ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Friday, June 02, 2006

செந்தூரப்பூவே -2.

இளயராஜா மீது அபிமானம் கொண்ட சிலரில் கூட, அவரை பற்றி நல்ல விதமாய் சொல்வதாக நினைத்து கொண்டு, பொதுவாய் சொல்வது; ஒரு கட்டத்தில் விஸ்வநாதனின் இசை மக்களுக்கு அலுப்பு தருவதாக சென்று கொண்டிருந்தது; இந்தி பாடல்களின் பக்கம் தமிழ் மக்களின் ரசனை போய்க் கொண்டிருந்த நேரத்தில், இளயராஜா வந்து தன் பக்கம் மக்களை திருப்பி, தமிழ் பாடல்களை செவி மடுக்க வைத்தார் என்பது; இப்படி சொல்வதில் பகுதி உண்மை கொஞ்சம் இருந்தாலும், பல இடங்களில் தொடர்ந்து கேட்கும் இந்த அலுப்பு தரும் வாதத்தில் எந்த அளவு நியாயம் இருக்கிறது என்று பார்போம்.

முதலில் எம். எஸ்.வியின் இசை அலுப்பு தரும் வகையில் போய்கொண்டிருந்ததா என்பது மிகவும் கேள்விக் குரியது. அவரது இசை காலத்துக்கு ஏற்ப மாறுதலுக்கு உட்பட்டு கொண்டிருந்தது, அவர் தொடர்ந்து பல ஹிட்களை அளித்துக் கொண்டிருந்தார் என்பதுதான் உதாரணங்களுடன் கூடிய உண்மை. 70களின் மத்தியில் (அவர் பயணத்தை துவங்கிய வடிவத்திலிருந்து) முற்றிலும் மாறுபட்ட பரிமாணத்தை அடையவும் செய்தார். அதன் உச்ச கட்ட வெளிபாடாக 'நினைத்தாலே இனிக்கும்' 1979இல் இளயராஜா தோன்றி மூன்று ஆண்டுகள் கழித்து அமைந்தது. 80 களின் துவக்கத்திலும், விஸ்வநாதன் பிஸியாக இளயராஜாவிற்கு போட்டியாளராய் ஊடகத்தாலும் மக்கள் ரசனையாலும் பார்க்கப் பட்டு, சொல்லப் போனால் இளயராஜாவை விட அதிகம் மதிக்கப்படுபவராய், ராஜா பிரபலமாகி பல வகை இசைகளை அமைத்திருந்தாலும் ஒரு 'டப்பாங்குத்து இசையமைப்பாளராகவே' பார்க்கப் பட்டும, எம்.எஸ்.வியை தமிழ் சமூகம் ஒரு உயர்ந்த இடத்தில் வைத்திருந்ததாகத்தான் தோன்றுகிறது. இன்று வரை ஒரு கொண்டாட்டமான இசையமைப்புக்கு, 'நினைத்தாலே இனிக்கும்' பாடல்களுடன் ஓப்பிட கூடிய வகையில் இந்திய அளவில் வேறு திரைப்படத்தின் பாடல்கள் இருப்பதாக தோன்றவில்லை -குறிப்பாக 'எங்கேயும் எப்போதும்', 'சம்போ, சிவசம்போ'.

அடுத்து ஹிந்திப் பாடல்களின் பக்கம் தமிழ் மக்கள் காதை திருப்பினார்கள் என்பது முற்றிலும் நகைப்பிற்குரிய ஒரு வாதம். தமிழ் சமூகம் எல்லா காலகட்டத்திலும் இந்திப் பாடல்களுக்கு ஒரு சிறிய இடத்தை அளித்தே வந்திருக்கிறது. வருடங்களுக்கு ஒரு முறை, சில நேரம் ஐந்து வருடத்திற்கு ஒரு முறை என்று பாபி, குர்பானி, கயாமத் ஸே கயாமத் தக், தேசாப் என்று ஏதாவது ஒன்று, அலுப்பு தரும் இடைவெளியில் ஹிட்டாகி கொண்டே இருக்கும். சில குறிப்பிட்ட படங்கள், பாடல்கள் மட்டும் (ஹிந்தி தெரியாத சமூகத்திடம்) எடுபட்ட வறலாறு பற்றி தனியாய் ஆராய வேண்டும். எண்பதுகளின் தொடக்கத்தில் ஒரு கட்டத்தில் போனி-Mஉம், ஆபாவும் கூட தமிழ் நாட்டில் பிய்ந்து கொண்டிருந்தது. பொதுவாக தமிழ் சமூகம் பற்றி வெளி மாநிலங்களிலும் (தமிழ் சமுதாயத்தினுள்ளும் சிலரால்) வைத்திருக்கப்படும்/பரப்பப்படும் முன் பிம்பத்திற்கு மாறாக, தமிழ் சமூகம் கொண்டிருக்கும், எல்லாவற்றிற்கும் இடமளிக்கும் எல்லாவற்றையும் நுகர விழையும், பரந்த மனப்பான்மையின் ஒரு பரிமாணம்தான் இது. ஒரு சிலர், கலைத்தாகம் கொண்டு எட்டுத் திக்கிலும் நோக்குபவர்கள், ஹிந்திப் பாடல்களையும் நுகர்ந்திருக்கலாம். தொடர்ந்து இப்படி ஒரு நிலை இருந்ததே ஒழிய ஹிந்திப் பாடல்களின் பக்கம் தமிழ் சமூகம் எப்போது காதை திருப்பிக்கொண்டது என்று புரியவில்லை.

இதை தவிர்த்து ஹிந்திப் பாடல் கேட்பது என்பது தமிழ் சமூகத்தில் உள்ள ஒரு சிறு கூட்டத்திற்கு, போலித்தனமான ஒரு பெருமைக்குரியதாக இருந்திருக்கிறது. இப்போது அது அதிகமும் ஆகியிருக்கிறது. அப்படி ஒரு கூட்டம் எல்லா காலகட்டத்திலும் இருக்கும். ஏ.ஆர். ரஹ்மானால் தமிழில் இசையமைக்கப் பட்டு, ஹிந்தியில் நகலெடுக்கக் கூட ஒழுங்காய் வக்கில்லாமல், அரைகுறையாய் காப்பியடிக்கப் பட்ட பாடல்களை, ஹிந்தியில் கேட்பதில் கூட அவர்களுக்கு ஒரு பெருமை. ஹிந்தி என்ற மொழிக்கு இருக்கும் மேலாண்மையான நிலையும், தமிழ் சமூகத்தின் கருப்பு வெள்ளை உளவியலில் இருக்கும் அடிமை புத்தியும் தவிர்த்து, இசை பூர்வமான காரணம் எதுவும் இதற்கு கிடையாது. இப்படி ஒரு நிலை நேன்று இன்று மட்டுமில்லாமல், தமிழ் உயிர்த்து இருக்கும் எல்லா கட்டத்திலும் தொடரும். எதிர்காலத்தில், தமிழ் திரை இசை உச்சத்தை தொட்டாலும், இந்த காய்ச்சல் இன்னும் அதிகமாக மட்டுமே செய்யும். அதனால் ஹிந்தியிடமிருந்து, தமிழ் திரையிசையை காத்ததாக சொல்வது, ராஜாவின் சாதனைகளை மிகவும் குறுக்கும் ஒரு அற்பமான வாதம் என்பது என் தாழ்மையான கருத்து. ராஜாவின் சாதனை முற்றிலும் வேறு வகையானது.

பரிணமித்து கொண்டிருக்கும் எல்லா கலைகளின் வளர்ச்சியிலும் ஒரு கட்டத்தில் நெருக்கடி என்று ஒன்று எற்படுவது இயல்பு அல்லது ஆதார விதி. எல்லா வகை கலைகளிலும், அரசியல், அறிவியலில் கூட இதை காணமுடியும். இது சமூக மாற்றத்தாலும், நவீனமாவதாலும் மட்டும் நிகழவேண்டிய அவசியம் இல்லை. ஒரு கலை தொடர்ந்து உயிர்த்து இருப்பதால் அதன் இருப்பினாலே கூட ஏற்படலாம். அந்த நெருக்கடி விளிக்கப்படாமல் உள்வாங்கி கொள்ளப்படாமல் தொடர்வதும் உண்டு. அதன் பலனை அதற்கு அடுத்த காலகட்டத்தில்தான் உணரமுடியும். விஸ்வநாதன் அற்புதமாய் தொடர்ந்திருந்தாலும், இன்னும் பலர் புதிதாய் வந்திருந்தாலும் இந்த நெருக்கடி தவிர்க்க இயலாதது. இளயராஜா இல்லாவிட்டால் நிச்சயம் புதிதாய் வேறு பலர் வந்திருப்பார்கள். ஜிகே வெங்கடேஷ் தமிழில் பெரிய ஆளாக கூட வந்திருக்கலாம். ஆனால் இந்த நெருக்கடி நிச்சயம் தொடர்ந்திருக்கும்.

ஹிந்தியில் வளமான அளவு இசையமைப்பாளர்கள் இருந்தும், அங்கேயும் சரியாக எழுபதுகளில் இந்த நெருக்கடி ஏற்பட்டு, அது விளிக்கப் படாமல் லஷ்மிகாந்த் பியாரேலால் போன்றவர்களின் நேர்கோட்டு இசையுடன் தொடர்ந்தது. ஹிந்தியில், எண்பதுகளில் உருப்படியாய் எதுவுமே வெளிப்படாமல் (தமிழில் 80களும் ஒரு பொற்காலம்), 90களின் தொடக்கத்தில் எந்த வித படைப்பு தன்மையும் அற்ற (சினிமாபாட்டில் கிரியேட்டிவிடியா என்று கேட்கக்கூடாது, பரவலாய் நகலெடுத்த தேவாவிடம் கூட படைப்பு தன்மை உண்டு), வெறும் நகலெடுக்கும் வேலையாக மாறி, ஏ.ஆர். ரஹ்மானின் புதிய இசை உள்ளே நுழையும் வரை இந்த கலை நெருக்கடி விளிக்கபடாமல் ஹிந்தியில் தொடர்ந்திருந்திருக்கிறது. தமிழில் அப்படிப்பட்ட நெருக்கடி காலத்தில், மிக சரியாக தோன்றி, முற்றிலும் புதிய ஒரு இசையை அளித்து, அனைத்தையும் அள்ளிக் கொண்டு போனவர்தான் இளயராஜா. அவர் அளித்த இசைக்கு முன்னோடி தமிழில் மட்டுமின்றி, உலகிலும் இல்லை. எம்.எஸ்.வி/ஹிந்தி பாடல்களை முன்வைத்து சொல்லும் ஸ்டீரியோ வகை வாதத்திலிருந்து முற்றிலும் வேறுபடும் விஷயமிது.

ஏ.ஆர். ரஹ்மானும் கிட்டதட்ட இளயராஜாவின் தொடர்ந்த தனிக்காட்டு ஆதிக்கத்தால் ஏற்பட இருந்த நெருக்கடிக்கு சற்று முன் வந்தவர்தான். ரஹ்மானின் புதிய இசைகொண்டு தமிழ் திரையிசை அந்த நெருக்கடியை எதிர்கொண்டிருந்தாலும் சில வித்தியாசங்கள் உண்டு. ஒரு வகையில் ரஹ்மானின் இசைக்கு ராஜா ஒரு முன்னோடி. ராஜா தந்த இசையின் இயல்பான தொடர்சியை ரஹ்மான் தந்தார். ஆனால் ராஜா அளித்தது, முன்னோடி இல்லாத புத்தம் புதிய இசை.

ராஜாவின் இசை ஒரு தமிழ் சூழலுக்கு(அதாவது தென்னிந்திய சூழலில்) மட்டுமே எடுபடக்கூடியதாக் இருந்தது. வட இந்திய வெகு மனம் ராஜாவின் இசையில் அடையாளம் காணமுடியவில்லை. மாறாக ரஹ்மானின் இசை வட இந்திய மனம் அடையாளம் கண்டு அனுபவிக்கும் வகையில் வெளிபட்டது. இதன் காரணமாய் வந்த சில ஆண்டுகளிலேயே ரஹ்மானை பாலிவுட் அள்ளிக் கொண்டு போய்விட, அவர் அமைத்துத் தந்த ட்ரெண்ட்களின் வழி தோன்றல்களோடு நாம் சமாதானப்பட வேண்டியதாயிற்று.

(தொடரும்)

Post a Comment

14 Comments:

Blogger பட்டணத்து ராசா said...

இசை பற்றிய அறிவு இல்லை என்றாலும் அது என்னுள் ஏற்படுத்தும் தாக்கமே எனக்கு அளவுகோல். எம்.ஸ்.வி இசை, இளையராஜாவின் ஆரம்ப இசை இரண்டுமே எனக்கு சமகாலம் இல்லை என்றாலும் தொலைகாட்சியும் சில சீடிக்கள் முலமே எனக்கு பரிச்சயம். 16 வயதினிலே "செவந்தி பூ" நிழ்ல்கள் "மடை திறந்து" பாடல்கள் ஏற்படுத்திய நெருக்கம் எந்த எம்.ஸ்.வின் பாடல்களும் ஏற்படுத்தியது இல்லை.

6/02/2006 3:03 PM  
Blogger பட்டணத்து ராசா said...

இளையராஜாவின் ஏக் துஜே கலீயே மிக பெரிய வெற்றி என கேள்வி? இல்லையா?

6/02/2006 3:20 PM  
Blogger ROSAVASANTH said...

பின்னூட்டத்திற்கு நன்றி. ஆனால் ஏக் துஜே கேலியேவின் இசை லக்ஷ்மிகாந்த ப்யரேலாலினுடையது. ஹிந்தியில் இளயராஜா இசையமைத்திருக்கிறார், ஆனால் அவை பெரிதாக ஹிட்டாகவில்லை. அவர் தமிழில் இசையமைத்த 'கண்ணே கலைமானேயை' அப்படியே ஹிந்தி 'சத்மா'வில் எடுத்து இசையமைத்த பாடல் ஹிட்டானது. அவரது, 'அடி ஆத்தாடி, ராக்கம்மா கையதட்டு' மிக மோசமான முறையில், ஒழுங்காய் காப்பியடிக்கக்கூட படாமல் காப்பியடிக்கப்பட்டு ஹிட்டானது. அவரது 'இளயநிலா' (பயணங்கள் முடிபதில்லை ஹிந்தி பதிப்பில்) சற்று மாற்றி நகலெடுக்கப்பட்டு ஹிட்டானது. அதை ஒரிஜினல் ஹிந்தி பாட்டாக பலர் நினைத்து கொண்டும் இருக்கின்றனர். தமிழ் நாட்டில் கூட சிலர் கேனத்தனமாய் இளயராஜா ஹிந்தியில் இருந்து சுட்டு போட்டதாய் நினைத்து கொண்டு, அதை சொல்லவும் கேட்டிருக்கிறேன்.

6/02/2006 4:21 PM  
Blogger Jayaprakash Sampath said...

//இன்னும் பலர் புதிதாய் வந்திருந்தாலும் இந்த நெருக்கடி தவிர்க்க இயலாதது. இளயராஜா இல்லாவிட்டால் நிச்சயம் புதிதாய் வேறு பலர் வந்திருப்பார்கள். ஜிகே வெங்கடேஷ் தமிழில் பெரிய ஆளாக கூட வந்திருக்கலாம். ஆனால் இந்த நெருக்கடி நிச்சயம் தொடர்ந்திருக்கும்//

இது ஒரு hypothetical situation என்பதால், சரியான விடை கிடைக்காது. ஆனாலும், என் அபிப்ராயத்தில், இது நடந்திருக்காது.

ஜி.கே.வெங்கடேஷ் என்று மட்டுமில்லை. நிறைய பேர் இருந்திருக்கிறார்கள். விஜயபாஸ்கர், குமார், ராமானுஜம் ( பொன் என்பதோ, பூவென்பதோ...), ஷ்யாம், வி.எஸ்.நரசிம்மன் போன்றவர்களின் சில பாடல்கள், இளையராஜாவின் சில பாடல்களை விடவும் சிறந்தவை ( வேணுமானால் பட்டியல் தருகிறேன்). ஆனால், இவர்களால், தங்களுடைய கற்பனைச் சிறகை ஓரளவுக்கு மேலே விரிக்க முடியவில்லை. தனக்குக் கிடைத்த மிகக் குறுகிய சட்டகத்துக்குள் இருந்து கொண்டே பரீட்சார்த்தங்களைச் செய்து பார்க்கத் தேவையான பொறுமையும்,கற்பனை வளமும், அசகாயத் திறமையும், எவரிடம் இருந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள்? இளையராஜாவுக்கு மாற்றாக, அவரது இடத்தில் வந்து அமர்ந்த ஏ.ஆர்.ரகுமான் சிறந்த கலைஞர் என்பதிலே, ஐயமில்லை. ஆனால், அவரது திறமை வேறு வகை அல்லவா? நித்யஸ்ரீயிடம் பாட்டையும் ட்யூனையும் கொடுத்து விட்டு, " என்ன என்ன டெவலப்மெண்ட் தோணுதோ எல்லாத்தையும் சேத்துக்கங்க" என்று சொல்வது ரகுமான் ஸ்டைல் என்றால், எல்லா சங்கதிகளையும், மனசுக்குள்ளாக வாசித்து, அதை அப்படியே பேப்பரிலே எழுதி, அப்படியே பாடச் சொல்வது ராசா ஸ்டைல் இல்லியோ... எல்லா நல்ல இசை அமைப்பாளர்கள் அனைவருமே, பல நல்ல பாடல்களைக் கொடுத்திருக்கிறார்கள், சந்திரபோஸ் உள்பட. ஆனால், தானே அமைத்த வடிவத்தில் இருந்து வெளியே வந்து புதுசாக ஒன்றைச் செய்ய, மிக அசாத்தியமான திறமை வேண்டும். அன்னக்கிளியின் நாட்டுப்புற குத்து இசையில் துவங்கிய பயணம், பல்வேறு திசைகளில் சென்று, கேட்குந்தோறும் புதிய பரிமாணத்தைக் காட்டிய வண்ணம் தான் இருக்கிறது, எளங்காத்து வீசுதே வரையில்...

அவருக்கு ஸ்பேஸ் கிடைத்தது, செய்தார் என்று சொல்லலாம் சிலர். இல்லை, அந்த ஸ்பேசை உருவாக்கிக் கொண்டவர் அவரே... 'நேத்து ஒருத்தரை ஒருத்தரை பாத்தேன்' என்கிற நாட்டுப்புற + வெஸ்டர்ன் fusion, பாட்டை, இதுதான் வேணூம் என்று ராமராஜனோ, அல்லது படத்தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலமோ, ரொம்ப கேட்டுக் கொண்டதால், நாலைஞ்சு நாள் டிஸ்கஷன் எல்லாம் செஞ்சு போட்ட பாட்டா? கிடையாது..

மிகக் குறுகிய இடத்திலே கூட, தனக்கான இடத்தை அவர் ஏற்படுத்திக் கொண்டு, அதைக் குறை சொல்லாமலும் இருந்தார் என்பது முக்கியமான விஷயம், ஆங்கிலப் பத்திரிக்கை செவ்விகளில், தமிழ்ச் சினிமாவை, ஏர்.ஆர் ரகுமான், சந்தடிச் சாக்கில் வாருவதைப் போல அல்லாமல்.,,

அவருக்கு கிடைத்த அதே, சந்தர்ப்பங்கள், பிறருக்கும் இருந்தபோதும், இத்தகு மேதமையை யாரும் வெளிப்படுத்த வில்லை என்கிற போது, வேறு யாராச்சும் செய்திருப்பார்களோ என்கிற கேள்விக்கு முகாந்திரமே இல்லை..

No prima facie. Case dismissed.

6/02/2006 5:04 PM  
Blogger G.Ragavan said...

வசந்த். மிகவும் அருமையான பதிவு. இதே கருத்தை நான் முன்பு ஒரு தளத்தில் சொல்ல....அது பெரிய பிரச்சனையாகி விட்டது. இளையராஜா ரசிகர்களால் நான் வாய் மூட வேண்டிய நிலை ஆளானது.

இளையராஜாவின் இசை எனக்கும் பிடிக்கும்தான். ஆனால் ஏதோ அவர் வருவதற்கு முன்னர் தமிழகமெங்கும் இந்திப் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தது போலப் பேசுவது மிகவும் அறிவீனம்.

நீங்கள் கேட்ட அதே கேள்வியைத்தான் நானும் கேட்டிருந்தேன். கயாமத் சே கயமத் தக், ஆஷுகி போன்ற படங்கள் விஸ்வநாதன் காலத்திலா வந்தன? அவ்வா அவ்வா ஏ அவ்வா என்று தமிழகப் பட்டி தொட்டியெங்கும் பாடல் பிரபலமான பொழுது மெல்லிசை மன்னரா கோலோச்சிக் கொண்டிருந்தார்? அது எப்பொழுதும் நடப்பது.

ஒரு இசையமைப்பாளர் இருக்கையில், புதிய முறைமையுடன் இன்னொருவர் வந்து பிரபலமாவது தடுக்க முடியாயது. இளையராஜா இருக்கையிலேயே ரகுமான் வரவில்லையா?

இப்படியெல்லாம் சொல்வது இளையராஜாவின் இசைத்திறமையைக் குறைத்துச் சொல்வதாகாது. விஸ்வநாதன் மண் ரோடு போட்டார். இளையராஜா தார் ரோடு போட்டார். ரகுமான் சிமிண்ட் ரோடு போட்டார். அவ்வளவுதான்.

எம்பதுகளின் தொடக்கத்திலும் விஸ்வநாதன் நல்ல பாடல்களைக் குடுத்திருக்கிறார். நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி பாடல் ஒன்று போதுமே. சிறை படத்திற்கு அவர் விருது வாங்கியதும் இந்தக் காலகட்டந்தானே.

பட்டணத்து ராசா, இளையராஜா இசை உங்களுக்குள் செய்த மாயம் விஸ்வநாதன் இசை செய்யவில்லை என்று நீங்கள் சொல்வது போல, ரகுமான் இசை செய்யும் மாயம் ராஜா இசை செய்யவில்லை என்று சொல்கிறவர்களும் இருக்கிறார்கள்.

பொதுவாகவே நல்ல இசையை ரசிக்க பாரபட்சமில்லாத மனம் வேண்டும் என்பது என் கருத்து.

6/02/2006 5:15 PM  
Blogger ROSAVASANTH said...

பிரகாஷ், ராகவன் ரொம்ப நன்றி.

நேற்று நாலாவது நாளாய் தூக்கம் இல்லாமல் (நமக்காக பையன் அவன் தூக்க ஷெடூலை மாற்றிகொள்ள முடியுமா? நான் எப்ப தூங்கினாலும் காலையில் சரியாய் எழுப்பிவிடுகிறான்!) கண் ரொம்பவே இழுக்க, உற்சாகத்தை வலிந்து வரவழைத்து கொண்டு எழுதிய பதிவு. காலையில் வந்து பார்த்தால் யாருமே படிக்கவில்லையோ என்று சந்தேகம் வந்துவிட்டது. உங்கள் பின்னூட்டத்தை பார்த்தபின்பு அடுத்த பதிவு எழுதத் தொடங்கலாமான்னு இருக்கு! நன்றி!

6/02/2006 6:03 PM  
Blogger பட்டணத்து ராசா said...

ரோசா,
தகவலுக்கு நன்றி

ராகவன்,

எம்.ஸ்.வி இசை குறை சொல்லவில்லை நெருக்கம் என்கிற வார்தைதான் பாவிச்சிருக்கேன்.பாரபட்சமெல்லம் இல்லைங்க.

6/02/2006 6:12 PM  
Blogger ROSAVASANTH said...

சாணக்கியன் இட்ட பின்னூட்டம் வரவில்லை. ஒருவேளை தவறுதலாய் rejectஐ அழுத்திவிட்டேனோ தெரியவில்லை. மின்னஞ்சலிலிருந்து சாணக்கியன் எழுதிய பின்னூட்டம் கீழே!

********************************************************

Hello Sir,
I agree that Tamil Film did not utilise the skills of Ilayaraja to the full. But I disagree with that that he could not fit rightly to the film music like MSV and ARR. He has incredibily contributed to film music and did lots of experiments and innovations in that. Everything cannot be spoonfed. Even to enjoy an art you have to spend some time and learn to enjoy that Art. Modern Art is an example for that. Similarly, to understand and enjoy IRs music completely one have to have a passion for music. What I am trying to say is that once we understood or enjoy some pieces of his music and feel that is incredible then as a fan of music it is our duty to search/research the treasures kept inside his works(music). Even in folk songs or the so called 'kuthu pattu' IR given nice tunes and the best use of instruments in that. 'Ayya veedu thoranduthan irukku' from Kadalukku mariyadai and 'Kana karunguyile' from SETHU are few of them to quote. IRs given excellent tunes for the situations in the film which adds a lot of value to the film. But those songs do not become hit in audios. Thats not his mistake. Thats our mistake. Many of the music lovers have identified such songs of IR and still listening. ARR on the other hand composes only for the audios. Those may not fit best to the situations that come in the movie. You can't imagine any other music director composing such a fitting song to the situation that of the song, 'vooru vittu vooru vandu' from KARAGATTAK KARAN. So, I disagree with you that he could not fit into the film music. Its the people who didnot realise the treasures he has kept in his music.

Sorry for giving feedback in tamil. The tool that I have been using is not working now.

Thanks,

6/02/2006 8:35 PM  
Blogger ROSAVASANTH said...

சாணக்கியன், நாம் வேறுபடுவதாய் தெரியவில்லை. உண்மையில் நீங்கள் சொல்வதை நான் ஏற்றுகொள்கிறேன். ஆனால் நான் என்ன சொல்ல வந்தேன் என்பதற்கு பின்னர் வருவதாக் சொல்லியிருந்தேன். பின்னர் வருகிறேன். கருத்துக்கு நன்றி.

6/02/2006 8:36 PM  
Blogger ROSAVASANTH said...

sorry, Chanakyan's comment is in the first part.

6/02/2006 8:40 PM  
Blogger Doctor Bruno said...

//இன்று வரை ஒரு கொண்டாட்டமான இசையமைப்புக்கு, 'நினைத்தாலே இனிக்கும்' பாடல்களுடன் ஓப்பிட கூடிய வகையில் இந்திய அளவில் வேறு திரைப்படத்தின் பாடல்கள் இருப்பதாக தோன்றவில்லை -குறிப்பாக 'எங்கேயும் எப்போதும்', 'சம்போ, சிவசம்போ'.//
டிஜிடல் மிக்ஸிங் இல்லாத நாட்களில் வந்த பாடல்கள் அவை என்பதை மனதிள் கொள்ள வேண்டும்
//போலித்தனமான ஒரு பெருமைக்குரியதாக இருந்திருக்கிறது.//
இருக்கிறது .... இருந்துகொண்டிருக்கிறது

6/03/2006 4:25 AM  
Blogger பனிமலர் said...

//ராஜாவின் இசை ஒரு தமிழ் சூழலுக்கு(அதாவது தென்னிந்திய சூழலில்) மட்டுமே எடுபடக்கூடியதாக் இருந்தது. வட இந்திய வெகு மனம் ராஜாவின் இசையில் அடையாளம் காணமுடியவில்லை. மாறாக ரஹ்மானின் இசை வட இந்திய மனம் அடையாளம் கண்டு அனுபவிக்கும் வகையில் வெளிபட்டது. இதன் காரணமாய் வந்த சில ஆண்டுகளிலேயே ரஹ்மானை பாலிவுட் அள்ளிக் கொண்டு போய்விட, அவர் அமைத்துத் தந்த ட்ரெண்ட்களின் வழி தோன்றல்களோடு நாம் சமாதானப்பட வேண்டியதாயிற்று.

இந்தியின் இசை தேடலும், மற்றும் படபிடிப்பும் என்றைக்குமே ஆலிஉட்டை பிரதி எடுத்தே இருக்கும். இவ்வளவு ஏன் நடை உடை பாவனைகள் என்று அவர்கள் பேசும் மொழியை தவிர்த்து மற்ற எல்லாமே ஆலிவுட்டில் உள்ளது போல அவர்களால் கொண்டு வர முடிந்தது இசையை தவிர.

அப்படி இருந்த காலகட்டத்தில் இரகுமானின் இயல்பாக வெளிபடும் ஆலிவுட் இசைக்கு ஈடாக அமையும் அவரது இசை வடிவங்கள் இந்தி படத்தின் இசை தேடுதலை பூர்த்தி செய்யும் விதமாகவும் அவர்களது தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாகவும் அமைந்து இருந்தமையால், இரகுமானுக்கு இந்தியில் அப்படி ஒரு இடம கிடைத்தது.

இரகுமானும் தன்னை நிலை நிறுத்திகொள்ள கையாண்ட உத்திகளை இப்போது பின்னுக்கு தள்ளிவிட்டு, இந்துத்தானி இசை கலைஞர்கள் கொடுக்கும் இந்தி பாடல்களின் இசையை விட இவர் கொடுக்கும் இந்தி இசைவடிவம் இன்னமும் அந்த மண்ணின் தன்மை கொண்டதாக அமைந்து வருவது இரகுமானின் திறமைக்கும் புலமைக்கும் நல்ல எடுத்துகாட்டாக அமைகின்றது.

9/01/2009 3:18 AM  
Blogger Karthik Nagarajan said...

Pls read this very objective article...

http://www.outlookindia.com/article.aspx?239907

11/07/2009 10:10 PM  
Blogger ROSAVASANTH said...

சுட்டிக்கு நன்றி கார்திக் நடராஜன்.

11/08/2009 5:07 AM  

Post a Comment

<< Home

---------------------------------------
Site Meter