ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Saturday, August 13, 2005

சாருவின் திரித்தல், மற்றும்...

திருவாசக இசைதட்டு வெளிவந்த பின்னர் இளயராஜா மீது, (நானும் பகிர்ந்து கொள்ளும்) ஒரு குறிப்பிட்ட வகை அரசியல் பேசும் கூட்டத்தின் ஆத்திரம் மிகையாக பாய்ந்து வருகிறது. இதற்கான குறிப்பிட்டு சொல்ல கூடிய provocation எதுவும் இருப்பதாக, என்னளவில் நன்றாய் பரிசீலித்து பார்த்தும், எதுவும் தெரியவில்லை.

உதாரணமாக அசோகமித்திரன் அளித்ததாக வெளிவந்த அவுட்லுக் 'பேட்டி' போலவோ, ஜெயகாந்தனின் 'நாய் பேச்சு' போலவோ எதுவுமே இல்லை. மிஞ்சி மிஞ்சிப் போனால் திருவாசக சிம்ஃபனிக்கு கிடைத்த அளவுக்கு மீறிய விளம்பரமும், சற்றே மிகையாகிப்போன பாராட்டுக்களும், சிலரின் உணர்ச்சி வசப்படுதல்களும் காரணமாய் இருக்கலாம். அப்படியில்லாமல் ஆத்திரத்திற்கான ஒரு நியாயமான காரணமாய், குணசேகரன் மீது இளயராஜா சில வருடங்களுக்கு முன்பு வழக்கு தொடுத்த முந்தய நிகழ்வு, சிலருக்கு தோன்றலாம்.(அதுவும் இப்போது மீண்டும் ஆத்திரத்துடன் பெரிதுபடுத்தப் பட்டு மொட்டையாக பலர் கேள்விபடுகிறார்கள் என்று நினைக்கிறேன்.) ஆனால் அதுவும் மேலே சொன்ன அமி 'பேட்டி', நாய் பேச்சு போன்றதன்று. ஒரு கலைஞன் தன்னை எவ்வாறு அடையாளம் காண விரும்புகிறான் என்பதும், அப்படி காணும்போது மற்றவர்களுக்கு தான் அரசியல்ரீதியாய் சரி என்று நம்புவதுடன் பொருந்தி வராத போது ஏற்படக்கூடிய ஒரு ஆதிக்க திமிர் கலந்த ஆத்திரமாகவே எனக்கு தோன்றுகிறது. அது குறித்து இந்த பதிவின் இறுதியில் பார்போம்.

இளயராஜாவின் இசை குறித்த எனது பார்வை, அதன் அரசியல், சனாதனதுடனான அதன் உறவு, மீறல், பணிதல், இயைதல் இவற்றை முன்வைத்தும், இன்று அவர் மீது காட்டபடும் ஆத்திரத்தின் பிண்ணணி அரசியல் உளவியல் மற்றும் வேறு பரிமாணங்கள் இவற்றை பற்றி விரிவாய் எழுத நினைத்து தள்ளி போடப்பட்டு, வழக்கம் போலவே அது எழுதப்படாமல் போகும் ஆபத்து இருப்பதால், இப்போதைக்கு சில மறுப்புக்களையாவது இங்கே முன்வைப்பது மட்டுமே இந்த பதிவின் நோக்கம்.

இளயராஜா குறித்து பொருட்படுத்த தக்க, எதிர்கொள்ள வேண்டிய விமர்சனத்தை அ.மார்க்ஸ் சில வருடங்கள் முன்னால் தீராநதியில் எழுதியிருந்தார். இளயராஜா மீதான 'பெரியாரிஸ்டுகளின்' ஆத்திரத்திற்கான துவக்கப்புள்ளியாக இந்த கட்டுரைதான் எனக்கு தென்படுகிறது. 'இளயராஜா சனாதனத்தை அசைத்தாரா, இசைத்தாரா?' என்ற கேள்வியை தலைப்பாக கொண்ட அந்த கட்டுரை, ஆய்வைவிட 'இசைத்தார்' என்ற முன்முடிவையே அடைப்படையாக கொண்டது என்பது தெளிவாக தெரியும் வகையில் எழுதப்பட்டது என்றாலும், 'இசைஞாநி' வரம்பின்றி கொண்டாட மட்டுமே பட்டுக்கொண்டிருந்த காலகட்டத்தில் மிகவும் தேவைப்பட்ட ஒரு விமர்சனத்தை தந்தது. அதுவரை (ஒரு தலித் என்ற முறையிலும், சில புனிதங்களை உடைத்தவர் என்று கருதுவதினாலும், நாட்டுபுற மற்றும் டப்பாங்குத்து இசைக்கான ஒரு இடத்தை அளித்தவர் என்றும், மற்றும் பல காரணங்களுக்காகவும் அதுவரை) பொதிவாகவும், தங்கள் அரசியலுக்கு தோதானவராகவும் தெரிந்த இளயராஜாவை, ஒரு எதிரிலக்காக கொண்டு பலரால் தாக்குலிட முகந்திராமாய் அந்த கட்டுரையே இருந்தாலும், ஒரளவு ஆய்வு பூர்வமாய் அணுகுவதாகவும், அதைவிட முக்கியமாய் இளயராஜாவின் இசையை முன்வைத்து அணுகுவதாகவும் அந்த கட்டுரை இருந்தது. அப்படியில்லாமல் ராஜா அளித்த பேட்டியிலிருந்து ஒருவரியை உருவியும், அதை திரித்தும், இன்னும் தன் விருப்பத்திற்கேற்ப கண்டதையும் ஒரு வாதமாய் அடுக்கி தர்க்கப்படுத்தியும் ஆத்திரத்தை மட்டும் கக்கும் கட்டுரைகளாக சாருநிவேதிதா மற்றும் ஞாநியின் கட்டுரைகள் வந்துள்ளது. அ.மார்க்ஸின் கட்டுரையை எதிர்கொள்ளும் உருப்படியான வேலையை பிறிதொரு சந்தர்ப்பத்திற்கு தள்ளிவைத்து விட்டு, இந்த குப்பைகளை கிளரும் கோழிவேலையை மட்டும் இப்போதைக்கு செய்ய உத்தேசம்.

ஞாநி எழுதி குவித்த குப்பைகளிலேயே அழுக்கானதாக இளயராஜாவின் திருவாசகம் குறித்த கட்டுரை எனக்கு தெரிகிறது. விவாதிப்பதற்கோ விமர்சனத்திற்கோ எந்த வித தகுதியும் இல்லாத, காழ்ப்புணர்வு மட்டுமே வெளிப்படும் அந்த கட்டுரைக்கு மறுப்பு எழுத எனக்கு இருக்கும் ஒரே காரணம், அது நான் பகிர்ந்து கொள்ளும் அரசியலை பேசும் பலருக்கு உவகையை அளித்திருப்பதுதான். இன்னும் பரவலாக ஒரு கழகக் கண்மணிக்கு கருணாநிதியின் பேச்சு ஏற்படுத்தும் கிச்சு கிச்சு மூட்டலை ஏற்படுத்தியுள்ளதையும் புரிந்துகொள்ள முடிகிறது. இந்த ஆபத்தின் காரணமாய், கொஞ்சமாவது நான் கலந்து கொள்ளும் கோஷ்டிகானத்திலிருந்து விலகி, இதை மறுக்கவேண்டிய ஒரு சூழலின் கட்டாயத்தில், அதை அடுத்து வரும் பதிவுகளுக்கு தள்ளிவிட்டு, சாரு நிவேதிதாவின் கட்டுரையின் இரண்டு முக்கிய திரித்தல்களை பற்றி மட்டும் இங்கே பேசுகிறேன். அதற்கு முன் சாரு சில வருடங்களுக்கு முன்னால் விகடன் கோணல் பாக்கங்களின் இளயராஜா(வின் இசை) குறித்து விமரசனமாய் எழுதிய கருத்துக்களுடன் எனக்கு ஒரளவு ஒப்புதல் உண்டு என்பதையும், அது குறித்த எனது கருத்துக்களையும் ஏற்கனவே இகாரஸுடன் நடத்திய வறலாற்று சந்திப்பில் சொல்லியிருக்கிறேன் என்பதை மட்டும் சொல்லிவிட்டு, மீண்டும் அந்த உருப்படியானதை பற்றி பேசுவதை தள்ளி வைத்து விட்டு குப்பையை மட்டுமே, 'கொண்டிருக்கும் அன்பிலே அக்கரை காட்டாமல்', கிளறுகிறேன்.

சாருநிவேதிதாவின் கட்டுரை பல முக்கிய தகவல்களை கொண்டுள்ளது. பாப் மார்லே குறித்தும், ஹாரா குறித்தும் தமிழில் இதுபோல் எழுதப்படுவது முக்கியமானது என்பதில் ஐயமில்லை. ஆனால் அதை எழுதுவதற்கான காரணமாக சாரு சொல்வது இளயராஜா 'அவுட்லுக்கில் அளித்த பேட்டி'. அது இல்லாவிட்டால் அவர் எழுதியிருக்கவே மாட்டாராம். சாரு சொல்கிறார் " ..outlook பேட்டியாளர் இளயராஜாவிடம் எடுத்த பேட்டியில் ... குறிப்பிட்டுள்ள ஒரு கருத்து நம் கவனத்திற்குரியது. பாப் மார்லே, பாப் டைலன், இளயராஜாவின் சகோதரர் பாவலர் வரதராஜன் குறித்து ... கருத்து கேட்டபோது இளயராஜாவின் பதில், "அந்த குப்பைகளுக்கு எல்லாம் நான் அப்பாற்பட்டவன்." இந்த வாக்கியத்தை மட்டும் அவர் கூறியிருக்காவிட்டால் இந்த கட்டுரையையே நான் எழுதியிருக்க மாட்டேன்." அப்புறம் உணர்ச்சிபூர்வமாய் 'பாப் மார்லே யார்?' என்ற கேள்வியுடன் கட்டுரை தொடர்கிறது.

முதலில் தெரியவேண்டியது (நான் சற்று முயற்சித்து தெளிவு படுத்திகொண்ட வரையிலும்) அவுட்லுக்கில் இளயராஜாவின் பேட்டி எதுவும் வரவில்லை. அசோகமித்திரன் மனம் திறந்ததாய் வந்தது போன்ற வடிவத்தில் கூட எதுவும் இல்லை. அதில் வந்ததும், சாரு குறிப்பிடுவதும் ஆனந்த் என்பவர் எழுதிய ஒரு சிறு கட்டுரையை(அதாவது column). அந்த கட்டுரையில் இளயராஜா சொன்னதாய் மொத்தமாய் வருவது ஒரே ஒரு வரி. மேலே உள்ள "I am beyond such garbage," என்பது மட்டுமே. சாருவின் தமிழ் கட்டுரையை (அவுட்லுக் படிக்காமல்)படிப்பவருக்கு ஒரு சம்பிரதாய பேட்டியில் இளயராஜா சொன்ன ஒரு கருத்து போலவே இது அறியத்தரபடுகிறது. சாருவின் கட்டுரையின் தொடக்கமே இதை பேட்டி என்று திரித்தே தொடங்குகிறது. இந்தியாடுடே பேட்டி முகஸ்துதியாகவும், அதற்கு மாறாக அவுட்லுக் 'இளயராஜாவிடம் எடுத்த பேட்டியில் மேற்கண்ட sycopancy விவகாரங்கள் எதுவும் இல்லை' என்கிறார். அதாவது ஆனந்த் தன் தனிப்பட்ட கருத்துக்களை எழுதிய கட்டுரை பேட்டியாகிறது. ஆனந்த் பேட்டியாளராகிறார். எடுக்காத பேட்டிக்கு அவருக்கு பாராட்டு வேறு. ஆனந்தின் கட்டுரையில் என்ன கேள்வி இளயராஜாவிடம் கேட்கப்பட்டது என்று கூட தெளிவாய் குறிப்பிடப்படவில்லை. ஆனந்த், குணசேகரன் நூலிற்கு இளயராஜா காட்டிய எதிர்ப்பை (திரித்து)முன்வைத்து, தன் இஷ்டத்திற்கு சில கருத்துக்களை சொல்லிகொண்டே போகிறார். முடிவில் "So why does Ilayaraja, having waltzed past many social obstacles, hate being reminded of his past? Outlook asked Ilayaraja about Bob Marley, Bob Dylan, Gaddar, his communist brother Varadarajan and even the recent Live-8 performances where music became a mode of protest. "I am beyond such garbage," was his curt reply." என்று சொல்லி முடிக்கிறார்.

கட்டுரையின் தொனியிலும் சரி இளயராஜா சொன்னதிலும் சரி அவர் குப்பை என்று சொல்வது பால்மார்லேயையோ, கதாரையோ, வரதராஜனையோ அல்ல. தனது சாதி பற்றி பேசப்படுவதும், அதன் அடையாளத்தை முன்வைத்து கேட்கப்படுவதுமான கேள்வியின் அரசியல் உள்ளடகத்தையே, எதிர்ப்பின் வெளிப்பாடாய் இசை அமைவது பற்றிய கருத்துக்கள் என்று கேட்கப்படும் அரசியல் கேள்விகளையே அவர் குப்பை என்று குறிப்பிடுகிறார் என்பது தெளிவு.

இளயராஜா ஒருபோதும் எந்த இசையையும் குப்பை என்று இதுவரை சொன்னதே கிடையாது. மற்ற இசையமைப்பாளர்கள் எல்லாமே, தேவா கூட(தன் தனிப்பட்ட சாதனையான கானா பாட்டு குறித்து பேசும்போது), சினிமாவில் 'தரம் தாழ்ந்த இசையை' தரவேண்டிய சமரசம் குறித்து பேசியதை காட்டமுடியும். இளயராஜா மட்டுமே தொடர்ந்து எல்லா இசையையும் ஒரே தளத்தில் வைத்து பார்ப்பதாக மீண்டும் மீண்டும் சொல்லிவருவதை காண முடியும். சிந்துபைரவிக்கும், 'கட்டைவண்டி ..கட்டவண்டி..' பாடலுக்கும், How to name it?, Nothing but windற்கும் தான் ஒரே மனநிலையில் இசையமைப்பதாக பலமுறை இளயராஜா சொல்லியிருக்கிறார். இதே போன்ற பல பொதுவான இசை குறித்த புனிதங்களை உடைப்பதாகவே அவரது பல பேட்டிகளும், பேச்சும் இருந்து வந்துள்ளன. இந்த இடத்தில் ஒரு சுவாரசியமான விஷயமும் உண்டு. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன்னால் 'குதிரை வீரன் பயணம்' என்ற சிறுப்பத்திரிகையில், சாருநிவேதிதா கோணல் பக்கங்கள் என்பதை எழுதத்தொடங்கிய காலத்தில், இளயராஜா "நாயின் குரைப்பிலும், தியாகராஜரின் கீர்த்தனையிலும் ஒரேவகை இசையையே காண்பதாக" சொன்னதை மேற்கோள் காட்டி எழுதியிருப்பார். ஆனால் அப்போது சாருவின் இலக்கு வேறு ஒன்றாக இருந்ததால், தாக்குவதற்கு இளயராஜாவின் வரி பயன்படுத்தப்பட்டு இப்போது மறந்துவிட்டது.

இத்தனை வருடங்களாய் தன் அண்ணன் பாவலர் வரதாராஜன் பற்றி மிக மரியாதையாய் பேசியுள்ள இளயராஜா இப்போது திடீரென அவரை குப்பை என்று எப்படி சொல்லுவார்? சமீபத்தில் ஜெயகாந்தனுக்கான பாராட்டு விழாவில் இளயராஜா பேசிய பேச்சு சிவக்குமாரின் வலைப்பதிவில் கிடைக்கிறது. அதில் நீண்ட நேரத்திற்கு பாவலரை பற்றி, அவர் திறமைகள் பற்றி பேசிக்கொண்டே போகிறார். ஆனால் ஏற்கனவே அமி விவகாரத்திலும். 'dalits reversed' கட்டுரையிலும் சாயம் வெளுத்துப்போன அவுட்லுக் 'பேட்டியாளருக்கு' மட்டும் ஷ்பெஷலாக 'குப்பை' என்று தொலைபேசியில் சொல்லியனுப்புவார் என்றே வைத்துகொண்டாலும், அவர் குப்பை என்று சொல்வது கதாரையோ, பாவலரையோ, பாப் மார்லேயையோ அல்ல. இது போன்ற கேள்விகள் தொடர்ந்து தன்னை நோக்கி கேட்கப்படுவதன் பின்னுள்ள அரசியல் உள்ளடக்கத்தையே குறிக்கிறார். (இந்த கருத்தை பத்ரியும் அவரிடம் பேசிக்கொண்டிருந்த போது குறிப்பிட்டார்.)

சாருவை திரிக்கிறார் என்று ஏன் நினைக்கவேண்டும், இளயராஜா சொன்னது புரியாமல் அவர் தவறாய் எடுத்து கொண்டிருக்கலாம் என்று சிலருக்கு தோன்றும். அப்படி சந்தேகத்தின் பலனை அளிப்பதுதான் நியாயம் என்று தோன்றினாலும், ஆனந்தின் கட்டுரையை பேட்டி என்று திரித்து, ஆனந்தின் மொட்டை மேற்கோளை அடிப்படையாய் வைத்து, எந்தவித சந்தேகத்தின் பலனையும் இளயராஜாவிற்கு தராமல் கட்டுரை எழுதிய சாருவிற்கு மட்டும் சந்தேகத்தின் பலனை தருவது எனக்கு நியாயமாய் தோன்றவில்லை. மேலும்..

நாரயணன் தயவில் சென்னையில், ஒரு பாரில் இகாரஸுடன் சாருவிடம் பேசிக்கொண்டிருந்த போது, இளயராஜா பற்றி தவிர்க்க முடியாமல் போய்கொண்டிருந்த பேச்சின் இடையே சாரு கோபமாய், "கத்தாரை குப்பைன்றான், அப்புறம் என்னய்யா?" என்று மேஜையை தட்டினார்.

"எப்ப சொன்னார்?" என்றேன் நான்.

"இவரை கேளுங்க!" என்று அருகில் இருந்த, இளயராஜாவை மாத்ருபூமிக்காக பேட்டி எடுத்த (தமிழ் பேசும்) மலையாள எழுத்தாளர் ராமகிருஷ்ணன் என்பவரை காண்பித்தார்.

"கதாரை குப்பைன்னு சொன்னாரா?"

"குப்பென்னா அப்படி குப்பைன்னு ஸ்ட்ரெய்டா சொல்லேலை. அத பத்தி எல்லாம் பேசவேண்டாம்! வேற எதாவது கேளுங்கோ'ன்னார். அத பாத்தா குப்பென்னு சொன்ன மதிரித்தான் இருந்தது"

எப்படி இருக்கு கதை? (கூட இருந்தவர்கள் இகாரஸ் பிரகாஷ் மற்றும் நாராயணன்.)

ஆக தன்னிடம் தொடர்ந்து கேட்கப்படும் ஒரு கேள்விக்கு இளயராஜா காட்டும் எரிச்சல்தான் 'குப்பை' என்பதாக அவரால் விவரிக்கப் படுகிறது. பாவலரை பற்றி பலமுறை புகழ்ந்து பேசும் இளயராஜா, நினைவுகூறும் போதெல்லாம் அவருடன் கம்யூனிஸ்ட் கட்சி பாடல்களுக்கு மெட்டமைத்ததை குறிப்பிடும் இளயராஜா, ஒவ்வொருமுறையும் தனக்கு அந்த அரசியலில் ஈடுபாடில்லை என்பதையும் தெளிவாக சொல்லுகிறார். இவ்வாறு அரசியலை மறுக்கும் இளயராஜாவை தாராளமாய் அவரவர் பார்வையில் விமர்சிக்கலாம். ஆனால் அவர் சொன்னதை தனக்கு சாதகமாய் திரிப்பது என்ன நியாயம்?

அடுத்து இந்தியா டுடே பேட்டி. நானும் அதை படித்தேன்(ஆனால் இப்போது கைவசம் இல்லை). அதில் படித்த எல்லாம் நினைவில் இருந்தும் சாரு குறிப்பிடும் "சினிமா இசை மூளையை மழுங்கடித்துவிடும்" என்ற மேற்கோள் மட்டும் எனக்கு நினைவு இல்லை. யாராவது அந்த பேட்டி கைவசம் இருப்பவர்கள் முழு மேற்கோளையும் கேள்வியுடன் எடுத்து போட்டால் நல்லது. ஆனால் அதே பேட்டியில், சினிமா இசைக்கு மாற்று இசையை இளயராஜா போன்றவர்கள் உருவாக்க வேண்டியதன் அவசியத்தை பற்றி பேட்டியாளர் கேட்க, " சினிமா இசைக்கு ஏன் மாற்று இசை உருவாக வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?" என்று பதில் கேள்வி கேட்டு சினிமா இசையை அங்கீகரித்து இளயராஜா பேசியது மட்டும் எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. இது தவிர்த்து, மேலே சொன்ன ஜெயகாந்தன் விழா பேச்சிலும், எல்லா இசையையும் ஒரே தட்டில் வைத்து அதன் முக்கியத்துவம், குறிப்பாய் சினிமா இசையை கேவலமாக கருதமுடியாதது பற்றி பேசுகிறார். சமீபத்திய குமுதம் பேட்டியிலும் அதையே பேசியுள்ளார். (வலைப்பதிவிலும் ஒருவர் அதை எடுத்து போட்டார்.) இதுவரை எத்தனையோ பேட்டிகளில் சொல்லுகிறார். அதெல்லாம் கண்ணில் படாமல், என் 'கண்ணில் பட்டு' நினைவில் நிற்காத வரி மட்டும் சாருவிற்கு மேற்கோளாகிறது.

வெறும் காழ்புணர்வுடன் எழுதியதாக யாரும் கருதிவிடக்கூடாது என்பதற்காக இளயராஜா பற்றி நல்லதாக கொஞ்சம் சொல்கிறார், "இசையில் இளயராஜா செய்த மாற்றங்களை நான் மறுக்கவில்லை. குறிப்பாக ரீரெகார்டிங்கில் அவர் செய்த சாதனை விஷேஷமானது." அடப்பாவி! இதற்கு இளயராஜா இசையமைத்தது எல்லாம் குப்பை என்று சொன்னால் கூட பராவயில்லையே. அதே சந்திப்பில் என்னிடம் சாரு,"எல்லா ம்யூசிக் டைரக்டரையும் பெரிய ஆள்னு சொல்றீங்க. ஆனா இளயராஜா மட்டும் யாருமே செய்யாதத செய்ததா சொல்றீங்க. புரியலியே, கொஞ்சம் விளக்க முடியுமா?" என்று கேட்டார்.

பலவகை இசையுடன் எனக்கு ஓரளவு பரிச்சயம் உண்டு எனினும், இசைக்கான கலைச்சொற்கள், பல இசைகருவிகளின் பெயர்கள் கூட எனக்கு தெரியாது. இளயராஜா இசை குறித்த என் பார்வையை நிச்சயமாய் பாடல்களை அருகில் போட்டு, பாயிண்ட் பாயிண்டாக விளக்கி அதன் தனித்தனமையை நிகழ்த்திக் காட்டமுடியும். ஆனால் ஒரு தண்ணியடிக்கும் சந்திப்பில் இசையின் முக்கியத்துவம் பற்றி வார்த்தைகளை மட்டும் வைத்துகொண்டு ஒரு தனிப்பட்ட கருத்தை எப்படி விளக்குவது? கொஞ்சம் நிதானித்து, வார்த்தைகளையும் வாக்கியங்களையும் தேடி, இளயராஜாவின் அத்தனை இசையும் மற்ற யாரிடமும் வெளிப்படாத ஒரு ஓட்டத்தை (flow)வை கொண்டிருப்பதையும், அதன் அந்த கணத்தில் தோன்றிய உதாரணங்களாக 'செந்தூரப்பூவே'யின் துவக்க இசையின் மற்றும் பாடலின் அடிநாதமாய் நாட்டுபுற மெட்டும், ஆனால் அதன் அமைப்பு மேற்கத்திய தன்மையில் இருப்பது, அதே படத்தின் இன்னொரு பாடலான 'செவ்வந்தி பூ முடித்த..' பாடலில் இரண்டாவது இடையீட்டில் திடீரென ஆனால் மிக இயற்கையாய் வந்து கலந்து பிரியும் மேற்கத்திய இசை, 'ராக்கம்மா கையத்தட்டு, பாடலின் துவக்கம், மற்றும் முழுக்க மேற்கத்திய தன்மையுடய பாடலில் பிரிக்க இயலாமல் கர்நாடக மற்றும் நாட்டிசை கலந்திருப்பது, 'தென்றல் வந்து தீண்டும் போது..' பாடலில் பல பரிமாணத்தில் விரியும் இசை, 'மயிலே மயிலே' பாடல் ஹம்ஸத்வனி என்ற கர்நாடக ராகத்தில் இருந்தாலும் தொடக்கம் முதல் அதன் அமைப்பு மேற்கத்திய இசைதன்மையை கொண்டிருப்பது, ராஜாபார்வை படத்தில் அவர் அளித்த ஒரு கம்போஸிஷன், how to name it? ஆல்பத்தில் how to name it? Chamber welcomes Thiyagaraja என்ற இரண்டு துண்டுகளும் fusion என்ற வார்த்தையை தாண்டி பிரித்து அடியாளம் காண இயலாத வகையில் கர்நாடக தன்மையும் மேற்கத்திய தன்மையும் கலந்திருப்பது, எல்லா இசைக்கும் முன்னோடி இருப்பது போல், இளயராஜாவின் மேற்சொன்னவற்றிற்கெல்லாம் முன்னோடியே இல்லாமலிருப்பது என்று என்னால் முடிந்தவரையில் நீளமாக சொன்னதை எல்லாம் பொறுமையாய் கேட்டுக் கொண்டிருந்து விட்டு சொன்னார்.

"நிறய சொல்றீங்க. எனக்கு இதெல்லாம் அப்பீல் ஆகலீங்க!"

நான் சொல்வது அப்பீல் ஆகாவிட்டால் அதனால் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் இளயராஜாவின் சாதனைகளை ஒரு ரீரெகார்டிங்கில் செய்த மாற்றங்களாய் குறுக்குவது என்ன நேர்மை? இசையை பற்றி தெரியாவிட்டால் பிரச்சனையில்லை. இசையை பற்றி தெரியாதாவர்கள் எதற்காக அதை பற்றி தீர்ப்புகளை அளிக்க வேண்டும்? (இதில் சாரு முன்வைத்த இன்னொரு அபத்தம் எல். சுப்பிரமணியத்துடன் ஒப்பிட்டு, திருவாசக இசையை fusion (மட்டும்) என்பதாக சொல்லி, இதில் புதிதாய் என்ன இருக்கிறது என்று ஒளரிக்கொட்டியது.)

இது தவிர சாரு கேட்கும் ஆய்வு பூர்வமான கேள்வி, 'திருவாசக இசையமைக்க பணம் இல்லை என்பவர் சம்பாதித்த பணத்தை என்ன செய்தார்? மூகாம்பிகை கோவிலுக்கு வைரநகைகள் ஏன் தரவேண்டும்?'. இதை படித்ததும், சாருவை படித்த அனைவருக்கும் பொத்துகொண்டு நினைவுக்கு வரவேண்டியது, அவர் இதுவரை பணப்பிரச்சனை என்று சொல்லி மாய்ந்து மாய்ந்து கோணல் பக்கங்களில் எழுதிய புலம்பல்கள். அதை சொன்ன அடுத்த நாள் முந்தய நாள் லெதர் பாரில் ஆயிரக்கணிக்கில் பில்வரும் வகையில் தண்ணியடிப்பதும் , ஆட்டோவில் மட்டும் போவேன் என்பதும், தாய்லாந்து சிங்கப்பூர் உல்லாசபயணம் போவதும். இது குறித்து எனக்கு எந்த கேள்வியும் கிடையாது. ஒரு இலக்கிய வாதிக்கு பட்டினி கிடந்தாலும், யாசித்தாலும் தாய்லாந்து போய் பாலியல் தொழிலாளியுடன் உல்லாசிப்பது முக்கியமாய் இருக்கலாம். ஆனால் அதையெல்லாம் செய்யாத ஒரு சாதாரண 'ஆன்மீக' மனம் படைத்த இளயராஜாவிற்கு வைரநகை மூகாம்பிகை கோவிலுக்கு போடுவது மிக முக்கியமானதாய் இருக்கலாம். திருவாசகத்திற்கு மக்களிடம் பிரித்த பணத்தில் மட்டுமே இசையமைக்க கூடியதாய் மனது இருக்கலாம். அதையெல்லாம் மீறி சாரு சொல்வதை நியாயமாய் எடுத்துகொண்டாலும் கூட, ஒரு எலீட் சமூகத்தில் வாழநேர்ந்த பின் தவிர்க்கவியலாமல் சேரும் ஒரு ஹிபாக்ரசியை மீறி இதில் வேறு என்ன இருக்க முடியும்? அதை கண்டுபிடித்து இத்தனை பெரிய கட்டுரை எழுத ஒரு கலக எழுத்தாளன் தேவையா?

இவ்வாறாக இளயராஜா மீதான ஆத்திரத்திற்கு எல்லாம் முதல் தர்க்கத்தை அளித்த அ.மார்க்சின் கட்டுரைக்கு முகாந்திரமாக, குணசேகரன் மீது இளயராஜா வழக்கு தொடுத்த சம்பவம் இருந்தது. அது குறித்து தாராளமாய் விமர்சிக்கலாம் என்றாலும் தொடர்ந்து அந்த சம்பவம் திரிக்கப்படுகிறது. சாருவும் தன் பங்கிற்கு இளயயராஜாவின் தலித் பிண்ணணியை குறிப்பிட்டதற்காக மானநட்ட வழக்கு தொடர்ந்ததாக எழுதுகிறார். இதே பொய்யை ஆனந்தும் சொல்லி, 'Ilayaraja is uncomfortable with the truth of his origins' என்று தன் இஷ்டத்திற்கு திரிக்கிறார். இன்னும் சில இடங்களிலும் இதை கவனிக்கிறேன்.

குணசேகரன் புத்தகம் வெளிவந்த அதே காலகட்டத்தில் ப்ரேம்-ரமேஷ் இளயராஜா பற்றி எழுதிய புத்தகமும் வெளிவருகிறது. அந்த புத்தகம் முதல் வரியிலேயே இளயராஜாவின் தலித் பிண்ணணியிலேயே தொடங்குகிறது. இந்தியாவின் புறக்கணிக்கவியலாத அறிவுஜீவிகளில் இருவராக அம்பேத்காரையும், இளயராஜாவையும் பற்றி சொல்லி அவர்களின் தலித் அடையாளத்தை முன்வைத்தே துவங்குகிறது. அறிவுடமை என்பதை தங்கள் தனிச் சொத்தாக கருதி வரும் இந்திய பார்பனிய சிந்தனைக்கு எதிர் உதாரணமாய் இருவரும் இருப்பதை பற்றி பேசுகிறது. புத்தகம் முழுவதும் இளயராஜாவின் தலித் அடையாளம் பேசப்படுகிறது. நிச்சயம் இளயராஜா அதை எல்லாம் படித்திருப்பார். அவருடய பேட்டியும் அதே புத்தகத்தின் இறுதியில் உள்ளது. அவரை மேடையில் வைத்தே புத்தகமும் வெளியிடப்பட்டது. பிறகு எதற்கு குணசேகரன் மீது மட்டும் வழக்கு தொடர்ந்தார்? ஒரு வேளை குணசேகரன் தவறாக ஏதாவது எழுதினாரா என்றால் அவரும், ப்ரேம் -ரமேஷைப் போலவே இளயராஜாவை தலையில் வைத்து கொண்டாடுகிறார். அப்படியானால் இளயராஜாவிற்கு என்ன அட்சேபம்? அதில் குணசேகரன் எழுதிய வரிகள் (பழைய குமுதத்தில் இளயராஜாவின் ஆட்சேபத்திற்குரிய வரிகளாய் தனித்து குறிப்பிட்டு காண்பிக்கப் பட்டிருக்கிறது), என் ஞாபகத்திலிருந்து கீழே.

"தமிழகமும் தமிழ் மக்களும் இளயராஜாவை நினைவில் வைத்திருக்கப் போவதில்லை, கொண்டாடப்போவதில்லை. இந்த சமூகம் அவரை மறந்துவிடும். ஆனால் தலித் மக்களின் நினைவில் மட்டுமே இளயராஜா வீற்றிருப்பார். அவர் புகழை தலித் மக்கள் மட்டுமே காலாகாலத்துக்கும் கொண்டாடி கொண்டிருப்பார்கள்." (நினைவிலிருந்து எழுதப்படுகிறது. வரிகள் மாறியிருப்பினும் பொருள் இதுதான்.)

ஆக தன் தலித் பிண்ணணியை பற்றி எழுதுவது அல்ல பிரச்சனை. தன்னை தலித் என்ற அடையாளத்தில் குறுக்குவதுதான் இளயராஜாவிற்கு பிரச்சனை. இதற்காக குணசேகரன் மீது வழக்கு தொடர்ந்ததை நான் ஆதரிக்கவில்லை. அது குறித்து விமர்சனமாய் நிச்சயம் எழுதலாம். ஆனால் அதை நேர்மையின்றி திரித்து ஒரு மாபெரும் கலைஞனை காலிபண்ண முயல்வது கயமைத்தனம் அல்லாமல் வேறு என்ன?

சாருநிவேதிதாவின் கட்டுரையே இப்படி சில திரித்தல்களின் மீது கட்டப்பட்டிருப்பதுதான் எனக்கு பிரச்சனையே ஒழிய, பாப் மார்லேயையும் இளயராஜாவையும் ஒப்பிட்டு ஒருவர் கட்டுரை எழுதினால் அதில் கண்டிக்க பெரிதாய் எதுவுமில்லை. ஆனால் ஒருவகையில் அதுவும் நியாயமாகாது. பொதுவாய் திரை இசையமைப்பாளர்களை ஒப்பிட்டு வேண்டுமானால் எழுத முடியும். பாப்மார்லேயின் இசை தமிழ் சினிமாவில் கொச்சை படுத்த படுவதை (அகிலா, அகிலா!) எழுதலாம். அல்லது ஒரு தலித்தான இளயராஜா 'பாப்மார்லேயாக பரிணமிக்காதது' குறித்து ஆராயலாம். அப்படி ஆராயும் போதும் எனக்கு ஒரு பாப்மார்லே உருவாவதை அனுமதிக்காத சூழல்தான் நினைவுக்கு வருமே ஒழிய, அதன் பழியை ராஜாமீது போடமாட்டேன். ஆனால் மற்றவர்களுக்கு அப்படி தோன்றவேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

இதையெல்லாம் மீறி ராஜா நிச்சயமாய் பேட்டிகளில் எதையாவது உளரக்கூடும். அச்சுபிச்சுத்தனமாய் ஏதாவது செய்யலாம். அதனால் என்ன? அவர் ஒரு அறிவுஜீவி கிடையாது. அவருடய செயலும், சாதனைகளும் கருத்தியல் தளத்தில் அல்ல. அவரை பற்றி பேச அவர் இசையை பற்றி பேசவேண்டுமே ஒழிய அவர் பேட்டியில் சொன்னதையும், திருவிழாவில் பேசியதையும் சர்ச்சையாக்குவது அபத்தம்.

கோமல் தனது பறந்த போன பக்கங்களில் ஒருமுறை எழுதியது. எம். எஸ். விஸ்வநாதன் கண்ணதாசனுடன் ரஷ்யாவில் இசை நிகழ்ச்சிக்கு போனபோது, கண்ணதாசன் ரஷ்ய சமூகம் பற்றி, அதன் புரட்சி மற்றும் அரசியலமைப்பு பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது எம்.எஸ்.வி. கேட்டாராம்.

"அண்ணே கம்யூனிஸம்னா என்ன?"

விரிவான விளக்கத்தை கேட்கவில்லை, குண்ட்ஸாக கூட கம்யூனிஸம் என்றால் என்னவென்று எம்.எஸ்.வி.க்கு தெரியவில்லை என்று அறிந்து, "இப்படியும் ஒருத்தன் இருப்பானா?" என்று வியந்து போய் கண்ணதாசன் சொன்னாராம். எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு இசை மட்டுமே மொழி, வாழ்க்கை, கல்வி, தத்துவம் எல்லாம்! இசையை தவிர வேறு எதுவும் அவருக்கு தெரியாது. அப்படிப்பட்ட இன்னொரு மேதைதான் இளயராஜா. அவருள் ஊறிகொண்டிருக்கும் இசையில், சமய சந்தர்ப்பத்தை பொறுத்து சில துளிகள் மட்டுமே சிதறலாய் நமக்கு கிடைத்து, அதையும் இன்னும் நாம் சரியாய் புரிந்துகொள்ளவில்லை. இந்நிலையில் தங்கள்(இவர்களே மாற்றிக்கொள்ளப் போகும்) அரசியல் சட்டகத்தை வைத்து, ஒரு மாபெரும் இசைக்கலைஞனை எந்த provocationஉம் இல்லாத சமயத்தில் நிராகரிக்க முயல்வது, நானும் பகிர்ந்து கொள்ளும் அரசியலின் அழுகலான ஒரு பகுதியாகவே எனக்கு தெரிகிறது.

பின் குறிப்பு: ராஜாவின் திருவாசகத்தை இப்போது பல முறை கேட்டாகி விட்டது. என் பார்வையிலும் (என் எதிர்பார்ப்பிற்கு) ஏமாற்றமளிப்பதாகவே உள்ளது. எந்த வித சந்தேகமும் இல்லாமல், எளிதில் முழுமையாய் உள்வாங்க இயலாத, ஒரு complex இசையை, மிகுந்த உழைப்பின் பலனாய் தந்திருகிறார். நிச்சயமாய் ஞாநிபோல் 'இரண்டு பாடல்கள் மட்டுமே தேறுகிறது' என்ற தீர்ப்பை ஒரு வாரத்திலேயே உளறிக் கொட்ட முடியாது. ஆனால் அவருடய பழைய சாதனைகளை இது எந்தவிதத்திலும் தாண்டவில்லை என்றே நானும் கருதுகிறேன். ஞாநிபோல திருவாசகம் குறித்து தீர்ப்பு தர இதை சொல்லவில்லை. மாறாக அவரது பழைய சாதனைகள் மீது இன்னும் மரியாதை இருப்பதனால் தனிப்பட்ட அவதானிப்பாய் சொல்கிறேன்.
சரியாக சொல்லவேண்டுமானால் சிம்ஃபனி என்று பட்டியல் போடக்கூடிய, உடனடியாய் நினைவுக்கு வரக்கூடிய, எந்த 25 உதாரணங்களின் அருகில் கூட இது வரமுடியாது என்று நினைக்கிறேன். (ஆனால் திருவாசகத்திற்கு இசையமைக்கும் கட்டாயத்தை கணக்கில் கொண்டால் மேலே சொன்னது அபத்தமான கருத்தாகவும் இருக்கலாம்.) இது குறித்து விரிவாய் எழுத ஆசைதான். அதற்கு முன் ஞாநி கழித்ததை சுத்தம் செய்யும் அரசியல் கடமை இருப்பதால் எப்போது முடியும் என்று பார்போம்.

Post a Comment

39 Comments:

Blogger ROSAVASANTH said...

சாருவுடனான தனிப்பட்ட சம்பாஷணையை இங்கே குறித்திருக்கிறேன். சாரு இதை பலருக்கு செய்ததானாலும், அதை முன்னுதாரணமாய் வைத்து இதை எழுதவில்லை. இதனால் அவருக்கு ஆட்சேபணை இருக்காது, தன் கருத்தை எல்லா இடத்திலும் சொல்லும் தைரியம் உண்டு, இதில் நம்பிக்கை துரோகம் எதுவும் இல்லை என்ற எண்ணத்திலேயே எழுதியுள்ளேன். என் வாதத்திற்கு சாதகமாய் அதை பயன்படுத்துவதாலேயே இதை எழுத வேண்டியுள்ளது. மற்றபடி இந்த இதற்கான தேவையிருக்காது.

8/13/2005 5:11 PM  
Blogger பினாத்தல் சுரேஷ் said...

ரோசா,

நல்ல பதிவு. இளையராஜா குறித்தான உங்கள் கருத்துக்களுடன் பெரும்பாலும் ஒத்துப்போகிறேன்.

ஞானியின் மற்றும் சாருவின் விமர்சனக்கட்டுரைகளின் பாதிப்பில் என் பதிவு ஒன்று இதோ. இரண்டு இதோ!

8/13/2005 5:38 PM  
Blogger முகமூடி said...

வழிமொழிகிறேன்

8/13/2005 5:38 PM  
Blogger Thangamani said...

எனக்கு இளையராஜாவின் பல பாடல்கள் பிடிக்கும். எனக்கு இசையைப்பற்றிய அறிவும் கிடையாது. அவரைப்பற்றிய சில ஆதங்கங்கள் உண்டு ஆனாலும் அவருக்கும் அவற்றுக்கும் எந்தத் தொடர்புமில்லையாதலால் இது குறித்து ஒன்றும் சொல்ல இயலவில்லை. சில விவரங்களைத் தெரிந்துகொள்ள முடிந்தது. நன்றி!

8/13/2005 5:45 PM  
Blogger ~Nandalala~ said...

ரோசாவசந்த்,

சென்ற ஏப்ரலில் பெங்களூரில் ஒரு திருமணம். - மணமகனின் தந்தை உயர் அரசு அதிகாரி + தலித். மூன்றாண்டுகளாக தனது ஒரே மகனுக்கு மணமகளை தேடி வந்தார். அவர் தேடி வந்தது பிராமினப்பெண்! அப்படியான பெண் கிடைத்ததும், திருமணமும் பிராமன வழக்கப்படியே நடந்தது. இது ஒரு தனி மனிதனின் தேர்வு என்ற வகையில் இதில் எனக்கு எவ்வித விமர்சனமும் இல்லை.

1996(அ)7ல் வெளிநாட்டிலிருந்து வந்திருந்த ஒருவர் இளையராஜாவை, பிரசாத் ஸ்டுடியோவில் சந்திக்க சென்றபோது, நானும் உடன் செல்ல நேரிட்டது - சாரதியாக. அந்த அரை மணி நேர இளையராஜாவுடனான (எனது முதல்) சந்திப்பில், அவர் அதிகம் பேசியது ஆன்மீகம் குறித்து தான். அதிலும் குறிப்பாக - முற்பிறவி - அடுத்த பிறவி பற்றியே. இப்பிறவியில் அவர் இசையமைப்பாளராக இருப்பதற்கு முற்பிறவிதான் காரணம் என்றார். (அவர் தலித்தாக பிறந்ததும் பிறவிப்பலன் என்பதாகக்கூட நம்புபவராக இருக்கக்கூடும்) பிறவிப்பலன் என்பதை யாராலும் ஒருக்காலும் மாற்ற முடியாது எனக்கூறினார். அவர் இந்து மதம் கூறும் அனைத்துக்கும் கட்டுப்பட்டு - சாதியத்தை முற்றாக ஏற்றுக்கொள்பவராகவே எனக்கு தெரிந்தது.

பிந்தய சந்திப்பு ஒன்றில், அம்பேத்கருக்கு சிலை வைப்பது குறித்து அவர் கூறியது, [தலித் இயக்கங்கள்] பிழைப்பு நடத்தவே என்ற தொணியில் இருந்தது.

ஒரு தனி மனிதனின் பார்வை என்ற வகையில், இதுவும் இளையராஜா குறிதத எந்த விமர்சனத்தையும் எனக்குள் தோற்றுவிக்கவில்லை.

இளையராஜா ஒரு தலித் என்பதனால் தலித்திய சிந்தனையை கொண்டிருக்க வேண்டும் - பாவலரின் தம்பியானதால் இடது சாரி சிந்தனையை கொண்டிருக்க வேண்டும், தாழ்த்தப்பட்டவன் என்பதனாலேயே சனாதானத்தை அசைத்திருக்க வேண்டும் என எதிர்பார்த்தால் - அது ஏமாற்றத்தையும் கோபத்தையும் ஏற்படுத்திவிடுவதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை.

ஒருவேளை பால் மார்லேயையோ, கதாரையோ, குப்பை என்பதாக இளையராஜா சொல்லி இருந்தால் அது அவர்களின் இசை பற்றியல்லாது - அரசியல் நிலை குறித்ததாக இருக்கக்கூடும். பால் மார்லேயின், கதாரின் செயலை இளையராஜா என்ற இசை மேதை புரிந்துகொள்வது அப்படியாகத்தான் இருக்கக்கூடும். அவரை பொருத்த அளவில் இசையை மனித விடுதலைக்கு பயன்படுத்துவதை பாவசெயலாகவே நினைக்க கூடும். விடுதலை என்பதற்கு ஆன்மீக வாதியான இளையராஜாவின் புரிதல் பால் மார்லே, கதாரிலிருந்து முற்றிலும் வேறாக இருக்கவே வாய்ப்புள்ளது.

மற்றபடி அம்பேத்கருடன் இளையராஜாவை ஒப்பிடுவதை எல்லாம் ஒரு நகைச்சுவையாக - நக்கலாக - நையாண்டியாக - இப்படியாக மட்டுமே என்னால் பார்க்க முடிகிறது. [ இந்த ஒப்பீட்டிற்காகவேனும் இளையராஜா வழக்கு தொடுத்தது சரியாகவே எனக்கு தெரிகிறது.]

நன்றி,
நந்தலாலா.

8/13/2005 9:44 PM  
Blogger ~Nandalala~ said...

This comment has been removed by a blog administrator.

8/13/2005 11:16 PM  
Blogger -/பெயரிலி. said...

வசந்த்,
நீங்கள் இளையராஜா குறித்துச் சொல்லியிருக்கும் சில விடயங்களோடு என்னால் ஒத்துப்போகமுடியவில்லை. இளையராஜாவின் இசைமேதமையைப் பற்றிச் சொல்ல எனக்கு முறையான இசைப்பயிற்சியில்லையென்றபோதுங்கூட, அவருடைய இசை ஈர்த்திருக்கின்றது. ஆனால், இசை என்ற நிலையைக் கடந்து விசிறி என்ற நிலைக்கு நான் போனால், நீங்கள் குறிப்பிட்டதுபோன்ற கருத்துகளையே வெளியிடுவேனோ தெரியவில்லை ;-)

என்னைப் பொறுத்தமட்டிலே, இளையராஜா தான் கடந்த பாதை குறித்துப் பேசிக் காணவில்லை. அதுவும் ஓரளவிலே தன் பழங்காலத்தினை மறுப்பதற்கு ஒப்பானதே.

நான் சொல்வது அசட்டுப்பினாத்தலாகத் தோன்றக்கூடும் ;-) ஆனால், திருவாசகம் சிம்பொனியினையை இரண்டு வகைகளிலே பார்க்கவேண்டும்; ஒன்று, இசை என்ற அளவிலே அது தேறும் விதம் குறித்து; அடுத்ததாக, அந்த இசையை உருவாக்குவதிலும் விளம்பரப்படுத்துவதிலும் விநியோகப்படுத்துவதிலும் சம்பந்தப்பட்ட அரசியல் குறித்து; இரண்டும் பேசப்படவேண்டியதே. "இளையராஜாவின் அரசியல் குறித்துப் பேசாதே; இசையைப் பற்றிப் பேசு" என்று கூறிவிட்டு, கருணாநிதியின் அரசியலையும் திரைப்படவசனமெழுதுகையையும் குழப்பிக்கிண்டல் அடிக்கலாமென்றால் அது வெறும் பினாத்தலே; அப்படியானவர்களிடையே தங்களின் விருப்பு வெறுப்புக்கேற்ப ஒரே விதியினையே வளைத்துக்காட்டும் உள்நோக்கம் இருக்கும். 'இ' என்ற இளையராஜா அவர்கள் யாகத்துக்கான புனிதப்பசு; 'க' என்ற கருணாநிதி, அவர்களின் ஆவியுயிர்த்த அசுரமாயைகளிலே ஒன்று. ஆனால், உங்களிடம் அப்படியான நோக்கு இராதென்று படுகின்றது; அந்த வகையிலே, திருவாசக ஸிம்பொனி குறித்த அரசியலும் பேசப்படவேண்டும்.

சாருநிவேதிதா, பாம்பென்றும் பழுதையென்றும் வகைப்படுத்தமுடியாத ஓர் ஆள்; எந்த நேரத்திலே எதைப் பேசுவாரென்று சொல்லமுடியாது; (என்னையும் உங்களையும் போல ஆளோ? ;-)) அந்த வகையிலே, அவர்கூறுவதைப் பொதுவாக நான் கருத்திலே கொள்வதில்லை; குறிப்பாக, அவர் தன்னைப் பற்றி உலகம் சுழல்வது குறித்துப் பேசும் அதிகோணற்பக்கங்களை; சாருநிவேதிதாவுடனான உங்கள் சந்திப்பு புதுவிபரங்களைச் சொல்கின்றன. ஆனால், இளையராஜாவின் திருவாசக அரசியல், சாருநிவேதிதாவின் கோணங்கித்தனத்துக்குமப்பால் மிகவும் தந்திரமானதென்றே எனக்குப் படுகின்றது. பொழுதுகிடைப்பின், பதிகிறேன்.
(ரஜனி, வைகோ, இந்து ராம் ஆகியோரை மேடையிலே ஏற்றிவைத்து வெளியீடு செய்கின்றார். முன்னின்றுழைத்த கஸ்பர்ராஜினைக் காணவில்லை; இந்து அல்லாத முகம் வேண்டாமென விடுத்திருக்கலாம்; அல்லது, அவரே விலகியிருக்கலாம். ஆனால், அதை ரசனிவிசிறிகள் ரசனியே திருவாசகத்துக்கு உயிர்தந்தது போன்ற ஓர் கருத்துருவாக்கத்தினைத் தரவும் பயன்படுத்துகின்றார்கள். ஆனால், ஒரு கோடி இந்திய உரூபாக்களுக்கு மேலே நட்டப்பட்டிருக்கும் கஸ்பர்ராஜுக்கு ஸ்ரீரங்கம் கோபுரம் கட்டக்கொடுத்த ராஜா விரும்பியிருப்பின், இலவசமாக இசையமைத்துக் கொடுத்தாரா? வெளியீட்டுவிழாவிலே வந்த பிரமுகர்கள் சிறுதொகை விட்டுத்தொலைத்தார்களா? இதற்கான நிதி மக்களிடமிருந்தே வரவேண்டுமென்றே இவர்கள் அப்படியேதுமே செய்யவில்லை என்று சொல்லிவிடாதீர்கள் :-) இப்படியான இயங்கியலே திருவாசக அரசியலைச் சுற்றிப்படர்ந்திருப்பது)

8/13/2005 11:29 PM  
Blogger ROSAVASANTH said...

நந்தலாலா, உங்கள் கருத்துக்கு நன்றி. நீங்கள் கூறும் விஷயங்களை 90% தலித்துக்கள் ஏற்றுக்கொண்டிருக்க கூடும். அவர்களின் மீது உங்களுக்கு ஏமாற்றம் வந்தால் பிரசனையில்லை. கோபம் வருவதில் மிக சீரியசான பிரச்சனை இருக்கிறது. அதுவும் எல்லா இசையமைப்பாளர்களுக்கும் ஆன்மீக சாய்வு இருக்க இளயராஜா மீது மட்டும் காண்பிக்கும் ஷ்பெஷல் கோபமும் கவனிக்கத்தக்கது. மற்றபடி சொல்ல அதிகமில்லை. ஆதவன் தீட்சண்யாவின் கவிதைக்கும் இந்த பதிவிற்கும் என்ன சம்பந்தம் என்று புரியவில்லை. ஒரு சின்ன திருத்தம். அம்பேத்காரையும், இளயராஜாவையும் யாரும் ஒப்பிடவில்லை. ஒரு எதிர் உதாரணமாய் ரமேஷ்-ப்ரேம் குறிப்பிட்டிருப்பார்கள். அவர்கள் மீது யாரும் வழக்கு தொடுக்கவில்லை. நன்றி.

கருத்து சொன்ன மற்றவர்களுக்கும் நன்றி. ஒரு தெளிவிற்காக. ஏற்கனவே சொன்னது போல் இளயராஜாவின் தலித் அடையாளம் பேசப்படுவதில் எனக்கு எந்த பிரசனையுமில்லை. பேசப்படவேண்டும் என்றே நினைக்கிறேன். என்ன பிரச்சனை என்பதை தெளிவாகவே பதிவில் சொல்லியிருக்கிறேன். மேலும் சமயம் வரும்போது சொல்கிறேன். நன்றி.

8/13/2005 11:30 PM  
Blogger ROSAVASANTH said...

பெயரிலி உங்கள் கருத்துக்கு நன்றி. ""இளையராஜாவின் அரசியல் குறித்துப் பேசாதே; இசையைப் பற்றிப் பேசு" என்று நான் ஒருபோதும் சொல்லவில்லை. இசையின் அரசியலை பேசவேண்டும் என்றே நினைக்கிறேன். எதை பேசுவதில் பிரச்சனை என்று சொல்லியிருக்கிறேன்

8/13/2005 11:34 PM  
Blogger ~Nandalala~ said...

ரோசாவசந்த்,
ஏமாற்றமும் கோபமும்
//இளையராஜா ஒரு தலித் என்பதனால் தலித்திய சிந்தனையை கொண்டிருக்க வேண்டும் - பாவலரின் தம்பியானதால் இடது சாரி சிந்தனையை கொண்டிருக்க வேண்டும், தாழ்த்தப்பட்டவன் என்பதனாலேயே சனாதானத்தை அசைத்திருக்க வேண்டும் என// எதிர்பார்ப்பவர்களுக்கு வரக்கூடும் என்பதாக எழுதினேன் - எனக்கு இளையராஜாவிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லை, எனவே எனக்கு கோபமும் இல்லை.

//ஆதவன் தீட்சண்யாவின் கவிதைக்கும் இந்த பதிவிற்கும் என்ன சம்பந்தம் என்று புரியவில்லை.//
நீக்கிவிட்டேன்.
நன்றி.

8/14/2005 12:19 AM  
Blogger ~Nandalala~ said...

//ஏற்கனவே சொன்னது போல் இளயராஜாவின் தலித் அடையாளம் பேசப்படுவதில் எனக்கு எந்த பிரசனையுமில்லை.//
ஆனால் இளையராஜாவுக்கு இருக்கிறது.
அதுவே - நீங்கள் சுட்டியுள்ளது உட்பட - சில நேர்மையற்ற விமர்சனமாகவும், மற்றபடியும் வெளிவருகிறது.

8/14/2005 12:27 AM  
Blogger பினாத்தல் சுரேஷ் said...

பெயரிலி,

கிண்டல் செய்பவனுக்கு மிகைப்படுத்தும் உரிமையைத் தந்தாலும், நேரடியான விமர்சனம் செய்பவனுக்கு பொதுமைப்படுத்தும் உரிமையைத் தருவதில்லை நாம்.

இளையராஜா அரசியல் பற்றிப் பாடவில்லை, ஆனால் கருணாநிதியின் பட வசனங்களிலும் காட்சி அமைப்புகளிலும் அரசியல் தவிர்த்து பார்ப்பது 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளால் மட்டுமே இயலும்:-) மற்றபடி புனிதப் பசுவோ அசுத்த எருமையோ எனக்குத் தெரியாது:-)

மற்றபடி, பினாத்தல்களை பினாத்தல்களாக அடையாளம் கண்டதற்கு நன்றி:-)

8/14/2005 3:12 AM  
Blogger -/பெயரிலி. said...

/மற்றபடி, பினாத்தல்களை பினாத்தல்களாக அடையாளம் கண்டதற்கு நன்றி:-) /
you're certainly welcome ("You" includes those agreed in the feedback boxes with you in those posts) ;-)

8/14/2005 4:35 AM  
Blogger SnackDragon said...

This comment has been removed by a blog administrator.

8/14/2005 12:55 PM  
Blogger SnackDragon said...

ரோசா,

நன்றி. நீண்ட பதிவுக்கு. எனக்கும் நீங்கள் சப்பை கட்டு கட்டுவதாக தெரியவில்லை. அப்படி சப்பைகட்டு கட்டினாலும் அதை சொல்லும் தைர்யம் உங்களுக்கு இருக்கும் நினைக்கிறேன். முதலில்
ஞானியின் விமர்சனம் குப்பை என்றெல்லாம் ஒதுக்கிவிடமுடியாது. குறைந்த பட்சம் என்னால். ஞானியின் மிகையான வார்த்தைகளை தவிர்த்து விட்டு பார்த்தால்.

1, மெட்டுக்கு பாட்டா , பாட்டுக்கு மெட்டா என்று கேட்ட கேள்வி மிக முக்கியமானது. இளையராஜா
சிம்பொனி பண்ணி கிழித்தார் என்றால் சிம்பொனி என்று சொல்லிக்கொளும் வெளியீட்டில் என்ன வித்தியாசமானது? என்று கேட்கும் ஆதரமான கேள்வி இது. இந்த கேள்வி ஞானி இளையராஜாவின் இசை விமர்சித்திருக்கிறார் என்பதற்கு ஆதாரம்.

2. ஞானி அரசியல் தளத்தில் இயங்குபவர். அவர் குரல் கேட்கப்படுகிறாதா இல்லையா என்பது இரண்டாவது விஷயம். திருவாசகத்துக்கு கொடுக்கப்பட்ட விளம்பரத்துக்கு இது தகுதியுடையதா? என்பது முக்கியமான கேள்வி.

3. இளையராஜ, இது வரை தன் கலைஞர்களின் பெயரை கூட வெளியிட்டதில்லை என்பதும் , இசைஞானிக்கு இருக்கும் அடிப்படை நேர்மையை கேள்விக்கேட்கும் கேள்விதான். இது உங்களுக்கு தவறகப் படலாம், அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை.

4. இசை ஞானி தொப்பென்று வானத்திலிருந்து குத்தித்து விடவில்லை.
ஒரு வரி கேள்வி கேட்டால் கூட, ஒரு வரியில், உணர்ர்சி வசப்படாமல் பதில் சொல்ல, 1 ம் வகுப்பு கூட படிக்காத கிராமத்தார்களை நான் காட்டுகிறேன் உங்களுக்கு. அதன் பின்னால் இருக்கும் அரசியல்? இருக்கட்டுமே அரசியல், எங்குதான் இல்லை அரசியல்? பின்னால் சொல்கிறேன்.

5, எனக்கு தெரிந்து, நான் கேலள்விப்பட்ட வரையில், கஜிவி யோ, ஏ வீ எம்மில் ஒருவரோ, இவரிடம் அப்பாயின்ட்மென்ட் கேட்டு கிடைக்காத வருத்தத்தினால் தான், ஏ ஆர் ரக்மானை போட்டியாக உருவாக்கினார் என்பது. ஏ ஆர் ரக்மானின் வரவுக்கு பின்னால், இசைஞானியின் ஒளிவட்டம் மங்கியதையும் கணக்கில் கொள்ளத்தான் வேண்டும். அது போல், வெஸ்டர்ன் நுழைய கொஞசம் கூட கண்ணுக்கெட்டிய வையில் சந்தர்ப்பமே இல்லாமல், இளையராஜா புரிந்ததுவே வெஸ்டர்ன் என்று இருந்த தமிழிசையில் வெஸ்டர்னில் சிகரங்களை தொட்ட ஏர்ரக்மானுக்கும் இசை ஊறிக்கொண்டுதான் இருந்திருக்கு, அவர் புகழ் பெறும் முன்னாலும், இப்போதும். பிரச்சினை அதுவல்ல, தயாரிப்பாளர்களின் உதவியோடு இன்னும் எத்தனையோ இசைமேதைகள் வரமுடியும். ஹாரிஸ், பரத்வாஜ் என்று பட்டியல் நீண்டுகொண்டேதான் போகிறது போகனும்.

6. வார்த்தைக்கு வார்த்தை கானா பெரிசு என்றும் , அண்ணன் தேவா என்றும் சொல்லும் உங்களால்,
கழக கண்மணிகள் என்று கிண்டலடிக்கப்படுபர்கள்தான் எப்படி உங்கள் பார்வையில் சிறுத்துப்போகிறார்கள் என்று தெரியவில்லை. அவர்கள்தான் கருணாநிதியை மூன்று (?) முறை தமிழகத்துக்கு முதலமைச்சர் ஆக்கினார்கள். இசையில் இவர் மேதை என்றால் ,
அரசியலில் அவரும் சாணக்கியர்தான். மேலும் ,முக்கியமாக ,அவரது பேச்சும் சரி , இளைராஜாவும் சரி, திருவாசகமும் சரி வெறுப்புக்குரியது அல்ல எனக்கு. பேசப்படும் அரசியலுக்கு இளையராஜா எப்படி பொருந்துகிறார் என்றும், அவரது பதில்களும்,நிறை குறை தெரிந்து கொள்ளுதலும்தான்.

7. நீங்கள் கூட அவசரத்தில், ஆனன்தின் பேட்டி என்றுதான் குறிப்பிட்டுள்ளீர்கள். சாரு செய்தால் மட்டும் எப்படி திரஇத்தல் ஆகும் என்று புரியவில்லை.

இன்னும் திருவாசகம் கேட்கவில்லை(ஒரு பாட்டு தவிர), கேட்டுவிட்டு பகிர்ந்து கொள்கிறேன். ஒரு இளையராஜா ரசிகனாய் உங்கடிடம் பேசுவது மகிழ்ச்சியைத்தரும்.

8/14/2005 1:05 PM  
Blogger SnackDragon said...

சொல்ல வந்த இன்னொன்று , வடிவேலுவின் பேட்டி பார்த்தீர்களா குமுதத்தில், வடிவேலுவிடம் பெற்றுக்கொள்ள இளையராஜவுக்கு சில இருப்பதாக பட்டது எனக்கு.

8/14/2005 1:18 PM  
Blogger ROSAVASANTH said...

கார்திக்,

நீங்கள் எழுதியதில் பல எனக்கு தலையும் புரியவில்லை, வாலும் புரியவில்லை. உதாரணமாய் "வார்த்தைக்கு வார்த்தை கானா பெரிசு என்றும் , அண்ணன் தேவா என்றும் சொல்லும் உங்களால்,
கழக கண்மணிகள் என்று கிண்டலடிக்கப்படுபர்கள்தான் எப்படி உங்கள் பார்வையில் சிறுத்துப்போகிறார்கள் என்று தெரியவில்லை. அவர்கள்தான் கருணாநிதியை மூன்று (?) முறை தமிழகத்துக்கு முதலமைச்சர் ஆக்கினார்கள். இசையில் இவர் மேதை என்றால் ,
அரசியலில் அவரும் சாணக்கியர்தான். "


நான் ஞாநியின் கட்டுரையை குப்பை என்று சொல்லவில்லை. அவர் இதுவரை எழுதிய குப்பைகளில் சாக்கடை என்றுதான் சொல்கிறேன். ஞாநி கழித்ததை விரிவாய் சுத்தம் செய்யும் வேலை செய்யமுடியாமல் போகும் வாய்ப்பு இருப்பதால் சில விஷயங்கள்.

1. இளயராஜா 'புற்றில் வாழ்(ள்).." பாடலில் "என்ன பாட்டு பாட..., என்ன தாளம் போட... ஒண்ணுமே புரியலியே..!" என்ற சினிமாத்தனமாய் பேசுவதை மட்டும் தனக்கு சாதகமாய் திரித்து, மெட்டுக்கு மாணிக்க வாசகரை பாட்டெழுத வைத்ததாய் சொல்வது உலக மகா அபத்தம். ஒரு வேளை இளயராஜா அப்படி செய்திருந்தால் அதுதான் உலகமகா சாதனை. இருக்கும் 9 எண்களை வைத்துகொண்டு ஒரு 10 இலக்க எண்ணை கண்டுபிடிப்பது சாத்தியமில்லாததாய் போகும் போது, தன் கையில் இருக்கும் மெட்டுக்களுக்கு மாணிக்க வாசகரின் தகுந்த வரிகளை தேடி போடுவதற்கான சாத்தியக்கூறின் நிகழ்தகவு அறிய, probability theory தெரிந்திருக்க வேண்டிய தேவையில்லை.

மேலும் மெட்டுக்கு பாட்டெழுதுவது என்பது ராஜா அறிமுகப்படுத்தியது அல்ல. அதற்கு முன்பே பல காலமாய் உள்ளது. ராஜா கொஞ்சம் கூட வரிகளுக்கு சிரத்தை எடுத்துகொள்வதில்லை என்பது அவர் மீதான விமரசன்ம். ஆனால் மெட்டை கையில் வைத்துகொண்டு மாணிக்க வாசகரிடம் வரிகளை தேடி போட்டதாக சொல்வது ஞாநியின், (திண்ணியத்துக்கு கண்கலங்காதவர், ராக் இசை பாடகர்களை போல ஏன் குரல் குடுக்கவில்லை என்றெல்லாம் கேனத்தனமாய் இட்டுகட்டி வதம் செய்ததை விட) முட்டாள்தனமான உளரல் என்பது என் கருத்து.

2. இளயராஜாவிற்கு முன்னாலும், இளயராஜா காலத்திலும் யாரும் இசைகருவிகள் வாசிப்பவர்களின் பெயர்களை வெளியிட்டதில்லை. அது பொதுவாய் நமது சினிமா சூழலின் பிரச்சனை. ரஹ்மான் பெயர்களை வெளியிடும் நல்ல காரியத்தை செய்தார். அதற்காக அவரை பாராட்ட வேண்டும். அதற்கு பின் இளயராஜாவும் (அவர் பையன்கள் உட்பட)மற்றவர்களும் வீம்பு காட்டாமல் அதை பின்பற்றினார்கள். அவ்வளவுதான். இதை திரித்து இளயராஜாவின் மோசடியாக மாற்றுவது ஞாநியின் குதர்க்க புத்தி.

3. நான் 'ஆனந்தின் பேட்டி' என்று மேற்கோள் குறிகளுக்கிடையில்தான் சொல்கிறேன். சாரு அதை பேட்டி என்று திரிக்கிறார். பேட்டி எடுத்தவரை பாராட்டுகிறார். வேறு எதுவும் நீங்கள் எழுதியதில் பதில் சொல்லும் அளவிற்கு தென்படவில்லை.

4. கடைசியாய் கார்திக், திருவாசகம் எத்தனை முறை கேட்டீர்கள்? குறைந்த பட்சம் ஒருமுறையாவது கேட்டீர்களா?

இது இப்படி இருக்க,

1. அ.மார்க்ஸின் கட்டுரையை முக்கியமானதாய், எதிர்கொள்ள வேண்டியதாய் சொல்கிறேன். 'அரசியலை மறுக்கும் இளயராஜாவை தாராளமாய் அவரவர் பார்வையில் விமர்சிக்கலாம். ' என்கிறேன். பாப்மார்லேயையும், இளயராஜாவையும் ஒப்பிட்டு எழுதினால் பிச்சனையில்லை என்கிறேன். திருவாசகம் எனக்கு ஏமாற்ரம் அளித்ததை பதிவு செய்ஹ்திருக்கிறேன். அதற்கு பிறகும் 'ரசிக மனப்பான்மை'என்றெல்லாம் முத்திரை குத்தினால் சொல்ல என்ன இருக்கிறது. முன்பு வேறு காரணங்களுக்காக வேறு முத்திரைகள் வந்தது. இப்போது வேறு இடத்திலிருந்து வருகிறது.

2. ஞாநியின் கழிசலுக்கு வந்த விசில் சத்தம் காரணமாகவே எழுத வேண்டியுள்ளதே ஒழிய, இளயராஜாவை முன்வைத்து முக்கியமான விமரசனங்கள் சாத்தியமாகும் என்றே நினைக்கிறேன்.

மேலே எதுவும் இப்போதைக்கு என்னால் எழுத முடியாது. கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி.

8/14/2005 2:20 PM  
Blogger ROSAVASANTH said...

கோயின்சாமி 8A, போட்டு கலக்கியிருக்கிறீர்கள். எனக்கு ஒப்புதல் உண்டு. அடி விழும் என்ற அஞ்சப்படும் கருத்துக்களை சொல்ல முகமுடி தேவையிருக்கலாம். இப்படி நல்ல கருத்துக்களையும் வேறு பெயரில் எழுதி புகழை வேறு இரு பெயர்களில் பகிர்ந்துகொள்ள வேண்டுமா? மேலும் நடை ஜாக்கிரதை! அடையாளம் காட்டிவிடும் போல தெரிகிறது.

8/14/2005 2:31 PM  
Blogger ROSAVASANTH said...

உம்ம பாட்டு கேட்க முடியவில்லை. குரு பட பாடலா?

8/14/2005 2:32 PM  
Blogger தெருத்தொண்டன் said...

//இந்நிலையில் தங்கள்(இவர்களே மாற்றிக்கொள்ளப் போகும்) அரசியல் சட்டகத்தை வைத்து, ஒரு மாபெரும் இசைக்கலைஞனை எந்த provocationஉம் இல்லாத சமயத்தில் நிராகரிக்க முயல்வது, நானும் பகிர்ந்து கொள்ளும் அரசியலின் அழுகலான ஒரு பகுதியாகவே எனக்கு தெரிகிறது.//

கால ஓட்டத்தில் ஒரு கருத்தை ஒருவர் மாற்றிக் கொள்வார் என்பதைப் பொது நியதியாக்கிவிட்டால், இது போன்ற பதிவுகளுக்குத்தான் பொருள் என்ன? திராவிட நாடு போயே போச்சு..ஒன்றே குலம் ஒருவனே தேவன் வந்தாச்சு.. வர்க்க எதிரியின் ரத்தத்தில் கை நனைக்காதவன் கம்யூனிஸ்டே இல்லை என்ற முழக்கம் கோவிந்தா கோ.....விந்தா !

இளையராஜாவின் இசையை ரசிக்க வேண்டும். பேட்டிகளில் பேசுவதைக் கணக்கில் கொள்ளக் கூடாது. எம்.எஸ்.விச்வநாதனுக்கு இசை தவிர எதுவும் தெரியாது. தவறில்லை. இதே அளவுகோல்களை நீங்கள் அமி,ஜெகாக்களிடம் (அவர்களது பேச்சு என்னைப் பொறுத்தவரை அபத்தம் என்பதும் வக்காலத்து வாங்க முடியாத ஓர் அரசியலுக்கு அவர்கள் வாதாடுகிறார்கள் என்பதும் வேறு விஷயம்) ஏன் காட்ட மறுக்கிறீர்கள்?

மேலும் நீங்கள் பகிர்ந்து கொள்வதாகச் சொல்லும் அரசியல், அரசியல் இல்லாமல் தூய கலை இருப்பதாகச் சொல்கிறதா?
ஒவ்வொரு சொல்லுக்குப் பின்னும் அரசியல் இருக்கிறது என்று சொல்லவில்லையா? நடுநிலைமை என்பது அரசியலில் சாத்தியம் என்று கூறுகிறதா? சமூகம் இரு கூறுகளாகப் பிரிந்து கிடக்கும்போது கலைஞர்கள் எந்தப் பக்கம் நிற்கிறார்கள் என்று பார்க்க வேண்டியதில்லை என்று பகர்கிறதா? பூர்ஷ்வாக்களில் இருந்து குட்டி பூர்ஷ்வா வேறுபட்டவர் அல்லவோ ? புனிதப் பசுக்கள் எதுவும் கு.பூ.க்களிடம் இருக்காது அல்லவா?

மாற்று கலைகளுக்கும் (கத்தார்) மலினப்பட்ட வணிகக் கலைகளுக்கும் இடையில் ஓரிடத்தைக் குட்டி பூர்ஷ்வா தேர்ந்தெடுத்துக் கொண்டு அதையே உலகப் பொதுமறை என்பது போல் கூறுவது நியாயமாகப்படவில்லை. சாருவையும் ஞாநியையும் ஒரே தட்டில் வைத்துப் பார்ப்பதும் சரியா என்று தெரியவில்லை.

உங்கள் பதிவில் உள்ளவை உங்கள் கருத்துக்கள். அவற்றில் இது சரி இது தவறு என்று சொல்லும் உரிமை யாருக்கும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. இருந்தும் அவை என்னுள் ஏற்படுத்தும் கேள்விகளை உங்கள் முன் வைக்கிறேன்.
விளக்கம் கிடைத்தால் என்னை வளர்த்துக் கொள்ள – வளப்படுத்திக் கொள்ள- முடியும். மாறாக உதட்டளவில் ஜனநாயகமும் நடைமுறையில் முத்திரை குத்தி அவதூறு செய்வதும் என்றால் சிரித்துவிட்டு ஒதுங்கி விடலாம். (இதற்குப் பெயர்தான் டிஸ்க்ளெய்மரா?)

8/14/2005 4:02 PM  
Blogger தெருத்தொண்டன் said...

//கோயின்சாமி 8A, போட்டு கலக்கியிருக்கிறீர்கள். எனக்கு ஒப்புதல் உண்டு. அடி விழும் என்ற அஞ்சப்படும் கருத்துக்களை சொல்ல முகமுடி தேவையிருக்கலாம். இப்படி நல்ல கருத்துக்களையும் வேறு பெயரில் எழுதி புகழை வேறு இரு பெயர்களில் பகிர்ந்துகொள்ள வேண்டுமா? மேலும் நடை ஜாக்கிரதை! அடையாளம் காட்டிவிடும் போல தெரிகிறது. //
காட்டிவிடும் போலிருக்கிறது ஏன்? நீங்களே ஒரு இகாரத்தைக் குறைத்துக் க்ளூ கொடுத்துவிட்டீர்களே..

8/14/2005 4:16 PM  
Blogger ROSAVASANTH said...

தெருத்தொண்டன்,

உங்கள் கருத்துக்கு நன்றி. பல நான் பேசாத விஷயங்களை பற்றி இருப்பதாக எனக்கு படுகிறது. அவை எல்லாவற்ரையும் மறுக்க என்னால் இப்போது முடியாது.

முதலில் இளயராஜா ஜெயகாந்தன்/அமீ போல கோபமூட்டும் எதையும் செய்யாமலேயே எல்லோருடய ஆத்திரமும் பாய்கிறது. அதன் பின்னுள்ளது தங்கள் அரசியல் சட்டகத்த்னுள் ராஜா அடங்காததன் கோபம் என்பது என் கருத்து. அடுத்து இளயராஜா/எம்.எஸ்.விக்கு காட்டும் அளவுகோல் ஜெயகாந்தனுக்கும் அமிக்கு நான் காட்டாததன் காரணம் பின்னவர்கள் அறிவுதளத்தில் கருத்தியல் தளத்தில் செயல்படுவதுதான். இத்தனை முறை சொன்னபின்னும், 'கலைஞர்கள் எந்தப் பக்கம் நிற்கிறார்கள் என்று பார்க்க வேண்டியதில்லை என்று பகர்கிறதா? " என்பதற்கு என்ன பதில் சொல்ல என்று புரியவில்லை. அதே போல மற்ர கேள்விகளுக்கும்.

நான் எழுதியது சாரு திரிப்பதும். ஞாநி 'மோசடி' என்று கணடதையும் திரித்து எழுதுவதும். இதற்கு பின்னால் எனக்கு இருப்பது இளயராஜா என்ற கலைஞன் மீதான அக்கரை மட்டுமல்ல. உணமையான மோசடிகளையும், பெரிய வகை சதிகளையும் எல்லோரும் ஞாநியின் கட்டுரை போல வாசித்து சிரித்துவிட்டு போய்விட போகிறார்களே என்ற கவலையும்தான். நன்றி.

8/14/2005 4:18 PM  
Blogger SnackDragon said...

ரோசா,
ரசிக முத்திரை குத்துவதாக படும்படி எதையும் நான் எழுத வில்லை என்றுதான் நினைத்தேன் நினைக்கிறேன். அப்படி நீங்கள் எண்ணீய்ருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்
மெட்டுக்கு பாட்டு என்று செய்திருந்தால் அது நிச்சயம் பாராட்டபடவேண்டியதுதான். ஆனால் அது சிம்பொனி என்று விளம்பரப்படுத்தப்பட்ட்பின் தெரிய வரும்போதுதான் எப்படி புரிந்து கொள்வது என்று தெரியவில்லை.


கழகக் கண்மணிகளுக்கு கிச்சு க்ச்சு மூட்டுவதாக உள்ளது என்று வாசித்தேன். அதற்காக்த்தான், மிகவும் தரக்குறைவான குறியீடாக அதை எப்படிஉசொல்கிறீர்கள் என்று கேட்டேன்.

திருவாசகத்தின் ஒரு பாடலை மட்டுமே கேட்டுள்ளேன். இதில் திருவாசகத்தை பற்றி, நான் எங்கே விமர்சனம் செய்தேன். ஞானியின் விமர்சனத்தை எப்படி புரிந்து கொண்டேனோ அதைத்தான் சொன்னேன்.

புற்றில் வாழரவம் பாட்டை மட்டும் கேட்டதில். சில பகுதிகளின் இசை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மேலும், சிம்பொனி எனக்கு மிகவும் புதிய வடிவம். நானும் என் நண்பனும்
கிட்டத்தட்ட தினமும் இரவு 2 மணி வரை இளையராஜாவின் திரைப்பட பாடல்களை அக்கு வேறு ஆணிவேறாக ரசித்த காலங்கள் உண்டு. உதாரணமாய், ஒரு பாடலில் முரளி ? ,ரேவதி நடித்த
இரண்டு ராகங்களை கலந்த பாடல். மலர் தோட்டத்தில் பாடுவது. நினைவில் இல்லை. நான் உனை நினைகக்காத நாளில்லையே... என்று வரும்.
புற்றில் வாழ் அரவையும் கேலூங்கள், ஜேசுதாசின் , ஐயப்ப கானங்கள் வால்யூம் - 1 ல் வரும், "வானாகி மண்ணாகி நீராகிக் காற்றாகி நெருப்பாகி" -ஐயும் கேளுங்கள். எதில் இசை மேன்மையானது என்று நான் ஓபன் சேலஞ்ஜ் செய்கிறேன்.

இளையராஜாவின் மீது உள்நோகமுடைய அரசியலை நானும் எதிர்க்கிறேன். ஆனால் அதே சமயத்தில் அவரது மேதவித்தன மனோபவத்த்தையும் , ஆடிய ஆட்டத்தையும் அதே அளவில் மறுக்கிறேன் அவ்வளவுதான். பொதுவாக நீங்கள் எழுதுவது ஆரோக்கியமாந்து என்ற கருத்திலிருக்கும் நான் எப்படி உங்களை முத்திரை குத்துவேன்? நன்றி பதிலுக்கும் விளக்கத்துக்கும்.

8/14/2005 4:48 PM  
Blogger SnackDragon said...

/மலர் தோட்டத்தில் பாடுவது. நினைவில் இல்லை. நான் உனை நினைகக்காத நாளில்லையே... என்று வரும்.
/

ஆகா வந்துடுச்சு :-) பூ...மாலையே தோள் சேரவா

8/14/2005 5:00 PM  
Blogger ROSAVASANTH said...

கார்திக்,

'ரசிக மனப்பான்மை' என்று நீங்கள் முத்திரை குத்தியதாக நான் சொல்லவில்லை. உங்களுக்கு எழுதிய பதிலின் கீழே, வேறாகவே அதை எழுதியுள்ளேன். உதாரணமாய் பெயரிலி 'விசிறி' என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார். வேறு இடங்களின், தனிப்பட்ட கடித பரிமாற்றங்களிலும், நான் சொன்னதை எதிர்கொள்ள இந்த 'ரசிகன், விசிறி' போன்ற வார்த்தைகள், பயன்படுத்தப்பட்டதையே நான் குறிப்பிட்டேன். நான் விசிறி அல்ல. ஆனால் நிச்சயம் ராஜாவின் ரசிகன். அவருடய இசையின் மீது ஈர்ப்பு உள்ளதால்/ அவர் இசை சாதனையை உணர்ந்துள்ளதாய் நினைப்பதால் ரசிகனே ஒழிய, அவர் எனக்கு மாமனோ மச்சானோ அல்ல. ஆனால் ரசிகன் என்ற வார்த்தை குறிப்பிட்ட வாதத்தை நிராகரிக்கும் உத்தியாய் பயன்படக் கூடும் என்பதால் அதை முத்திரை என்பதாய் குறிப்பிட்டேன்.

நான் கலைஞரின் சாதனைகள் மீதும், பேச்சின் மீதும் பெருமதிப்பு கொண்டவன் என்பதை பலமுறை சொல்லியுள்ளேன். அதே நேரம் அவர் தன் பேச்சாற்றலால் வாதங்களை சாமர்தியமாய் சமைத்து, 'உடன்பிறப்பின்' உணர்ச்சியில் சிந்தனைக்கான கேள்விகளையும் கரைக்க கூடியவர். (எல்லா தளங்களிலுன் இபடி ஒன்று நடைபெறக்கூடியதே) ஞாநியின் கட்டுரைக்கு வந்த பாராட்டுச் சத்தங்கள் ஒரு மேடை பேச்சின் 'கிச்சு கிச்சு' மூட்டலுக்கு வந்த விசிலாக எனக்கு பட்டதால் அப்படி சொன்னேன். மற்றபடி ரஜினி ஸ்டைல் தொடங்கி, கலைஞரின் வசனம் வரை எல்லாவற்றிற்கும் பறக்கும் 'விசில்' மீது எனக்கு எந்த மரியாதை குறைவும் இல்லை. நானும் அதில் பங்குகொள்வேன்.

நன்றி.

8/14/2005 5:34 PM  
Blogger arulselvan said...

நண்பர்களுக்கு:
முக்கியமான பல கருத்துகளை சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். நிறைய நானும் ஒத்துக்கொள்ளும் விதயங்கள்தான். முக்கியமாக ஞானி, ராஜாவின் அரசியலைப் பற்றி உளறிக்கொட்டி தன் நல்ல பல அரசியல் செயல்பாடுகளையும் முட்டாள்கள்கூட கேள்விகேட்கும்படி தன்னைத்தானே எக்ஸ்போஸ் செய்து கொண்டது. சாரு தன் அறிவுப்புல இயக்கத்தைத் தக்கவைக்க இண்டர்நேஷனல் புரொடஸ்ட்டுகளை தமிழகத்துக்கு ஒட்டுப்பதியன் போட முயன்று அடித்துக்கொள்ளும் செல்ப் கோல்கள். விமரிசனங்களோடாவது நாம் ஏற்றுக்கொள்ளக் கூடியவர்கள் என்று நினைப்பவர்களே இன்றைக்கு தமிழகச் சூழலில் தாமே தம் முதுகில் shoot here என்று புல்ஸ் ஐ வட்டங்களை வரைந்து கொண்டு திரிகிறார்கள். அப்படியே சமுதாயத்தை கைபடாமல் நிலத்தோடு பெயர்த்தெடுத்து பத்தாம் பன்னிரண்டாம் நூற்றாண்டு சோழப் பேரரசுப் பெருங்கோயில் கலாச்சாரத் தீவிற்கு கொண்டுபோய் சிறைவைக்க திட்டம் போட்டு நடக்கும் அரசியல்-கலாச்சார இயக்கங்களுக்கும் அவற்றின் தொண்டர் படைகளுக்கும் கன குஷிதான். ராஜா சொல்வதில் முக்கியமானது அவர் இருபத்தைந்து வருடமாக சொல்லிவரும் " இருப்பதே ஏழு சுரங்கள். அதை வைத்துத் தான் மக்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறேன்" என்பதும்," எனக்கு தியாக ராஜர் கிருதியும், நாய் குறைப்பும் ஒன்றுதான். எல்லாவற்றிலும் இசை இருக்கிறது" என்பதும் தான். இதுதான் ராஜாவின் சாரம். நம் எழுத்தாளர்களெல்லாம் எங்களது சிருஷ்டியாக்கும், தானாக எழுத வருது, எல்லாம் சாமி கடாட்சம் என்ற ரீதியில் பினாத்திக் கொண்டிருக்கும் போது இதைவிட ஒரு கலைஞன் எப்படி தன் "சிருஷ்டி" ரகசியத்தைப் போட்டு உடைக்க முடியும். அய்யா இதையே அய்ரோப்பிய வடிவஇயல்வாதிகள் இலக்கியம் ஓவியம் இசை என்பதில் manifesto போட்டு ஒரு நூறுவருஷம் செயல் பட்டு அதுவே semiotics என்றெல்லாம் மாறி கல்விக்கூடங்களின் ஆராய்ச்சி பார்மால்டிஹைட் இறுக்கங்களாக மாற்றி கன காலமாச்சு. அதை இப்படி கண்ணெதிரே ஒரு கலைஞன் தமிழகத்து மக்கள் அத்தனை பேருக்கும் ரசித்து லயிக்குமாறு எல்லா எல்லைகளையும் காட்டியிருக்கிறான். இதைவிட இந்த அறிவு ஜீவிகளின் பன்னாடை எதிர்க்கலாச்சாரம் சாதித்து விடுமாக்கும்? நடப்பு உலகத்தில் சுற்றிவர இருப்பதை வைத்துச் சிந்திக்காமல் சும்மா தெரிதா விட்கன்ஸ்டைன் என்று உதிர்த்துக் கொண்டு ஒரு தலைமுறைக்கு அப்புறம் இந்தக் காலத்து இளைஞர்கள் எல்லாம் சரியில்லை. இவர்கள் கால் சென்டருக்குத்தான் லாயக்கு. எல்லாம் திராவிட அரசியல்-கலாச்சார சீரழிவால் வந்தது என்று 60 களின் சிறுபத்திரிக்கைச் சிந்தனைச் சிக்கலை இப்போது இடம்பெயர்த்துக் கொண்டு இருக்கிறார்கள். சிந்தனையாளர்கள் சிந்திக்க வேண்டும். கழுதை பொதி சுமப்பது போல அது இயல்பாக நடக்கவேண்டும். தம்மைத் தாமே ரேஸ் குதிரைகளாக நினைத்துக் கொண்டிருந்தால் இன்னும் பத்தாண்டுகால மாயாவாதப் புலரி விடியும்போது எல்லோரும் நரியாக லாயங்களை விட்டு ஓடவேண்டியதுதான்.
அருள்

8/14/2005 7:31 PM  
Blogger ROSAVASANTH said...

//அப்படியே சமுதாயத்தை கைபடாமல் நிலத்தோடு பெயர்த்தெடுத்து பத்தாம் பன்னிரண்டாம் நூற்றாண்டு சோழப் பேரரசுப் பெருங்கோயில் கலாச்சாரத் தீவிற்கு கொண்டுபோய் சிறைவைக்க திட்டம் போட்டு நடக்கும் அரசியல்-கலாச்சார இயக்கங்களுக்கும் அவற்றின் தொண்டர் படைகளுக்கும் கன குஷிதான். //


நன்றாய் சொல்லியிருக்கிறீர்கள். மிகவும் நன்றி. இதையே சொல்ல நினைத்ததாய் நினைத்து கொண்டிருக்கிறேன். எனக்கு இவ்வளவு நன்றாய் சொல்ல வராது. யாருமே சொல்லாததால், இவரகள் பேசும் அரசியலை நானும் பகிர்ந்துகொள்வதாய் நினைப்பதால் கடமை என நினைத்து எழுதினேன். நன்றி.

8/14/2005 7:44 PM  
Blogger Venkat said...

ரோஸா - மிக நல்ல பதிவு. உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் - என்னுடைய பதிவுகளில் இதைப் பற்றி நான் எழுதுவதாகச் சொல்லி ஒத்திப்போட்டுவிட்டேன். ஞாநி, சாரு சொன்னதன் அபத்தங்களை எழுத வேண்டும் என்றிருந்தேன்.அவை கிட்டத்தட்ட நீங்கள் எழுதியிருக்கும் அதே கருத்துக்களில் இருந்திருக்கும். ஆனால் அவை என்னிடமிருந்து வந்திருந்தால் இந்த விஷயங்கள் முற்றாகத் திரிக்கப்பட்டிருக்கும் என்பது நிச்சயம். எனவே நீங்கள் அந்த காரியத்தைச் செய்ததற்கு என் நன்றிகள். மேற்கொண்டு இந்த விஷயத்தில் பதிவுக்காகவேணும் (என் கருத்தை எழுதுவதாகச் சொல்லியிருந்ததால்) வரும் நாட்களில் எழுத உத்தேசம்.

ஞாநியின் விமர்சனத்திற்கு உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்.

மற்றபடி திருவாசகத்தைத் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறேன். அதன் மீதான பிடிப்பு அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. (உங்களுக்கும் இது பிடிக்கும் என்ற நம்பிக்கையிருக்கிறது). இசை ரீதியாக யாராவது திருவாசகத்தை விமர்சித்தால் நன்றாக இருக்கும். உண்மையில் பல இடங்களில் சிகரங்களை எட்டியிருக்கிறார் ராஜா. ஆனால் இவை பனிமூடிய சிகரங்களாக முதல்பார்வைக்குப் பிடிபடுவதில்லை. "பொல்லா வினையேன்" பாடலைப் பற்றி இப்பொழுதைக்கு என்னால் அரை மணி நேரம் கதைக்க முடியும்.

8/14/2005 10:33 PM  
Blogger Jayaprakash Sampath said...

அருள், சுதி சுத்தம். :-)

ரோசா மற்றும் நண்பர்கள்,

அதிகார மையங்களை உடைக்கிறேன் பேர்வழி என்று ஒரு காலத்தில் கிளம்பியவர்கள் எல்லாம் இன்றைக்கு தாங்களே ஒரு மையமாகி, அப்ளாஸ¤க்காக கண்டதையும் பேசி எழுதி வருபவர்களில், சாரு நிவேதிதா ஒரு classic example.

அன்றைக்கு நடந்த சந்திப்பின் போது, சாருவின் பேச்சு முழுமையும், இளையராஜாவின் அரசியல், அவருக்கு இருக்கும் பணபலம்., தன் மகனுக்கு வாங்கிக் கொடுத்த BMW, கொல்லூர் மூகாம்பிகை அம்மனுக்கு அன்பளித்த வைர நகை, என்ற ரீதியில் தான் சென்றது. ரோசா வசந்த், இசை ரீதியாக திருவாசகம் இசை சிம்·பனி எத்தனை முக்கியமானது என்று, இளையராஜாவின் முந்தைய சாதனைகளின் அடிப்படையாக வைத்து ஒரு நீண்ட மோனோலாக் நிகழ்த்திய பின்னர், சாரு, " நீங்கள் சொல்வது எனக்கு அப்பீல் ஆகவில்லை" என்று ஒரே வரியில் சொல்லி விட்டார்.

அந்தச் சமயத்தில், எம்.எஸ்.விஸ்வநாதன் பற்றி பேச்சு வந்த போது, " ஆஹா... அவரை மாதிரி வருமா" என்று சாரு சிலாகித்த போது, அவருடைய பிரச்சனை என்ன என்று புரிந்து விட்டது. இளையராஜாவை மட்டம் தட்டிதான் விஸ்வநாதனை ரசிக்க வேண்டும் என்கிற சிந்தனையாக இருக்கலாம் அல்லது, பழைய விஷயங்கள் புனிதமானவை என்று நினைப்பவராக இருக்கலாம், அல்லது, நிசமாகவே, பாசமலரிலும், பாகப்பிரிவினையிலும், காதலிக்க நேரமில்லை யிலும், அன்பே வாவிலும் மயங்கித்தோய்ந்து, இளையராஜாவின் இசையை ஒப்புக்கொள்ள முடியாதவராக இருக்கலாம்.

8/15/2005 12:22 AM  
Blogger சுந்தரவடிவேல் said...

ரோசாவஸந்த்,
இளையராஜா தன் பாணியான ஆன்மீகத்தில் வைத்திருக்கும் நம்பிக்கையையும், அவர் பாப் மார்லியைப் போன்றோ அல்லது அமெரிக்காவில் வெள்ளை மேலாதிக்கத்தின் கூறுகளைப் பாடித் திரியும் கறுப்பர்களைப் போலவோ இவர் பாடவில்லையென்பதான ஏமாற்றத்தையும், (கூடவே இளையராஜாவின் திருவாசகம் ஏற்படுத்திய எதிர்பார்ப்பைத் தகர்த்த நிலையில் ஏற்பட்ட ஏமாற்றத்தையும்) தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் (இவர்களின் இத்தகைய எதிர்பார்ப்புகளுக்கு இளையராஜா பொறுப்பாக மாட்டார்) இளையராஜாவின் பிசிறு பிசிறாய் வெளிவரும் வார்த்தைகளைத் தாக்குகிறார்கள் என்றே தோன்றுகிறது. இளையராஜாவுக்குத் திருவாசகத் திட்டத்தில் ஏற்பட்ட நிர்ப்பந்தங்கள் என்ன, இவற்றுக்காக அவர் செய்து கொண்ட சமரசங்கள் என்ன என்பவற்றை அவரே சொன்னாலொழிய அனுமானங்கள்/மாற்றார் வாயிலாக அறிந்து கொள்வதென்பது இயலாதென்றே நினைக்கிறேன்.
மேற்கண்டது இளையராஜா மீதான அபிமானம் செய்வது. அவரை எதிர்க்க வேண்டும் என்று எதிர்ப்பவர்களுக்கு பிரகாஷ் சொல்வதைப் போல விஸ்வநாதனா-இளையராஜாவா பிரச்சினையாய்க் கூட இருக்கலாம்.
நல்ல பதிவும் மறுமொழிகளும்.

8/15/2005 12:58 AM  
Blogger தெருத்தொண்டன் said...

தோமோ அரிகாதோ குசேமாசு ரோசாவசந்த்!
//நானும் பகிர்ந்து கொள்ளும் அரசியலின் அழுகலான ஒரு பகுதியாகவே எனக்கு தெரிகிறது.//

இந்த வரிகளே என்னை மறுமொழியத் தூண்டின. மற்றபடி எல்லோரும் சொல்லும்படியான காழ்ப்போ கோபமோ ஏமாற்றமோ எனக்கு இளையராஜாவிடத்தில் இல்லை. விஷ மரம் நல்ல கனிகளைத் தராது என்ற போதும்கூட வாஜ்பாயிடத்தில் நல்ல தன்மைகளைத் தேடி நின்ற அரசியல் தலைமையைக் கொண்ட தமிழகத்தில் கீழவெண்மணிகளுக்காகவும் ஊஞ்சனை, விழுப்புரங்களுக்காகவும், பாப்பாபட்டி-கீரிப்பட்டிகளுக்காகவும் திண்ணியங்களுக்காகவும் அரசியல் தலைவர்களே மௌனமாக இருக்கும்போது இளையராஜா என்ன செய்தார் என்று கேட்பது முறையல்ல தான். அதுவும் இதற்கெல்லாம் இளையராஜா ஏன் எதுவும் செய்யவில்லை என்ற கேள்வியே அவரது பிறப்பைக் குறிப்பதாக வருகிறது. பிறப்பு என்று நான் குறிப்பிடுவது சாதியாகவும் இருக்கலாம்; பாவலரின் சகோதரர் என்பதாகவும் இருக்கலாம்.
சாரு விஸ்வநாதனுடன் நின்று போய்விட்டமாதிரி சிலர் ராஜாவுடன் நின்றுவிடுகிறார்கள். ரஹ்மானும் யுவனும் அவர்களை ஈர்ப்பதில்லை போலும்.
மீண்டும் முதல் வரி..நன்றி ரோசாவசந்த்!

8/15/2005 1:49 AM  
Blogger ROSAVASANTH said...

வெங்கட், உங்கள் கருத்துக்கு நன்றி. இடையில் இரண்டு வாரங்கள் தமிழ் மணம் படிக்கவில்லை. அதனால் நீங்கள் எழுதியதை படிக்காது போயிருக்கிறேன். (ஆனால் காஞ்சி ஃபிலிம்ஸ் பதிவில், மற்றும் தமிழ்மணத்தில் வேறு சில 'விவாதங்களை' பார்தேன்.)

திருவாசகம் குறித்து கேட்கும் முன் ஏற்பட்ட எதிர்பார்ப்பு, பின்னர் 'புற்றில் வாழ்(ள்)' பாடலை தூள்.காமில் கேட்டபின் இன்னும் அதிகரித்தது. அதற்கு பிறகு இப்போது பலமுறை கேட்டதில், என் எதிர்பார்பிற்கும் அது குறித்த பாராட்டுதல்களுக்கும் எனக்கு ஏமாற்றமாய் இருப்பதாக பட்டதையே சொல்லியிருக்கிறேன். நிச்சயம் இன்னும் நிறைவான வகையில் உள்வாங்கி விட்டதாக சொல்ல இயலாத இசை. தீர்ப்பு, திடமான கருத்து என்ற வகையிலே கூட எதையும் சொல்லமுடியாது. வெறுப்பின் காரணமாய் சிலருக்கு ஒரு முறை கேட்டதிலேயே (அதுவும் தனக்கு இசை பற்றி எதுவும் தெரியாது என்று சொல்லிகொண்டே) தீர்ப்பு சொல்ல வருகிறது. அதற்கு பதிலாய் இசை குறித்து எவ்வளவோ சொல்லலாம். அப்படி எதிர்வினையாய் அல்லாமல், இளயராஜாவை பற்றி உயர்வாய் பேசி வரும் தளத்தில், எனக்கு ஏற்பட்ட முதல் மனப்பதிவினை சொல்லியிருக்கிறேன். ஒரு ஆறுமாதம் கழித்து நிதானமாய் திருவாசக இசை குறித்து பேசலாம் என்று தோன்றுகிறது. 'பொல்லா வினையேன்..' நிச்சயமாய் வளம் நிறைந்த இசைகளை கொணடது. அரை மணிநேரம் பேசக்கூடியதை, நீங்கள் நிதானமான பதிவாய் இடவேண்டும். அதில் நீங்கள் குறிப்பிட்ட பிரச்சனைகளும் ஒப்புகொள்ள கூடியவையாகவே இருக்கிறது. இன்னொரு சமயத்தில் மீண்டும் பேசலாம். நன்றி.

இகாரஸ், சாரு எம். எஸ்.வி.யை விட கே.வி. மகாதேவனை அதிகம் புகழ்ந்தார். ஆனால் அவருடைய பிரச்சனை பழமையை போற்றுவதிலோ, எம்.எஸ்.விஸ்வநாதனுடன் நின்றுவிட்டதாகவோ எனக்கு தோன்றவில்லை. அவர் ஏ.ஆர். ரகுமானை, யுவன் சங்கர் ராஜாவையும் மிகவும் ரசிக்க கூடும். அவருடய பார்வை என்று ஒன்று நிச்சயமாய் இருக்கிறது. அதை நான் மதிக்கிறேன். அவருக்கு பிரச்சனை என்று வேறு ஒன்று இருக்கிறது. இவை இரண்டின் பிண்ணணியில் தான் எதிர்ப்பதை காலிபண்ண அவர் முன்வைக்கும் தர்க்கம் என்ற ஒன்றில்தான் அவர் அற்பமாகி போகிறார்.

தெருதொண்டன், எல்லா அரசியலிலும் அழுகிய பகுதி ஒன்று உண்டு. விடுதலை குறித்து பேசும் எல்லா அரசியலிலும் வெறுப்பு என்று ஒன்று கலந்துதான் இருக்கிரது. அதை மட்டும் வைத்து அதை நிராகரிக்கவும் முடியாது. அதே நேரம் விமர்சனமின்றி கொண்டாடவும் முடியாது. நீங்கள் யாரை குறிப்பிட்டாலும், நான் ரஹ்மான், யுவனுக்கு, பரம ரசிகன். எஸ்.ஏ. ராஜ்குமாரின் பலமுறை மீண்டும் மீண்டும் போடப்பட்ட ஒரே ஒரு 'புதுவசந்த பாடலை' தவிர அனைவரது இசைக்கும் ரசிகன். ரஹ்மான்அடுத்த இருபது வருடங்களில் சிகரத்தை தொடும்போது( கார்திக், அவர் இன்னும் தொடவில்லை) எதையாவது சொல்லி ஒரு கூட்டம் காலிபண்ண அவரும். அப்போது ரஹ்மானுக்காக பேசுவது கடமையாகும்.

சுரேஷ், முகமுடி, தங்கமணி, சுந்தரவடிவேலுக்கும் கருத்துகளுக்கு நன்றி.

அனாதையின் பதிவிற்கும், இதர விஷயங்களுக்கும், ஞாநி குறித்து மிச்சமிருப்பதற்கும் சில நாட்களில் கருத்து சொல்கிறேன். நன்றி.

8/15/2005 1:14 PM  
Blogger -/பெயரிலி. said...

/வெறுப்பின் காரணமாய் சிலருக்கு ஒரு முறை கேட்டதிலேயே (அதுவும் தனக்கு இசை பற்றி எதுவும் தெரியாது என்று சொல்லிகொண்டே) தீர்ப்பு சொல்ல வருகிறது./

tru tru
it should be condemned
;-)

8/15/2005 1:29 PM  
Blogger ROSAVASANTH said...

நன்றி பெயரிலி, இதை கண்டிக்க தேவையில்லை. பதில் சொல்லலாம், சொல்லாமலும் புறக்கணிக்கலாம் என்று நினைக்கிறேன்.

8/15/2005 1:31 PM  
Blogger ROSAVASANTH said...

http://anathai.blogspot.com/2005/08/blog-post.html#comments

சில வரிகள், உதாரணமாய் "இந்தக் குற்றச்சாட்டின் வீர்யம், இளையராஜா தலித் சமூகத்திலிருந்து வந்தவர் என்ற கருதுகோளைக் கொண்டு, அசோகமித்ரன், ஜெயகாந்தன், இளையராஜா என்ற அந்த வர்ணாசிரம ஏற்ற இறக்க வரிசையில் இருந்திருக்க வேண்டும் என்பது எதிர்பார்ப்பா அல்லது வேறு ஏதேனும் உள்குத்தா என யாமறியேன் பராபரமே. ", புரியவில்லை

ஆனால் 'மேதமை' என்று கேட்கும் கேள்விகுறித்து சில கருத்துக்கள், இதே கேள்விகளை கேட்டு இப்போதைக்கு வந்தடைந்த வகையில் எனக்கு உண்டு. முடிந்தால் சில நாட்களில்..

ஆனால் டீ.ராஜேந்தர் அடுக்கு மொழியில்தான் குசுவிடுவார் என்று எண்ணுவது போல், நான் எழுதுவதெல்லாம் கலகம் என்று பார்க்கவோ, ஒப்புதல் உள்ளவரையும் அதில் சேர்கவோ என்ன காரணம் என்று புரியவில்லை. 'குட்டி பூர்ஷ்வாவின் கலகம்' என்பது நிலப்பிரபுத்துவ ஜனநாயகம் என்று சொல்வது போல ஒரு oxymoran. தன்னையே செய்துகொள்ளும் சுய எள்ளல். அது புரியாமல் ஊரில் அவனவன் நான் 'கலகம்' செய்வதாக புரிந்து கொண்டிருந்தால், அது குறித்து உங்களுக்கு ஒரு பின்னூட்டத்தில் விளக்கிய பின்னுமா? சுய எள்ளலை விளக்குவது போன்ற அபத்தம் கிடையாது. இப்படி ஆபத்தாக புரிந்துகொள்ளப் படுவதால் சொல்ல வேண்டி வருகிறது.

மற்றபடி உங்கள் எதிர்வினைக்கு நன்றி. முடிந்தால் என் கருத்துக்கள் சில பின்னர் என் பதிவில்

8/15/2005 1:53 PM  
Blogger ROSAVASANTH said...

அனாதை தன் பதிவில் சொன்னது:

ரோசாவசந்த்,

அசோகமித்ரன், ஜெயகாந்தன் மற்றும் இளையராஜா மூவருமே சனாதனிகள் வருணாசிரமத்தை உள்வாங்கியவர்கள். இந்த மூவரில் இளையராஜா உள் வாங்கிய வருணாசிரம் தான் என்னை மிகவும் பாதித்தது. நீங்கள் சொல்வது போல் "என்" சட்டகத்திற்குள் வராத இளையராஜா மேல் கோபம் தான் வருத்தம் தான். அதைச் சொல்வதில் எந்த கூச்ச நாச்சமும் கிடையாது. அசோகமித்ரனோ அல்லது ஜெயகாந்தனோ வாயைத் திறப்பதில் எனக்குள் எந்த அதிர்வும் இல்லை. மனதாரச் சொன்னால் மகிழ்வுதான். ஆனால் இளயராஜா அப்படி இல்லை. இது வேறு. ஆனால் தாங்கள் காட்டும்/எதிர் கொள்ளும் முறையோ தலைகீழாக இருந்தது. அதை எப்படி அர்த்தப் படுத்திக்கொள்வது என்பதற்கு என் சமாதானமாக சொன்னது தான் தங்களுக்கு புரியவில்லையாகி விட்டது. இனி "கலகம்" பற்றி - அந்தக் "கலக விரும்பி" உங்களது பதிவு விளக்கவுரையில் இருந்து எடுக்கவில்லை எடுத்தது திரு பத்ரியிடமிருந்து. எடுதது ஒரு நகைமுரனுக்காக - வழைமையான "கலக விரும்பி"கள் சனாதன முகச்சுளிப்பை நோக்கி செயல்படுவார்கள். இங்கு நடந்ததோ ஒர் சனாதனிக்கு நடந்த சப்பைக்கட்டு. "வேறெங்கோ" நடந்த விசிலடுப்புகளை கிண்டலித்த உங்கள் பின்னுரையில் நடக்கும் சனாதன விசிலடிப்புகளை கோடி காட்ட போட்ட முரண் அது.

நன்றி,
அனாதை.

ரோஸாவசந்த்:பதிலுக்கு நன்றி

8/16/2005 9:59 PM  
Blogger ROSAVASANTH said...

http://thoughtsintamil.blogspot.com/2005/08/blog-post_16.html#comments

மம்மதுவும் கட்டுரையை (பிரச்சனை இல்லையெனில்) இங்கே தந்தால் நன்ற்றியுடையவனாய் இருப்பேன். ஞாநி/சாரு போல, வேற்று polemicsகளாக இல்லாமல், ஆழமான ஒரு விமரசனமாக இருக்கும் என்று நம்புகிறேன். ஞாநி மீதான என் முக்கிய விமரசனமே அவருக்கு வெறுப்பின் வேகத்தில் இத்தகைய கேள்விகள் எதுவுமே வரவில்லை. சமணர்களை கழுவிலேற்றிய சைவப்பிரதியை ஒரு தலித் 21ஆம் நூற்றாண்டில் நவீனப்படுத்துவதன் முரணோ கேள்வியோ இல்லாமல், கணடதையும் மோசடி என்று ஒளரி தன் வெறுப்பை மட்டுமே கொட்டியதுதான் ஞாநியை அடையாளப்படுத்துகிறது.

8/16/2005 10:12 PM  
Blogger ROSAVASANTH said...

http://thoughtsintamil.blogspot.com/2005/08/blog-post_16.html#comments

மம்மதுவின் கட்டுரைக்கு மிகவும் நன்றி. அவருக்கென்று ஒரு அரசியல் மற்றும் தமிழ் சார்ந்த சட்டகம் இருப்பினும், எந்த வித காழ்ப்பிற்கும் இடமின்றி எழுதப்பட்ட ஆழமான கட்டுரை. இளயராஜா அதை படிப்பாரா, படித்தாலும் உள்வாங்குவாரா என்பது மிகவும் சந்தேகமே!

மம்மது தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் எங்கேயும் அது ஆத்திரமாய் மாறாததையும், அவருடய ஏக்கம் எல்லாம் இளயராஜா இன்னும் செய்ய வேண்டும் என்று இருப்பதையும் புரிந்துகொள்ளலாம். மேலும் ஆப்ரகாம் பண்டிதர் என்று தொடங்கிய மரபில் அவர் இளயராஜாவை இறுதியில் வைப்பதையும் காணலாம். இதை படிக்க தந்ததற்கு மிகவும் நன்றி.

8/18/2005 1:28 PM  
Blogger ஜெ. ராம்கி said...

//ஞாநி எழுதி குவித்த குப்பைகளிலேயே அழுக்கானதாக இளயராஜாவின் திருவாசகம் குறித்த கட்டுரை எனக்கு தெரிகிறது.//

ரோ.வ,

இது கொஞ்சம் ஓவர்.

நடிக்க வந்த நாலே வருஷத்தில் புரட்சிகரமான கருத்துக்களை படங்களில் சொன்னவர்; எம்ஜிஆர், கருணாநிதிக்கு மாற்றாக வர முயற்சித்தவர்; நடிகர் சங்க பொறுப்பிலிருந்து தன்னை நல்ல நிர்வாகி என்பதை நிரூபித்தவர் எல்லாவற்றிற்கு மேலாக பாமக ஒரு அடி கொடுத்தால் அவரது ரசிகர்கள் ஒடி ஒளிந்து கொள்ளாமல் பத்து அடி கொடுக்க தயாராக இருக்கிறார்கள் என்று வியந்து போய் 'அரசியல் செல்வாக்கு' என்பதற்கான அர்த்தத்தை சொல்லி விஜயகாந்தின் அரசியல் பிரவேசத்திற்கு சிவப்பு கம்பளம் வரவேற்பு சொல்லி சறுக்கிய ஞாநியின் கட்டுரையை விடவா இதில்....

8/18/2005 7:44 PM  

Post a Comment

<< Home

---------------------------------------
Site Meter