரின் பெயர் உருவம் உள்ளிட்ட அனைத்தும் , தேவர் ஜாதி வெறியின், ஜாதி பெருமையின் திருவுருவாக திகழ்வதை விளக்க தேவையில்லை. அந்த ஜாதி திமிரை கொண்டாடும் ஒரு தருணமாகவே தேவர் ஜெயந்தி வருடந்தோறும் கொண்டாடப்படுகிறது. தேவர் ஜெயந்தி வரும்போது, திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் (மதுரையில் இன்னும் அதிகமாய் இருக்கும் என்றாலும், அதை காணும் வாய்ப்பு எனக்கு இருந்ததில்லை) போஸ்டர்களில் ஜாதிவெறி வெளிப்படையாய் கோரப்பற்களுடன் இளிக்கும்.

எல்லா அரசியல் கட்சிகளுக்கும் ஓட்டு என்ற காரணத்திற்காக இந்த தேவர் ஜெயந்தியில் கலந்துகொள்ளும் கட்டாயம் உள்ளது. ஆனால் தேவர்களின் ஓட்டில் எந்த சதவிகிதமும் விழ வாய்ப்பு இருப்பதாக தோன்றாத, பாமகவும் இந்த தேவர் ஜெயந்திவிழாவில் கலந்துகொள்வது ஆரய்தலுக்கு உரியது. திருமாவும் கலந்துகொண்டு மாலை போட்டு தேவர்சிலையை வழிபாடு செய்ததாக ரவி ஸ்ரீனிவாஸ் பதிவின் பின்னூட்டத்தில் சுட்டி பையன் என்பவர் சொல்லியிருக்கிறார். அது குறித்த (பத்திரிகை செய்தி வடிவிலான) ஆதாரத்தை, நான் கேட்டு பதில் வரவில்லை. வேறு யாரிடமிருந்தும் மறுப்பும் வரவில்லை. நான் இந்த செய்தியை நம்பவில்லை. நம்பாதது மட்டுமில்லாமல் பொய்யாய் இருக்க வேண்டும் என்று மிகவும் விரும்புகிறேன்.

பாமக விடுதலை சிறுத்தைகளின் இணைவினால் ஏற்படும் மாற்றங்கள் என்பது இரு பக்கங்களிலிருந்தும் வரும் சமரசங்களை உள்ளிட்டது என்பதை சொல்ல தேவையில்லை. இதில் திருமா என்னவகை சமரசங்களை செய்துள்ளார், செய்யவேண்டி உள்ளது என்பதே தலித் அரசியலில் ஆர்வமுள்ளவ்ரகளின் அக்கறையாய் இருக்க முடியும். பாமக ஒரு தேவர்ஜெயந்தி விழா வழிபாட்டில் கலந்து கொள்வதும், திருமா அது குறித்து விமர்சனமில்லாமல் இருப்பதுமே இந்த இணைவின் முக்கிய சமரசத்தின் குறியீடாய் இருக்கிறது. இன்று தேவர்ஜாதி வெறியை எதிர்க்கும் போர்குணத்தின் திருவுருவாய் பரிணமித்திருக்க வேண்டிய தோழர் இமானுவேல் இவர்களை எல்லாம் மன்னிப்பாராக!

Post a Comment

61 Comments:

Blogger வானம்பாடி said...

ரோசா, இந்த நேரத்தில் இந்தப் பதிவு மிக அவசியமானதாகிறது. நன்றி.

12/06/2005 9:00 PM  
Blogger ramachandranusha(உஷா) said...

ஏன் ÌÆĢ¢¼õ கேள்வி கேட்டாய் என்று என்னை திட்டாமல் விட்டீர்களே :-) ÌÆÄ¢ ±ýÉ ±Ø¾ô §À¡¸¢È¡÷ ±ýÚ ¿¡ý ¬ÅÖ¼ý ¸¡ò¾¢Õ츢§Èý.

ஆண்டாண்டு காலமாய் தலைவர்களை நம்பி ஏமாந்துப் போகும் அந்த பாவப்பட்ட மக்களை நினைத்தால் கவலையாய் இருக்கிறது. இதில் எல்லா நாட்டு தலைகளும் அடக்கம்! உங்கள் எழுத்தில் தெரியும் கோபத்தை வரவேற்கிறேன். என் சாதி, என் மதம், என் தலைவன் என்று குறுகியவட்டத்தில் திணித்துக் கொள்ளாமல், படைப்பாளியின் சமூக நோக்கு என்பது வெகு சிலரிடமே பார்கிறேன். அடிச்சி ஆடுங்க.

12/06/2005 9:43 PM  
Blogger Unknown said...

ரோசா,
//திருமா//
இவர் என்று முழுதான அரசியல் களத்திற்கு வந்து விட்டாரோ அப்போதே அவரது இயக்கத்தின் கொள்கைகள் பின் தள்ளப்பட்டுவிட்டது.
சமரசம் இல்லாவிடில் அரசியலில் இருக்கமுடியாது என்பது அனைவரும் வைக்கும் வாதம். சமரசத்தினால் வரும் (தனக்கும் / தான் சார்ந்த சமுதாயத்திற்கும் )சலுகைகளே போதும் என்று இருப்பதே இப்போது அனைத்து அரசியல்வாதிகளின் கொள்கையாகி விட்டது.

//சரத்குமார்//
விவேக் ஒரு முறை எனக்குப் பின்னால் 3 கோடி பேர் இருக்கிறார்கள் என்று "சன்" டிவிக்கு எதிரான போரில் சாதிப் பற்றைத் தெரிவித்தார். இவரும் அப்படியே. அனைத்தும் அரசியல் ஆசை.

//தேவர் இனம்//
வலைப்பதிவில் யாரும் தேவர் இனம்/தேவர் ஜெயந்தி பற்றி பேசியது இல்லை (நான் அறிந்து....தவறாக இருக்கலாம்). நீங்கள் அதனைத் தொட்டு இருக்கின்றீர்கள்.எங்கள் ஊர் பேருந்து நிலையத்தில் தேவர் சிலை வைப்பதா அம்பேத்கார் சிலை வைப்பதா என்று பெரிய போரே நடந்தது.முடிவில் தேவர் சிலையும், பேருந்து நிலையத்தின் பெயர் "அம்பேத்கார் பேருந்து நிலையம்" என்றும் வைக்கப்பட்டது.

12/06/2005 10:45 PM  
Blogger SnackDragon said...

விரிவான பதிவுக்கு நன்றி. சம்பந்தப் பட்ட நிகழ்ச்சியை பார்ர்க இயலவில்லை. திருமா ஓட்டு அரசியலுக்காக செய்ததாய் நாளை அறிக்கை விட்டாலும்/பத்திரிகைகளில் வந்தாலும் ஆச்சரியமில்லை. ஆனால் இன்று அவரது அறிவு (அல்லது புரிதல் என்று சொல்லலாமா) குஷ்பு சொல்லவரும் பிரச்சினையை ஒரு சமூகத்தின் தேவை என்ர அள்ல்வில் கூட தாண்டவில்லை என்பதுதான் வெளிப்படையாகத் தெரிகிறது. பிரச்சினை இதற்கு மேலும் திருமா தலித்துகளின் திருவுருவாக மாறாதிருப்பதும், இதே ரீதியில் இன்னும் பல திட்டஙளோ பாசிச செயல்பாடுகளோ நடத்துவார் என்பதுதான். இன்னொரு ஜாதிவெறியுடைய(ஒரு குறிப்புக்காக சொல்கிறேன் ) கூட்டம் முரண்பட்டு எதிர்க்கவில்லை யென்றால் வெளியில் வரும் சாத்தியங்கள் குறைவாகவே தெரிகிறது.

12/07/2005 12:00 AM  
Blogger PKS said...

Roza,

I have not watched that Sun TV Programme. If Ms. Ajitha who participated in that discussion is a lawyer, she could very well be the daughter of PV Bakthavatchalam - a known lawyer and involved in Makkal Vurimai Kazhagam or so. This is FYI if you have not known it already.

Thanks and regards, PK Sivakumar

12/07/2005 12:37 AM  
Blogger ilavanji said...

ரோசா,

//ஆனால் சிறிதளவு கூட விமர்சனப் பார்வையின்றி வரும் பாராட்டுக்களும் பின்னூட்டங்களும்தான் நெளிய வைக்கின்றன//
அந்த பதிவில் பின்னூட்டம் இட்டவர்களில் பெரும்பாலோர் குழலியின் அரசியல் சார்பான கருத்துக்களை எதிர்ப்பவர்கள்தான்! நான் உட்பட...

அவரது மற்ற பதிவுகள் அனைத்திலும்தான் வாதப்பிரதிவாதங்கள்! ஒரு நல்ல முயற்சி ஒன்றை செய்யப்போகிறேன் என்று சொல்லும்போது அந்த முயற்சியை மற்றவர்களும் வரவேற்கும்முறையிலும் அந்த முயற்சிக்கு ஊக்கமளிக்கும் வகையிலும் எழுதப்பட்ட பின்னூட்டங்கள் அவை என்பதுதானே உண்மை!

விசிலடிச்சான்குஞ்சுகள் என்பது பின்னுட்டமிட்ட அனைவரையும் தரமிறக்கிப்பார்க்கும் செயலாகவே எனக்குத்தோன்றுகிறது!

12/07/2005 2:23 AM  
Blogger Arun Vaidyanathan said...

Hi Rosavasanth,
I laughed out loud, when you described 'Paza.Karuppaiya endra thadi maadu kulungi kulungi siriththadhu'. Good post and a detailed analysis of events. I missed the TV program whatever you were quoting..!

Regards,Arun Vaidyanathan

12/07/2005 2:47 AM  
Blogger enRenRum-anbudan.BALA said...

வசந்த்,
மிகத் தெளிவான விளக்கமான ஓர் பதிவு. நன்றி. சன் டிவி நிகழ்ச்சியை பார்க்க முடியவில்லை. ஆனால், நீங்கள் எழுதியதைப் படித்தபோது, அந்தக் குறை நீங்கியது !!!

//'கற்பின் மேன்மையை பேசும் பத்திரிகையில், சம்பந்தமே இல்லாத இடத்தில் பெரியாரின் 'பெண் ஏன் அடிமையானாள்?' பற்றிய குறிப்பு. இவர்களை எல்லாம் ஏதோ மெண்டல்கள் என்று அலட்சியபடுத்த முடியாது. (காக்கைப் பாடினியாரை அப்படி அலட்சியப் படுத்தலாம்.) தமிழ் சமுதாயத்தின் மிக பெரும் சிந்தனைக்கான வெளியை இவர்கள் ஆக்கரமித்திருக்கிறார்கள்
//

யாரைக் குறிப்பிடுகிறீர்கள் ? நக்கீரன் கோபாலையும், வீரப்பன் மனைவியையுமா ?!? இவர்களா ???

12/07/2005 3:04 AM  
Blogger Narain Rajagopalan said...

எனக்கும் இதே எண்ணம்தான். பாமரன், அறிவுமதி போன்றவர்கள் பற்றி எழுதியதோடு முழுமையாக இணைகிறேன். இதற்குப் பொருள் அவர்களை நிராகரிக்கிறேன் என்பது அல்ல. இந்த விஷயத்தில் அவர்களின் கருத்துக்களோடு வேறுபடுகிறேன். பொடிச்சி இதைப் பற்றி என்பதிவில் எழுதியபோதே தமிழ் தேசியம், தமிழர் ஒற்றுமை என்கிற பெயரில் இணைந்த கூட்டத்தின் ஜால்ரா என்று தான் மறுமொழியளித்திருப்பேன். ஏற்கனவே எழுதிவிட்ட அலுப்பினாலும், திருமா தான் எடுத்த முடிவிலிருந்து மாற மாட்டார் என்று உறுதியாக தெரிவதாலும் இந்த கலாச்சார பாஸிச அட்டூழியங்கள் தொடரும். திருமா பற்றி எழுதுவது காமராஜ் சொன்னது போல "எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளாக" மாறி வரும், அதை விட போதையேறிய மட்டையாகவும், அதிகாரத்தின் விளிம்பில் அமர்ந்துக் கொண்டு அகப்பட்டவர்களை அதட்டும், மிரட்டும் ஒரு தலைவனாகத் தெரிகிறார்.

என்.டி.டி.வியில் அந்த பேட்டியினை முழுவதுமாக பார்த்தவன் என்கிற முறையில் சில கருத்துக்கள். முதலில் அங்கு வந்திருந்தவர்கள் கனிமொழி, நீங்கள் குறிப்பிட்ட குமரி அனந்தனின் மகள் (பா.ஜ.க), ஹிந்து என்.ராம், திருமா வளவன், சாருஹாசன், கார்த்திக் சிதம்பரம், எக்ஸ்னோரா நிர்மல், சோ ராமசாமி, சரத் குமார், பெயர் மறந்து போன சில பெண்ணியவாதிகள். திருமா வழக்கம் போல பண்பாடு, கலாச்சாரம் பற்றிய தெரிதல்களைச் சொல்லி, குஷ்பு எப்படி தமிழ் பெண்களை(?!) அவமதித்தார் என்று நீட்டி முழக்கி சொன்னார். சரத்குமார் ஆமாஞ்சாமி போட்டார். ஹிந்து என்.ராம் இதை ஒரு சமூக உளவியல் மனநிலையின் படி பார்த்து மிகவும் கேவலமாக இருக்கிறது என்று குஷ்புவிற்கு ஆதரவளித்தார். சோ ராமசாமியும் குஷ்பு கருத்து சொல்வதற்கு சுதந்திரம் இருக்கிறது என்றும், அவரின் கருத்தில் உடன்பாடில்லை என்றும், ஆனாலும் ஒரு கருத்தினை சொன்னதற்காக அவரை இந்த நிலைக்கு இழுத்திருக்க தேவையில்லை என்றும் சொன்னார். இறுதியாக, சுஹாசினி பற்றிய பேச்சு வந்த போது, நிகழ்வினை நடத்திய சீனிவாசன் ஜெயின் சாருஹாசனின் கருத்தினைக் கேட்ட போது அவர் சொன்னதன் சாரம்சம் இதுதான் "chasity is a personal preference. some do consider it more important. some are not. i dont worry about my daughter, she will manage this by herself. i have said the same thing about virginity & chasity on Doordarshan sometime back. No body questioned me nor sued me. Why there is a double standard to myself and kushpoo? Is it because they are easier targets, and can create more mass media attention."

பதிவில் எழுதியிருந்ததுப் போல திருமா தாங்கள் ஒரு வழக்கும் தொடரவில்லை என்றும், தாங்கள் சட்டத்திற்கு உட்பட்டு தங்களின் எதிர்ப்பினை காட்டினோம் என்று முழு பூசணிக்காவினை சோற்றில் மறைத்தார்.இறுதியில் இதற்கு பிறகு போராட்டங்கள் தொடராது என்று சொன்னார். அவ்வளவுதான் விஷயம். திருமா இன்னமும் இந்த தளத்தினை பார்க்கவில்லை என்று நினைக்கிறேன். ஒரு வேளைப் பார்த்தால் சென்னையில் எகனாமிக் டைம்ஸ் அலுவலகத்திற்கு முன் மறியல் செய்யலாம். பார்க்க - http://talkradio.indiatimes.com/articlelist/137428.cms

12/07/2005 3:08 AM  
Blogger நண்பன் said...

ரோசா வசந்த் -

மிக நீண்ட பதிவு வைத்திருக்கிறீர்கள். (என்னைப் போலவே நீண்ட பதிவு என்றால் பிடிக்கிறது என நினைக்கிறேன்.)

வலைப்பதிவுகளில் சமீபகாலமாகத் தான் இயங்கி வருகிறேன். அதனால் - உங்கள் வலைப்பூவின் முதல் வாசிப்பு இது.

உங்கள் பதிவின் முதல் வாசிப்பிலிருந்து - உங்கள் இயங்கு தளம் எது என்று பிடிபடாவிட்டாலும், முதல் வாசிப்பில் சிலவற்றில் வேறுபட வேண்டி இருக்கிறது.

முதலில் அறிவுமதி, பாமரன் - // ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்திலாவது நாம் உச்சி முகர்ந்திருக்க கூடிய அறிவுமதி, பாமரனின் எழுத்துக்கள் எல்லாம் இத்தனை கேவலமாய் இருக்கக் கூடும் என்றால், அவர்களை விட ஆரோக்கியமாய் இருப்பவர்களின் மூலங்களை நோண்டுவதில் நியாயம் மட்டுமில்லாது அறிவும் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை.// இவர்களின் நிலைபாடு கேவலமாய் இருக்கிறது என்ற கருத்தை உங்களால் சொல்ல முடியும் பொழுது, குஷ்பு கூறிய கருத்துகள் கேவலமாக இருக்கின்றன என்ற தங்களது தரப்பு கருத்தை சொல்ல முனைந்தது எப்படி தவறாகப் போனதாகும்? இவர்களது எழுத்துகள் என்று கூறி அத்தோடு விட்டுவிட்டீர்கள். அந்த எழுத்துகளையும் கொஞ்சம் மேற்கோள் காட்டி இருந்தால் விவாதத்திற்கு உபயோகமானதாக இருந்திருக்கும். ஏனென்றால், இப்பொழுதெல்லாம் பெரும்பான்மையானவை, out of context ஆகத் தான் எடுத்து கையாளப்படுகிறது.

மற்றபடிக்கு சன் டீவி நிகழ்ச்சி பற்றி பெரிய அளவில் கருத்து கூற எதுவுமில்லை. ஏனென்றால் எங்களால் அதைப் பார்க்க இயலவில்லை. எனவே, எதிர் அணியிலிருந்து எழும் ஒரு தலைப் பட்சமான ஒரு அலசலாகவே எடுத்துக் கொள்ளப்படும் உங்கள் வாதங்கள். ஆனால், அந்த நிகழ்ச்சி விட்டு, மற்றவற்றையும் கொஞ்சம் சொல்லியிருக்கிறீர்கள். அவற்றிலொன்று - ஞாநியின் நேர்மை.

குஷ்புவின் ஆதரவாளர். பெண்கள் திருமணமின்றி உடலுறவு கொள்வதை - பாதுகாப்பாக உடலுறவு கொள்வதை - ஆதரிக்கிறார்.

(முன்பு ஆ.வி.யில் அல்லது குமுதத்தில் ஒரு பேட்டி - பெண்களின் கைப்பையில் என்ன வைத்திருக்கிறார்கள் என்று. எல்லாவற்றையும் மேஜையின் மீது கொட்டி, படம் எடுத்து போட்டு, பணம் எண்ணி ஒரு கலாட்டா பண்ணி இருப்பார்கள். இனி, பத்திரிக்கையாளர்கள் அத்தகைய சுதந்திரங்களைப் பெண்களிடம் எடுத்துக் கொள்ளக் கூடாது - ஏனென்றால் - கூடவே சில ஆணுறை பொட்டலங்களையும் வைத்திருக்கக் கூடும். அது தானே பாதுகாப்பு?)

ஆனால், அதே நேர்மையாளர் என்னவெல்லாம் எழுதினார் - பாய்ஸ் படம் வந்த பொழுது?

சுஜாதா, சங்கர் மீது எத்தனை கோபப்பட்டார்? அவர்கள் புகைப்படத்தைத் தாங்கிய குப்பை தொட்டி ஒன்றை வரைந்து 'இங்கே எச்சில் துப்பலாம் - ' என்ற வாசகத்தையும் அதன் மீது போட்டிருந்தார். அதாவது கார்ட்டூன்.

ஏன்? அன்று சங்கரையும், சுஜாதவையும் கொச்சைப்படுத்தினவர் - இன்று ஏன் குஷ்புவுக்கு - கிட்டத்தட்ட எதிரணியின் உறவிற்காக ஏங்கும் கருத்தைப் பிரதிபலித்த - குஷ்புவுக்கு ஆதரவளிக்கிறார்? அன்று சங்கரையும் சுஜாதாவையும் எதிர்ப்பதன் மூலம் அடையாளம் பெற முயன்றார். இன்று குஷ்புவை ஆதரித்து அந்த அடையாளத்தைப் பெற முயல்கிறார். இவரை நேர்மையாளர் என்று நீங்கள் சொல்கிறீர்கள். அப்படியானால், நேர்மையாளன் என்பதன் பொருளென்ன - உங்கள் பார்வையில்?


இந்த நீண்ட பதிவின் உங்கள் நோக்கம் மொத்தமும் அடிபட்டு போய்விடுகிறது - இந்த ஒற்றை வரியில் - // பழ. கருப்பய்யா என்ற தடிமாடு குலுங்கி குலுங்கி சிரித்தது. // உங்கள் நோக்கம் தான் என்ன? வாரியக் கட்டை, துடைப்பம் இவற்றைத் தூக்கிப் பிடித்தது ஆபாசம் என்று கண்டிக்கும் நீங்கள் இப்படிச் செய்யலாமா? இந்த வரியில் ஏதேனும் நியாயம் இருக்கிறதா? பழ கருப்பையா யார் எவர் என்ற விவரம் அதிகம் அறிந்திருக்காத பலருக்கு இது வியப்பாக இருக்கும் - உங்களின் இந்த காட்டமான வரிகள். அல்லது இப்படி எழுதுவது, உங்களுக்கு மன ஆறுதலான விஷயம் என்றால் - பின் மற்றவர்களின் நடத்தைகளை விமர்சிக்காதீர்கள். ஏனென்றால் - மல்லாந்து படுத்துக் கொண்டு எச்சில் துப்புவது நல்லதல்ல - துப்புபவருக்கு.

அதே போல, வலைப்பதிவில் பலகாலம் இயங்கி வரும் - நீங்கள், மற்றும் குழலிக்கும் ஆயிரத்தெட்டு மனவருத்தங்கள், கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அதை நீங்கள் நேரிடையாக மோதி தீர்த்துக் கொள்ளுங்கள். ஆனால், பின்னூட்டமிடுபவர்களையெல்லாம் - விசிலடிச்சான் குஞ்சுகள் என்று சொல்லும் பொழுது திகைக்க வைக்கிறது. நானும் அதில் பின்னூட்டமிட்டவன் தான். கிட்டத்தட்ட முதல் பதிவாக இருக்கலாம் - குழலியின் வலைப்பூவில். அவர் கூறிய கட்டுரைத் தொடரை வரவேற்றிருந்தேன். எழுதுவதை ஆதாரங்களின் துணை கொண்டு எழுதுங்கள் என்று பின்னூட்டமிட்டிருந்தேன். கிட்டத்தட்ட எழுதியவர்கள் அத்தனை பேருமே அதை வரவேற்று எழுதியிருந்தார்கள். ஒரு வித்தியாசமான முயற்சியில் இறங்குபவரை ஆதரித்து பின்னூட்டமிடுவதில் என்ன தவறு கண்டுவிட்டீர்கள்.

நீங்களே குறிப்பிட்டிருக்கிறீர்கள் - குழலியுடன் எனக்கு பல வருத்தங்கள் இருந்தாலும் - ஒரு ஆவணப்படுத்துதல் - ஒரு வரலாற்று முயற்சி என்ற வகையில் அவரது அந்தப் பதிவை வரவேற்கிறேன் என. அதை நீங்கள் அவரது பதிவிற்கே சென்று பின்னூட்டமிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால், அதை நீங்கள் செய்யாது, அவ்வாறு நேர்மையாக செய்த பின்னூட்டமிட்டவர்களின் நேர்மையைச் சந்தேகித்தது - அல்லது அவ்வாறு கருத இடம் கொடுத்தது - சரியல்ல, நண்பரே...

மேலும் முடிக்கும் முன் -

வாய் தவறியதாக நீங்களே குறிப்பிடும் அந்த சரத்குமாரின் 'கம்யூனிட்டி பேக்-கிரவுண்ட்'

அதைப் பற்றி ஒரு பாட்டம் திட்டி எழுதுகிறீர்கள். ஆனால், 'என்னிடம் கேட்டிருந்தால் கிழித்திருப்பேன்...' என்ற அடாவடியான வாக்கியத்திற்கு நற்சான்றிதழ் கொடுக்கிறீர்கள். என்ன சொல்வது.

//சரத்குமார் சொன்ன ஒரு விஷயத்தை பார்வையாளர்கள் பலர் கவனித்து இருக்க மாட்டார்கள். தனக்கு எஸ்.எம்.எஸ் அனுப்புவதன் குற்றப் பிண்ணணியை விளக்கும்போது, "நான் ஒரு படிச்சவன், எனக்குன்னு ஒரு ஸ்டேட்டஸ் இருக்கு, ஒரு கம்யூனிட்டி பேக்கிரவுண்ட் இருக்கு.." என்று சொல்லிகொண்டு போனார். வாய் தவறி சொல்லிவிட்டது புரிந்ததோ என்னவோ, அடுத்தமுறை சொல்லவில்லை. "கம்யூனிடி பேக்கிரவுண்ட்" என்பது ஜாதியை குறிக்கிறது என்று எல்லோருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன்.//

அடக்கடவுளே!!!

இப்பொழுது கம்யூனிட்டி என்ற வார்த்தைக்கு நீங்கள் என்ன அர்த்தம் கொடுக்கிறீர்கள்? சாதியப் பின்னணி என்றா? சாதிகளைக் குறிப்பிட caste என்ற சொல்லைத்தான் உபயோகிக்கிறார்கள். கம்யூனிட்டி என்பதல்ல. கம்யூனிட்டி என்பது சாதியைக் குறிக்கும் சொல்லல்ல. சமூகம் என்பதைத் தான் குறிக்கும். கம்யூனிட்டி பாக்-கிரவுண்ட் என்பது சமூகத்தில் தனக்கு இருக்கும் நிலை - நற்பெயர் இவற்றைத் தான் குறிக்குமே தவிர - நீங்கள் குறிப்பிடும் சாதியத் திமிரை அல்ல.

ஒரு விமர்சகன் தன் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை தான் விமர்சிக்கும் கருத்தின் மீது ஏற்றிக் கூறக்கூடாது.

இந்த விதியை வைத்துக் கொண்டு பார்க்கும் பொழுது - உங்களுடைய சொந்த விருப்பு வெறுப்புகளை வைத்துக் கொண்டு, மொத்த நிகழ்வுகளையும் எடை போடுகிறீர்கள் - ஒரு குறிப்பிட்ட சிலரின் பாராட்டுதல்களுக்காக மட்டும். அது தான் உங்கள் நோக்கம் என்றால் - உங்கள் நோக்கம் நிறைவேறி விட்டது என்றே அர்த்தம். இல்லை - கொஞ்சமேனும் எதிரணியின் கருத்து சுதந்திரத்தை மதிக்கவும், அவர்கள் சார்பான வாதங்களின் நியாயத்தையும் உங்கள் பார்வையில் அலச வேண்டும் என்பதான நோக்கத்தில் எழுதினீர்கள் என்று எண்ணுவீர்களானால், இந்தப் பதிவு - ஒரு தோல்வியே.

12/07/2005 5:22 AM  
Blogger SnackDragon said...

//இப்பொழுது கம்யூனிட்டி என்ற வார்த்தைக்கு நீங்கள் என்ன அர்த்தம் கொடுக்கிறீர்கள்? சாதியப் பின்னணி என்றா? சாதிகளைக் குறிப்பிட caste என்ற சொல்லைத்தான் உபயோகிக்கிறார்கள். கம்யூனிட்டி என்பதல்ல. கம்யூனிட்டி என்பது சாதியைக் குறிக்கும் சொல்லல்ல. சமூகம் என்பதைத் தான் குறிக்கும். கம்யூனிட்டி பாக்-கிரவுண்ட் என்பது சமூகத்தில் தனக்கு இருக்கும் நிலை - நற்பெயர் இவற்றைத் தான் குறிக்குமே தவிர - நீங்கள் குறிப்பிடும் சாதியத் திமிரை அல்ல. //

அடக்கடவுளே!!!

12/07/2005 6:02 AM  
Blogger Sundar Padmanaban said...

ரோசா,

நீங்கள் இதை ஆறு பதிவுகளாகப் போட்டிருக்கலாம்.!

அளவுகடந்த அடாவடித்தனங்களைச் செய்வது கடைநிலைப் பொதுஜனம் என்றால்கூட பரவாயில்லை. அதன் வீச்சும் பாதிப்பும் கட்டுக்குள் அடங்கிவிடும். அல்லது அடக்கப் படும். ரவுடித் தனங்களைத் தலைவர்களே முன்னின்று நடத்தும்போது அவர்களது ஆட்டுமந்தைத் தொண்டர்களிடம் என்ன எதிர்பார்க்க முடியும்?

வல்லான் வெல்வான் என்று உடல் பலத்தைக் காட்டி கைகளை முறுக்கி மூலையில் ஒடுங்க வைக்கும் இந்த முரட்டுத் தனத்தைப் பார்த்தால் மிகக் கவலையாக இருக்கிறது. அதிர்ச்சியாகவும் இருக்கிறது.

சாருஹாஸன் சொன்னதாய் பாஸ்டன் பாலாஜி குறிப்பிட்டது போல, குஷ்பு சொன்ன கருத்தையே பல முறை பல பேர்- குறிப்பாக ஆண்கள் - முன்பே சொன்ன போதெல்லாம் காணாமல் போயிருந்த கலாசாரக் கொம்புகளெல்லாம் இப்போது சாராயம் குடித்த ஜல்லிக்கட்டுக் காளை போல ரகளை பண்ணிக்கொண்டிருப்பது பயங்கரக் கேவலமாய் இருக்கிறது. உடல் ரீதியாகப் பலவீனமாக இருக்கும் மனைவியை தலைமுடியைப் பிடித்து தெருவுக்கு இழுத்துக்கொண்டு வந்து வசைச் சொற்களை வீசி, அடித்து மிதிக்கும் குடிகார நாய்களின் அதே ஆணாதிக்க அடக்கு முறைத் தனத்தை 'எதிர்ப்பு' என்ற பெயரில் நடந்தேறிக்கொப்ண்டிருக்கும் அசிங்கங்களில் பார்க்க முடிகிறது.

அவனவன் கழுத்தளவு நீரில் உடைமைகளையும் உயிரையும் பாதுகாத்துக்கொள்ள பரிதவிக்கும் வேளையில் 'தொண்டர் படை' என்ற மாபெரும் மனித சக்தியை விளக்குமாறு, செருப்பு எடுத்துக் காட்டுவதிலா இவர்கள் செலவழிக்க வேண்டும்?

எரிகிற கொள்ளியில் பிடுங்கிய வரை பப்ளிசிடி லாபம் என்ற கணக்கு தவிர வேறு எந்த நோக்கமும் எனக்குப் புலப்படவில்லை.

கலாசாரம் என்ற பெயரில் இவர்கள் முன்னிறுத்துவது தான் உண்மையான தமிழ்க் கலாசாரம் என்று மற்றவர்கள் நம்பிவிடக் கூடிய அபாயத்தை நினைத்தால் கதிகலங்குகிறது.

சட்டம் ஒழுங்கு என்று சமூகத்தைக் கட்டிக் காக்கும் சங்கதிகளில் குறைந்த பட்ச நம்பிக்கை கூடக் காட்டாமல் இப்படி வன்முறையைத் தூண்டிவிடும் இந்த துர்சக்திகளை நன்றாகவே உங்கள் மொழியில் 'காய்ச்சியிருக்கிறீர்கள்'.

சன் டிவியின் ஆபாச நிகழ்ச்சியைப் பற்றியும் நன்றாகவே அலசியிருக்கிறீர்கள். இவ்வளவு விவரமாகச் சொல்லியிருக்காவிட்டாலும், கட்சிச் சானல்களில் நிகழ்ச்சிகள் எந்த மாதிரியாக இருக்கும் என்று உள்ளங்கை நெல்லிக் கனியாக, பார்க்காமலேயே ஊகித்துக் கொள்வதும் எளிதுதான்.

குழலியின் பதிவுகள் பற்றியும் விசிலடிச்சான் குஞ்சுகள் பற்றியும் நீங்கள் எழுதியிருப்பது உங்கள் கருத்து. இதில் அபிப்ராய பேதங்களுக்கு நிறைய இடமிருக்கிறது.

நன்றி.

சுந்தர்
விசிலடிச்சான் குஞ்சு.

12/07/2005 7:17 AM  
Blogger Thangamani said...

வசந்த்:

நீண்ட பதிவுக்கும் அது சொல்லும் விசயங்களுக்கும் நன்றி. திருமாவின் நிலைப்பாடும், பாசிச அணுகுமுறையும் எந்த தேவரீய (மேற்சாதீய) வன்முறைக்கும் குறைவானதல்ல என்ற அதிர்ச்சியான உண்மை எனக்குள் பெரும் நம்பிக்கை இழப்பை ஏற்படித்தியபோதுதான் இந்தப்பதிவை (http://bhaarathi.net/ntmani/?p=174) எழுதினேன். உண்மையில் இந்தக் கற்பு, உடல் பற்றிய பெரும் பதிவொன்றினை எழுதவேண்டிய விருப்பையும், அதை முறிக்கும் நம்பிக்கையின்மையினையும் சேர்ந்தே பலகாலமாக சுமக்கிறேன்.
நீங்கள் சொன்னது போல அறிவுமதி, பாமரன் போன்ற பொதுவாக நான் சிலதளங்களில் அங்கீகரிக்கும் இவர்களும் இப்படியானது நம்பிக்கையின்மையினை அதிகப்படுத்துகிறது. முதலில் இதை தங்கர்-குஷ்பு-விஜகாந்த் அரசியலுக்கான எதிர்வினையோ என்று 1% நம்பிக்கையைத் தக்கவைத்திருந்ததும் காணமற் போய் நாட்களாகிறது.

உங்கள் நம்பிக்கையின்மையை மீறி உங்களை எழுதச் செய்திருப்பது உங்கள் கோபம் தான். அதற்கு நன்றி.

என்னுடைய குழலிக்கான பின்னூட்டுக்கு நான் விளக்கமளிக்க விரும்புகிறேன். இப்போது நேரமில்லாததால் சில நாட்களில் எழுதுகிறேன். நன்றி.

12/07/2005 7:29 AM  
Blogger -L-L-D-a-s-u said...

செருப்பு தூக்கும் கலாச்சாரத்தை குறைகூறுவது நீங்கள் ? ம்.. சிரிப்புதான் வருகிறது . அடுத்தவர்களின் நேர்மையை குடையாது உங்களுடைய நேர்மையையும் கொஞ்சம் அலசுங்கள் . கலச்சாரக்கிறுக்கர்களின் செருப்பு கலாச்சாரத்தை குறை கூற உங்களுக்கும் உம்முடைய விசிலட்ச்சான் குஞ்சுகளுக்கும் அருகதை இல்லை .

12/07/2005 8:05 AM  
Blogger ஐயர் said...

அடத்தூ.. ரோசாவெல்லாம் ஒரு மனிதன் என்று மதித்து நீங்கள் எல்லாம் வந்து படிப்பதோடு பின்னூட்டமும் இடுகிறீர்களே? உங்களைச் சொல்லனும். என்னையும்தான்.

செருப்பால் அடிப்பேன், சிம்பு அடிப்பகுதியை அறுப்பேன் என்று சொன்னதெல்லாம் மறந்து விட்டீர்களா? எஸ்கேயும் டோண்டுவும் நாராயணனும் பத்ரியும் சென்னையில் கொடுத்த விருந்தில் மயங்கி ஏதோ உளறுவதாக நான் நினைக்கிறேன்.

ஜப்பான்லேர்ந்து நிப்பானுக்கு வந்து சம்சா துன்னுட்டு ஏதோ உளறுது... குழலியின் பதிவுக்கு கால் தூசி பெறுமா இது, பிகேஎஸ் மற்றும் ரவிசீனிவாஸ் எல்லாம்?

12/07/2005 12:13 PM  
Blogger ஜோ/Joe said...

ரோசா,
நீங்க சொல்லுறதெல்லாம் சரி தான் .ஆனால் வார்த்தை பிரயோகங்களை பற்றி பேசுவதும் ,நாகரீகப் பேச்சுக்கு மற்றவர்களுக்கு அறிவுரை கூறுவதற்கும் நீங்கள் எந்த வித முன்னுதாரத்துடன் நடந்து கொண்டதில்லை என்பது தான் என் கருத்து ..ஒரு வேளை நீங்கள் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தால் எப்படி பேசியிருப்பீர்கள் என்று யோசித்தேன் 'குமட்டல்' 'வாந்தி' .ஒண்ணுக்கடிப்பது' ,'தடி மாடு' இப்படித்தானா உங்கள் பேச்சு இருக்கும் .அல்லது உங்கள் பேச்சுக்கும் எழுத்துக்கும் சம்பந்தம் இருக்காது என்கிறீர்களா?

உங்களுடைய விசிலடிச்சான் குஞ்சு அருண் வைத்தியநாதன் இங்கு குறிப்பிடுகிறார்
''I laughed out loud, when you described 'Paza.Karuppaiya endra thadi maadu kulungi kulungi siriththadhu'."..பழ கருப்பையாவை ரோசா தடி மாடு என்று சொன்னது கேட்டு அருண் வைத்தியநாதன் என்ற எருமை மாடு குலுங்கிக் குலுங்கி சிரித்தது என்று சொன்னால் அதற்கும் அவர் சிரிப்பாரா?

12/07/2005 12:40 PM  
Blogger பினாத்தல் சுரேஷ் said...

காணாமல் போயிருந்த நாட்களுக்கும் சேர்த்து ஒரு நல்ல நீண்ட பதிவை இட்டதற்கு நன்றி ரோ வ. சன் நியூஸ் நிகழ்ச்சி, பார்க்காமல் போனது என் ரத்த அழுத்தத்துக்கு நல்லதாகிவிட்டது எனத் தெரிகிறது.

பின்னூட்டங்கள் பல சிரிக்க வைக்கின்றன. சிம்புவைப்பற்றி எழுதியதால் ரோ வ கருத்துக்கூறும் தகுதி இழக்கிறார், பாய்ஸை கீழ்த்தரமாக விமர்சித்ததால் ஞானி தகுதி இழக்கிறார், தடிமாடு என்பதை ரசித்ததால் அருண் தகுதி இழக்கிறார்... யார்தானய்யா தகுதி உள்ளவர்? இருவேறு விவகாரங்களில் இருவேறு கருத்தைக் கொள்ளவே கூடாதா? சொல்லப்பட்டதை விட்டு சொல்பவனைப் பிடித்துக்கொண்டு தொங்கும் குணம் 800 பேர் உள்ள இங்கேயே இப்படி தலைவிரித்தாடும்போது 6.5 கோடியை நினைத்தால் பயம்தான் வருகிறது!

12/07/2005 1:37 PM  
Blogger ஜோ/Joe said...

//தடிமாடு என்பதை ரசித்ததால் அருண் தகுதி இழக்கிறார்//
சுரேஷ்,
அருண் தகுதியிழப்பதாக நான் சொல்லவேயில்லை .தயவுசெய்து திரிக்க வேண்டாம் .அவருடைய ரசிப்புத் தன்மையையும் ,நகைச்சுவை உணர்வும் குறித்த சந்தேகத்தைத் தானே கேட்டேன்? அவருக்கு ரொம்ப தான் நகைச்சுவை உணர்வும் ,ரசிப்புத் தன்மையும் இருந்தால் இதற்கும் சிரித்து விட்டு போகட்டுமே?

12/07/2005 1:51 PM  
Blogger ஜோ/Joe said...

//சிம்புவைப்பற்றி எழுதியதால் ரோ வ கருத்துக்கூறும் தகுதி இழக்கிறார்//
சுரேஷ்,
மீண்டும் திரிக்க வேண்டாம் .ரோசா கருத்து கூறும் தகுதியை இழப்பதாக குறைந்த பட்சம் நான் சொல்லவில்லை .கருத்தை நாகரீகமாக சொல்ல வேண்டும் என்று மற்றவர்களுக்கு சொல்லும் தகுதியை ரோசா தன் முந்தைய எழுத்துக்கள் மூலம் பெற்றிருக்கிறாரா என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

12/07/2005 1:58 PM  
Blogger மாமன்னன் said...

Honor crimes aka slitting of throat of young muslims girls for having boyfriend

வெகு விரைவிலேயே நாம் தங்கத்தமிழ்நாட்டில் பாய்பிரண்டு வைத்துக்கொண்டதற்காக கழுத்து அறுக்கப்பட்டு குடும்ப மானம் காப்பாற்றப்படப்போவதை பார்க்கப்போகிறோம்..

12/07/2005 2:14 PM  
Blogger ஜோ/Joe said...

ரோசா அவர்களே,
மீண்டும் தெளிவு படுத்த விரும்புகிறேன் .நீங்கள் கூறியுள்ள கருத்துக்களில் பலவற்றை நான் ஏற்றுக் கொள்கிறேன் .ஆனால் நீங்களே உங்கள் எழுத்தில் கடைபிடிக்காத ஒன்றை மற்றவரிடம் குறை சொல்லுவது தான் எனக்கு புரியவில்லை ..அதற்கு அருண் அவர்களின் வினை (எனக்கு பழ கருப்பையாவை பிடிக்கா விட்டாலும்) எரிச்சலைக் கொடுத்தது.

12/07/2005 4:37 PM  
Blogger ROSAVASANTH said...

http://kuzhali.blogspot.com/2005/12/blog-post_06.html#c113394557629320767

மதிப்பிற்குரிய இராம.கி ஐயா அவர்களுக்கு,

நீங்கள் மறைமுகமாக என்னை பற்றி எழுதிய கருத்துக்களுக்கு மிகவும் நன்றி. என் கருத்தை நேரடியாக எதிர்கொண்டு எழுதப்படும் தர்க்கத்தையோ, விமர்சனத்தையோதான் என்னால் எதிர்கொள்ள முடியும். உங்களின் இந்த பின்னூட்டம் அந்த வரிசையில் சேராதது மட்டுமில்லாது, நான் உங்களிடம் இருபதாக நினைத்துகொண்டிருந்த சில வெளிப்படையான குணங்களுக்கு நேர்மாறாகவும் இருப்பது வருத்தமளிக்கிறது.

ஆனால் நான் ஒரு போதும் உங்களை தமிழ் பாசிஸ்ட் என்று கருதியதில்லை. இப்போதும் கருதவில்லை. 'தமிழ் எனது மூச்சு, ஆனால் அதை பிறர் மீது விடமாட்டேன்' என்ற வரிகளுக்கு உண்மையான உதாராணமாக உங்களை ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். நீங்கள் இந்த அளவு இறங்கியதில் ஏற்பட்ட வருத்தத்தில் இதை எழுதுகிறேனே ஒழிய, பதில் சொல்லும் அளவிற்கு இதில் எந்த பொருட்படுத்தும்படியான கருத்தும் இல்லை என்பது என் எண்ணம். நன்றி!

12/07/2005 6:34 PM  
Blogger ROSAVASANTH said...

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி. எல்லாவற்றிற்கும் பதில் சொல்வது இப்போது பல காரணங்களால் சாத்தியமில்லை. தெளிவுக்காக சில விஷயங்கள்.

'விசிலடிச்சான் குஞ்சுகள்' என்று எழுதியதாக பலர் வருத்தப் பட்டதனால் எனது மன்னிப்புகள்! நான் 'விசிலடிச்சான் சூழலில்' என்றுதான் எழுதியிருக்கிறேன். இரண்டு வார்த்தைக்கும் வித்தியாசம் இருப்பதாக நினைத்துத்தான் எழுதினேன். குழலியின் பதிவிற்கு எந்தவித உருப்படியான விமர்சனமும் வரவில்லை என்பதுதான் உண்மை. குழலி இந்த விஷயம் குறித்து எழுதினால், அது ஒரு சார்பாக இருக்கும் என்பது அனைவருக்கும் நன்றாக தெரியும். அதை பொதுவாய் சொல்லிவிட்டு, இந்த 'முயற்சியை' வரவேற்றிருந்தால் கூட வேறு விஷயம். நான் வாசித்த வரையில் யாருக்கும் எந்த விமர்சனமும் தோன்றவில்லை என்றுதான் தெரிகிறது. ஆனாலும் 'விசிலடிச்சான் சூழல்' என்று சொல்வது தரும் தவறான பொருளை ஒப்புகொண்டு, அந்த வார்த்தையை திரும்ப பெருவதில் எனக்கு எந்த தயக்கமில்லை. மன்னிக்கவும்!

அதுசரி, குழலி பற்றி நான் எழுதிய விமர்சனத்தையும் அப்படியே கணக்கில் கொண்டு அது குறித்தும் ஏதாவது சொல்வதுதானே நியாயமாய் இருக்கும்! அதில் என்ன பிரச்சனை என்று, 'விசிலடிச்சான் குஞ்சுகளை' குறை கூறும் யாரும் பேசாதது தற்செயலானது அல்ல.

பழ. கருப்பய்யாவை 'தடிமாடு' என்று சொன்னதில் எந்த வருத்தமும் இல்லை, மாற்ரமும் இல்லை. ஆனால் அதை ஒரு ஜோக்காகவோ, அருண் உட்பட யாரும் சிரிக்க வேண்டும் என்றோ சொல்லவில்லை. நக்கீரன் கோபால் மிக மோசமாக ஒருவரின் சொந்த வாழ்க்கையை இழிவாக பேசி தன் பேச்சை துவங்குகிறார். அப்போது பழசு சிரித்த சிரிப்பு மிக மிக ஆபாசமானது. அந்த ஆபாசத்தை 'தடிமாடு' என்ற பிரயோகம் கூட இல்லாமல் விளக்குவது மிகவும் கடினம். அந்த காட்சியை வர்ணிக்க பொருத்தமான வார்த்தையாக நினைத்தே எழுதினேன். அந்த வார்த்தை கூட இல்லாமல் வெத்தாய் கண்டனம் செய்வதில் எனக்கு நம்பிக்கை இல்லை.அதனால் எந்த வருத்தமும் இல்லை. மீண்டும் ஒரு விஷயத்தை எல்லோருக்கும் சொல்லவேண்டுமெனில், பழ. கருப்பையாவும், மற்றவர்களும் குஷ்பு, நடிகைகள், பெண்ணியவாதிகள் இவர்களை அனைவரை பற்றியும் கேவலமாக பேசியதில் ஒரு சதவிகிதத்தை கூட, 'தடிமாடுகள்' என்ற பிரயோகத்துடன் ஒப்பிட முடியாது.

தங்கமணி மீது, அவர் எழுத்துக்கள் மீது
எனக்கு இருந்த மரியாதை எந்த அளவிலும் குறையவில்லை. அவருக்கு *கூட* குழலி எழுதியதன் ஆதாரப்பிரச்சனை புரியவில்லை எனும்போது, அவரை பற்றி நல்லதாக சொல்வதாகவே எண்ணுகிறேன். அவரின் விரிவான பதிலை எதிர்பார்க்கிறேன்.

பிகேஎஸ் ஆமாம், அவர் வழக்கறிஞர் அஜிதாதான். நான் முன்னால் இவரை பற்றி அறிந்திருக்கவில்லை.


நண்பன், அறிவுமதி பாமரன் எழுதியது குறித்து வேறு சந்தர்ப்பத்தில் எழுதும் எண்ணம் உள்ளது. மேலும் சாரு உட்பட ஒரு பெரிய அளவில் பலரை பற்றி எழுதும் கட்டாயமும் உள்ளது. அதனால் சிலவற்றை பொதுவாகத்தான் எழுத முடியும். உங்கள் தகவலுக்கு ஒரு விஷயம். 'கம்யூனிடி' என்று தமிழகத்து வழக்கில் சாதிதான் குறிப்பிடப்படும் என்று அனைவருக்கும் தெரியும். இப்படி டிக்ஷ்னரியை பார்த்து அர்த்தம் கொள்வீர்கள் என்றால் பேசுவது ரொம்ப கடினம். சில நாட்கள் தமிழகம் வந்து முன்பின் தெரியாதவருடன், 'கம்யூனிடி' பற்றி பேசி பாருங்கள்.


தாஸ் உங்கள் மீதான அந்த விமர்சனம் அப்படியே இருக்கிறது. இப்போதும் திருமாவளவனை பற்றி அதே வரியை சொல்லும் யாரையும் நிச்சயமாய் ஒரு குறியீடாக 'செருப்பால் அடிப்பேன்' என்றுதான் சொல்லுவேன். எதிர்ப்பும், எதிர்வினைகளும் யாரை நோக்கி என்ன காரணத்திற்காக வருகிறது என்பதை வைத்துதான் எதையும் முடிவு செய்ய முடியும். கொலை செய்வதை குற்றம் என்று சொல்லும் நீங்களும் மற்றவர்களும், அதை ஒரு ராணுவம் செய்யும் போதும், அது வீரப்பனுக்கு நிகழும்போது அதே அனுகுமுறையை வைத்துகொண்டிருக்க மாட்டீர்கள். அதே போலத்தான் எனக்கும் என் அணுகுமுறை.

விரிவாய் மற்ற பின்னூட்டங்களுக்கு பதில் சொல்ல முடியாத நிலமை. தீவிரமான சில சொந்த பிரச்சனைகள், வேலை, பயணம் மற்றும் தொடர்ச்சியான இணைய இணைப்பு இல்லாமை. எல்லாவற்றையும் ஒரு எதிர்கால பதிவில் எதிர்கொள்ளும் எண்ணம் உள்ளது. மீண்டும் பின்னூட்டமிட்ட அனைவருக்கும் மிகவும் நன்றி,

12/07/2005 7:24 PM  
Blogger ROSAVASANTH said...

This comment has been removed by a blog administrator.

12/07/2005 7:33 PM  
Blogger Arun Vaidyanathan said...

ஒரு விஷயத்தைப் படிச்சுக்கிட்டு வரும் போது, நம்மையுமறியாம சில இடங்களுக்கு சிரிக்கறது வழக்கம். அது மாதிரி தான், இந்த தடிமாட்டுச் சிரிப்பும்.
கவுண்டமணி செந்திலை 'டேய் தகரடப்பா மண்டையா'னு சொல்லும் போது, என்ன ஏதுன்னு யோசிக்காம சிரிக்கறது இல்லை...அது மாதிரி தான் இதுவும்.
(இப்போ இந்த கவுண்டமணி-செந்தில் உதாரணத்தை வெச்சுக்கிட்டு, கவுண்டமணித்தனமான பதிவுகள்னு இன்னொரு கிளைக் குசும்பை ஆரம்பிக்கக் கூடாது)
இதை ஆராய்ச்சி அறுவை சிகிச்சை செஞ்சு, யார் யார் எந்த மாடுன்னு வகைப்படுத்தற அளவுக்கு சீரியஸாக வேண்டிய அவசியமில்லை.

- அருண் வைத்யநாதன்

12/07/2005 9:47 PM  
Blogger ilavanji said...

//குழலி இந்த விஷயம் குறித்து எழுதினால், அது ஒரு சார்பாக இருக்கும் என்பது அனைவருக்கும் நன்றாக தெரியும். அதை பொதுவாய் சொல்லிவிட்டு, இந்த 'முயற்சியை' வரவேற்றிருந்தால் கூட வேறு விஷயம். நான் வாசித்த வரையில் யாருக்கும் எந்த விமர்சனமும் தோன்றவில்லை என்றுதான் தெரிகிறது//

குழலியின் பதிவினில் முயற்சியை பாராட்டிய விசில் சத்தங்கள் சில:

G.Ragavan - நாகரீகமாக நியாயமாக விஷயங்களை மற்றவருக்கு எடுத்துச் சொல்வதே சாலச் சிறந்தது. நீங்களும் இந்த வழிக்கு வந்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

ramachandranusha - உணர்ச்சி வசப்படாமல், காழ்ப்புணர்ச்சி காட்டாமல் நடுநிலைமையுடன் செயல் படுங்கள். என்னால் முடிந்த உதவி செய்ய தயாராய் இருக்கிறேன்.

டிசே தமிழன் - அதை வாசித்து கேள்விகள் கேட்க திறந்த வெளியை நீங்கள் வாசிப்பவருக்கு உருவாக்கித் தருவீர்கள் என்று நம்புகின்றேன்

மாயவரத்தான் - ஆனால், வழக்கமான குழலி பார்வையில் அந்த பதிவை எழுதாதீர்கள் - வன்னியர் & ராமதாஸ் மாயையில் பல விபரங்கள் வெளிவராமல் போய் விடும்

இளவஞ்சி - குழலி! நாங்கள் ஏன் அப்படி நினைக்கிறோம் என்று பக்கம்பக்கமாய் எழுத ஆசையாகத்தான் இருக்கிறது! ஆனால் நல்லதொரு முயற்சிக்கான ஆரம்பப்புள்ளியில் அதே விவாதங்கள் வேண்டாமே! நடுநிலையான பதிவுகளோடு அவ்வப்போது எழும் கேள்விகளுக்கு திறந்த மனதுடனான விளக்கங்களையும் எதிர்பார்க்கிறோம்!

APDIPODU - குழலி., நம்மிருவர் இடையே பல விதயங்களில் ஒத்த கருத்து இருந்திருக்கிறது. ஆனால் நீங்கள் போட்ட 'இணைந்த கைகள்' பதிவு மட்டும். சன் டி.வி பிரச்சாரம் போல் இருந்தது. - மற்றபடி முடிந்த விதயங்களை கீரி ஆயாமல் நடுநிலைமையோடு பதிவிடுங்கள் என நானும் கேட்டுக் கொள்கிறேன்.

இவைகளை நீங்கள் படிக்கத்தவறியிருந்தால் நாங்கள் என்ன செய்வது?!

விமர்சிக்கும் நீங்கள் நடுநிலையில்லாமல் எழுதும்போது படிக்கும் நாங்கள் நடுநிலையோடு கருத்துக்கூறவேண்டும் என எப்படி எதிர்பார்க்கிறீர்கள்?
குழலியைப்பற்றிய உங்கள் கருத்துக்களைப்பற்றி எனக்கு எந்தவித விமரிசனமும் இல்லை! கருத்தும் இல்லை! மற்ற விடயங்கள் பற்றிய உங்கள் கருத்துக்களை அறியத்தந்தமைக்கு நன்றி!

12/07/2005 11:49 PM  
Blogger SnackDragon said...

நிறைய - குத்துக்கள் விழுந்துள்ளன். திருமாவுக்காக என்றால் மிக்க மகிழ்ச்சி. இல்லை குழலிக்காகவா ?;-)

12/08/2005 12:21 AM  
Blogger SnackDragon said...

எனக்கு ஒரு சந்தேகம்,
இரண்டு பக்கமுமே எ:கொஞ்சம் , ஆ:கொஞ்சம்னு எழுதியிருந்தால் என்ன சொல்வீர்கள்?
ரெண்டுங்கெட்டான்னா? இல்லை அறிவாளின்னா? :-)

இன்னொரு கொசுறு, எழுதுறவன்/ள் எதுக்கோ எழுதப்போய், வாசிக்கிறவன்/ள் எ/ஆன்னு புரிஞ்சுகிட்டா ,எழுதுறவன்/ள் என்ன செய்யனும்? :-) :-)

12/08/2005 2:24 AM  
Blogger ஜோ/Joe said...

அருண்,
உங்கள் நேர்மையான பதிலுக்கு நன்றி. இது போல பழகருப்பையா சிரித்ததற்கும் காரணங்கள் இருக்கலாம் .எனினும் ,எவ்வகையிலும் உங்களை நான் மனம் நோகச் செய்திருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

12/08/2005 11:42 AM  
Blogger ஜெ. ராம்கி said...

//பல ஆண் தடிமாடுகள் போட்ட காட்டுக் கத்தலில் பலவீனமாகவே தங்கள் கருத்துக்களை முன்வைக்க முடிந்தது.

I second ur comments. Rest of the things, I will be back in Tamil

12/08/2005 2:29 PM  
Blogger ROSAVASANTH said...

இளவஞ்சி,

குழலியின் பதிவில் அவர் எழுதிய விஷயங்களின் மீது, அதன் மொழியின் மீது எனக்கு ஒரு கடுமையான விமர்சனம் இருக்கிறது. அது குறித்து யாருமே பேசாத சூழலில் அதை முன்வைப்பதுதான் என் நோக்கம். அதை முன்வைப்பதில் எழுதுவதற்கு முன்னால் மனதிற்குள் ஒரு முன் திட்டம் இருக்கிறது. ஆனால் கடைசியாய் 'விசில்லடிச்சான் சூழல்' என்று எழுதியதில் எந்த முன் திட்டமும் கிடையாது. எழுதும் போது போகிற போக்கில் வந்து விழுந்த வார்த்தை. எழுதிய அனைவரையும் 'விசிலடிசான் குஞ்சுகள் என்று சொல்லும் எண்ணமும் அதில் கிடையாது. அப்படி சொல்லவும் இல்லை. விமர்சனம் அற்ற ஒரு சூழலை குறிப்பதுதான் என் எண்ணம். அதாவது குழலி எழுதப் போவதாய் அறிவித்துள்ளதை நானும் வரவெற்றாலும், இந்த விமர்சனத்தை முன்வைக்க வேண்டிய கட்டாயத்தை சொல்வதுதான் என் எண்ணம். சொன்ன கருத்தை பற்றி ஒருவர் கூட பேசாமல், ஒற்றை வார்த்தையை பிடித்து தொங்கினால் ரொம்ப கஷ்டம்.

நீங்கள் சொன்ன பின்னூட்டங்கள் கூட எனக்கு விமரச்னமாக படவில்லை. அப்படி அது விசில் இல்லை என்று வைத்துகொண்டாலும், விசில் என்றூ சொல்ல கூடிய பின்னூட்டங்களை காட்டமுடியும். உங்களுக்கே தென்படும். மேலும் சொன்ன கருத்து திசை மாறக்கூடிய ஆபத்தை உணர்ந்து அந்த வார்த்தையை திரும்ப பெற்ற பின்னும், அதை மட்டும் பிடித்துகொண்டு, சொன்ன கருத்து குறித்து பேச எதுவும் இல்லையென்றால் நான் மேலே சொல்லவும் எதுவுமில்லை. கடைசியாக விசில் அடிப்பதன் மீதும்(அது எந்த காரணத்திற்காக இருந்தாலும்) எனக்கு எந்த மரியாதை குறைவும் கிடையாது. உங்கள் கருத்துக்கு நன்றி. கருத்து சொன்ன மற்றவர்களுக்கும் நன்றி.

12/08/2005 4:48 PM  
Blogger மரத் தடி said...

விசிலடிச்சான் குஞ்சுகளாக இருப்பதும் மறுப்பதும் கருத்து சொல்பவரின் சுய உரிமை. அதில் தலையிட உங்களுக்கு அதிகாரம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. சிம்புவின் ஜட்டிக்குள் எல்லாம் கைவிடும் பழக்கம் கொண்ட நீங்கள் இதனைச் சொல்வது மிகவும் வேடிக்கையாக உள்ளது. செருப்பால் அடிக்கும் வல்லமை வாய்ந்த நீங்கள் உங்களை பெரிய இலக்கியவாதி(!) என்று சொல்லிக் கொள்வதில் எனக்கு உடன்பாடில்லை! சாதாரண டீவடைக்கே விலை போகும் உங்களின் கருத்து நகைப்பிற்குரியது. அருண் வைத்யநாதன் பழ.கருப்பையாவை தடிமாடு என்றதற்கு குலுங்கி இருக்கிறார். சோவை ஒருவேளை நீங்கள் எருமைமாடு என்றால் அவர் குலுங்காமல் சீற்றம் கொண்டிருப்பார். ஏன் எனில் சோ ஒரு அவாள்.

12/08/2005 5:42 PM  
Blogger ROSAVASANTH said...

சுதர்சன், உஷா நன்றி.

நேசக்குமார், ஒரு பதிவு எழுதி, வாசிப்பவர்களை மனதில் வைத்து மாற்றங்கள் செய்வதற்கு மிகுந்த நேரமெடுக்கிறது. அதற்குள் விஷயம் பழசாகி போய் விடுவதால் எழுதியவுடன் உள்ளிடும் கட்டாயம் உள்ளது. அடுத்த முறை நீங்கள் சொன்னதை மனதில் கொள்கிறேன். கருத்துக்கு நன்றி.

கல்வெட்டு, கார்திக், பிகேஎஸ், ஜெய்ஸ்ரீ, அருண் நன்றி.


பாலா, நக்கீரன் கோபாலைத்தான் குறிப்பிட்டேன். நன்றி.

நாராயணன், உங்கள் கருத்துக்கும் மேற்படி தகவல்களுக்கும் நன்றி. சாருஹாஸன் மேலும் சட்டம் பெண்கள் சார்பாக இருப்பதை பற்றி பேசியதாக கேள்விபட்டேன். முடிந்தால் மேல் விவரம் தரமுடியுமா?

நண்பன், மற்ற விஷயங்கள் குறித்து பிறகு பேசும் எண்ணம் உள்ளது. ஞாநி பற்றி நீங்கள் சொல்லும் சில விமரிசனங்களை ஏற்றுகொள்கிறேன். ஞாநி கண்மூடித்தனமாக பாய்ஸ் படத்தையும், சுஜாதை சங்கரை எதிர்த்ததையும் நான் முன்னமே எதிர்த்து, அது குறித்து ஓரளவு நீண்ட விவாதம் திண்ணை மற்றும் பதிவுகளில் நடந்துள்ளது. உங்களின் கருத்து குறித்து பின்னால் மீண்டும் எழுதுகிறேன். ஆனால் நான் சரத்குமார் வாய் தவறி 'கம்யூனிடி' பற்றி பேசியதற்கு திட்டவேயில்லை. நாளை சரத்குமார் ஒருவேளை "நோ, நோ, நான் அப்படி சொல்லவே இல்லையே" என்று சொல்லலாம். அல்லது வாய்தவறியோ, வேறு எதையோ சொல்ல நினைத்தோ கூட சொல்லியிருக்கலாம். அது அத்தனை முக்கியமில்லை. அதை முன்வைத்து வேறு ஒரு விஷயத்தை சொல்வதுதான் என் நோக்கம். கருத்துக்கு நன்றி.

சுந்தர், நன்றி. உங்களையும் சேர்த்து யாரையும் 'விசிலடிச்சான் குஞ்சு' என்று சொல்லவில்லை என்று சும்மாவேனும் மீண்டும் சொல்கிறேன்.

தங்கமணி, உங்கள் பதிவை ஆவலுடன் எதிர்பார்கிறேன். வெறும் வார்த்தைகளை பிடித்து தொங்காமல், கருத்தையும் அதன் நோக்கத்தையும் நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று தெரியும். மாறுபடும் விஷயங்களை எழுதுங்கள். நன்றி.

ஜோ, உங்கள் விமர்சனத்திற்கு நன்றி. அதன் உள்ளர்தத்தை புரிந்துகொள்கிறேன். உங்கள் பரிந்துரையை முயற்சிக்கிறேன். ஆனால் சில நேரங்களில் இயற்க்கையாய் வந்து சேரும் வார்த்தைகளை மாற்றிகொண்டு எழுதுவது எனக்கு போலித்தனமாய் படுகிறது. அதை செய்வது கஷ்டமாகவும் உள்ளது. இன்றுவரை கருத்து வேறுபாடு காரணமாக அல்லாமல், மற்றவர்களை பற்றி கேவலமாக பேசாத யாரையும் அளவுக்கு மீறி தாக்கியதாக எனக்கு தோன்றவில்லை,ஒருவேளை அப்படி உணர்ந்தால் மாற்றிகொள்ளவோ, மன்னிப்பு கேட்கவோ தயங்கியதில்லை என்று என்னை பற்றி எனக்கு எண்ணம். ஆனாலும் நீங்கள் சொன்னதை முயற்சிக்கிறேன். நன்றி.

சுரேஷ், ஆரோக்கியம், ரஜினி நன்றி.

12/08/2005 7:42 PM  
Blogger enRenRum-anbudan.BALA said...

ஜோ,

பதிவுக்குச் சம்மந்தமில்லா ஒன்றைப் பற்றி பேசுவதற்கு மன்னிக்கவும்.

//ஆனால் நீங்களே உங்கள் எழுத்தில் கடைபிடிக்காத ஒன்றை மற்றவரிடம் குறை சொல்லுவது தான் எனக்கு புரியவில்லை //

//ஆனால் வார்த்தை பிரயோகங்களை பற்றி பேசுவதும் ,நாகரீகப் பேச்சுக்கு மற்றவர்களுக்கு அறிவுரை கூறுவதற்கும் நீங்கள் எந்த வித
முன்னுதாரத்துடன் நடந்து கொண்டதில்லை என்பது தான் என் கருத்து //

இப்படி எடுத்துரைக்கும் நீங்கள், நான் குழலியின் ஏதோ ஒரு பதிவில், தமிழ் பாதுகாப்பு இயக்கத்தின் நடவடிக்கைகளை கண்டனம்
செய்தபோது, "தன்னால் பின்பற்ற இயலாத ஒன்றைப் பிறர் மீது திணிக்க நினைப்பது தவறானது, அது எதிர்வினையையே அதிகம்
ஏற்படுத்தும்" என்ற தொனியில் ராமதாஸ் அவர்களை விமர்சித்தபோது, "ராமதாஸ் 'உங்கள் அம்மாவை நேசியுங்கள்' என்றால் அதையும்
இப்படித் தான் எதிர்ப்பீர்களா?" என்று என்னை 'பயங்கரமாக மடக்கி', அதன் தொடர்ச்சியாக பெரிய விவாதம் நடந்தது !! இப்போது நீங்கள் பேசியது நான் அப்போது கூறியதை எதிரொலிப்பதை (ஆமோதிப்பதை) போல் உள்ளது கண்டு மிக்க மகிழ்ச்சி !!!!

என்றென்றும் அன்புடன்
பாலா

12/08/2005 10:11 PM  
Blogger ROSAVASANTH said...

//ஒரு சில சமயங்களில் மட்டுமே கோபப் படவேண்டும் என்பதற்காகவே நீங்கள் வலிந்து கோபப் படுகின்றது மாதிரி தோன்றுவதுண்டு.//

நேசக்குமார், உங்கள் விமர்சனத்திற்கு நன்றி. இப்படி தோன்றக்கூடாது என்று ஒரு ஜாக்கிரதை உணர்வை கொள்வதும் உண்டு. அதே நேரம் ஒருவேளை அது நம்மை மீறி, நாம் அறியாமல் உண்மையாகவும் இருந்தால் எதுவும் செய்ய முடியும் என்று தோன்றவில்லை. நன்றி.

12/08/2005 11:36 PM  
Blogger ஜெ. ராம்கி said...

ஒரு விஷயம் எனக்கு புரியவே இல்லை. சர்ச்சையில் சிக்கியிருப்பவர்கள் எல்லோருமே அந்தந்த துறைகளில் பெரிய அளவில் ஜொலிக்க முடியாமல் அனாதைகளாக ஆகிவிட்டவர்கள். அரசியலாகட்டும், சினிமாவாகட்டும் ஏன் பத்திரிக்கைத்துறையே ஆகட்டும். சம்பந்தப்பட்டவர்கள் எல்லோருமே ஓரங்கட்டப்பட்டவர்கள்தான். இவர்களின் பேச்சில் அர்த்தமிருக்கிறதோ இல்லையோ இப்படியொரு முக்கியத்துவம் தேவைதானா? எனக்கு புரியவில்லை.

12/09/2005 3:17 AM  
Blogger ஜோ/Joe said...

பாலா,
உங்கள் கேள்வி மேலோட்டமாக பார்க்கும் போது சரியான கேள்வியாக தெரிந்தாலும் ,ராமதாஸ் விடயத்தில் இன்னும் நீங்கள் என் நிலைப்பாட்டை புரிந்து கொள்ளவில்லை என்பதே உண்மை .தமிழைப் பாதுகாக்க வேண்டும் என்பது தமிழர்களுக்கு இயற்கையாகவே இருக்க வேண்டிய எண்ணம் .அந்த உணர்வை ராமதாஸ் சொல்லித்தான் நான் பெறவேண்டிய அவசியம் இல்லை..அல்லது ராமதாஸ் என்ற தகுதியில்லாதவர் சொல்லிவிட்டார் என்பதற்காக அந்த கருத்தை புறக்கணிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை .உங்களைப் போன்ற சிலர் ராமதாஸ் சொல்லிவிட்டார் என்பதற்காக அந்த கருத்தையே கேலி செய்தீர்கள் ..இங்கு ரோசா அவர்கள் இந்த கருத்தை சொல்லுவதற்கு அவர் முன்னுதாரணம் கொண்டிருக்கவில்லையே என்று அவரிடம் கேள்வி எழுப்பினேன் .ஆனால் அதே நேரம் ரோசா சொல்லிவிட்டார் என்பதற்காக அவரின் அந்த கருத்துக்களை நான் கேலி செய்யவில்லை..புறக்கணிக்கவில்லை.

12/09/2005 12:09 PM  
Blogger மு. சுந்தரமூர்த்தி said...

வசந்த்
இந்த பதிவைப் படித்தபின் தொடுகோட்டுத் திசையில் சிலகேள்விகளும், சிலவற்றை தெரிந்துகொள்ளும் ஆர்வமும் எழுந்தன (பதிவின் மூல விஷயத்தைப் பொறுத்தமட்டில் விரக்தியும், சலிப்பும் மட்டுமே ஏற்பட்டது). இப்போதைக்கு இரண்டு மட்டும்.

//ஞாநி தன் வழக்கமான நேர்மையுடன் எழுதியுள்ளார். வலையில், நான் வேறு விஷயங்களில் மிகவும் எதிர்க்கும் முகமுடி எழுதியது கூட எனக்கு பெருமளவு ஒப்புதலாக, ஆறுதலாகத்தான் இருந்தது.//

1. ஞாநியின் கட்டுரை இணையத்தில் படிக்கக் கிடைக்கிறதா? இருந்தால் சுட்டி தர முடியுமா?

2. முகமூடியை எந்தெந்த விஷயங்களில் எதிர்க்கிறீர்கள்? அவற்றை எங்கேனும் பதிவு செய்திருக்கிறீர்களா? அவற்றுக்கான சுட்டிகளைத் தர இயலுமா? (இதை இரண்டு, மூன்று முறை நீங்கள் எழுதிப் படித்தபின் தேடிப் பார்த்ததில் எனக்கு எதுவும் அகப்படவில்லை. நான் தவறவிட்டிருக்கலாம்).

12/09/2005 1:15 PM  
Blogger doondu said...

This comment has been removed by a blog administrator.

12/09/2005 2:48 PM  
Blogger doondu said...

This comment has been removed by a blog administrator.

12/09/2005 2:51 PM  
Blogger Thangamani said...

வசந்த்:

குழலியின் பதிவில் என்னுடைய பின்னூட்டம் குறித்து சில விளக்கங்களை அளிக்கவிரும்புகிறேன். முதலில் அப்படியொரு முயற்சியைக் குழலி செய்ய முனைவது எந்த வகையிலும் வரவேற்கத்தக்கது என்பதை நீங்களும் புரிந்துகொள்கிறீர்கள். பொதுவாக இராமதாஸ்-பாமக ஆகட்டும் திருமாவளவன் - விசி ஆகட்டும் ஒரு கேலிக்குரியதான பார்வையாலேயே மேட்டுக்குடி நடைமுறைகளை, பண்பாட்டை, விழுமியங்களை தங்கள் அடையாளங்களாகக் கொண்ட ஊடகங்களால் பார்க்கப்பட்டு வருகின்றன. அதற்கான காரணங்களாக இக்கட்சிகளின் போராட்ட முறைகள், தலைவர்களின் நிறம் தொடங்கி, அவர்களது மொழி, உடை, சாதி, பழக்கவழக்கங்கள் இவைகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் காட்டப்படுகின்றன. இவ்வாறு ஒரு பொதுவான உருவத்தை வெகுஜன ஊடகங்கள் மிக நுட்பமாக உருவாக்கும் வேளையில், தீவிர அரசியல் நோக்கங்கள் கொண்ட மேட்டுக்குடி இன்னொரு வழியாக இவர்களின் அரசியல் பங்குபெறலை எதிர்கொள்கிறது. இவர்களிடம் இருக்கும் சில போலித்தனங்கள், பொது அரங்கில் பேசக்கூடாததாக சித்தரிக்கப்படும் மொழியை பேசுவது (politically incorrect useage of language), சுயமுரண்கள், இவைகளை இவர்களுக்கு எதிராக திறம்படத் திருப்புவது அதன்மூலம் இவர்களைப்பற்றிய தவறான மதிப்பீடுகளை உண்டாக்குவதும் ஒரு உத்தி. இதை நான் 'சோ' உத்தி என்றழைப்பேன். இதைப்பற்றிய விரிவாக எனது பொய்மை இகழ் (http://bhaarathi.net/ntmani/?p=91) என்ற பதிவில் குறிப்பிட்டுள்ளேன். இந்த வகை நக்கலின் மூலம் இவர்களை எதிர்கொள்வதால் இன்னொரு நன்மையும் இருக்கிறது. மிக மோசமான இந்த இழிந்த கீழ்நிலைப்படுத்தும் விமர்சனத்தை நீங்கள் சட்ட ரீதியாகவோ, வன்முறையாலோ எதிர்கொள்ள முடியாது. ஏனெனில் அதன் மூலம் இந்த எதிர்ப்பு சக்திகள் மேலும் பலமும் பயனும் பெறவே அது உதவும். இவர்களை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள இவர்களுக்கு என்று எந்த அரசியல் தளமும் இல்லை. பொது நாகரீகம், பொது நன்மை, சாதியில்லாத நல்லிணக்கம், இன்றைய அமைப்பை காப்பாற்றும் தேசபக்தி (ஜெய்ஹிந்) போன்ற ஜென்டில்மேன் கற்பனைக் கருத்தியல்களைக்கொண்டும் நடைமுறை வாழ்வியல் ஏற்றத்தாழ்வுகளை, குரூரங்களை மூடிமறைத்து பொய்யான நம்பிக்கையை கடைபரப்புவதைத் தவிர வேறு அரசியல் தளமென்ற ஒன்று இல்லாதவர்கள். இவர்கள் இழப்பதற்கு என்று எதுவுமில்லாதவர்கள். அதாவது எதையும் இழக்காமலே இந்த சூதாட்டத்தை நகர்த்தி காய்களை வெட்டும் சகுனித்தனமான செயல்பாடுகொண்டவர்கள்.

சற்றே பின்னோக்கிப் பார்த்தால் தி.மு.க கூட இதே மாதிரியான எதிர்ப்புகளை, நவீன தீண்டாமையைக் கடந்து வந்ததுதான். இன்று மரம்வெட்டி கட்சி என்று பமக கேலி செய்யப்படுவதைப் போல திமுக கூத்தாடிகள் கட்சி என்றே நக்கலடிக்கப்பட்டது. கூத்தாடிகள் எந்த வகையில் குறைந்தவர்கள் என்பது ஒருபுறமிருக்க, கூத்தாடிகளை முதலில் அரசியலுக்கு பயன்படுத்தியது காங்கிரஸ் இயக்கம் தான். தியாகி விஸ்வநாத தாஸ் தொடங்கி எம்.எஸ் வரை காங்கிரஸ் பயன்படுத்திக்கொண்டது. பி.கே.சுந்தராம்பாள் சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டார் என்று நினைக்கிறேன். ஆனால் காங்கிரஸ் இந்த வகையான கேலியைச் சந்திக்காமல் திமுக சந்திப்பது எந்தவகை அளவு கோலால் எனபது நீங்கள் அறிந்ததுதான். அப்படியே தலைவெட்டிக்கட்சிகளும் தலைப்பாகை தலை வெட்டிக்கட்சிகளும், கற்பழிப்பு சேனைகளும், கருக்குழந்தை கொல்லும் தளங்களும் அவ்வாறு விமர்சிக்கப்படாமல் மரம்வெட்டிக்கட்சி உருவாவது வேடிக்கையும் விபரீதமுமல்லவா?

இப்படியான ஒரு 'சோ' தனமான அணுகுமுறையே வலைபதிவிலும் பமக-விசி குறித்து வைக்கப்பட்டது. இந்த அணுகுமுறையை எதிர்கொள்ளும் சில நபர்களும் அந்த சக்திகளை இன்னும் வலுப்படுத்தியும், இன்னும் சில இடங்களில் அவ்வணுகுமுறை இருத்தலுக்கான ஒரே சக்தியாகவும் மாறிப்போயினர். இந்த நையாண்டிக்காரர்களின் பலமே அதை எதிர்த்து வாதிடுபவர்களிடமிருந்துதான் பிறக்கிறது. இவர்களோடு வாதிடுவதன் மூலம் அவர்களுக்கென்று ஒரு தரப்பும் (நியாயமும்) இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை பெறுவதில் அவர்கள் வெற்றி பெறுகின்றனர். இந்த ஒரு விஷச்சுழலில் சிக்கி சுழன்றுகொண்டிருந்தவர்களில் குழலியும் ஒருவர் என்று நான் நினைத்தேன். அவரது அரசியல் கருத்துக்களில் ஒரு சாய்வு, சார்பு இருக்கலாம்; ஆனால் அதன் நோக்கம் ஒரு குறிப்பிட்ட ஒடுக்கப்பட்டவர்களது முன்னேற்றத்தைப் பற்றியது. அது கண்டிப்பாக விமர்சனத்துக்கு உரியதாய் இருக்கலாம். ஆனால் அது எந்த மக்களின் நலனையும் கருத்தில் கொள்ளாத, அடக்குமுறை அமைப்பை காப்பாற்ற கேளிக்கை சாமரம் வீசுவோரின் போலியான நச்சு விமர்சனத்தின் பக்கம் பக்கமாக வைத்து பார்க்கமுடியாதது. குழலி போன்றவர்களின் அரசியல் நிலைப்பாடுகளில் உள்ள குறைகள், போதாமைகள், சார்புகள் அவர்களையும் விட வெகுமக்கள் அரசியலை முன்னெடுப்பவர்களாலேயே விமர்சிக்கப்படவேண்டும். ஏனெனில் அப்போது அதன் நோக்கம் இவ்வகையான அடித்தட்டு மக்களின் அரசியல்பார்வையைக் கூர்மைப்படுத்துவதாகவும், கோதுகளை அகற்றுவதாகவும் இருக்குமே அன்றி வெறும் காற்றில் கத்திவீசச்செய்து களைத்து ஓயவைப்பதாக இருக்காது.

இந்நிலையில் குழலி அம்மக்களைப் பற்றி எழுத முனைந்தது இந்த விஷச்சுழலில் இருந்து வெளியேறி வந்த ஒரு பெரிய நிகழ்வாகவே நான் பார்க்கிறேன். அவர் எழுதப்போவதை எப்படி விமர்சனத்துடன் வரவேற்கமுடியும்? அவர் எதையாவது எழுதட்டும்! அது சார்புடையதாகவே இருக்கட்டும். அது நியாயக்குறைவானதாக இருந்தால் அதன்மூலம் மக்களை நெருங்கமுடியாது என்பதை அவர் அறிவார். எச்சரிக்கைகளுடன் அவரை வரவேற்க என்ன அவசியம் இருக்கிறது! அவர் எழுதுவதை நிபந்தனையின்றி வரவேற்பது என்பது அவர் சொல்வதனைத்தையும் நிபந்தனையின்றி ஒத்துக்கொள்வதாகாது. இப்படியான வெறும் காற்றில் கத்தி வீசச்செய்யும் தூண்டுதல்களில் இருந்து தப்பி வந்ததே மிகவும் அபாயம் விளைவிப்பதாகும். ஏனெனில் அதன் மூலம் அவர் நக்கல் சக்திகளுக்கு இரையளிப்பதை நிறுத்தியிருக்கிறார். இதுவே நான் அவரை எழுதுமாறு வரவேற்றதின் பின்னுள்ள காரணமாகும். இதை விமர்சனத்தோடு செய்யவேண்டும் என்பதில் எதுவும் அர்த்தமிருப்பதாக் எனக்குத்தெரியவில்லை.

12/09/2005 3:49 PM  
Blogger ஜோ/Joe said...

வாவ்! தங்கமணி அவர்களின் பின்னூட்டத்தோடு வரிக்கு வரி உடன்படுகிறேன்

12/09/2005 4:15 PM  
Blogger enRenRum-anbudan.BALA said...

ஜோ,

//ராமதாஸ் விடயத்தில் இன்னும் நீங்கள் என் நிலைப்பாட்டை புரிந்து கொள்ளவில்லை என்பதே /உண்மை
//
உங்கள் நிலைப்பாடு குறித்த புரிதல் (மற்றும் தமிழ்ப்பற்று மீது நம்பிக்கை) உள்ளது என்று அப்போதே கூறி விட்டேன். மறுபடியும் ஐயப்பட்டால், அலுப்பு தான் வருகிறது !!!

//உங்களைப் போன்ற சிலர் ராமதாஸ் சொல்லிவிட்டார் என்பதற்காக அந்த கருத்தையே கேலி செய்தீர்கள்
//
நான் விமர்சித்தேன்! மற்றவரைப் பற்றி எனக்குத் தெரியாது. தன்னால் கடைபிடிக்க இயலாத ஒன்றை பிறர் மேல் திணிக்கும் ஒருவர் கூறும் அறிவுரை மதிப்பிழக்கிறது, கேலிக்குள்ளாகிறது, எதிர்வினையை உண்டாக்குகிறது என்பதுவும், அதனால் சாதகத்தை விட பாதகமே அதிகம் என்பதுவும் என் கருத்து. த.பா.க தமிழ் வளர்ப்பதாகக் கூறி அடித்த லூட்டிகளை புறக்கணித்தேன். தமிழைப் புறக்கணிக்கவில்லை !!! இந்த விதயத்தில் இதுவே என் இறுதி விளக்கம் !!!!

அதே போல், தர்க்கிக்கும்போது, பேசப்படும் விதயத்தை, சூழலை, மற்றும் அவ்விதயத்தின் பால் ஒருவர் கொண்டுள்ள ஆழமான பற்றைப் பொருத்து அவரது சிந்தனையில் "மாறுதல்" உண்டாவதை இயல்பாகவே எடுத்துக் கொள்கிறேன் ! மேலும், ரோசாவே நீங்கள் கூறியதை நேர்மறையாக எடுத்துக் கொண்டு, அவரது எழுத்தில் சிலவற்றைத் தவிர்க்க முயற்சிப்பதாகவும் கூறியிருக்கும் வகையில், உங்களுக்கு வெற்றியே :)

மற்றபடி, "விசிலடிச்சான்" விமர்சனத்தை திரும்ப எடுத்துக் கொண்ட ரோசாவுக்கு நன்றி. அதே நேரம், இன்னொருவரைப் பற்றிய ரோசாவின் விமர்சனம் அப்படியே இருப்பது குறித்துப் பேசி, பழையதைக் கிளறுவதைத் தவிர்க்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறேன் ;-)

என்றென்றும் அன்புடன்
பாலா

12/09/2005 4:49 PM  
Blogger ROSAVASANTH said...

சுமு எழுதியதை படித்தேன். தங்கமணி எழுதியதை முழுவதும் படிக்க கூட முடியவில்லை. பல காரணங்களால் என்னால் இணையத்தில் நேரம் செலவழிக்க முடியாது. இன்னும் இரண்டு வாரங்களுக்கு இந்த பக்கம் வரவும் முடியாது. அதற்கு பின் நிச்சயமாக சுமு எழுதியதற்கான பதிலும், தங்கமணி எழுதியது குறித்த என் பதிலையும் தருகிறேன். மலப்புழுக்களின் தொல்லைகள் காரணமாய் பின்னூட்ட கதவும் (இங்கே) இன்று இரவு (என் கண்காணிப்பு இல்லாத சமயங்களில்) மூடப்படும். முக்கியமான கருத்துக்களை எழுத விரும்புபவர்கள் எனக்கு மின்னஞ்சலில் அனுப்பவும். நான் பிறகு வெளியிட முடியும். நன்றிகள்!

12/09/2005 4:56 PM  
Blogger ROSAVASANTH said...

For my future reference,

http://veeravanniyan.blogspot.com/2005/12/blog-post_09.html
http://veeravanniyan.blogspot.com/2005/12/blog-post_113409986427524505.html

I would be greateful to anyone who gives the URL of the posts, which refers to this post., or which needs to be adrressed by me later. Thank you very much. (I saw Asif's post, but I do not have anything say about that).

12/09/2005 5:38 PM  
Blogger ROSAVASANTH said...

Comment moderation has been enabled. This will be removed when I get to frequently visit here.

12/09/2005 6:03 PM  
Blogger ROSAVASANTH said...

To make things clear, it will be possible to comment here by anyone. But it will appear after it is approved. Again this is only a temporary constraint. Thanks!

12/09/2005 6:06 PM  
Blogger மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

தங்கமணி ரொம்ப அற்புதமாகச் சொல்லிவிட்டார். அவர் சொன்னதோடு வார்த்தைக்கு வார்த்தை ஒத்துப்போகிறேன்.

-0-

வசந்த்: இந்த இடுகையில் நீங்கள் சொன்ன சில விதயங்களோடு உடன்பாடு இருக்கிறது. முக்கியமாக திருமாவளவன். டிவிஐ தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்தார்கள். பார்வையாளர்கள் தொலைபேசி, உரையாடினார்கள். அப்போது மட்டுமே நேரடியாக திருமாவளவனின் உளறலைப் பார்த்தேன்.

மற்றும்படி நீங்கள் குழலியின் அந்த இடுகையை சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்றே தோன்றுகிறது. அத்தோடு, அங்கே வரவேற்றுவிட்டு, இப்போது அதிகபட்சமான வார்த்தைகளை உபயோகித்து எழுதுவதை நான் விரும்பவில்லை. அதிகபட்சமான வார்த்தைகளை மட்டும் நான் இங்கே குறை சொல்லவில்லை. கண்டிக்கவில்லை. அதன்பின்னால் இருக்கும் எண்ணத்தைக் குறை சொல்கிறேன். கண்டிக்கிறேன்.

நான் நினைப்பதை அழுத்தமாகக் குறைந்த வார்த்தைகளோடு எப்படிச் சொல்லலாம் என்று இரண்டு நாட்களாக நினைத்துக் கொண்டிருந்தேன்.

நேற்றைக்கு நேரநெருக்கடி காரணமாக இந்தப் பக்கம் வரமுடியாமற்போனது நன்மைக்கே என்று எனக்கு நானே சொல்லிக்கொள்கிறேன். தங்கமணி அருமையாகச் சொல்லிவிட்டார். 'சோ உத்தி'யை இங்கே வலைப்பதிவில் பலரும் கடைப்பிடிக்கும்வேளையில் ஆக்கபூர்வமாக ஏதேனும் செய்வதே தன்னுடைய sanityயைக் காப்பாற்றும் வழி என்று குழலி கண்டெடுத்திருப்பதாக நினைக்கிறேன். நீங்கள் உட்பட பலரும் அதை வரவேற்கும்போது அவருக்குப் பொறுப்புக் கூடுகிறது. அதை அவரே உணர்ந்திருப்பார். உணரவில்லையென்றால் உணரவேண்டும்.
சும்மா இருக்கும்போதே 'சோ உத்தி'யைக் கடைப்பிடிப்பவர்கள், அவர் இம்மாதிரியான ஆக்கப்பூர்வமான வழியில் நடப்பதையா விரும்புவார்கள்? Many distractions would be created for him. dont you agree? coincidently, this week kuzhali has been made 'thamizmanam natchaththiram'. Did you see how that reverberated around thamizmanam? If people couldn't even digest the fact that he was made natchaththiram, how do you think, the 'cho uththi' people would react when kuzhali takes steps to correct the misinformation spread around the globe by these very same people (with hidden agendas, i should add).

All of us have seen with our very eyes, how just over two years ago people used to argue about 'The Hindu's' sincerity vis-a-vis Srilankan Tamils and LTTE. Now, just over a month ago, you saw how they reacted when 'Hindu' Ram was awarded the 'Srilanka Rathna'. Do you think, they would have reacted like this if Ramwatch wasnt created? Everybody would have just shooted their mouth off (as usual). And nothing concrete would have come out of it. Atleast now, the general unassuming public would know what's 'The Hindu' true face is like (atleast where Srilankan Tamils are concerned).

I want the same thing to happen here. If there's no verasity, சந்தி சிரிச்சிரும். அது குழலிக்கு அப்ப புரியலைன்னாலும், இப்போ இந்த இடுகையின் பின்னூட்டங்களில் இருந்து புரியும். புரியணும்.

btw, the 'cho uththi' politics is quite amusing to watch! ;)

-மதி

12/09/2005 7:56 PM  
Blogger ROSAVASANTH said...

மதி உங்கள் கருத்துக்கு நன்றி. எனக்கு சொல்ல விஷயங்கள் இருந்தால் தங்கமணியின் நீண்ட விளக்கம் குறித்த என் கருத்துக்களோடு எழுதுகிறேன்.

சுந்தரமூர்திக்கான என்னுடைய இப்போதைக்கான பதில்.

//1. ஞாநியின் கட்டுரை இணையத்தில் படிக்கக் கிடைக்கிறதா? இருந்தால் சுட்டி தர முடியுமா?//

ஞாநியின் கட்டுரை விகடனில் வந்தது. அது முகமுடியின் (தாக்குடே) பதிவின் பின்னூட்டத்திலும் (முழுமையாக) இருக்கிறது என்று நினைக்கிறேன்.

//2. முகமூடியை எந்தெந்த விஷயங்களில் எதிர்க்கிறீர்கள்? அவற்றை எங்கேனும் பதிவு செய்திருக்கிறீர்களா? அவற்றுக்கான சுட்டிகளைத் தர இயலுமா? (இதை இரண்டு, மூன்று முறை நீங்கள் எழுதிப் படித்தபின் தேடிப் பார்த்ததில் எனக்கு எதுவும் அகப்படவில்லை. நான் தவறவிட்டிருக்கலாம்). //

எந்தெந்த விஷயத்தில் எதிர்கிறேன் என்று பட்டியலிடுவது மிகவும் கடினம். அதற்கு குறைந்த பட்சம் அவருடய எல்லா பதிவுகளையுன் நான் படித்திருக்க வேண்டும்.(ஆனால் நான் எதிர்கும் விஷயங்கள் சுமுவிற்கு தெரியாமல் இருக்காது, அவற்றை ஊகிப்பதும் கடினமல்ல என்பது எனக்கு தெரியும்.) முகமுடியின் பல பதிவுகளை (ரத்த அழுத்தம் ஏறாமல் இருக்க) நான் படிப்பது கிடையாது என்ற தகவல் சுந்தரமூர்திக்கு தனிப்பட்ட பரிமாற்றங்களில் தெரியும்.

மற்றபடி நான் முகமுடியை எதிர்த்து எதுவுமே எழுதியது கிடையாது. அதனால் சுட்டி நிச்சயமாய் கிடைக்காது. நான் எதிர்க்கும் எல்லா விஷயங்களையும் பதிவு செய்தது கிடையாது. எல்லோருக்கும் எதிர்வினை அளிக்க வேண்டும், அதையும் நான் எந்தெந்த அளவு எதிர்கிறோமோ, அந்தந்த அளவு எதிர்ப்பை சரியான விகிதத்தில் பகிர்ந்து அளிக்க வேண்டும் என்று நினைத்தது கிடையாது. எழுத நினைத்த பலவற்றை எழுதவும் இல்லை. பல எழுதி பாதியில் அப்படியே உள்ளன.

அந்தந்த சந்தர்ப்பங்களை பொறுத்து, குட்டி பூர்ஷ்வா வாழ்க்கை அனுமதிக்கும் சமயத்தில் மட்டும் நாம் அனைவரும், சுமு இராம.கி ஐயா உட்பட அனைவரும் இயங்கி வருகிறோம். சுமுவின் கேள்விகளுக்கான தகவல்ரீதியான பதில் இது. அவரது கேள்வியின் விமர்சன நோக்கம் வேறாயிருந்தால் அதை அவர் வெளிப்படையாய் எழுதினால் பதில் சொல்ல முயற்சிக்கலாம். நன்றி.

தங்கமணி நீண்ட பதிலுக்கு நன்றி. பிறகு வருகிறேன்.

12/09/2005 8:21 PM  
Blogger கசி said...

This comment has been removed by a blog administrator.

12/10/2005 10:41 AM  
Blogger Arun Vaidyanathan said...

Jo,
Sorry for the late reply. I was not hurt and all..no need to be sorry.

Take Care, Have Fun!

Regards,Arun Vaidyanathan

12/11/2005 4:55 AM  
Blogger முகமூடி said...

இப்பதிவில்(லும்) சொல்லப்பட்ட சில கருத்துக்கள் தொடர்பாக என்னுடைய எண்ணங்களை இங்கே பதிவு செய்திருக்கிறேன்.

12/13/2005 1:03 AM  
Blogger ஜோ/Joe said...

Arun,
If you don't mind ,can you send an email to deenjoemilton at hotmail.com ?

12/13/2005 1:15 PM  
Blogger ROSAVASANTH said...

ஜெயேந்திரர் கைதான போது தங்கமணி எழுதிய பதிவு ஒன்றில் (ஞாநியின் கருத்துக்களை எதிர்த்து) நான் எழுதிய பின்னூட்டம் ஒன்றுடன் தொடர்பு படுத்தி இந்த செய்தியை வாசிக்கலாம் என் பின்னூட்டத்தை நேரம் வரும்போது இங்கே தருகிறேன்.

நன்றி :திண்ணை. http://thinnai.com/of1216052.html


"ஜெயேந்திரர் விவகாரத்தால் அதிருப்தியில்ஐருக்கும் பிராமணர்கள், வரும் தேர்தலில் ஜெ.வை அதரிப்பார்களா?'' என்றதும் சட்டென குறுக்கிட்டார் அம்புலி ராமன். "இது வேற.. அது வேற.. ராஜாஜிக்கு அடுத்தபடியா தமிழக அரசியலில் பிராமண சமூகத்திற்கு கிடைத்திருக்கும் ஒரே பிரதிநிதி ஜெயலலிதாதான். அவர் ஆட்சிக்கு எதிரா நாங்க ஒட்டுப் போடுவோமா? தேர்தல் வரும்போது ஜெயேந்திரரா ஜெயலலிதாவா என்ற பிரச்சனை இருக்காது. ஜெயலலிதாவா கருணாநிதியான்னுதான் பார்ப்போம். ஜெயலலிதாவுக்குத்தான் ஒட்டுப் போடுவோம். அவர்தான் எங்க சமூகத்தின் ஒரே பிரதிநிதி.''


- நக்கீரன் பத்திரிக்கையில் தாம்ப்ராஸ் தலைவர் அம்புலிராமன்"

12/16/2005 6:28 PM  
Blogger ROSAVASANTH said...

சங்கரனுக்கு நாமம்!

'தைரிய லட்சுமி' ஜெயலலிதா ஜெயேந்திரரை கைது செய்து வறலாறு படைத்த போது, காம்ரேட் ஞாநி 'சபாஷ் ஜே' என்று கூதுகலித்து ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதை முன்வைத்து நண்பர் தங்கமணி (ஞாநியை பாரட்டி) பதிவு போட்டார். ஞாநி தனது கருத்துக்களை எப்போதுமே நேர்மையாக முன்வைப்பதாக (இளயராஜா பற்றி எழுதிய போது கூட) நான் நினைத்தாலும், ஞாநியின் அந்த கட்டுரை (சொல்லப்போனால் எல்லா கட்டுரைகளும் கூட) மிக தட்டையானது என்பதுடன் அதன் மீதான எனது இன்னும் சில விமர்சனங்களை முன்வைத்திருந்தேன்.(சுந்தரமூர்த்தியும் சில விமர்சனங்கள் வைத்திருந்தார்.) அதில் முக்கியமானது, 'பார்பனர்களின் அடையாளம் ஜெயேந்திரர் அல்ல, ஜெயலலிதா!' (இரண்டும் முரண்படாத போது இந்த கேள்விக்கும், வாக்கியத்திற்கும் அர்தமே இல்லை.)

ஜெயலலிதா ஜெயேந்திரரை கைது செய்த போது, அதுவரை திமுக மேடைகளில் திட்டப்பட்டதைவிட கேவலமான வார்த்தைகளால் ஜெயலலிதா பார்பனர்களால் திட்டப்பட்டார். இன்னமும் கூட ஜெயெந்திரர் மீதான வழக்கு எதுவும் திரும்ப பெறாத போதும், உக்கிரமாக தொடரும் போதும், தேர்ந்தல் நேரத்தில் பார்பனர்கள் எடுக்கும் முடிவுகள் கொஞ்சம் சுவாரசியமானது. மேலே பிராமண சங்க தலைவர் நக்கீரனில் சொன்னதை வெட்டி ஒட்டியிருக்கிறேன்.

கடந்த ஞாயிறு 25 டிசம்பர் என்று சென்னையில் தாம்பிராஸின் மாநாடு நடந்தது. நேரில் சென்று செய்தியறிய நினைத்த எனக்கு முடியவில்லை. கலந்தகொண்ட ஒருவரிடம் பேச்சு கொடுத்தேன்.நான் எதிர்பார்த்தது போலவே சோ கலந்துகொள்ளவில்லை. (டோண்டு கலந்துகொண்டாரா என்ற்து தெரியவில்லை.)

சுஜாதா, கே.பாலசந்தர், டெல்லி கணேஷ் போன்றவர்கள் கலந்துகொண்டு பேசியிருக்கிறார்கள். பேசிய விஷயம் அவ்வளவு முக்கியமில்லை. வழக்கமாய் பாலசுந்தரம் என்று ஒற்றையில் தனியாய் 'தலித் இயக்கம்' நடத்துபவரை அழைப்பார்கள். இந்தமுறை அவர் கிடைக்கவில்லை போலும். அல்லது கொஞ்சமாவது மக்கள் ஆதரவு உள்ள உள்ளவருக்கு தூண்டில் போட்டிருக்கிறார்கள் போலும். மீனவர் தலைவர் அன்பழகனாரை அழைத்திருந்தனர். அவரும் 'தலித் மீதான பிற்படுத்தப் பட்ட மக்களின் தாக்குதல்' பற்றியெல்லாம் பேசி, தலித் மீதான தாக்குதல்களுக்கும் பிராமணர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லாதது பற்றி பேசியதோடு அல்லாமல், பிரமணர்களுக்கும் மீனவர்களுக்குமான சில 'ஒற்றுமைகள்' பற்றியும் பேசியதாக தெரிகிறது. சரி என் ஆர்வம் என்ன? ஜெயேந்திரர் பற்றி என்ன பேசப்பட்டது என்பதுதான். எதிர்பார்த்தது போலவே ஜெயேந்திரருக்கு பட்டை நாமம் மட்டுமே. சின்ன முணுமுணுப்பு கூட இல்லை. அதே நேரம் தலைவர் சொல்பவர்களுக்குதான் பிராமண சமூகம் ஒட்டுபோடவேண்டும் என்று பலர் சொன்னார்களாம். தலைவர் மேலே உள்ள் பின்னூட்டத்தில் மேற்கோள் காட்டியபடி தெளிவாகவே சொல்லிவிட்டார்.

அதிமுகவிற்கும், பாஜகவிற்கும் மீண்டும் கூட்டணி மலரப்போகும் எதிர்கால செய்தி பற்றி எல்லோருக்கும் தெரியும் என்று நம்புகிறேன். ஆனாலும் காங்கிரஸ் என்னவும் செய்யும் திறன் வாய்ந்தது என்பதால் காத்திருந்துதான் ஆகவேண்டும்.

12/27/2005 6:07 PM  
Blogger dondu(#11168674346665545885) said...

நான் செல்லவில்லை. அன்று ஹ்யூமர் க்ளப் மீட்டிங் பி.எஸ்.உயர்நிலைப் பள்ளியில். என்னை Chief Guest ஆக கூப்பிட்டிருந்தார்கள். Guest of Humour என்று குறிப்பிட்டிருந்தார்கள்.

அதை பற்றி தனிப்பதிவு என் வலைப்பூவில் போட இருக்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

12/27/2005 7:02 PM  
Blogger dondu(#11168674346665545885) said...

நான் மேலே இட்டப் பின்னூட்டத்தின் நகல் என்னுடைய இதற்காக வைத்திருக்கும் தனிப்பதிவில் பின்னூட்டமாக நகலிடப்பட்டுள்ளது. பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html#comments

அன்புடன்,
டோண்டு ராகவன்

12/27/2005 7:07 PM  
Blogger ROSAVASANTH said...

தகவலுக்கு நன்றி டோண்டு ஸார்!

12/27/2005 7:29 PM  
Blogger Muthu said...

//பிரமணர்களுக்கும் மீனவர்களுக்குமான சில 'ஒற்றுமைகள்' பற்றியும் பேசியதாக தெரிகிறது.//

அது என்ன என்று சொன்னால் நாங்களும் தெரிஞ்சுக்கறோம்.


//ஜெயலலிதா ஜெயேந்திரரை கைது செய்த போது, அதுவரை திமுக மேடைகளில் திட்டப்பட்டதைவிட கேவலமான வார்த்தைகளால் ஜெயலலிதா பார்பனர்களால் திட்டப்பட்டார். இன்னமும் கூட ஜெயெந்திரர் மீதான வழக்கு எதுவும் திரும்ப பெறாத போதும், உக்கிரமாக தொடரும் போதும், தேர்ந்தல் நேரத்தில் பார்பனர்கள் எடுக்கும் முடிவுகள் கொஞ்சம் சுவாரசியமானது.//

அடிச்சாலும் புடிச்சாலும் நாங்க சேர்ந்துக்குவோம்...நாளைக்கே செட்டில்மெண்ட் ஆகலாம்..அதுக்காக தாங்கள் காலமெல்லாம்(வாழ்க்கை லட்சியம்) எதிர்த்து வரும் கருணாநிதியை ஆதரிக்க முடியுமா என்பது தான் நிலைப்பாடு....புரட்சிதலைவி சப்பொர்ட் இருந்தால் தங்களுக்கும் நிறைய செல்வாக்கு இருக்கிறது என்று காட்டவாவது முடியும்....முதலமைச்சருக்கும் ஜெயேந்திரருக்கும் கொள்கை மோதலா
என்ன?

12/27/2005 8:20 PM  
Blogger ROSAVASANTH said...

முத்து,

////பிரமணர்களுக்கும் மீனவர்களுக்குமான சில 'ஒற்றுமைகள்' பற்றியும் பேசியதாக தெரிகிறது.//

அது என்ன என்று சொன்னால் நாங்களும் தெரிஞ்சுக்கறோம்.//

நான் நேரடியாய் எதையும் கேட்கவில்லை. இரண்டாம் கை தகவல் மட்டுமே. உங்களை போலவே அது என்ன 'ஒற்றுமை' என்று நானும் கேட்டேன். ஏதோ சொன்னார் என்று பதில் வந்ததே ஒழிய திடமாய் எதுவும் சொல்லவில்லை. அதற்குள் பேச்சு திசை மாறிவிட்டது. அதனால் என்ன ஒற்றுமை என்று பேசினார் என்பது தெரியவில்லை.

கருத்துக்கு நன்றி.

12/27/2005 10:17 PM  
Blogger ROSAVASANTH said...

http://thamizhsasi.blogspot.com/2006/01/blog-post.html

இந்துவின் 'அஜென்டா' பற்றி நீங்கள் (மற்றும் ராம்வாட்ச் போன்றவர்கள்) தொடர்ந்து சொல்வதை முழுவதும் ஏற்றுகொள்கிறேன். ஆனால் இந்துவின் இந்த செயல்பாடுகளின் பிண்ணணி குறித்த தெளிவு யாரிடமுமே(எனக்கும்) இல்லை என்றே தோன்றுகிறது. இதை வெறும் பார்பனியத்தின் தொடர்ச்சி அல்லது சந்திரிகாவின்/சிங்களத்தின் கைக்கூலி என்பது போல, பலர் சொல்வது போல், வார்த்தைகளால் விளக்க முடியும் என்று தோன்றவில்லை. (இந்துத்வ பரிவாரங்கள் மற்றும் அதன் பல பரிமாண ஆதரவாளர்கள் கூட இந்துவை சீனக்கைகூலி' என்பது போல பல வார்தைகளால் திட்டப்படுவதை கவனிக்கவேண்டும். அதே போல சில வார்த்த்தைகள் இந்துவின் அஜெண்டாவின் பிண்ணணியை விளக்கிவிடும் என்று தோன்றவில்லை.)

இந்தியாவில் 'சற்று ஆரோக்கியமாய்' சிந்திக்க கூடிய அனைவராலும் பொதிவாக பார்க்கக் கூடிய பத்திரிகையாக இந்து திகழ்ந்து வருகிறது. அருந்ததி ராய் கூட ஒரு கட்டுரையில் 'இந்து'த்தனமான சொல்லாடல்களில் ஈழப்பிரச்சனையை (குறிப்பாய் புலிகளை) போகிற போக்கில் குறிப்பிட்டு சென்றிஉருப்பார். அதே நேரம் மற்ற விஷயங்களில் இந்து மிக மோசமாய் இல்லாததையும் கவனிக்க வேண்டும். மற்ற பலவகைப்பட்ட கட்டுரைகளுக்கு இந்து இடமளிக்கவும் செய்கிறது. பலஸ்தீனத்திற்கு விடுதலை, காஷ்மீரத்திற்கு சுயாட்சி என்று பேசலாம். ஆனால் ஈழவிவாகரத்தில் மட்டும் இவையெல்லாம் பயங்கரவாதம் என்ற அடிப்படையில், இந்திய முற்போக்கின் நுகர்வுக்கு இந்து செய்திகளையும் ஆதாரங்களையும் விற்பதாக இருப்பதை எப்படி புரிந்துகொள்வது? இந்து ஏன் ஈழவிவகாரத்தில் மட்டும் ஒரு துக்ளக்காக செயல்படுகிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டியது முக்கியமானது என்று தோன்றுகிறது.

ஆனால் இதற்கான புரிதலைவிட, இந்த உண்மையை உரக்க சொல்வது அதைவிட முக்கியமானது.

1/02/2006 3:38 PM  

Post a Comment

<< Home

---------------------------------------
Site Meter