ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Friday, April 16, 2010

இந்து மக்கள் கட்சியை கண்டிக்கிறேன்.

சில நேரங்களில் நாம் காமெடியாக புரிந்து கொண்ட சில விஷயங்களுக்கு பின்னே ஆழ்ந்த தீவிரமான பொருள் இருக்கக்கூடும். அதே போல நாம் தமாசை எதிர்பார்த்து வாசிக்கும் பிரதி மிக தீவிரமான திருப்பங்களுடன், பற்பல பரிமாணங்களில் சமூகப் பாடம் நடத்தும் அளவிற்கு சிக்கலான இலக்கிய பிரதியாகிவிட கூடிய சாத்தியங்கள் உண்டு. பிரதியை வாசிக்காமல், பிரதி வெளியாகும் முன்பே அது குறித்து தீர்ப்பு கூறும் விமர்சகர் 'மண் ஒட்டவில்லை' என்று தனக்கு தானே சொல்லிக் கொள்வதற்காகவாவது பல அசட்டு சமாதானங்களை பின்னர் சொல்லவேண்டிய கட்டாயத்திற்கு இதனால் ஆளாகிறார். ஆனால் அப்படிப்பட்ட நிலையில் இருக்கும் நான், விமர்சகனின் கணிப்புகளை பொய்யாக்குவதுதான் ஒரு இலக்கிய பிரதியின் வேலை என்ற ஒரு வசதியான இலக்கணத்தை கொண்டு பிரதியை எதிர்கொள்ள துணிந்துவிட்டேன்.

இன்று லீனா மணிமேகலையின் கவிதை எழுதும் உரிமை மேலான தாக்குதல்களை கண்டித்து நடத்தப்பட்ட கூட்டம், தமாசாக இருக்கும் என்று நினைத்தற்கு மாறாக தீவிர வடிவத்தை அடைய, இந்து மக்கள் கட்சியினர் கூட்டத்தில் செய்த கலகம் காரணமானது. கூட்டம் தொடங்கிய போதே காவி உடையணிந்த இந்து மக்கள் கட்சியினர் ஸீட் பிடித்து அமர்ந்திருந்தனர். அ.மார்க்ஸ் அறிமுகப் பேச்சை முடித்த உடனேயே, இந்து மக்கள் கட்சியின் உறுப்பினர் ஒருவர் தன் கேள்விக்கு பதில் அளித்த பிறகுதான் கூட்டம் தொடர வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்க, பலர் பதில் சொல்ல, கூச்சலும் குழப்பமும் உருவாகியது. குழப்பம் பேரலைபோல எப்போது உச்சத்தை அடைந்தது, அமைதி வருவது போன்ற தோற்றத்தை எப்போது அடைந்தது என்று சரியாக சொல்ல முடியாத அளவில் குழப்பம். பிறகு ஒரு வழியாக அமைதியாகி, ராஜன் குறை பேசி முடிக்க, 'எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்' என்று மீண்டும் இந்து மக்கள் கட்சி தொண்டர் குரல் எழுப்பினார். மீண்டும் பலர் கத்த, கூச்சலாக குழப்பம். சுமார் அரைமணி நேரம் சண்டைக்கு பிறகு, வேறு வழிதெரியாமல் பேசி விட்டு போகட்டும் என்று, வந்திருந்த இந்து மக்கள் கட்சியினரின் பிரதிநிதியாக பொறுப்பேற்ற ஒருவரிடம் கேள்வி கேட்க மைக் அளிக்கப்பட்டது. ஒரு கேள்வி கேட்கப் போவதாக துவங்கியவர் உரை ஒன்றை நீட்டி முழக்கி பேசத் துவங்கினார். கிட்டத்தட்ட மேடையை கைப்பற்றி (அவரே இடையிடையே கூட்டத்தையும் அமைதிப்படுத்தி), அறிமுகம், தோழமை அமைப்புக்கு நன்றி எல்லாம் சொல்லிய பின்னர் வரிசையாக பாயிண்டுகளை அடுக்கினார். அதில் ஒரு பாயிண்ட் லீனா மீதான ஆபாசமான ஒரு கேள்வியாக மாற, லீனா பதிலுக்கு அடிப்பதற்காக மேடையை நோக்கி செல்ல மீண்டும் ரசாபாசமாகியது. அடுத்த அரைமணி நேரம் பல விதமான குழப்பம். நீண்ட ரசாபாசத்திற்கு பிறகு அவர்களை வெளியேறச் சொல்லி மைக்கில் கேட்டு, மீண்டும் மீண்டும் கேட்ட பின்பு, வரிசையாக பல கோஷங்களை எழுப்பி, அப்போது கோஷம் காற்றில் சீராக பரவ விடாமல் மற்றவர்கள் கூச்சலிட்டதால் மீண்டும் மீண்டும் எழுப்பி, வாசலிலும் ஒருமுறை எழுப்பிய பின்பு சென்றனர். அதன் பிறகு கலகம் செய்த இந்து மக்கள் கட்சியினரை அனைவரும் தங்கள் உரையில் கண்டித்தனர். அதன் பிண்ணணிகளை ஆரய்ந்தனர். இது குஜராத், மும்பை, கர்நாடகாவில் நடந்த பாசிச நிகழ்வின் தொடர்சி என்றும் பலர் குறிப்பிட்டனர். இவ்வாறாக 'எதிர்காலத்தில் சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராக எழுதும் அனைத்து சக்திகள் மீதும் இவ்வாறான அச்சுறுத்தல்கள் நிகழும் அறிகுறிகளா'க உண்மையிலேயே மாறியது; நான் தமாசாக எதிர்பார்த்த நிகழ்ச்சிகளும் தீவிர பரிமாணத்தை அடைந்தது.

கூட்ட அழைப்பிதழில் 'இணயத்திலும் பரவியுள்ள தாக்குதல்', மற்றும் 'விமர்சனங்கள், வக்கிரமான கட்டுரைகள், அவதூறுகளைத் தாண்டி கலாசார அடிப்படைவாதிகளின் தாக்குதல் இப்போது போலீஸ், நீதிமன்றங்கள் வரையில் விரிவாக்கப்பட்டுள்ளன' என்று குறிப்பிடப்படிருந்தது. இணையத்தை வாசிக்கவே வாசிக்காத ஒருவருக்கு, இணையத்தில் நடந்த தாக்குதல்களையும் இந்து மக்கள் கட்சிதான் செய்ததாக ஒரு வாசிப்பு வரக்கூடும். இணையத்தில் வாசிக்கும் பழக்கமுள்ள இணையர்களின் வாசிப்பில் , அந்த இணையரல்லாதவர்களின் பிரதி சார்ந்த உண்மை எப்படி உண்மையில்லையோ, அது போல கூட்டத்திற்கு செல்லாதவர்களுக்கு நான் மேலே இதுவரை 'இந்து மக்கள் கட்சி' என்று பலமுறை எழுதியது இந்து மக்கள் கட்சியை இந்த பதிவில் குறிப்பதாக வரக்கூடும் வாசிப்பு சார்ந்த உண்மை, கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு வாசிப்புண்மையாக பிரசன்னமாக வாய்ப்பில்லை. அந்த வகையில் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல், இந்த பதிவின் மூலம் நடந்ததை அறிய விழைபவர்களுக்கு 'இந்து மக்கள் கட்சியின் தொண்டர்கள்' என்பது இந்து மக்கள் கட்சியை குறிக்கவில்லை என்று சொல்வது அவர்களின் பன்முக வாசிப்பை தடை செய்யுமாயினும், வேறு வழியில்லாமல் யதார்த்தவாதிகளின் சட்ட நடவடிக்கைகளுக்கு பயந்து பின்னறிவிப்பாக அவ்வாறாகவே இங்கே எழுத வேண்டியுள்ளது. அது எப்படியிருப்பினும் இந்து மக்கள் கட்சியின் இந்த அராஜகத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

வினவு தளத்தில் லீனா பற்றி எழுதப்பட்ட பதிவுகளை நான் ஏற்கனவே கண்டித்துவிட்டேன். எனக்கு தெரிந்து முதன் முதலாக ஒரு பதிவாக கண்டனத்தை நான் தான் முன்வைத்தேன் என்று நினைக்கிறேன். ஒருமுறை பிரச்சனை குறித்து எழுதிய பின்பு மீண்டும் மீண்டும் பதிவுகள் எழுதவும், பிரச்சனைகளை கிளப்பவும் தோழர்களுக்கு தீவிர பிரச்சனை ஏதேனும் இருக்கலாம். எனக்கு ஒரு முறை கண்டித்ததே என் நிலைபாட்டை அறிவிக்க போதும் என்பதாலும், இந்த பதிவில் இந்து மக்கள் கட்சிக்கு என் வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

Labels:


Post a Comment

---------------------------------------
Site Meter